1. ககுத்துமியின் கதை
பராசர முனிவரை நோக்கி மைத்ரேயர், சுவாமி! சத்கருமம் செய்யப் புகுந்தவருக்குச் செய்யத்தக்க நித்திய நைமித்திக ரூபமான கர்மங்களின் சொரூபத்தையும் வருணாசிரம முறைகளையும் தாங்கள் எனக்குக் கூறினீர்கள். இனிமேல் அரசர்களின் வமிசங்களைத் தங்களிடமிருந்து நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் கிருபை செய்து அவற்றை எனக்கு விளங்கச் சொல்ல வேண்டும் என்று வேண்டினார். அவரது ஆசாரியரான பராசர முனிவர் கூறலானார். மைத்ரேயரே! இந்த வைவஸ்வத மனுவின் வமிசமானது; மகா யாக கர்த்தாக்களையும் மகாவீரர்களையும் மகாசூரரையும் கொண்ட பேரரசர்கள் வாழ்ந்த பெரியதொரு வமிசமாகும். இந்த வமிசத்தின் வரலாற்றை சகல பாபங்களும் நசிக்கும் பொருட்டு நான் உமக்குச் சொல்லுகிறேன்! ஜகங்களுக்கெல்லாம் ஆதிகாரணமானவரும் ரிக், யஜுர், ஸாமாதி மயருமான ஸ்ரீமந்நாராயண பகவானுடைய மூர்த்தி ஸ்வரூபமாய், இரணியகர்ப்பர் என்ற பெயரையுடையவராய் இந்தப் பிரமாண்டத்தின் அதிபதியான பிருமாவானவர், பூர்வத்தில் உண்டானார் அல்லவா? அந்தப் பிருமாவின் வலதுகட்டை விரலிலிருந்து தக்ஷப் பிரஜாபதி தோன்றினார். தக்ஷருடைய புத்திரி அதிதி. அந்த அதிதியின் மகன் விவசுவான் என்ற சூரியனாகும். அவனது மகன் மனு, மனுவுக்கு இஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், பிருக்ஷத்திரன் என்று ஒன்பது பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே, அந்த மனுபுத்திரனுக்காக மித்ரா வருணனைக் குறித்து ஒரு யாகம் செய்ய அதில் ஹோதாவின் அபசாரத்தால் இளை என்ற கன்னியொருத்தி பிறந்தாள். அவள் மித்திராவருணர்களுடைய அனுக்கிரகத்தால் மீண்டும் பெண்ணாகி, சந்திரனுடைய மகனான புதனுடைய ஆஸ்ரமத்தின் அருகே திரிந்து கொண்டிருந்தாள்.
புதன்-அவள் மீது காமங்கொண்டு அவளோடு கூடிமகிழ்ந்து புரூரவன் என்ற பிள்ளையைப் பெற்றான். அந்தப் புரூரவன் பிறந்த பிறகு, பெண்ணாக மாறி சுத்தியும்னன் மறுபடியும் ஆணாக மாற வேண்டும் என்று மகா தேஜோமயமான முனிவர்கள் விரும்பினார்கள். அதற்காக யாக மயனாகவும், ரிக், யஜுர், ஸாம, அதர்வண மயனாகவும், மனோ மயனாகவும் ஞான விஞ்ஞானமயனாகவும், அன்னமயனாகவும், அமிருத மயனாகவும் சர்வமயனாகவும், இவை ஒன்றுமாகாதவனாயும், ஆறு குணசம்பன்னனாயும் இருக்கும். யக்ஞ புருஷனைக் குறித்து அம்முனிவர்கள் யாகஞ்செய்து, அந்த யாகத்தில் தோன்றிய ஸ்ரீயப்பதியினுடைய அனுக்கிரகத்தினால் இளையானவள் மீண்டும் ஆண் பிள்ளையாகி சுத்தியும்னன் என்ற பெயரைப் பெற்றான். அவனுக்கு உத்கலன், கயன், விதானன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுத்தியும்னனோ, முன்பு பெண்ணாக இருந்ததனாலே ஆட்சியுரிமை பெறவில்லை. ஆயினும் வசிஷ்ட மாமுனிவரின் சொற்படி, அவனது தந்தை பிரதிஷ்டானம் என்ற நகரத்தைப் புரூரவனுக்குக் கொடுத்தான். பிருக்ஷத்திரன் என்பவன் ஒருநாள் வசிஷ்டருடைய பசுக்கூட்டத்தைக் காவல் புரிந்து கொண்டிருக்கும்போது, இரவில் அந்தப் பசுக்கூட்டத்தில் புகுந்த ஒரு புலியைக் கொல்லப்போய் குறி தவறி ஒரு பசுவைக் கொன்றுவிட்டான். அதனால் குருவின் சாபம் பெற்றுச் சூத்திரனானான், கரூசனிடத்திலிருந்து கரூர தேசத்தைக் காத்து வந்த மகா பராக்கிரமசாலிகளான க்ஷத்திரியர்கள் பிறந்தார்கள். திருஷ்டன் என்பவனுக்கு நரபாகன் என்பவன் பிறந்தான். அவனுக்குப் பலந்தனன் பிறந்தான். அந்தப் பலந்தனன் மகனான வச்சப்பிரீதி என்பவன், மிகவும் புகழ் பெற்றிருந்தான். அவனது மகன் பிராம்சு அந்தப் பிராம்சுவுக்கு பிரசாபதி என்பவன் பிறந்தான். அவனுக்குக் கனி மித்திரன் அவனுக்கு சக்ஷúஷன், சக்ஷúஷனுக்கு மிகவும் பராக்கிரசாலியான விமிசன். அவனுக்கு விம்சகன், அவனுக்குக் கனிநேத்திரன் அவனுக்கு அதிவிபூதி, அவனுக்கு மாவீரனான கரந்தமன், அவனுக்கு அவிக்ஷித்து, அந்த அவிக்ஷித்துக்கு நற்குணமுடைய மருத்தன் என்ற ரீதியில் புதல்வர்கள் பிறந்தார்கள். மருத்தனைப் பற்றி இரண்டு பாடல்கள் இப்போதும் வழங்குகின்றன. இந்தவுலகத்தில் மருத்தனுடைய யாகத்தைப் போல் யாருடைய வேள்வி தான் இருந்தது? அந்த யாகத்திற்கு வேண்டிய கருவிகள் யாவும் செம்பொன்னாற் செய்யப்பட்டு விளங்கின. அந்த வேள்வியிலே, சோமபானத்தால் இந்திரனும் தக்ஷிணையால் அந்தணரும், உடல் தெரியாதிருக்கும்படி மகிழ்ந்தார்கள். மேலும் அதில் வாயுக்களே உணவுகளைப் பரிமாறிய வேலையாட்கள் ஆனார்கள். தேவர்கள் சபையோராயினர்.
அத்தகைய மருத்தன் மாமன்னனாக இருந்து நரிஷ்யந்தனன் என்னும் மகனைப் பெற்றான். அந்த நரிஷ்யந்தனன் மகன் தமன். தமனின் மகன் ராஜவர்த்தனன். அவனுக்கு சுவிருத்தி, சுவிருத்திக்குக் கேவலன்; கேவலனுக்கு சுதிருதி, அவனுக்கு நரன், நரனுக்குச் சந்திரன், அவனுக்குக் கேவலன், அவனுக்குப் பந்துமான், அவனுக்கு வேகவான், அந்த வேகவானின் மகன் புதன்; அவனுடைய மகன் திருணபிந்து! திருணபிந்துவுக்கு இளிபிளை என்ற பெண் பிறந்தாள். அந்தத் திருணபிந்து மன்னனை அலம்புசை என்ற அப்சர மங்கை விரும்பிப் புணர்ந்து விசாலன் என்ற மகனை ஈன்றெடுத்தாள். அவன்தான் வைசாலி என்ற நகரத்தை உண்டாக்கினான். அவனுக்கு ஹேமசந்திரன் என்ற மகன் பிறந்தனன். அவன் மகன் சந்திரன்; அவனுடைய மகன் தூமிராஷன்; அவனுக்குச் சருஞ்யன்; அவன் மகன் சகதேவன், அவனுக்கு கிருசாசுவன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சோமதத்தன் என்ற புதல்வன் பிறந்து, பத்து அஸ்வமேதயாகம் செய்தான். அவனது மகன் ஜனமேஜயன். ஜனமேஜயனின் மகன் சுமதி அவர்களனைவரும் வைசாலியை ஆண்டுவந்த அரசர்களாவார்கள், இவர்களைப் பற்றி ஒரு சுலோகம் வழங்கி வருகிறது. வைசாலி நகரை ஆண்ட அரசர்கள் யாவரும் மூலபுருஷனான திருணபிந்து மாமன்னனுடைய அனுக்கிரகத்தால் தீர்க்காயுளையுடையவர்களாயும், மகாத்மாக்களாகவும், வீரர்களாயும், தர்மசீலராயும் இருந்தார்கள் என்பதுதான் அந்தச் சுலோகமாகும். இனி சர்யாதி என்பவனுக்குச் சுகன்னியை என்ற மகள் ஒருத்தி பிறந்தாள். அவளைச் சியவனர் என்ற மிகவும் புகழ்பெற்ற முனிவர் ஒருவர் திருமணம் புரிந்து கொண்டார். அந்தச் சர்யாதிக்கு ஆனர்த்தனன் என்ற ஒரு மகன் உண்டு. மேலைக் கடற்கரையில் அவன் ஆண்ட தேசத்துக்கு ஆனர்த்தம் என்ற பெயர் வழங்கலாயிற்று. அவனுக்கு ரேவதன் என்ற மகன் பிறந்து அவன் குசஸ்தலி என்ற நகரத்திலிருந்து கொண்டு ஆனர்த்த நாட்டை ஆண்டுவந்தான். அந்த ரேவதனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மூத்தவன் தான் ககுத்துமி என்பவனாகும், அவனுக்கு ரைவதன் என்ற பெயரும் வழங்கி வரலாயிற்று. அவனுக்கு ரேவதி என்ற மகள் ஒருந்தி பிறந்தாள். அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இவளை யாருக்குக் கொடுக்கலாம் என்று கேட்கும் பொருட்டு பிரம்மலோகத்துக்குக் ககுத்துமி சென்றான். ஹாஹா ஹுஹு என்ற கந்தர்வர்கள் இருவர் அதிதானம் என்று வழங்கப்பட்ட இனிய சங்கீதத்தைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அது சித்திரை, தக்ஷிணை வார்த்திகை என்ற மூன்று வழிகளின் பரிவிர்த்தங்களினால் சுற்றிக்கொண்டு வருவதை அநேக யுககாலம் வரையில் அவ்வரசன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வளவு அதிக காலம் சென்றதைக் கூட ஒரு முகூர்த்த காலமாகவே நினைத்தான். அந்தச் சங்கீதம் முடிந்த பிறகு, சதுர்முகனை வணங்கிய ரைவத மன்னன் இந்தக் கன்னிகைக்கு தகுதியான கணவன் யார்? என்று பிரும்மாவைக் கேட்டான். அதற்கு அவர் மன்னனே! நீ நினைத்துக் கொண்டிருக்கும் வரன்களைச் சொல்வாயாக என்றார். அவரைக் ககுத்துமி மன்னன் வணங்கித் தான் நினைத்திருந்த சிலரது பெயர்களைச் சொல்லி, தேவா! இவர்களில் யாருக்கு நான் என் புதல்வியைக் கொடுக்கலாம்? அவனைத் தேர்ந்து சொல்லுங்கள் என்று கேட்டான்.
அரசனே! நீ யாரை எண்ணிக் கொண்டிருந்தாயோ அவர்களுடைய பிள்ளைகளும் அந்தப் பிள்ளைகளுடைய சந்ததியினரும் இப்போது பூவுலகில் இல்லை. நீ இங்கு நடந்த சங்கீத நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த நேரத்திற்குள் எத்தனையோ யுகங்கள் கழிந்து விட்டன. இப்போது பூவுலகத்தில் வைவஸ்வத மனுவந்தரத்திலே இருபத்தெட்டாவது சதுர்யுகம் முடியப் போகிறது. கலியுகம் நெருங்குகிறது. இப்போது பூர்வகாலத்தைச் சேர்ந்த நீ ஒருவனே இருப்பதால், இக்காலத்தவரான யாருக்காவது இந்தப் பெண்ணை, நீ ஒருவனாகவேக் கொடுக்க வேண்டும். இப்போது உன்னுடைய புத்திரர், மித்திரர், மனைவியர், மந்திரிகள், உறவினர், ஏவலாட்கள், சேனைகள் முதலியன யாவுமே ஒழிந்து போய்விட்டன! என்றார் பிருமா. அதைக்கேட்ட ரைவத மன்னன் மிகவும் நடுங்கி, சுவாமி! இப்படியானால் என் மகளின் கதிதான் என்ன? இனி இந்தக் கன்னியை யாருக்குத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கேட்டான். ரைவத மன்னனே; அஜனாயும் சர்வமயனாயும் இருக்கிற எவனுக்கு ஆதி மத்தியம், அந்தம் என்ற இந்த மூன்றையும் யானும் மற்றவரும் அறியோமோ பரமேசுவரனான எவனுடைய ஸ்வரூபத்தையும் மேலான பிரபாவத்தையும், பலத்தையும் அறியோமோ, கலா முகூர்த்தாதி மயமான காலமானது பரமபதம் என்று சொல்லப்பட்ட எவனுடைய திரிபாத விபூதியை மாற்றமாட்டாதோ, உற்பத்தி நாசங்கள் இல்லாதவனாயும் சர்வ சரீரகனாயும், கர்வமயமான பெயர்களும் ரூபங்களும் இல்லாதவனாயும் என்றும் ஒருபடியே இருப்பவனாயுமுள்ள எவனுடைய அருளால் நான் படைப்பவனாகினேனோ எவனுடைய குரோத அம்சத்தால் ருத்திரமூர்த்தி சங்காரகர்த்தன் ஆனானோ, எந்தப் பரமபுருஷன் எங்கள் இருவருக்குமிடையில் காத்தலுக்கு உரிய கர்த்தாவாக அவதரித்து எழுந்தருளியிருக்கிறானோ எவன் தனது அம்சத்தினால் என்னுள் ஆவிப்பவித்து படைக்கிறானோ தானே புருஷ ஸ்வரூபியாக இருந்து காக்கிறானோ ருத்திரனிடத்தில் அம்ச ஆவிர்ப்பாவத்தால் சர்வ சங்காரஞ் செய்கிறானோ; எவன் இந்திரன் முதலியோரின் வடிவிலே உலகத்தைக் காக்கிறானோ எவன் சூரிய சந்திர ரூபியாகி இருளைப் போக்குகிறானோ, பூமி ரூபியாகி எல்லாவற்றையும் எவன் சுமக்கிறானோ, வாயுரூபியாக யாவற்றையும் எவன் அசைக்கிறானோ, அக்னிரூபியாகி பாகத்திற்கு எவன் உபயோகமாகிறானோ ஆகாயரூபியாக இருந்து சகலத்துக்கும் எவன் இடங்கொடுக்கிறானோ, தண்ணீரும் சோறுமாகி உலகத்தின் திருப்திக்கு எவன் காரணமாகிறானோ, எவன் யாவற்றையும் தன்னையும் தனக்குத்தானே பரிபாலனம் செய்கிறானோ, எவன் இதரங்களையும் தன்னையும் தானே அழித்துக் கொள்கிறானோ இந்தச் சிருஷ்டி ஸ்திதி, சங்கார கர்த்தாக்களாகிய மூவருக்கும் சிருஷ்டிக்கப்படுவனவும், காக்கப்படுவனவும், சங்கரிக்கப்படுவனவுமாக மூன்றுக்கும் வேறாய் விகாராதிகள் இல்லாமல் எவன் விளங்குகிறானோ, எவனிடம் உலகம் யாவுமே இருக்கின்றனவோ எவன் சகலலோக சொரூபியாக இருக்கிறானோ எவன் எல்லாவற்றுக்கும் முதலாவதாக இருக்கிறானோ எவன் இவ்வுலகத்தில் எங்கும் இருக்கிறானோ அந்தச் சர்வேஸ்வரனான விஷ்ணுபகவான் இப்போது பூவுலகத்தில் தன் அமிசத்தால் ஒரு திருவவதாரஞ் செய்திருக்கிறான்.
முன்பு உம்முடைய தலைநகரான குசஸ்தலியானது இப்போது யாதவ மன்னர்களால் ஆளப்பட்டு வருகிறது. துவாரகை என்ற பெயரையுடைய அந்த நகரம் தேவேந்திரனின் தலைநகரைப் போல் இருக்கிறது. அதில் எம்பெருமானார் ஆதிசேஷனது அம்சத்தினால் அவதரித்து பலராமன் என்ற திருப்பெயரோடு எழுந்தருளியிருக்கிறார். அரசனே! அவனுக்கு உன் மகளைப் பத்னியாகச் சமர்ப்பிப்பாயாக. உன் மகள், பெண்களில் இரத்தினத்தைப் போன்றவள் ஆகையால் இருவருக்கும் பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று பிருமதேவர் கூறினார். பிறகு ககுத்துமி மன்னன் பூவுலகம் வந்தான். அங்கேயிருந்தவர்கள் மிகக்குட்டையான வடிவமும், அற்ப தேஜஸும், அற்பமான ஞானசக்திகளும் கொண்டவர்களாக இருப்பதைக் கண்டு வியந்த வண்ணம் துவாரகைக்குச் சென்றான். அங்கு பலராமனுக்கு தன் செல்வியை மணஞ்செய்து கொடுத்தான். தாலத்துவசரான அந்தப் பலராமன் தன்னைவிடத் தான் மணந்தவள் அதிக உயரமாக இருந்ததால் தமது ஆயுதமான கலப்பையால் வணக்கியருளினான். அந்தப் பொற்கொடியும் அவரது உணர்ச்சிக்கு ஏற்றப் பிரமாணம் உடையவளாய், வேறு கன்னிகையைப் போலாகி விட்டாள். பிறகு ககுத்துமி மன்னன் தவஞ்செய்ய, இமயமலைச் சாரலுக்குச் சென்று விட்டான்.
2. சசாத, ககுஸ்தா, மாந்தாதா வரலாறுகள்
ககுத்துமி மன்னன், பிருமலோகத்திலிருந்து பூவுலகத்திற்கு வராமல் இருந்தபோது, புண்ணியஜனர் என்ற அரக்கர்கள் குசஸ்தலிப் பட்டணத்தை அழித்தார்கள். அதிலிருந்த அவனது தம்பியரெல்லாம் அவ்வரக்கர்களுக்குப் பயந்து நான்கு திசைகளிலும் ஓடியதால் அந்தக்குலத்து அரசர்கள் எங்கும் இருந்தார்கள். விருஷ்டன் என்பவன் மூலமாக, வார்ஷ்டகம் என்ற ராஜகுலம் உண்டாயிற்று. நரபாகன் என்பவனின் மகனும் நரபாகன் என்ற பெயரையே பெற்றிருந்தான். அவனுக்கு அம்பரீஷனும், அம்பரீஷனுக்கு விரூபனும், விரூபனுக்கு பிரஷதசுவன் என்பவனும் பிறந்தார்கள். பிரஷதசுவனுக்கு ரதீதரன் தோன்றினான். இவனைப் பற்றிய சுலோகம் ஒன்று வழங்குகிறது. அதாவது ரதீதர கோத்திரத்தில் பிறந்தவர்கள் க்ஷத்திரியர்களாக இருந்தாலும் அங்கிரசு என்ற பிராமண முனிவரின் சம்பந்தத்தினாலும் தவவலிமையினாலும் பிராமண ரூபமாகி, க்ஷத்திரிய சம்பந்தமுள்ள பிராமணராக விளங்கி வந்தார்கள். வைவச்சுத மனுவானவர் தும்மும் போது, அவரது மூக்கிலிருந்து இஷ்வாகு என்ற புதல்வன் பிறந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள் உண்டு. அவர்களில் விகுக்ஷி நிமி தண்டன் என்போர் முக்கியமானவர்கள். சகுனி முதலிய ஐம்பது பிள்ளைகள் உத்தராபதம் என்ற வடநாட்டின் வேந்தரானார்கள். நாற்பத்தெட்டுப் பேர் தக்ஷிணபதம் என்ற தென்னாட்டை ஆண்டு வந்தார்கள். அந்த இஷ்வாகு மாமன்னன் அஷ்டகையில் புதியதான மாமிசத்தைக் கொண்டுவரும்படித் தனது மகனான விகுக்ஷி என்பவனுக்குக் கட்டளையிட்டான். விகுக்ஷியும் தன் தந்தையின் ஆணையை ஏற்று, காட்டுக்குச் சென்று பல மிருகங்களைக் கொன்று மிகவும் களைப்படைந்து தாங்கமுடியாத பசியினால் அவற்றில் ஒரு முயலைக் கொன்று தின்று விட்டு மீதமான மிருகங்களின் இறைச்சியைக் கொண்டு வந்து தன் தகப்பனிடம் ஒப்படைத்தான். அரசன் அவற்றைப் புரோக்ஷிக்கும் பொருட்டு தனது குலகுருவான வசிஷ்டரை வேண்டினான், அவர் அவற்றைப் பார்த்து, அரசனே! இந்த அசுத்தமான மாமிசம் எதற்கு? துராத்மாவான உனது மகன் இவற்றில் ஒரு முயலின் இறைச்சியை உண்டதால் மற்றுள்ள யாவுமே அசுத்தமாகி விட்டன என்று சொன்னார். அதனால் அந்த விகுக்ஷிக்கு சசாதன் (சசாதன்-முயலைத் தின்றவன்) என்ற பெயர் உண்டாயிற்று. அதற்குப் பிறகு இஷ்வாகு இறந்த பிறகு அவனது மகனான சசாதன் அரசனாகி, நீதி தவறாமல் ஆண்டு வந்தான்.
அவனுக்குப் புரஞ்சயன் என்ற மகன் ஒருவன் பிறந்தான். அவனுக்குப் பின்வரும் காரணத்தால் ககுஸ்தன் என்ற பெயர் உண்டாயிற்று. அதாவது திரேதா யுகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெரும்போர் ஒன்று நடந்தது. அதில் தேவர்கள் தோல்வியடைந்து ஸ்ரீவிஷ்ணுவை ஆராதித்தார்கள். பகவான் நாராயணன் அவர்கள் முன்பு தோன்றி, தேவர்களே உங்கள் கருத்தை நான் அறிந்தேன். நீங்கள் அஞ்சவேண்டாம், நான் பூமியில் சசாதனுடைய மகனாகப் புரஞ்சயன் என்ற க்ஷத்திரியனின் சரீரத்திலே எனது அம்சத்தால் பிரவேசித்து அந்த அரக்கர்ரகளைச் சங்காரம் செய்வேன். ஆகையால் நீங்கள் அந்தப் புரஞ்சயனை, உங்களுக்குச் சகாயமாய்ப் போருக்கு வரும்படி வேண்டுங்கள் என்று அருளிச் செய்தார். தேவர்கள் ஸ்ரீயப்பதியின் திருவடிகளை வணங்கி விடைபெற்றுப் புரஞ்சயனிடம் சென்றனர். தேவர்கள், புரஞ்சயனைக் கண்டு அரசனே! எங்களது பகைவர்களை வெல்வதற்கு, நீயே எங்களுக்குத் துணைபுரியவேண்டும். இதை மறுக்காமல் ஏற்று நிறைவேற்ற வேண்டும்! என்றார்கள். தேவர்களே! நான் உங்களுக்குத் துணைசெய்ய வேண்டுமானால், நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்ததினால் மூவுலகங்களையும் ஆளும்படியான தேவேந்திரனே எனக்கு வாகனமாக வரவேண்டும்! அவனது தோளின்மீது ஏறிக்கொண்டு தான், நான் அந்த அசுரர்களோடு போர் செய்யமுடியும்! என்றான் புரஞ்சயன் அதைத் தேவர்கள் ஏற்றனர். இந்திரன் காளையுருவம் பெற்றான். புரஞ்சயன் அந்த ரிஷபத்தின் முசுப்பின் மீது ஏறிக்கொண்டு ஸ்ரீஅச்சுதனின் தேஜஸினால் பூரித்தவனாகி அசுரர்கள் அனைவரையுமே அழித்து, தேவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தான். விருஷபத்தின் (ககுத்) முகப்பின் (ஸ்த) மீது ஏறியதால் அவனுக்கு ககுஸ்தன் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்த ககுஸ்த மன்னனுக்கு அனேனசு பிறந்தான். அவனுக்குப் பிருது என்பவன் பிறந்தான். பிருதுவுக்கு விஷ்டராசுவன் என்பவன் பிறந்தான். அவனுக்கு யுவனாசுவன் என்பவன் பிறந்தான். அவன் சந்திர அம்சையில் பிறந்ததால் அவனுக்குச் சந்திரன் என்றும் ஒரு பெயருண்டு. அவனுக்கு சாபஸ்தி என்ற குமாரன் பிறந்தான். அவன் சாபஸ்தி என்ற நகரத்தைத் தோற்றுவித்தான். அவனுக்குப் பிருகதசுவன் பிறந்தான். அவனுக்கு குவலயாசுவன் பிறந்தான். அவன் உதங்கமா முனிவருக்குப் பகைவனாக இருந்த துந்து என்ற அசுரனைத் தனது இருபத்தோராயிரம் பிள்ளைகளோடு கூடிச் சென்று கொன்றதால் துந்துமாரன் என்ற பெயரைப் பெற்றான். அவனது பிள்ளைகளில் திருடாசுவன், சந்திராசுவன், கபிலாசுவன் என்ற மூவரைத் தவிர மற்றைய யாவரும் அந்த அசுரனின் தீமூச்சுக் காற்றால் வெந்து மடிந்தார்கள். அவர்களில் திருடாசுவனுக்கு அரியசுவன் பிறந்தான். அவனுக்கு நிகும்பனும், நிகும்பனுக்கு அமிதாசுவனும், அவனுக்கு கிருசாசுவனும், அவனுக்குப் பிரசேனசித்தும், அவனுக்கு யுவனாசுவனும் பிறந்தார்கள்.
யுவனாசுவன் நெடுநாள் புத்திரப் பேறில்லாமையினால் வெறுப்படைந்து, முனிவர்கள் வாழும் ஆசிரமங்களருகே திரிந்து கொண்டிருந்தான். முனிவர்கள் அவன் மீது கருணை கொண்டு, அவனுக்குப் புத்திரன் உண்டாவதற்காக, ஒரு யாகத்தை நடத்தினார்கள். அந்த யாகமானது நள்ளிரவில் முடிந்தது. உடனே தவசிகள் அனைவரும் மந்திர ஜபத்தால் தூய்மையாக்கப்பட்டிருந்த ஒரு தண்ணீர்க் கலசத்தை யாக வேதிகையின் நடுவே வைத்து விட்டு, உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த அரசனுக்குத் தாகம் அதிகமாக இருந்தது. அவன், முனிவர்களை எழுப்புவதற்குப் பயந்து அளவற்ற மந்திரங்களால் ஜபிக்கப்பட்டிருந்த அந்தக் கலசத்து நீரைக் குடித்து விட்டான். பொழுது விடிந்தவுடன் முனிவர்கள் எழுந்து, இந்தக் கலசத்து நீரை யார் குடித்தது? இதை யுவனாசுவரனுடைய மனைவியானவள் குடித்திருந்தால் அவள் மகாப் பலப் பராக்கிரமமுள்ள புத்திரனைப் பெற்றிருப்பாளே? அத்தகைய மந்திர நீரை யார் நாசஞ்செய்தது? என்று கேட்டார்கள். அரசன் நடந்தவற்றை அவர்களிடம் கூறி மன்னிப்பு வேண்டினான். இப்படியிருக்க, அந்த அரசனுடைய வயிற்றிலே, நாளாக நாளாக கர்ப்பம் வளர்ந்து வந்தது. மாதங்கள் நிறைந்தவுடன் அந்தக் கர்ப்பம் அவனுடைய வயிற்றைத் தன் கட்டை விரலினாலே கிழித்துக் கொண்டு வெளியே வந்தது. அரசன் மரணமடைந்தான். இவ்விதமாக குழந்தைப் பிறந்தவுடன் முனிவர்கள் ஒன்றுகூடி, பிறந்த இந்தக் குழந்தை, யாருடைய முலைப்பாலைப் பருகும்? என்று கேட்டார்கள். அப்போது அங்கே வந்த தேவேந்திரன் என்னைத் தாயாக வைத்து முலையுண்ணும் என்று சொல்லித் தனது பவித்திர விரலை, அந்தக் குழந்தையின் வாயில் கொடுக்க, அந்தப் பிள்ளை அந்த விரலிலிருந்து ஒழுகிய அமிர்தத்தைக் குடித்து ஒரே நாளில் வளர்ந்தது. இந்திரனுக்கு மாந்தாதா என்ற பெயரும் உண்டு. ஆகையால் அந்த அரசகுமாரனுக்கு மாந்தாதா என்ற பெயர் உண்டாயிற்று. அவன் மாமன்னனாகி பூமண்டலத்தை ஆண்டு வந்தான். இவனைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. அதாவது எவ்வளவிலே சூரியன் உதயமாகிறானோ, எவ்வளவிலே அஸ்தமனமாகிறானோ, அந்த எல்லைகளுக்கு உட்பட்ட பூமண்டலம் முழுமையும் மாந்தாதாவின் ராஜ்யமாக இருந்தது! என்பது தான் அந்தப் பாடலாகும்.
அந்த மாந்தாதா, சசபிந்து என்பவனின் மகளாகிய இந்துமதி என்பவளை மணந்து, புருகுச்சன், அம்பரீஷன், நாபாகன் என்ற பிள்ளைகளையும் ஐம்பது பெண்களையும் பெற்றான். அந்தக் காலத்தில் ரிக் வேதமறிந்த சவுபரி என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கிப் பன்னிரண்டு ஆண்டுக்காலம் தவஞ்செய்து கொண்டிருந்தார். அந்தத் தண்ணீரில் சம்மதன் என்ற மிகப்பெரிய மீன் ஒன்று, பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், உறவினர்களாகிய தன் கிளைகள் அநேகம் முன்னும் பின்னும் பக்கங்களிலும் வாலிலும் தலையிலும் ஏறி விளையாடச் சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அதனால் சவுபரி முனிவரது மனஒருமைப்பாடு நீங்கியது. அவர் அந்த மச்சம் தன் கிளைகளோடு கூடி அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் கண்டு, ஓ! இந்த மீனோ விரும்பத்தகாத ஈனப் பிறப்பிற் பிறந்தது. ஆயினும் அது மிகவும் பாக்கியமுள்ளது. ஏனென்றால் புத்திர பவுத்ராதிகள் விளையாடிக் கொண்டிருக்க, அவற்றோடு இணைபிரியாமல் சஞ்சரித்து மகிழ்கின்றது. இதைப் பார்க்க நமக்கே எவ்வளவு ஆசையுண்டாகிறது? ஆகையால் நாமும் இப்படியாவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசித்து அந்தத் தடாகத்திலிருந்து வெளியே வந்து, சந்தானத்துக்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு மாந்தாதா மன்னனிடம் வந்தார். இவர் வந்த செய்தியை அறிந்த மன்னன் அவரை எதிர்கொண்டழைத்து உபசரித்தான். அவனை சவுபரி முனிவர் நோக்கி, அரசனே! நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ எனக்குக் கன்னிகாதானம் கொடுக்க வேண்டும். என்னுடைய வேண்டுதலை மறுக்காதே! ககுஸ்த வமிசத்தாரிடம் வந்த யாசகர் தாம் விரும்பியதைப் பெறாமலிருந்ததில்லை அல்லவா? இவ்வுலகில் எத்தனையோ அரசர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குங் கன்னிகைகள் இருக்கிறார்கள். ஆயினும், யாசகரின் இஷ்டத்தை நிறைவேற்றும் விரதமுடையது உனது குலம். உனக்கு ஐம்பது பெண்கள் இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருத்தியை எனக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டும். என் பிரார்த்தனை நிறைவேறாமற் போயின் நான் வருந்துவேன். நான் வருந்தாமல் இருக்க, என் துன்பத்தை நீதான் நீக்கவேண்டும் என்றார். இவ்விதமாகச் சவுபரி முனிவர் சொன்னவுடன், மாந்தாதா மன்னன் அவரை உற்றுப் பார்த்தான். மூப்பினால் தளர்ந்து, தலை நரைத்திருந்தார் சவுபரி முனிவர்! ஆனாலும் அவருடைய வலிமையைப் பற்றிய பயத்தினால் அவரது விண்ணப்பத்தை மறுக்கமாட்டாமல் மாந்தாதா மன்னன் தலைகுனிந்து நெடுநேரம் யோசித்தான். அப்போது சவுபரி முனிவர், அரசனே! எதைப் பற்றிச் சிந்தனை செய்கிறாய்? நான் ஒன்றும் தகாததைச் சொல்லவில்லையே? அவசியம் யாருக்காவது கொடுத்தே தீரவேண்டிய கன்னியை எனக்குக் கொடுக்கும்படித்தானே நான் கேட்டேன்? இதனால் நீ புண்ணியம் பெறுவாய்! என்றார்.
அவரை அரசன் நோக்கி தவமுனிவரே! எனது குலமுறைப்படி, கன்னிகை யார் மீது இஷ்டப்படுகிறாளோ, அந்த வரனுக்கே அவளைக் கொடுப்பது வழக்கம். இது இப்படியிருக்கத் தேவரீரது வேண்டுதலோ எமது எண்ணங்களுக்கு மேற்பட்டது. அதனால் தான் செய்வதறியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதைக்கேட்ட முனிவர் இந்த அரசன் நமது வேண்டுகோளை மறுக்க இதை ஓர் உபாயமாகச் சொல்லிவிட்டான் என்றே யோசித்தார். ஏனென்றால் இந்த முனிவன் முழுக்கிழவன். ஆகையால் எத்தகைய பெண்ணும் இவரை விரும்பமாட்டாள். அப்படியிருக்க நல்ல பருவமுடைய நம் கன்னியர் இவரை விரும்புவார்களோ? ஆகையால் தானே ஆசையற்றுப் போகட்டுமே என்று அரசன் நினைத்தே அப்படிக் கூறிவிட்டான். இனி அதற்கேற்ப நடக்கவேண்டும் என்று சவுபரிக் கிழவர் தமது மனதில் எண்ணிக்கொண்டு அரசனைப் பார்த்து, அரசனே! உங்கள் குலவிரதத்தை நான் அழிக்கவிரும்பவில்லை; என்னை உமது கன்னிகைகள் இருக்கும் அந்தப்புரத்திற்குப் போகும்படி, அந்தப்புரக் காவலாளிக்குக் கட்டளையிடுவாயாக. கன்னிகையே என்னைக் கதாலிப்பவளாயின் நான் கல்யாணஞ் செய்து கொள்கிறேன். இல்லாவிட்டால் முதிர்ந்த வயதில் இந்த முயற்சி எனக்கு ஏனென்று விட்டு விடுகிறேன்! என்றார். பிறகு அவர் கூறியபடியே செய்யும் வண்ணம் அந்தப்புரக் காவலாளிக்கு அரசன் கட்டளையிட்டான். அக்காவலாளியோடு சவுபரி முனிவர் கன்னிப் பெண்களின் அந்தப்புரத்தினுள்ளே போகும்போது சித்த கந்தர்வர்களைவிட மேம்பட்ட அழகான ரூபத்தை எடுத்துக் கொண்டார். சேவகன், முனிவரை அந்தப்புரத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு அங்கிருந்த கன்னியரைப் பார்த்து உங்கள் தந்தையான அரசரிடம் இந்த முனிவர் கன்னிகை வேண்டி வந்தார். கன்னிகைகளில் யார் பிரியப்பட்டு இவரை வரித்துக் கொள்கிறார்களோ, அவர்களையே அவர்களிஷ்டப்படி இந்த முனிவருக்குக் கொடுப்பேன் என்று மகாராஜா கட்டளையிட்டிருக்கிறார் என்றான். அதைக் கேட்டதும் அரசகுமாரிகள் அந்த முனிவரை வந்துப் பார்த்தார்கள். முனிவரின் புதுவடிவத்தையும் இளமை துள்ளும் மோகன ரூப அழகுகளையும் கண்டு அக்கன்னிகைகள் அனைவரும் காமாவேசமுடையவர்களாகி நல்ல மதத்த ஆண் யானையை பெண் யானைகள் சூழ்வதைப் போலச் சூழ்ந்து கொண்டு, நான் நான் என்று பரபரப்புடன் போட்டியிட்டு அவரை வரித்தார்கள். இதனால் அப்பெண்களிடையே கலகம் ஏற்பட்டது; அவர்கள் அனைவருமே அவரை விரும்பினார்கள். எனவே அங்கு நடந்தவற்றைக் காவலாளி அரசரிடம் தெரிவித்தான். அதைக் கேட்டதும் மாந்தாதா மன்னன் மிகவும் வியப்படைந்து, என்ன இது? இனி என்ன செய்வேன்? என்ன சொல்லி விட்டேன்? என்று மனம் கலங்கி, தனக்கு விருப்பம் இல்லாதிருந்தும், வாக்குக் கொடுத்து விட்டதற்காகப் பயந்து, தன் கன்னிப்பெண்களையெல்லாம் சவுபரி முனிவருக்கே திருமணஞ் செய்து கொடுத்தான்.
பிறகு, சவுபரி முனிவர் அரசகுமாரிகளை அழைத்துக் கொண்டு ஆசிரமத்தை அடைந்தார். அதன்பிறகு சிற்பியான விசுவகர்மாவை அழைத்து தமது மனைவியருக்குத் தனித்தனியாக மாளிகைகளையும் அன்னங்கள் நீந்தும் தடாகங்களையும் மலர் வனங்களையும் அமைத்துக் கொடுக்கச் செய்தார். அவ்வாறே விசுவகர்மாவும் அமைத்துக் கொடுத்தான். பின்பு, சவுபரி மாமுனிவரது ஆக்ஞையினால் அந்த மாளிகைகளில் நந்தனம் என்ற மகாநதியானது நித்தியமாக இருந்து வந்தது. அந்த மாளிகைகளில் ராஜகுமாரிகள் வசித்து போகங்களிலும் போஜன வகையிலும் திருப்தியடைந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அவர்களுடைய தந்தையான மாந்தாதா மன்னன் ஒரு சமயம் தன் பெண்கள் மீதுள்ள அன்பினால், அவர்களைப் பார்ப்பதற்காக முனிவரது ஆசிரமத்தை அடைந்தான். ஆசிரமம் இருந்த இடத்தில் ஸ்படிக மயமாய் விளங்கிய மாடமாளிகைகளைக் கண்டு அதிசயித்து ஒரு மாளிகையினுள்ளே நுழைந்தான். அங்கிருந்த தனது மகளைக் கண்டு, கண்களில் கண்ணீர் ததும்ப மகளே! நீ சுகமாக இருக்கிறாயா? அல்லது அசுகமாக இருக்கிறாயா? முனிவர் உன்னிடத்தில் அன்பாக இருக்கிறாரா? நீ நம்முடைய அந்தம்புரவாசத்தை நினைக்கிறாயா? என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் தந்தையே! நான் சுகமாகவே இருக்கிறேன். எனக்கென்று ரமணீயமான உப்பரிகையும், அழகான தோட்டமும், நீர்ப்பறவைகளோடு தாமரை முதலியவை விளங்கும் தாடகங்களும், மனதிற்கினிமையான போஜனங்களும், திவ்வியமான ஆடையாபரணங்களும் மிகவும் பரிமளமுள்ள மலர்களும் மிகவும் மென்மையான சயனா சனங்களும் இன்னும் இல்லறத்துக்குரிய யாவுமே நன்றாக இருக்கின்றன ஒரு குறையும் எங்களுக்கில்லை. இருப்பினும் பிறந்த இடம் எப்படி மறக்கும்? ஆனால் துக்கத்துக்குக் காரணம் ஒன்றும் இருக்கிறது. அது என்னவென்றால், என் கணவராகிய அந்த முனிவர் எப்போதும் என்னிடமே காதல்கொண்டு, என்னை விட்டுப்பிரியாமல் இருக்கிறார். எனது சகோதரிகளே நினைப்பதில்லை இது தான் என்மனதை வருத்துகின்றது என்றாள்.
பிறகு மாந்தாதா மன்னன் மற்றொரு மகளின் மாளிகைக்குச் சென்று, அவளிடமும் முன்போலவே, அவளது சுகத்தைப் பற்றி விசாரித்தான். அதற்கு அவளும் தனக்கு கிருஹ பூஷண, சயன, போஜனாதி சவுக்கியங்களில் ஒன்றும் குறைவில்லை என்றும், ஆயினும் தன் கணவன் தன்னை விட்டுப் பிரியாமல் எந்நேரமும் தன்னுடனேயே மகிழ்ந்திருப்பதினால் தனது சகோதரிகளுக்கு நேர்ந்துள்ள துக்கமே தனக்குத் துக்க காரணமாக இருக்கிறதென்றும் சொன்னான். பிறகு மன்னன் இதுபோலவே ஒவ்வொரு புதல்வியின் மாளிகைக்கும் சென்று விசாரித்தான். எல்லோரும் ஒன்றுபோலவே பதில் சொல்லி, அவனை நன்கு உபசரித்தார்கள். இதனால் மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஏகாந்தத்தில் உட்கார்ந்திருந்த சவுபரி முனிவரைக் காணச் சென்று, அவரால் மரியாதை செய்யப்பெற்று, வெகு விநயத்துடன் அவரை நோக்கி, ஓ மகானுபவரே! தங்களின் உயர்வான சித்தியின் பிரபாவத்தைக் கண்டேன். நான் இதுபோன்ற சம்பத்து விலாசம் இருப்பதைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. இது எவ்வளவோ அவ்வளவும் உமது தவத்தின் பயன் ஆகும்! என்று சொல்லி, அவரை மிகவும் புகழ்ந்தான். பிறகு அவருடன் சிலகாலமிருந்து, இஷ்டமான போகங்களை அனுபவித்து, அதன் பிறகு தனது தலைநகரை அடைந்தான். சிலகாலத்துக்குப் பிறகு, சவுபரி முனிவரின் பத்தினிகளான குமாரிகளுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகள் மீது சவுபரி முனிவருக்கு நாளுக்கு நாள் ஆசையும், அன்பும் அதிகமாயிற்று. அதனால் அவர் மமதையடைந்து, இந்தக் குழந்தைகள் மழலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு சிற்றடிகளால் நடக்குமோ? இவர்கள் யவனமுடையவர்களாவார்களோ? இவர்கள் திருமணம் புரியத்தக்க பெண்களோடு கூடியிருக்கக் காண்பேனோ? இவர்களுக்குக் குழந்தைகள் உண்டாகுமோ? அக்குழந்தைகள் வளர்ந்து மனைவியரோடு சேர்ந்து சந்தானமுடையவர்களாக இருப்பதை நான் கண்டு களிப்பேனோ என்று இந்தவிதமாகக் காலம் செல்லச் செல்ல அவரது மனோரதங்கள் வளர்ந்து கொண்டே இருந்ததால், அவர் வேறு சிந்தனையில்லாமல் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது சவுபரி முனிவர் தமக்குத் தாமே யோசிக்கலானார். ஓஹோ! எனக்கு நேர்ந்த மோகத்தை என்னவென்று சொல்வேன்? பதினாலாயிரம் ஆண்டுகள் சென்றாலும் இந்த மனோரதங்கள் ஒழியாது போலத் தோன்றுகிறதே! ஏனென்றால் முன்பு இருந்த மனோரதங்கள் நிறைவேற நிறைவேற புதியதான வெவ்வேற மனோரதங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவே. நாம் கோரியபடி குழந்தைகள் பிறந்து தவழ்ந்து சித்தடிவைத்து நடந்து வளர்ந்து பருவம் அடைந்து மணஞ்செய்து மக்களையும் பெறக் கண்டோம். இப்பொழுதோ, நமது மனமோ, பேரன்மாருக்கும் சந்ததியுண்டாவதைக் காண விரும்புகிறது. அதைக் கண்டாலும் வேறொன்று மேலும் உண்டாகும். அது நிறைய, வேறொன்று உண்டாகும். மேன்மேலும் ஆசையுண்டாவதைத் தடுப்பதுதான் எப்படி? மரணம் அடைவதனால் மாத்திரம் இந்த மனோரதங்களுக்கு முடிவுண்டாகுமேயன்றி வேறொன்றினாலும் முடிவுண்டாகாது.
இது இப்போது தான் எனக்கு நன்றாகத் தெரிகிறது. இவ்வாறு கோரிக்கைகளிலே அழுந்தியிருப்பவனுக்கு ஒருபோதும் மனமான பரம்பொருளைப் பற்றமாட்டாது. தண்ணீரில் வாசஞ்செய்யும்போது மித்திரனான மச்சத்தின் சேர்க்கையினால் அல்லவோ எனது சமாதி நிஷ்டைக்குலையலாயிற்று? சகவாச தோஷத்தால் அல்லவா, நான் அரசகுமாரிகளை மனைவியர்களாக அடைய நேர்ந்தது. இந்தப் பெண்டிரைக் கொண்டதால் அன்றோ மேன்மேலும் ஆசைப்பெருக்கம் உண்டாயிற்று. ஒரு பெண்டிரைக் கொள்வதும் ஒரு புத்திரனைப் பெறுவதுமே வெகு துக்கத்துக்குக் காரணமாக இருக்கும்போது ஐம்பது பெண்டிரையும் நூறு பிள்ளைகளையும் பெற்று நான் துக்கத்தைப் பெருக்கிக் கொண்டேனே? நான் தண்ணீரிலிருந்து செய்த தவப்பேற்றுக்கு இந்தச் செல்வப்பேறு இடையூறாயிற்றே? மச்சத்தின் கூட்டுறவால் ஏற்பட்ட மக்கட்பேற்றின் விருப்பத்தால் மனங்கவரப்பட்டுப் போனேனே? சங்கமற்றிருப்பதே முனிவர்களுக்கு மோக்ஷத்தின் காரணமாகும் சங்கத்தினால் குற்றங்கள் அல்லவா உண்டாகும்? யோக நிஷ்டை கை கூடியவனும் சங்கத்தால் வீழ்வானாகில் அற்ப சித்தியுள்ள என்போன்றோருக்கு கேட்கவும் வேண்டுமோ? இனிமேலாவது தக்க முயற்சிசெய்து, ஆன்மாவைக் காக்கவேண்டும். ஆகையால் எல்லாவற்றையும் அளிக்கவல்லவனும் இத்தகையது என்று சிந்திக்க ஒண்ணாத திவ்யச் சொரூபமுள்ளவனும், அணுவுக்கு அணுவாயும், மகத்துக்கு மகமாயும் இருப்பவனும், முன்பு ஒரு யுகத்திலே வெண்மையாயும் இந்த யுகத்திலே கருமையாயுமிரா நின்ற திவ்விய மங்கள விக்கிரஹமுள்ளவனும், பிரகிருதிக்கு உட்படாத தூய்மையுருவும், பிரகிருதிக்கு உட்பட்ட சுத்தமல்லாத சொரூபமுடையவனும், லோகேசுவரனுமான ஸ்ரீவிஷ்ணுபகவானை ஆராதிக்கக் கடவேன். சகல தேஜோரூபியாகவும், சர்வ ஸ்வரூபியாகவும், வெளிப்பட்டதும் வெளிப்படாததுமான திருமேனியை உடையவனாகவும், காரிய காரண ரூபியாகவும், தேச காலாதி பரிச்சேதமில்லாதவனாகவும் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவினிடத்திலே மீண்டும் பிறவியில்லாமல் இருத்தற்கு என் சித்தம் சஞ்சலமின்றி ஸ்திரமாக இருக்கக் கடவது. சர்வ பூதாத்துமகனாகவும் நிர்மலனாகவும் சர்வேசுவரனாகவும் ஆதி மத்யாந்தர ரகிதனாகவும் இருக்கும். அந்த அநந்தனைக் காட்டிலும் வேறாகத் தோன்றும்படியான பொருள் ஒன்றும் இல்லையோ அந்தத் தேசிகனுக்கு எல்லாம் தேசிகனாக எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவை சரணமாகப் பற்றுகிறேன்! என்று இவ்விதம் தனக்குத்தானே சிந்தித்த சவுபரி முனிவர், புத்திரர்களையும் வீடு, தோட்டம் முதலிய யாவற்றையும் பற்றற விட்டு, தமது மனைவியருடன் வனத்துக்குச் சென்று, வானப் பிரஸ்தர் செய்யவேண்டிய நித்தியக்கர்ம அனுஷ்டானங்களைச் செய்து கொண்டு, சகல பாவங்களையும் போக்கிக் கொண்டு, அதனால் பக்குவமான சித்த நிலையை அடைந்து, அக்கினிகளே ஆத்மாவிலே ஏற்றிவிட்டுச் சந்நியாச ஆசிரமத்தில் பிரவேசித்தார். அவ்விதமாகி, சகல கிரியாக லாபத்தையும் எம்பெருமானுக்கே ஆராதனமாகச் சமர்ப்பித்து நாசம் இல்லாததும், விகார சூன்யமானதும் மரணாதிகளுக்கு இடமாகாததும் அளவற்றதும், பரம பாகவதர்கள் அடையும்படியானதுமான விஷ்ணுலோகம் என்று சொல்லப்படும் பரமபதத்தை அடைந்தார். மைத்ரேயரே! மாந்தாதா மன்னனைப் பற்றிய வரலாற்றிலேயே, இந்த சவுபரி முனிவரின் சரிதத்தையும் நான் உமக்கு சொன்னேன். இதை எவன் ஸ்மரிக்கிறானோ, படிக்கிறானோ, படிக்க வைக்கிறானோ, கேட்கிறானோ, கேட்பிக்கிறானோ, தரிக்கிறானோ, எழுதுகிறானோ, எழுதுவிக்கிறானோ, அதன்படி நடக்கிறானோ, நடத்துவிக்கிறானோ, உபதேசிக்கிறானோ, அவர்களுக்கெல்லாம் எட்டுப் பிறவிகள் வரையிலும் தீயச் சிந்தையும், தீய ஒழுக்கமும் தீயவழியில் மனம் வாக்கு செல்லுதலும், பரித்தியாகம் செய்ய வேண்டியவைகளிலே அபிமானமும் உண்டாவதில்லை!
3. புருகுச்ச, சகர மாமன்னர்களின் வரலாறுகள்
மைத்ரேயரே! இனிமேல் மாந்தாதாவின் பரம்பரையைச் சொல்கிறேன். மாந்தாதாவின் மகனான அம்பரீஷனுக்கு யுவனாசுவன் என்ற புத்திரன் உண்டானான். அவனுக்கு அரிதன் பிறந்தான். அந்தக்காலத்தில் பாதாள உலகத்தில் மவுனேயர் என்ற ஆறுகோடிக் கந்தருவர்கள் இருந்தார்கள். அவர்கள் நாக குலத்தாரின் முக்கியமான இரத்தினங்களையும், ஆட்சியையும் பறித்துக் கொண்டார்கள். அதனால் நாகர்கள், திருப்பாற்கடலில் சென்று சகல தேவ தேவனான ஸ்ரீவிஷ்ணு பெருமானைத் தோத்திரஞ் செய்தார்கள். எம்பெருமான் யோக நித்திரை நீங்கி, தாமரை மலர் மலர்ந்தாற்போலத் திருக்கண் மலர்ந்தருளினார். அப்போது நாகர்கள், சுவாமீ! அடியேங்களுக்குக் கந்தருவருடைய பயம் மிகுந்துள்ளது. இது எப்படித் தீரும்? என்று கேட்டார்கள். அதற்கு முதலும் முடிவும் இல்லாத எம்பெருமான் நாகர்களே! மாந்தாதாவின் மகன் புருகுச்சன் என்பவனிடத்திலே நான் ஆவேசித்து, உங்கள் பகைவர்களை அடக்குகிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன்பிறகு நாகர்கள் அவரை வணங்கி விடைபெற்று, பாதாளம் சென்று தங்கள் சகோதரியான நர்மதையை அந்தப் புருகுச்ச மன்னனின் பத்தினியாகும்படி அனுப்பிவைத்தார்கள். அவள் புருகுச்சனோடு சேர்ந்து, அந்த மன்னனைப் பாதாளலோகத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். பிறகு புருகுச்ச மாமன்னன், எம்பெருமானது தேஜோ விசேஷத்தால் ஆவேசமுற்று, கந்தர்வர்கள் அனைவரையும் நாசஞ்செய்து, தன் பட்டணத்தை அடைந்தான். அப்போது நாகமன்னர்கள் ஒன்றுகூடி, நர்மதையை அழைத்து, நர்மதாய்! யார் உன்னை நினைத்தாலும் உன் பெயரைக் கீர்த்தனஞ் செய்தாலும், அவனுக்கு சர்ப்ப பயம் இல்லாமற் போகக் கடவது என்று நர்மதைக்கு வரங்கொடுத்தார்கள். இதற்கு ஒரு பாடலும் உண்டு. அதாவது காலையில் நர்மதைக்கு நமஸ்காரம், இரவிலும் நர்மதைக்கு நமஸ்காரம். ஓ! நர்மதாய் உனக்கு நமஸ்காரம் நீ என்னை நச்சுப்பாம்புகள் கடிக்காமல் ரட்சிக்க வேண்டும்! என்று எவனொருவன் சொல்லிக் கொண்டு, இரவு பகல்களில் இருள் மூடிய இடங்களுக்குச் சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிப்பதில்லை. இவ்விதமாகத் தியானித்துக் கொண்டு, விஷத்தையே அருந்தினாலும் அதனால் ஒரு தீங்கும் உண்டாவதில்லை. இவ்விதமாக நர்மதைக்கு நாகேந்திரர்கள் வரங்கொடுத்து விட்டு, புருகுச்ச மன்னனுக்கும் அவனது சந்ததி அற்றுப் போகாதவாறும் பெருகும்படியும் வரங்கொடுத்தார்கள்.
புருகுச்ச மன்னன் நர்மதையோடு கூடிமகிழ்ந்து திரசதஸ்யு என்பவனைப் பெற்றான். அவனுக்கு அநரண்யன் பிறந்தான். அவனை இராணவன் திக்விஜயம் செய்துவரும்போது; சண்டை செய்து கொன்றான். அந்த அநரண்யனுக்கு பிரஷதசுவன் பிறந்தான். அவன் மகன் ஹரியசுவன், அவன் மகன் ஹஸ்தன். அவனுக்கு வசுமனது, அவனுக்குத் திரிதன்வா, அவனுக்குத் திரையாருணி. அவனுக்குச் சத்தியவிரதன் பிறந்தான். அவன் தான் திரிசங்கு என்ற பெயரைப் பெற்றவன். அந்த திரிசங்கு ஒரு சமயம் தன் தந்தையின் சாபத்தால் சண்டாளனாக மாறினான். அப்போது பன்னிரண்டு ஆண்டுக்காலம் மழையில்லாமல் ஏற்பட்ட ஒரு பெரும் பஞ்சத்தில் விசுவாமித்திரரின் மனைவியும் மக்களும் பிழைக்கும் பொருட்டு அவன் தினந்தோறும் மிருக இறைச்சிகளைக் கொண்டு வந்து கொடுத்தான். சண்டாளனிடம் வாங்கும் குற்றம் அவர்களுக்கு ஏற்படாதவாறு அந்த இறைச்சிகளைக் கங்கைக் கரையிலிருந்த ஓர் ஆலமரத்தின் கிளையிலே கட்டிக் கொண்டுவந்தான். இதனால் விசுவாமித்திரர் அவன் செயலையறிந்து மகிழ்ந்து, திரிசங்குவை அவனது உடலுடன் சொர்க்கலோகம் ஏற்றினார். அந்தத் திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திர மன்னனாகும். அவன் மகன் லோஹிதாசன் அவன் மகன் ஹிரிதன், ஹரிதனுக்கு சஞ்சு என்ற குமாரி பிறந்தாள். சஞ்சுவுக்கு விஜயன், வசுதேவன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களின் விஜயனுக்கு குருகன் பிறந்தான். அவனுக்கு விருகனும், விருகனுக்குப் பாகுவும் பிறந்தார்கள். அந்தப் பாகுமன்னன் ஹேஹயர்களால் வெல்லப்பட்டு, கர்ப்பிணியான தன் மனைவியுடன் காட்டுக்குச் சென்றான். அங்கு அவளுடைய சக்களத்தியானவள் அவளுடைய கர்ப்பம் அழிந்து போகும்படி அவளுக்கு விஷத்தைக் கொடுத்தாள். அதனால் அந்த கருவானது ஏழாண்டுக் காலம் அவளது வயிற்றிலேயே இருந்தது. இந்நிலையில் பாகு அரசனுக்கு வயது சென்றதால் அவன் அவுர்வ மாமுனிவருடைய ஆசிரமத்தின் அருகே மரணமடைந்தான். அப்போது கர்ப்பவதியான அவனது மனைவி, சிதையடுக்கித் தன் கணவனை அதன் மீது வைத்து, தானும் அவனுடனே அனுமரணஞ்செய்து கொள்ள முயன்றாள். இதையறிந்த அவுர்வ மாமுனிவர் தமது ஆசிரமத்திலிருந்து அங்கு வந்து, அவளை நோக்கி, பெண்ணே! இது வீணான எண்ணம் மகா பலப்பராக்கிரமசாலியாக அநேக யாகங்களைச் செய்யக்கூடியவனாய், கீர்த்திக்குரிய மகன் ஒருவன் உன் வயிற்றில் இருக்கிறான். ஆகையால் நீ இவ்விதமாக மரணமடைய வேண்டாம்! என்றார். உடனே, அவளும் அந்த முயற்சியைக் கைவிட்டாள். முனிவர், அவளைத் தம்முடைய ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி வந்தார். சில நாட்களில் அவள் வயிற்றிலிருந்து நஞ்சுடன் கூடிய மகா தேஜஸ் வாய்ந்த ஒரு புதல்வன் பிறந்தான். அந்தப் பிள்ளைக்கு அவன் விஷத்துடன் பிறந்ததால், சகரன் என்ற பெயரைச் சூட்டினார் அவுர்வ முனிவர். சகரன் வளர்ந்த பிறகு அவனுக்கு உபநயனஞ் செய்வித்து சகல வேத சாஸ்திரங்களையும் அவனுக்குக் கற்பித்தார். மேலும் பிருகு முனிவரால் உபதேசிக்கப்பெற்ற ஆக்கினோயாஸ்திரத்தையும் அவனுக்கு உபதேசித்தார்.
இவ்விதமாக ஓதியுணர்ந்த சகரன் என்ற அரசிளங்குமரன் ஒருநாள் தன் தாயை நோக்கி, அம்மா, என் தந்தை எங்கே? நாம் மன்னர் குலத்தில் பிறந்தும் இந்த காட்டுக்கு ஏன் வந்தோம்? என்று கேட்டான். அவள் நடந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொன்னாள். அதைக்கேட்ட ராஜகுமாரன் சகரன் கோபங்கொண்டு, அன்று முதல் ஹேஹய வம்சத்தையே துவம்சம் செய்வதாகச் சபதம் செய்தான். பிறகு, அவன் தன் சபதப்படியேப் பகைவர்களை அழித்தான். அதோடு, பகைவருடன் சேர்ந்திருந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்பிலவர் முதலியவர்களையும் நாசஞ்செய்ய முனைந்தான். எனவே அவர்கள் அனைவரும் அவனை எதிர்க்க முடியாமல் வசிஷ்ட முனிவரைச் சரணடைந்தார்கள். அவர்களைப் பிழைத்திருக்கும் பிணங்களாக வசிஷ்ட முனிவர் நினைத்துக்கொண்டு சகரனிடம் சென்று, மன்னா! இவர்கள் உயிரோடு இருந்தாலும் இறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள். இவர்களே மறுபடியும் இறக்கச் செய்வதில் யாது பயன்? நானே, உன் சபதத்துக்கு விரோதம் ஏற்படாமல் இருக்க, அவர்களை வைதிக சம்பந்த சூனியராகச் செய்து விட்டேன். ஆகவே நீ அவர்களை விட்டு விடுவாயாக என்றார். சகர மன்னனும் அப்படியே ஒப்புக்கொண்டு, குருவாக்கிய பரிபாலனம் செய்தான். ஆயினும் அவர்களில் யவனரை மொட்டைத் தலையராகவும், சகரைப் பாதித்திலை மழித்தவராகவும், பாரதரை தலைமயிர் தொங்க விட்டவராகவும், பப்பிலவரைத் தாடிவளர்ப்பவராகவும் செய்து, அவர்களது வேஷங்களை மாற்றி, அவர்களை வேதாத்தியயனாதி சூனியர்களாக ஆக்கிவிட்டான். அவர்கள் அனைவரும் இவ்விதமாகத் தருமம் இழந்தனர். ஆகையால் மிலோச்சராகக் கருதப்பட்டனர். அதன் பிறகு சகர மகாராஜன் தன் நகரத்துக்குச் சென்று; தன் ஆணைக்குப் பங்கம் ஏற்படாதவாறு சகலதுவீப சமுத்திரங்களோடு கூடிய இந்தப் பூமியை நீதியாய்ப் பரிபாலித்து வந்தான்.
4. சகர புத்திரரின் வரலாறும், சக்கரவர்த்தித் திருமகனார் வைபவமும்
சகர மன்னனுக்கு காசியபரின் மகளாகிய சுமதி என்பவளும் விதர்ப்ப ராஜனின் மகளாகிய கேசினி என்பவளும் மனைவியராக விளங்கினார்கள். அவ்விரு மங்கையரும் மக்கட்பேற்றையடைய அவுரவ முனிவரை ஆராதித்தார்கள். அதனால் அம்முனிவர் மகிழ்ந்து அவர்களை நோக்கி, ராஜபத்தினிகளே! உங்களில் ஒருத்தி வமிசம் விளங்குவதற்கான ஒரு பிள்ளையையும் மற்றொருத்தி அப்படியில்லாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் பெறலாம். யாருக்கு எது விருப்பமோ, அதைப் பெறலாம்! என்று ஒரு வரங்கொடுத்தார். பத்தினி கேசினி என்பவள், தன் வமிச விருத்திக்குரிய ஒருவனையே விரும்பினாள். அவளுடைய சக்களத்திச் சுமதியோ அறுபதியிரம் பிள்ளைகளைப் பெற விரும்பினாள். அப்படியே ஆகட்டும் என்று முனிவர் வாழ்த்தவே, அவ்விருவரும் சில நாட்களில் அவ்வாறே பிள்ளைகளைப் பெற்றார்கள். அவர்களில் கேசினியின் குமாரனான அசமஞ்சசனுக்கு அம்சுமான் என்பவன் பிறந்தான். அந்த (அசமஞ்சசம்-தீயவை) அசமஞ்சசன் சிறுவனாக இருக்கும்போது மிகவும் தீமையான செயல்களையே செய்து வந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர் உண்டாயிற்று. சகரமன்னனோ தன் மகன் சிறுவனாக இருப்பதால் இப்படிப்பட்டத் தீங்கைச் செய்கிறான். பருவம் வந்தால் புத்திசாலியாகவும் நல்ல நடத்தையுடையவனாகவும் ஆவான் என்று நினைத்திருந்தான். ஆனால் அசமஞ்சசனோ வாலிபனாகியும் தீமையே செய்து வந்ததனால் அவனைச் சகர மன்னன், காட்டுக்குத் துரத்திவிட்டான். பிறகு அறுபதினாயிரம் பிள்ளைகளும் அசமஞ்சசனைப் போலவே, துஷ்டத்தனங்களைச் செய்யலானார்கள். அவர்களால் உலகத்தில் யாகாதி சத்காரியங்களும் சத்திய சவுசாதி ஆசாரங்களும் ஒழிந்து போவதைக் கண்ட தேவர்கள், ஸ்ரீபுரு÷ஷாத்தமரின் அம்சமாக விளங்கியக் கபில முனிவரை அணுகி வணங்கி, கபில பகவானே! சகர மன்னனின் பிள்ளைகளெல்லாம் கொடியவர்களாகி உலகத்தை அழித்து வருகிறார்கள். இதுவரையில் அவர்களால் அழிந்தவை இனியெப்படியாகுமோ தெரியவில்லை. துன்பமடைந்த இந்த ஜகத்தைக் காப்பாற்றவல்லவோ, தாங்கள் அவதரித்திருக்கிறீர்கள்! என்றார்கள். அதற்கு அவர், தேவர்களே, சில நாட்களுக்குள்ளேயே அவர்கள் அனைவரும் மாண்டு போவார்கள் என்றார். தேவர்கள் ஆறுதலடைந்தார்கள்.
இது இவ்விதமிருக்க, சகரமன்னன் அசுவமேத யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினான். அதன் காரணமாகத் தன் பிள்ளைகளின் காவலில் யாகக் குதிரையைச் சுற்றுப்பயணத்திற்காக ஓட்டி விட்டான். அந்தக் குதிரையை யாரோ ஒருவன் கொண்டு போய்ப் பாதாளத்தில் விட்டுவிட்டான். பிறகு சகரனின் குமாரர்கள் அந்தக் குதிரையின் குளம்படியை அடையாளமாகக் கொண்டு ஒவ்வொரு காதமாகப் பூமியை வெட்டித் தோண்டிக் கொண்டு சென்றார்கள். பாதாள லோகத்தின் உள்ளே போய் அங்கே திரிந்து கொண்டிருந்த யாகக் குதிரையையும் அதற்குக் கொஞ்சம் தொலைவிலே, தேஜஸோடு ஜ்வலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கபில பகவானையும் கண்டார்கள். உடனே அந்தத் தீயவர்கள், இதோ! இவன் தான் நமது குதிரையைத் திருடிக் கொண்டு, யாகத்தைத் தடுத்து நமக்கு அபகாரஞ் செய்தவன். ஆகவே, இவனைக் கொல்லுங்கள்! என்று கூவிக்கொண்டே ஆயுதங்களுடன் முனிவர் மீது பாய்ந்தார்கள். இப்படியவர்கள் ஓடிவரும் போது முனிவர் சற்று உக்கிரமாக அவர்களைப் பார்த்தார். அந்தப் பார்வையில் அவர்கள் பற்றி எரிந்து சாம்பலாய்க் குவிந்தார்கள். இதுபோலத் தனது யாகக் குதிரை போனதையும், புத்திரர்கள் அழிந்தொழிந்ததையும் அறிந்து சகரமன்னன், தன் பேரனாகிய அம்சுமானை அழைத்து, அந்தக் குதிரையைக் கொண்டு வரும்படிக் கட்டளையிட்டான். அவனும் சகர குமாரர்கள் தோண்டிய வழியிலேச் சென்று கபில முனிவரைக் கண்டான். அவரை வணங்கித் தொழுதான். அப்போது அவர் அவனை நோக்கி பிள்ளாய்! நீ குதிரையைக் கொண்டு போய் உனது பாட்டனாரிடம் கொடுத்து யாகத்தை நிறைவேற்று வாயாக. உனது பேரன் சொர்க்கத்திலுள்ள கங்கா நதியைப் பூலோகத்துக்குக் கொண்டு வருவான் என்ற வரத்தையும் உனக்கு நான் தந்தேன். போ என்று அருளினார். சுவாமி! பிராமண சாபத்தால் அழிந்த அடியேனது பாட்டன்மார்கள் சுவர்க்க லோகத்தையடையும்படியான ஒரு வரத்தை நீங்கள் அளிக்க வேண்டும் என்று அம்சுமான் பிரார்த்தித்தான். அதற்குக் கபிலமுனிவர் பிள்ளாய்! நான் தான் உன் பேரன் கங்கையைக் கொண்டு வருவான் என்று முன்னமே சொன்னேனே! அந்த மகாநதியின் புனித நீரால், இறந்தவர்களின் எலும்பும் சாம்பலும் ஸ்பரிசக்கப்பட்டவுடனேயே அவர்கள் தேவலோகம் செல்வார்கள். பக்தி சிரத்தையோடு நீராடுவோரைப் பாவந்தீர்த்துக் கடைத்தேற்றும் சக்தியையுடையது கங்கையாகும். ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிக் கட்டைவிரலிற் தோன்றிய மகாநதியின் மகிமை இது மட்டுமல்ல. தன்னிடத்திற் கருத்தேயில்லாமல் இறந்தவனுடைய சரீரத்தைச் சார்ந்த எலும்பு, தோல், நரம்பு, ரோமம், சாம்பல் முதலியவற்றுள் ஏதாகிலும் அந்தப் புனிதநீரால் ஸ்பரிசிக்கப்பட்டால் கூட அந்தவுடலுக்கு உரியவன் உடனே சொர்க்கம் செல்வான் என்று சொன்னார். அதன் பிறகு அம்சுமான் அவரை வணங்கி, யாகக்குதிரையை அவிழ்த்துக் கொண்டு சென்று தன் பாட்டனாரிடம் ஒப்படைத்தான். சகர மன்னனும் அசுவமேத யாகத்தை நிறைவேற்றித் தன் பிள்ளைகள் தோண்டியப் பள்ளத்தில் பாய்ந்த சமுத்திரத்தைத் தனது புத்திரனாகப் பாவித்து லோகாந்தரஞ் சென்றான்.
அவன் மகன் அம்சுமானுக்குத் திலீபன் என்ற அரசன் பிறந்தான். அவனுடைய மகன் பகீரதன். அவன் சொர்க்கத்திலிருந்து கங்கையாகப் பூமிக்கு வரவழைத்து, பாகீரதி என்ற பெயரடையச் செய்தான். அந்தப் பகீரதனுக்கு சுஹோத்திரன் பிறந்தான். அவனுக்கு நாபாகனும், அவனுக்குச் சிந்துத்துவீபனும், அவனுக்கு அயுதாயும் பிறந்தார்கள். அயுதாயுவுக்கு ருதுபர்ணன் பிறந்தான். அவன் அக்ஷஹிருதயம் என்ற சூதாட்ட நூலைக் கற்றுத் தேர்ந்து, நளனுக்குத் துணைவனானான். ருதுபர்ணனின் மகன் சர்வகாமன் அவன் மகன் சுதாசனுக்குச் சவுதாசன் என்றும் மித்திரசஹன் என்றும் பெயர் கொண்ட குமாரன் உண்டானான். அவன் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று திரிந்து கொண்டிருக்கும் போது இரண்டு புலிகளைக் கண்டான். அவ்விரண்டிலேயே அந்தக் காட்டிலுள்ள மற்ற மிருகங்கள் அழிக்கப்படுகின்றன என்று நினைத்து, அவற்றில் ஒன்றை அம்பினால் எய்துக் கொன்றான். அந்த அம்பு பாய்ந்து இறக்கும்போது அந்தப் புலியானது ஒரு மகா பயங்கர முகத்தோடு கூடி ராட்சஸ ரூபமாய் விழுந்தது. இரண்டாவது புலியோ, ராட்சஸனாக வெளிப்பட்டு அவனை நோக்கி, உன்மீது நான் என் பகையை தீர்த்துக் கொள்வேன்! என்று சபதமிட்டு மறைந்தது. பிறகு சிறிது காலத்திற்கெல்லாம் சவுதாசன் யாகஞ்செய்யத் துவங்கினான். அவனதுக் குலகுருவான வசிஷ்ட முனிவர் அந்த யாகத்துக்கு வேண்டிய காரியங்களைத் தயார் செய்து விட்டு சற்று, வெளியே போயிருந்தார். அந்த சமயத்தில் ராட்சஸன் வசிஷ்ட முனிவரைப் போன்ற வேடத்துடன் அங்கு வந்து, எனக்கு யாகத்தின் முடிவில் மனித இறைச்சியைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். ஆகையால் முன்னதாகவே அதைக் கொண்டு வந்து பாகஞ்செய்து வைப்பாயாக. நான் சீக்கிரம் வந்து விடுவேன்! என்று சொல்லி விட்டுப் போனான். பிறகு அவனே சமையற்காரனைப் போல வேடம் தரித்து வந்து, குரு பத்தியினால் சவுதாத மன்னன் கட்டளையிட்டதை ஏற்று மனுஷ்ய மாமிசத்தைச் சமைத்து, மன்னன் முன்பு கொண்டு வந்து வைத்தான். சவுதாச மன்னனும் அந்த மனித இறைச்சியை ஒரு பொன் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, வசிஷ்டரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவர் வந்தவுடன் அதை அவருக்குக் கொடுத்தான். அதைக் கண்டவுடனேயே வசிஷ்டர் இதென்ன! இந்த அரசனுக்கு ஏன் இந்தத் துன்மார்க்கப் புத்தி உண்டாயிற்று? திடீரென்று மாமிசத்தை நமக்கு கொண்டு வந்து கொடுக்கிறானே! இது என்ன இறைச்சி? என்று யோசித்தார். யோக திருஷ்டியினால் அதை நரமாமிசம் என்று அறிந்து மிகவும் கோபங்கொண்டு சவுதாச மன்னனை நோக்கி, தவமுனிவர்கள் புசிக்கக் கூடாதது எது என்பதை நீ அறிந்திருந்துங்கூட இதை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டாய். ஆகையால் நீயே இதில் மிகுந்த விருப்பம் கொண்டவனாகக் கடவை! என்று சாபங்கொடுத்தார். அதைக்கேட்டதும் சவுதாசன் கலங்கி, சுவாமி! தாங்கள் விரும்பியவண்ணம் தானே அடியேன் இப்படிச் செய்தேன்? என்றான். வசிஷ்டர் நிகழ்ந்தவற்றை அறிந்து, அவனிடம் இரக்கங்கொண்டு, அரசனே! நீ ஒரு ராக்ஷசனால் வஞ்சிக்கப்பட்டாய் உன்மேல் எந்தக் குற்றமுமில்லை; ஆயினும் நான் இட்ட சாபம் வீணாகாது. ஆனால் நான் இட்ட சாபம் உனக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் வரையிலும் தான் பலிக்கும்! என்றார்.
உடனே சவுதாசன் கோபங்கொண்டு, குற்றம் எதுவும் செய்யாத எனக்கு நீங்கள் சாபமிட்டது அநியாயம்! ஆகையால் நானும் உங்களைச் சபிப்பேன் என்று சொல்லிக் கையிலே நீரை எடுத்து வீசமுயன்றான். அப்போது அவனது மனைவியாகிய மத்யந்தி என்பவள், தன் நாயகனின் கையைப் பிடித்துக்கொண்டு, மகாராஜா! நமது குலத்துக்குத் தெய்வமாயும் குருவாயும் இருக்கும் வசிஷ்ட முனிவரை நீங்கள் இப்படிச் செய்வது சரியல்ல! என்று சமாதானப்படுத்தித் தடுத்தாள்.
உடனே சவுதாசன் கோபங்கொண்டு, குற்றம் எதுவும் செய்யாத எனக்கு நீங்கள் சாபமிட்டது அநியாயம்! ஆகையால் நானும் உங்களைச் சபிப்பேன் என்று சொல்லிக் கையிலே நீரை எடுத்து வீசமுயன்றான். அப்போது அவனது மனைவியாகிய மத்யந்தி என்பவள், தன் நாயகனின் கையைப் பிடித்துக்கொண்டு, மகாராஜா! நமது குலத்துக்குத் தெய்வமாயும் குருவாயும் இருக்கும் வசிஷ்ட முனிவரை நீங்கள் இப்படிச் செய்வது சரியல்ல! என்று சமாதானப்படுத்தித் தடுத்தாள்.
பிறகு சவுதாசன் தன் கையிலே எடுத்த சாபஜலத்தை தரையிலே விட்டால் மழை பெய்யாமல் போய்விடும் என்றும் நினைத்து, அந்த நீரைத் தன் கால்களின் மீது விட்டுக் கொண்டான். அவனது கோபாக்கினியால் காய்ந்த அந்தத் தண்ணீர், அவன் பாதங்களில் பட்டதனால் அவையிரண்டும் ஒளியிழந்து கருமை கலந்து வெண்மையாயின. ஆதலால் அவனுக்கு கல்மாஷபாதன் என்ற பெயர் வழங்கலாயிற்று. வசிஷ்டர் இட்ட சாபத்தின்படி அந்த மன்னன் ஆறாவது ஜாமந்தோறும் ராக்ஷச சுபாவமுடையவனாய் நாட்டிலே புகுந்து மனிதர்களை அடித்துக் கொன்று நர மாமிசம் புசித்து வந்தான். இது இப்படியிருக்க, ஒருநாள் வசந்த காலத்தில் பிராமணனான ஒரு முனிவர் தன் மனைவியுடன் கூடி மகிழ்ந்து காம லீலையில் மூழ்கியிருப்பதை அரக்க வடிவில் இருந்த சவுதாச மன்னன் கண்டான். அவனது பயங்கர உருவத்தைக் கண்டு ரிஷித் தம்பதிகள் பயந்து ஓடினார்கள். அவர்களில் முனிவனை அவன் பிடித்துக் கொண்டு ஓடினான். அப்போது ரிஷிபத்தினியான பிராமணப் பெண், அந்த ராக்ஷசனை நோக்கி, ஐயனே! நீ ராக்ஷசனல்லவே! மித்திரன் என்கிற அரசன் அல்லவா நீ! நீயோ எல்லாவற்றையும் அறிந்தவன் மேலும் பெண்ணுக்குரிய இன்பத்தைச் சிறப்பாக அறிந்தவன் நீயாயிற்றே? அப்படியிருக்க; நான் கருதிய இன்பப் பயனை அடையாமலிருக்கும்போது, நீ என் கணவனை நாசஞ்செய்வது நியாயமல்லவே! அவரை விட்டு விடு! என்று கெஞ்சிக் கேட்டுப் புலம்பினாள். அவள் புலம்பிக் கொண்டிருக்கும்பொழுதே, அரக்க வடிவிலுள்ள சவுதாசன் கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல், நரமாமிசம் புசிக்கும் வெறியோடு புலியானது பசுவைப் பிடித்துச் சென்று புசிப்பதைப் போல அவளது கணவனைத் தின்று விட்டான். அதனால், பிராமண மனைவி மிகவும் கோபங்கொண்டு அவனை நோக்கி, அடப்பாவி! என்னை இவ்விதமாக வீணாக்கி; என் கணவனைக் கொன்று புசித்தாய். ஆகையால் நீ காமபோகத்துக்காக முயற்சிக்கும்போது மரணமடைவாயாக! என்று சாபமிட்டுப் பிறகு தீக்குளித்து மடிந்து போனாள். அதன் பிறகு பன்னிரண்டு ஆண்டுக்காலம் சென்று சவுதாச மன்னனின் சாபம் தீர்ந்தது. ஒரு சமயம் அவன் சம்போகத்தில் இச்சைக் கொண்டு தன் மனைவியை நெருங்கினான். அப்போது அவனது பத்தினியாகிய மதயந்தி என்பவள் பார்ப்பனி இட்ட சாபத்தை நினைவூட்டினாள். அதனால் அரசன் ஸ்திரீ போகத்தை விட்டுவிட்டான். இப்படியானதினால் அவனுக்குச் சந்ததியில்லாமற் போயிற்று. அதனால் அவன் தன் குருவாகிய வசிஷ்ட மகரிஷியை வேண்ட, அம்மகரிஷியும் அவனது பத்தினியாகிய மதயந்தியிடம் புத்திரன் உண்டாகச் செய்தார்.
அதனால் ஏற்பட்ட கருவானது ஏழாண்டுக் காலம் வரை மதயந்தியின் வயிற்றிலிருந்து வெளிப்படாமலே இருந்தது. அதனால் மதயந்தி ஆத்திரப்பட்டு ஒரு கல்லைக் கொண்டு வயிற்றிலே இடித்துக் கொண்டாள். அதன் விளைவாகப் புத்திரனும் பிறந்தான். அவனுக்கு அச்மகன் என்று பெயரிட்டார்கள். அந்த அச்மகனுக்கு மூலகன் என்ற பிள்ளை பிறந்தான். அந்தச் சமயம் பரசராமர், பூவுலகத்திலுள்ள க்ஷத்திரிய வமிசத்தையெல்லாம் அழிப்பதாகச் சபதம் செய்திருந்தார். அதனால் பரசுராமனது பார்வையிற்படாதவாறு மூலகனைப் பெண்கள் நிர்வாணமாகச் சூழ்ந்து கொண்டு அவனைக் காப்பாற்றினார்கள். அதனால் அவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்த மூலகனுக்குத் தசரதன் என்பவன் பிறந்தான். அவன் மகன் இளிபிளி. அவன் மகன் விசுவஸஹன். அவன் மகன் கட்வாங்கன். முன்பொரு காலத்தில் தேவாசுர யுத்தம் நடந்தபோது கட்வாங்கனை தேவர்கள் அணுகி அவனுடைய உதவியை வேண்டினார்கள். அதற்கிணங்கிக் கட்வாங்கன் போர் புரிந்து அசுரர்களை வென்றான். அதனால் தேவர்கள் அவனைத் தமது உலகத்துக்கு அழைத்து சென்று அரசே! உமக்கு இஷ்டமான வரத்தைக் கேட்பீராக என்றார்கள். அதற்கு அவன் நீங்கள் எனக்கு வரமளிக்க வேண்டுமென்று விரும்புவது உண்மையெனில் என் ஆயுள் எவ்வளவு என்று முதலில் சொல்லுங்கள் என்றான். அவர்கள் உமக்கு இன்னும் ஒரு முகூர்த்த காலந்தான் ஆயுசு இருக்கிறது என்று சொன்னார்கள். உடனே அவன் அவர்களிடம் விடைபெற்று மிகவும் வேகமான விமானத்தில் ஏறிக்கொண்டு வெகு விரைவாகப் பூவுலகையடைந்து பிராமணரை விட ஆன்மாவின் மீது எனக்கு பிரியமில்லாமல் இருந்ததும் தேவ மனுஷ்ய பசு, பக்ஷி, விருட்ச முதலிய யாவற்றிலும் எம்பெருமானுடைய சான்னித்தியமே நித்தியமாகவுள்ளது என்று நான் நினைத்திருந்தும் உண்மையானால் முனிவர்களால் தியானஞ் செய்யப்பட்ட அந்தப் பகவானை நான் யாதொரு தடையுமின்றி அடைவேனாக! என்று வாசுதேவன் என்ற திருபெயருடைய பரமாத்மாவிடத்தில் வேதாந்த வாக்கியத்தின்படி ஆன்ம சமர்ப்பணம் செய்து அங்கேயே வயப்படுவதாகிய மோட்ச ஆனந்தத்தை அடைந்தான். இந்த அரசனைப் பற்றி சப்த ரிஷிகள் பாடியப் பாடல் ஒன்றுண்டு. அதாவது கட்வாங்கன் என்ற ராஜரிஷிக்கு ஈடாக இந்தப் பூமியில் யாருமே உண்டாகமாட்டான். ஏனென்றால் ஒரு முகூர்த்த காலம் ஆயுள் இருக்கும் போது சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தது தனது ஞானசத்தியங்களால் சகல கதிகளையும் சகல லோகங்களையும் தாண்டி அவற்றையெல்லாம் ஸ்ரீவாசுதேவனிடம் லயித்துள்ள தனக்குள்ளேயே கண்டான் அன்றே என்பதுதான் அந்தப் பாடலாகும். அந்தக் கட்வாங்க மன்னனுக்கு தீர்க்கபாகு என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ரகுமன்னன் பிறந்தான். அவனுக்கு அஜமகாராஜன் பிறந்தான், அவன் மகன் தசரத மன்னன்.
எல்லா வகையான சுகுண பூர்ணனான பத்மநாபன், லோகரக்ஷணத்துக்காகத் தனது அமிசத்தைக் கொண்டு, ஸ்ரீராம, லக்ஷ்மண, பரத சத்ருக்கினர் என்ற நான்கு ரூபமாக, அந்தத் தசரத மகாராஜனிடம் அவதரித்தான். அந்தச் சக்கரவர்த்தித் திருமகன் ராமன், விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காப்பதற்காக எழுந்தருளுமளவில், வழியில் தாடகை என்ற கொடிய அரக்கியையும், அந்த யாகத்துக்குத் தீங்கு இழைக்க வந்த தாடகையின் மகனான சுபாகு முதலிய அநேக அரக்கர்களையுஞ் சங்கரித்து, தாடகையின் மற்றொரு குமாரனான மாரீசனை வாயு அஸ்திரத்தால் சமுத்திரத்தில் தள்ளிவிட்டார். தமது திருவடி மகிமையினால் அகலிகையின் சாபத்தைப் போக்கி அவளைத் தூயவள் ஆக்கினார். பிறகு, ஜனக மாமன்னரின் நகரத்துக்குச் சென்று, அங்கு பூசித்து வைக்கப்பட்டிருந்த சிவதனுசை முறித்தார். ஜனக மகாராஜனின் திருமாளிகையில் அயோநிஜையாய் அவதரித்து, வீரியசுல்க்கையாய் விளங்கிய சீதை என்ற ஸ்ரீமகாலக்ஷ்மியின் அம்சமானப் பெண்மணியை திருக்கலியாணஞ் செய்தருளினார். பிறகு, ஸ்ரீராமன் கல்யாணக் கோலத்தோடும் சீதையோடும் தம்முடைய அயோத்திமா நகரத்துக்குத் திரும்பி வரும்போது வழியில் பரசுராமரைச் சந்தித்தார். சகல க்ஷத்திரிய குலங்களையும் வேரோடு அழித்து வந்த பரசுராமரோ பொறாமையால் ஸ்ரீராமனை எதிர்த்து வந்தார்.
பலபராக்கிரமங்களால் உண்டான அவருடைய செருக்கை ஸ்ரீராமர் அழித்தார். பிறகு யுவராஜ்யப் பட்டாபிஷேகத்தை விரும்பாமல், மாற்றாந் தாயின் பேச்சுக் கிணங்கத் தந்தையின் வாக்கியத்தை சிரமேற் கொண்டு, சீதாபிராட்டியோடும் இளைய பெருமாளான லக்ஷ்மணரோடும், தண்டகாரண்யத்தில் பிரவேசித்து விராதனைக் கொன்றார். காமவெறியால் தீங்கிழைக்கத் துணிந்த சூர்ப்பனகையை இலக்குமணர் விகாரப்படுத்தியதால் மிகவும் கோபங்கொண்டு பதினாலாயிரம் வீரரோடு போருக்கு வந்த கரதூஷணர்களையும் கபந்தனையும் அழித்து அருளினார். அதற்குப் பிறகு சுக்ரீவனைத் தோழனாக்கிக் கொண்டு அவனுக்குப் பகைவனான வாலியைக் கொன்றார். சுக்ரீவன் அனுப்பிய வானர வீரர்களில் அனுமனால் இலங்கையில் இராவணன் அபகரித்துச் சென்ற சீதாபிராட்டி காவலில் இருப்பதை அறிந்து வானர சேனைகளுடன் புறப்பட்டு, சமுத்திரத்தை அணையாற் கட்டி இராவணன், கும்பகர்ணன் முதலிய அரக்கர்களை அழித்தார். உலகத்தாரின் ஒப்புரவுக்காகச் சீதையை அக்கினிப் பிரவேசம் செய்வித்தார். அக்கினியால் துதிக்கப்பட்ட சீதாதேவியை மீண்டும் ஏற்று, மறுபடியும் அயோத்திக்கு எழுந்தருளிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்தை நூறு ஆண்டுக்காலஞ் சொன்னாலும் முடியாது. ஆயினும் அதனை நான் சுருக்கமாகச் சொல்கிறேன். திவ்விய அலங்காரச் சோபிதமான மகாமண்டபத்தில் நவரத்தினச் சகிதமான சிங்காதனத்தின் மேல் சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீராமர் சீதாபிராட்டியாருடன் வீற்றிருந்தார். இளைய பெருமாளான லக்ஷ்மணரும், பரதாழ்வானும், சத்துருக்கினாழ்வானும் சத்திர சாமரங்களை வீசிய வண்ணம் பக்கங்களில் முகமலர்ந்து நின்றார்கள். விபீஷணாழ்வானும் சுக்ரீவ மகாராஜனும் அங்கதன், ஜாம்பவான் முதலானவர்களும் ஆலவட்டம் முதலியவற்றை ஏந்தி மிக்க மகிழ்ச்சியுடன் புடைசூழ்ந்திருந்தார்கள். சிறிய திருவடி எனப்படும் அனுமான் திருவடிவாரத்து, ரத்தின பீடத்திலிருந்து ஆனந்த பரவசத்துடன் சேவித்தான். பிரம்மா, இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்ற அட்டதிக் பாலகரும் மற்றுமுள்ள சகல தேவதைகளும் வசிஷ்டர், வாமதேவர், வால்மீகி, மார்க்கண்டேயர், விஸ்வாமித்திரர், பரத்வாஜர், அகஸ்தியர் முனிவர்களும், ரிக், யஜுர், சாமம் முதலிய வேதவாக்கியங்களைக் கொண்டு துதித்தார்கள். வீணை, வேணு, மிருதங்கம், படஹம், சங்கம், காஹளம், கோமுகம் முதலிய இசைக்கருவிகள் முழங்க, நிருத்த கீத முதலான மங்கள நிகழ்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்க கப்பமேந்திக் காத்திருக்கும் மன்னர்களின் நடுவே ஆசாரியர் அமைச்சர்கள் முதலியவர்கள் முறையே விதிப்படித் திவ்ய தீர்த்தங்களினால், சகல லோக ரக்ஷணம் செய்து அருள வேண்டும் ஸ்வாமி என்று பிரார்த்தனை செய்து பட்டாபிஷேக மகோற்சவத்தை நடத்தினார்கள். அதன்பிறகு பதினோராயிரம் ஆண்டுக்காலம் யாவரும் குறைவற்றுக் களித்தும் வரும்படி ஸ்ரீராம பத்திர பகவான் சகல பூமண்டலத்தையும் ஆண்டு வந்தார்.
இளவரசாய் இருந்த பரதாழ்வான் மிகவும் கொடியவர்களாக இருந்த மூன்று கோடி கந்தர்வர்களைச் சங்கரித்து, அவர்களது வசமாயிருந்த ராஜ்யங்களைத் தமதுக் கைவசஞ் செய்து கொண்டார். சத்துருக்கினாழ்வானும் யமுனை ஆற்றின் கரையில் ஒரு பெரிய வனத்தில் இருந்துகொண்டு, மிகக்கொடுமை செய்து வந்த மது புத்திரனான லவணாசுரனைச் சங்கரித்து அந்தக் காட்டை அழித்து மதுரை என்ற ஒரு திவ்ய நகரத்தை நிர்மாணித்தருளினார். இளையப்பெருமாளான லக்ஷ்மணரோ ஸ்வாமியை விட்டு இணை பிரியாமல் கைங்கர்ய நிரதராய் எழுந்தருளியிருந்தார். இவ்விதமாக ஸ்ரீராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கினர் என்ற இந்த நால்வரும் லோகத்திற்கு இதத்தையும் தருமத்தையும் நிலைநாட்டி தமதுலகத்துக்கு எழுந்தருளினார்கள். அந்த நால்வரிடத்திலும் மிகவும் பக்தியுடையவராக இருந்த கோசல நாட்டாரும் அவர்களுடைய சாலோக்கியத்தை அடைந்தார்கள். ஸ்ரீராமபிரானுக்கு குசன் லவன் என்ற இரண்டு குமாரரும், லக்ஷ்மணருக்கு அங்கதன், சந்திரகேது என்ற இரு புதல்வர்களும், பரதருக்கு தக்ஷகன், புஷ்கலன் என்ற இரு குமாரர்களும், சத்துருக்கினருக்கு சுபாகு, சூரசேனன் என்றிரு மக்களும் உண்டானார்கள். அவர்களில் ஸ்ரீராமகுமாரனான குசனுக்கு அதிதி என்ற குமாரன் பிறந்தான். அதிதிக்கு நிஷதன், நிஷதனுக்கு அனலன், அனலனுக்கு நபசு, நபசுக்கு புண்டரீகன்; புண்டரீகனுக்கு ஷேமதனுவா, அவனுக்கு தேவானீகன், அவனுக்கு அகீனகு, அவனுக்கு குரு எனப்பிறந்தார்கள். குருவின் மகன் பாரியாத்திரன், அவன் மகன் பலன், அவன் மகன் சலன், அவன் மகன் உற்தன், அவன் மகன் வச்சிரநாபன், அவன் மகன் சங்கணன், அவன் மகன் வியுக்ஷிதாசுவன், அவன் மகன் விசுவயஹன், அந்த விசுவயஹனின் மகனாகிய ஹிரண்யநாபன் மகாயோகியரில் உயர்ந்தவனாய், ஜயிமுனியின் சீடராகிய யாக்ஞவல்கிய மகாமுனிவரிடமிருந்து யோக வித்தையைக் கற்றான். அவனுக்கு தனயன், புஷ்யன் அவனுக்கு துருவசந்தியும், துருவசந்திக்கு சுதரிசனனும், அவனுக்கு அக்னிவர்ணனும், அக்கினிவர்ணனுக்கு சீக்கிரகனும், அவனுக்கு மருவென்பவனும் பிறந்தார்கள். மரு என்பவன் தன் யோகசக்தியால் இமயமலையின் பக்கத்திலுள்ள கலாபக் கிராமத்தில், இப்போதும் யாருக்கும் தெரியாமல் வாசஞ்செய்து கொண்டு இருக்கிறான். அவன் தான் இனிவரும் கிருத யுகத்தில் சூரிய வமிசத்து அரசர்களில் முதல்வனாவான். அவனுக்கு பிரசுசுருகன் என்ற மகன் ஒருவனுண்டு. அவனுக்கு சுசந்தி என்பவன் மகன். அவனுக்கு அமர்ஷன் அவனுக்கு ஸஹஸ்வான்; அவனுக்கு விசுவபவன் அவனுக்கு பிரகத்பலன் அவன் பாரதப்போரில் அர்ச்சுனனது மகனான அபிமன்யுவினால் கொல்லப்பட்டான். இவ்விதமாக இஷ்வாகுவின் குலத்தில் பிறந்த அரசர்களில் முக்கியமான சிலரைப் பற்றிச் சொன்னேன். இவர்களது வரலாறுகளைக் கேட்பதால், பாவங்கள் தீரும். எவன் இந்த வரலாறுகளை சிரத்தையோடு படிக்கிறானோ அவன் இம்மையில் தனக்கு வேண்டியவைகளைப் பெற்று இறுதியில் சுவர்க்கத்தையும் அடைவான்!
5. நிமி வம்ச வரலாறு
இஷ்வாகுவின் மகனான நிமி என்பவன் ஆயிரம் ஆண்டுகள் நடத்த வேண்டிய ஒரு யாகத்தை ஆரம்பித்து, அதற்கு வசிஷ்ட முனிவரை ஹோதாவாக நியமித்தான். அப்போது வசிஷ்டர் அவனை நோக்கி, அரசனே! தேவேந்திரன் ஐநூறு ஆண்டுகள் வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டிய யாகத்துக்கு என்னை முன்னமே வரித்திருப்பதால், அதுவரையில் நீ பொறுத்திருக்க வேண்டும். அதுமுடித்ததும் உடனே நான் வந்து உன் யாகத்தையும் நிறைவேற்றுகிறேன் என்று சொன்னார். அதைக் கேட்டதும் நிமி மன்னன் மவுனமாக இருந்து விட்டான். வசிஷ்டர் தம் இஷ்டப்படி அரசன் ஒப்புக்கொண்டான் என்று நினைத்து, இந்திரனுடைய யாகத்தைச் செய்விக்கச் சென்றார். ஆனால் நிமி மன்னனோ அந்தக் காலத்திலேயே கவுதமர் முதலிய முனிவர்களைக் கொண்டு தனது யாகத்தை நடத்தினான். வசிஷ்டர் இந்திரனுடைய யாகத்தை நடத்தி முடித்துவிட்டு நிமியினுடைய யாகத்தைச் செய்விக்க வேண்டுமே என்று வெகு துரிதமாக வந்தார். வந்தவர் அந்த யாகத்தை கவுதமரைக் கொண்டு நிமி மன்னன் முன்னரே நடத்தி விட்டான் என்று தெரிந்து கொண்டு, அவ்வரசன் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே அவனுக்கு ஒரு சாபமிட்டார். அதாவது நீ என்னை அவமதித்து இந்த யாக காரியத்தைக் கவுதமருக்குக் கொடுத்ததால் உனக்கு உடம்பே இல்லாமல் போகக் கடவது! என்று சபித்தார். அதன் பிறகு விழித்துக் கொண்ட நிமி மன்னன் தனக்கு வசிஷ்டர் சாபமிட்டதை அறிந்து, தானும் குருவுக்கு ஒரு சாபமிட்டான். இந்தத் துஷ்ட குருவானவர், என்னோடு பேசி நடந்தவற்றின் நியாயத்தையறியாமல் தூங்கிக் கொண்டிருந்த என்னை சபித்ததால் அவருக்கும் உடம்பில்லாமல் போகக் கடவது! என்று பதில் சாபமிட்டு விட்டான். பிறகு நிமி மன்னன் தனது உடலை விட்டு விட்டான். வசிஷ்ட மகரிஷியும் தம் உடலை விட்டு விட்டு ஊர்வசியைக் கண்டதனால் சிதறி விழுந்திருந்த மித்திரா வருணருடைய வீரியத்திற் பிரவேசித்து, வேறு தேகத்தை எடுத்துக் கொண்டார். நிமி மன்னனின் தேகமோ, திவ்விய பரிமளத் தைலத்தில் சீர்படுத்தப்பட்டு சுருங்குதல் முதலிய குற்றங்களில்லாமல் அப்போது தான் இறந்தவனுடைய தேகத்தைப் போலிருந்தது, இது இப்படியிருக்க அந்த யாகத்தின் முடிவில், பாகம் பெறுவதற்காக வந்த தேவர்களை நோக்கி, யாகத்தை நடத்திய ருத்துவிக்குகள், நீங்கள் எஜமானனுக்கு ஒரு வரங்கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு தேகமற்ற நிமி சொல்லலானான். ஓ தேவர்களே! நீங்கள் சகல சம்சார துக்கங்களையும் போக்கக் கூடியவர்கள். ஆன்மாவும் உடலும் தனித்தும் பிரிந்திருப்பதைக் காட்டிலும் மனிதனுக்கு வேறு துக்கம் உண்டோ? ஆகையால் எனக்குத் தேகம் வேண்டும். ஆயினும் இந்தச் சரீரத்தில் வசிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை எல்லோருடைய கண்களிலும் நான் வசிக்க விரும்புகிறேன். அத்தகைய வரத்தை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். தேவர்கள் அவன் விரும்பியபடி அவனைச் சகல ஜனங்களுடைய கண்களிலும் இருக்கச் செய்தார்கள். அதுமுதல் சகல பூதங்களும் கண்களை இமைக்கலாயினர்.
அந்த நிமியரசனுக்கப் புத்திரனில்லாமற் போனதால் முனிவர்கள் அனைவருங்கூடி, ராஜ்யத்துக்கு அரசன் இல்லாமல் போனால் ஏற்படக்கூடியத் துன்பத்துக்குப் பயந்து, அவனுடைய உடல் அரணியில் இட்டு கடைந்தார்கள். அதிலிருந்து ஒரு குமாரன் பிறந்தான். அவன் அவ்விதமாகப் பிறந்ததனால் அவனுக்கு ஜனகன் என்ற பெயர் உண்டாயிற்று. மேலும் அவனுடைய தந்தை விதேகனாகையால் வைதேகன் என்றும், கடையப்பட்டதனாலே மிதி என்றும் பெயர்கள் உண்டாயின. அவன் பெயராலேயே அவனுடைய நகரத்துக்கு மிதிலை என்றும் அவன் பிதாவின் பெயரால் அவனது ராஜ்யத்துக்கு விதேக தேசம் என்ற பெயரும் உண்டாயிற்று. அந்த ஜனகனுடைய மகன், உதாவசு அவன் மகன் நந்திவர்த்தனன் அவன் மகன் கேது, அவனுக்கு தேவராதன், அவனுக்குப் பிருகதுத்தன்; அவனுக்கு மகாவீரியன், அவனுக்கு சுதிருதி, அவனுக்கு திருஷ்டகேது, அவனுக்கு அரியசுவன், அவனுக்கு மரு, அவனுக்கு பிரதிகன், அவனுக்கு கிருதரதன், அவனுக்கு தேவமீடன் என்றவாறு புதல்வர்கள் பிறந்தார்கள். தேவமீடனின் புதல்வன் விபுதன் அவன் மகன் மகாதிருதி. அவன் மகன் கிருதராதன், அவனுக்கு மகாரோமா, மகாரோமாவுக்கு சுவர்ண ரோமா, அவன் மகன் இருசுவ ரோமா அவனது மகன்தான் சீரத்வஜன் என்ற ஜனக மகாராஜனாகும். அவர் வேள்விச் சாலைக்காகப் பூமியை உழும் போது, கலப்பையின் வழியிலே சீதாபிராட்டி அவதரித்தாள். சீரத்வஜ மகாராஜனின் தம்பியான குசத்துவஜன் என்பவன், சாங்காசியம் என்ற பட்டணத்தை ஆண்டுவந்தான். அந்த சீரத்வஜ ஜனகருடைய மகன் பானுமான், அவனுக்கு சுத்தியும்னன்; அவனுக்கு சுசி, அவனுக்கு ஊர்ஜன் என்ற மகன் பிறந்தான். அவன் மகன் சதத்துவசன், அவனுக்கு கிருதி, அவன் மகன்ரஞ்சனன், அவன் மகன் புருஜித்து, அவன் மகன் அரிஷ்டநேமி, அவன் மகன் சுருதாயு, அவன் மகன் சுபார்சுவன், அவன் பிள்ளை சிருஞ்சயன், அவனுக்கு ÷க்ஷமாவீ, ÷க்ஷமாவீக்கு அனேனசு, அவனுக்கு பவுமரதன், அவனுக்கு சத்தியரதன், அவனுக்கு உபகு, உபகுவுக்கு உபகுப்தன் அவன் மகன் சுவரகதன், அவனுக்கு சுவாங்கன், சுவாங்கனுக்கு சுபானன், அவனுக்குச் சுவர்ச்சசு, அவனுக்கு சுபாஷன், அவன் மகன் சுசுருதன். அவன் மகன் ஜயன், ஜயனின் மகன் விஜயன். விஜயனின் மகன் இருதன், இருதனின் மகன் சுநயன், சுநயனுக்கு வீதஹவ்யன், அவன் மகன் திருதி, திருதியின் மகன் பகுளாசுவன், அவன் மகன் கிருதி, இந்தக் கிருதியினிடம் முடிந்தது ஜனக வம்சம். இவர்கள் தாம் மிதிலை நகரத்தை ஆண்டு வந்த அரசர்களாவார்கள். இவர்களில் பலர் ஆத்ம வித்தையில் நிஷ்டை பயின்ற மகானுபாவர்கள்.
6. சந்திரன்-தாரை, புரூரவன்-ஊர்வசி கதைகள்
புராணம் கூறிவரும் பராசரரை நோக்கி, சுவாமி! சூரிய வமிசத்தில் பிறந்த அரசர்களைப் பற்றி எனக்குச் சொன்னீர்கள். இனி சந்திர வம்சத்திற் பிறந்த அரசர்களைப் பற்றியும் நான் அறிய விரும்புகிறேன். நிலையான கீர்த்தியைப் பெற்ற அந்தச் சந்திர குலத்து அரசர்களின் சந்ததியானது இன்றும் புகழுடன் இருக்கிறதல்லவா? ஆகையால், தயைகூர்ந்து சந்திர வமிசத்தில் உதித்த அரசர்களைப் பற்றியும் கூறியருள வேண்டும்! என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! இந்த வமிசமும் அதிபல பராக்கிரமங்களும் தேஜஸும் நன்குணர்ந்த செயல்களுமுள்ள நகுஷன், யயாதி கார்த்தவீர்யார்ச்சுனன் முதலிய பேரரசர்களால் சிறப்புடையதாகும். இதை ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். சகல லோக கர்த்தராகிய ஸ்ரீமந் நாராயணனுடைய நாபி கமலத்தில் உதித்த பிருமாவின் குமாரர்-அத்திரி என்ற முனிவர். அவருடைய மகன் சந்திரன். அவனைச் சதுர்முகப் பிரமன் சகல அவுஷாதிகளுக்கும், பிராமணர்களுக்கும், நட்சத்திரங்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்தார். அதன் மேன்மையாக சந்திரன் ஒரு ராஜசூய யாகம் செய்தான். பிறகு அதன் மகிமையினாலும் மேன்மையான அதிகாரத்தைப் பெற்றிருந்ததாலும் மதமும் கர்வமும் கொண்டு, சகல தேவர்களுக்கும் குருவாகிய பிரகஸ்பதியின் மனைவியான தாரை என்பவளை அபகரித்துக் கொண்டான். இந்தச் செய்தியை பிருமா, பிருகஸ்பதிக்கு அறிவித்தார். அதனால் சந்திரனுக்கு பிரகஸ்பதி எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும் தேவரிஷிகள் எல்லோரும் வேண்டிக் கொண்டதையும் சந்திரன் கேட்காமல், தன் குருபத்தினியானத் தாரையை விடவில்லை. அதனால் போருக்கு இடமுண்டாயிற்று, அப்போது பிரகஸ்பதியிடம் பகைத்துக் கொண்டிருந்த அசுர குருவான சுக்கிரன் சந்திரனுக்குப் பக்கமாகச் சேர்ந்து கொண்டான். அதனால் அந்த அசுரகுரு சுக்கிரனின் சீடர்களான ஜம்பன் கும்மன் முதலான தானவர்களும் சந்திரன் பக்கம் சேர்ந்துக் கொண்டுப் போர் புரியத் தயாரானார்கள். ஸ்ரீருத்திர பகவான் அங்கிரசரிடம் கல்வி கற்றதால், குரு புத்திரராகிய பிரகஸ்பதிக்குத் துணைவரானார். அசுரர்களெல்லாம் சந்திரனின் சார்பில் சேர்ந்ததால் தேவேந்திரன் சகல தேவ சைன்னியர்களுடன் போர் புரிய முற்பட்டான். இவ்வாறு தேவர்களுக்கும் அசுரருக்கும் ஏற்பட்டப் போரானது தாரையின் காரணமாக நிகழ்ந்ததால் அந்தப் போருக்கு தாரகாமயம் என்று பெயர் ஏற்பட்டது. அந்தப் பெரும் போரில் இருதரப்பாரும் விதவிதமாய் ஆயுதங்களை உபயோகித்துத் தாக்கினார்கள்; இதனால் உலகம் யாவும் கலக்கமுற்றது, யாவரும் பிருமாவைச் சரணமடைந்தார்கள். அப்போது, பிருமாவானவர், சுக்கிரனையும் சிவனையும் அசுரனையும் தேவரையும் தடுத்து, சந்திரனுக்குப் புத்தி சொல்லி, தாரையைப் பிரகஸ்பதியிடம் திருப்பியனுப்பச் செய்தார். அத்துடன் சண்டையும் நின்றது.
பிறகு தம் மனைவி தாரை கருவுற்றிருந்ததை அறிந்த தேவகுருவான பிரகஸ்பதி அவளை நோக்கி, அடிபெண்ணே! எனது ÷க்ஷத்திரத்தில் நீ மற்றவனுடைய கருவை ஏற்றிருக்கக் கூடாது. இதுவரையில் நீ செய்த சாகசம் போதும். இனி அந்தக் கருவை விட்டுவிடு! என்றார். அதைக் கேட்ட தாரை மிகவும் பதிவிரதையாகையால், கணவனின் சொற்படி கருவை ஒருநாணற்செத்தையின் மீது விட்டுவிட்டாள். அந்தக் கருவினால் பிறந்த குழந்தை, பிறந்தவுடனேயே சகல தேவரையும் தோற்கடிக்கும்படியான திவ்யதேஜசோடு விளங்கியதைக் கண்டதும் பிரகஸ்பதி அந்தக் குழந்தை தனது பிந்துவுக்குப் பிறந்திருக்கலாம் என்று அந்தக் குழந்தையின் மீது விருப்பங் கொண்டிருந்தான். இருவருமே இவ்விதமாக அந்தக் குழந்தையின் மீது விருப்பம் கொண்டிருந்ததால் தேவர்கள் சந்தேகங்கொண்டு தாரையை நோக்கி பெண் அரசியே! இவன் சந்திரனுக்குப் பிறந்தவனா? உன் கணவரான தேவகுருவுக்கப் பிறந்தவனா? அதை எங்களுக்கு சொல்வாயாக! என்று பலமுறைகள் விடாமல் கேட்டார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்று கேட்டும் தாரை வெட்கத்தால் பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். அப்போது அவளுடைய குமாரன் கோபங்கொண்டு, அவளைச் சபிக்க முயன்று, அவளைப் பார்த்து, ஓ துஷ்டையான தாயே! நீ ஏன் என் தந்தை யாரொன்பதைத் தெரிவிக்காமல் இருக்கிறாய்? இன்னும் நீ இதைத் தெரிவிக்கத் தயங்கினால் பொய் வெட்கமுள்ள உனக்குத் தகுந்த சிøக்ஷ செய்வேன்! என்று கடுகடுத்துச் சொன்னான். அப்பொழுது பிருமதேவர், அந்தக் குமாரனைத் தடுத்து, உண்மையைச் சொல்லும்படி தாரையிடம் கேட்டார். தாரை மிகவும் வெட்கத்தினால் தலைகுனிந்து கொண்டு, இவன் சந்திரனுடைய மகன்தான்! என்று சொல்லிவிட்டாள். பிறகு சந்திரன் மிகவும் மகிழ்ந்து, தன் புத்திரனைக் கட்டியணைத்து முத்தமிட்டு, குழந்தாய்! நீ மிகவும் அறிவுடையவனாகையால் உனக்கு புதன் என்று பெயர் சூட்டுகிறேன்! என்று அவனுக்குப் பெயரிட்டான்.
அந்தப் புதன் என்பவன் இளை என்பவளிடம் காமுற்று புரூரவனைப் பெற்றான். புரூரவன் தான தருமங்களைச் செய்வதில் வள்ளலாக விளங்கினான். அவன் யாகங்கள் பலவற்றைச் செய்தவன். மிகவும் ஆணழகன். ஒரு காலத்தில் ஒரு சமயம் தேவலோகத்து அப்சரஸான ஊர்வசியின் மீது சித்திரா வருணர்கள் காதல் கொண்டார்கள். அதற்கு ஊர்வசி இணங்காததினால் அவர்கள் கோபங்கொண்டு, நீ மனிதனின் மனைவியாகக் கடவாய்! என்று சபித்தார்கள். அதனால் ஊர்வசி சில காலம் பூவுலகத்தில் இருக்கும்படி வந்தாள். வந்தவிடத்தில் மகாரூபனாகவும் மிகவும் நல்ல மனதுள்ளவனாகவும் சத்திய சந்தனுமாக விளங்கும் புரூரவச் சக்கரவர்த்தியைக் கண்டாள். அவனைக் கண்டதும் பெண்மைக்கே உரிய பெருமையையும் சொர்க்க சவுக்கியத்தில் உண்டாகியிருந்த விருப்பத்தையும் ஊர்வசி விட்டு விட்டு, அளவற்ற காதலோடு அவனருகே சென்றாள். உலகத்திலுள்ள எல்லாப் பெண்களையும் விட மேலான காந்தி, சுகுமாரத்துவம், லாவண்யம், விலாசம் முதலியவற்றில் சிறந்து விளங்கும். அந்த தேவமங்கையைக் கண்டதும் புரூரவ மன்னனும் தனது மனதைப் பறிகொடுத்தான். இவ்வாறு அவர்கள் இருவரும் ஒரே மனதுடையவராய் வேறு நோக்கமின்றி எல்லா பயன்களையும் விட்டிருந்தார்கள். அப்போது புரூரவன் அவளை நோக்கி, பெண்ணே! நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என் மீது மனம் வைக்க வேண்டும்! என்றான். அதற்கு ஊர்வசி மன்னவரே நான் சொல்வதை ஏற்று நீங்கள் நடப்பதானால் உமது இஷ்டத்துக்கு இணங்குகிறேன்! என்றான். உடனே புரூரவன் உன் சங்கேதத்தைச் சொல்லடி, கண்ணே என்றான். அதனால் தேவகன்னிகை ஊர்வசி அவனைப் புன்முறுவலுடன் நோக்கி, அரசனே நான் இரண்டு ஆடுகளைக் குழந்தைகளைப் போல வளர்த்து வருகிறேன். அவை எப்போதும் என் படுக்கையின் அருகிலேயே இருக்க வேண்டும். அங்கிருந்து அவற்றை யாருமே அபகரிக்கக் கூடாது. இது ஒரு நிபந்தனை. நீங்கள் திகம்பரராக நிர்வாணத்தோடு இருக்கும்போது நான் உம்மைப் பார்க்கக் கூடாது. இது இரண்டாவது நிபந்தனை. எனக்கு நெய்யைத் தவிர, வேறு ஆகாரம் ஒன்றுங்கூடாது. இது மூன்றாவது நிபந்தனை! இந்த மூன்றில் எது தவறினாலும் நான் உம்முடன் இருக்கமாட்டேன் என்றாள். அவளது நிபந்தனைக்கு புரூரவன் ஒப்புக்கொண்டு அப்படியே ஆகட்டும், கண்ணே! என்று சொன்னான். அவளும் அவனிஷ்டத்துக்கு இணங்கி, அவனுடன் இருந்து வந்தாள்.
பிறகு புரூரவ மாமன்னன் அவளோடு, அளகாபுரியிலும் சயித்திரரத முதலிய திவ்விய வனங்களிலும் மானசத் தடாகங்களிலும் வேடிக்கையாக விளையாடிக் கொண்டு, காதல் கேளிக்கைகளில் களித்துத் திரிந்து நாளுக்கு நாள் மகிழ்ச்சி மீதூர வாழ்ந்து வந்தான். இப்படியே அறுபத்தோரு ஆண்டுகள் கழிந்தன. ஊர்வசியும் அவனைப் போலவே, சுவர்க்கலோகத்து இன்பத்தையும் பெரிதாக எண்ணாமல் யோகானந்தத்தையே பெரிதாக எண்ணி மகிழ்ந்திருந்தாள். இந்நிலையில் தேவலோகத்தில் ஊர்வசி இல்லாததால், மற்ற தேவதாசிகளுக்கும் சித்தர், வித்தியாதரர்களுக்கும் தேவலோகம் ரமணீயமாக இருக்கவில்லை. ஆகையால், கந்தருவர்களின் அரசனாகிய விசுவாவசு என்பவன் ஊர்வசியை மறுபடியும் தேவருலகுக்குக் கொண்டு செல்வதற்கு உபாயம் என்னவென்று யோசித்தான். புரூரவனோடு கூடி மகிழ்ந்து தேவலோகத்தை ஊர்வசி மறந்திருக்கிறாள் என்றாலும் புரூரவனுக்கு அவள் விதித்திருக்கும் நிபந்தனைகளை விசுவாவசு அறிந்து கொண்டு ஓரிரவில் கந்தர்வர்களோடு வந்து கூடி படுக்கையின் அருகேயிருந்த ஆடுகளில் ஒன்றை அபகரித்துக் கொண்டு சென்றான். அவன் ஆகாயமார்க்கமாக அதைக்கொண்டு போகும் போது அந்த ஆடு அபயக்குரல் எடுத்துக் கத்தியது. அதைக்கேட்ட ஊர்வசி, ஐயோ! என் குழந்தையை யாரோ அபகரித்துச் செல்கிறாரே! அநாதையான நான் இந்தத் தருணத்தில் யாரிடம் இதைப் புகல்வேன்? என்று கூறினாள். அந்த கூக்குரலைக் கேட்டதும் புரூரவ மன்னன் துள்ளியெழுந்தான் என்றாலும் தான் நிர்வாணமாக இருப்பதால், மற்றொரு நிபந்தனைப்படி தன்னை ஊர்வசி பாராமலிருக்க வேண்டுமே என்று நினைத்து, அங்கிருந்து அவன் அகலவில்லை, பிறகு கந்தருவா மற்றொரு ஆட்டையும் கவர்ந்து கொண்டு சென்றார்கள். அந்த ஆடும் கத்தியது. அதை ஊர்வசி கேட்டு ஐயையோ! எனது மற்றொரு குழந்தையும் கொண்டு போகிறார்களே! எனக்கு கணவனும் இல்லை! வீரமில்லாத அற்பமான ஒருவனைச் சேர்ந்து நான் இப்படியாகி விட்டேனே! என்று கதறியழுதாள். அதைக் கேட்டு சகியாத புரூரவன் ஆத்திரத்துடன் குமுறியெழுந்து அளவில்லாத கோபங்கொண்டு இருட்டுள்ள இரவாக இருப்பதால் நிர்வாணமான தன்னை ஊர்வசி பார்க்கமாட்டாள் என்று நினைத்துக்கொண்டு அப்படியே எழுந்து கையிலே வாளையுருவிக் கொண்டு, அடா யாரடா திருடன்? என்று ஆரவாரத்தோடு பாய்ந்து சென்றான். அந்த சமயத்தில் கந்தருவர் மிகவும் பிரகாசமான மின்னல் ஒன்றை உண்டாக்கினார்கள். அந்த மின்னல் வெளிச்சத்தில் ஆடையற்றிருந்த அரசனை ஊர்வசி கண்டாள். உடனே அவர் தனது நிபந்தனைக்கு பங்கம் வந்தது என்று சொல்லி அவனைவிட்டு சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தாள். கந்தருவரும் ஆடுகளை அங்கேயே விட்டு விட்டுத் தாங்களும் தேவலோகத்துக்குச் சென்றார்கள். புரூரவ மன்னன் வழியில் ஆடுகளைக் கண்டதும் மகிழ்ந்து படுக்கையில் வந்து படுத்தான். அங்கே ஊர்வசியைக் காணாமல் விசனமுற்றான். அதன் பிறகு அவன் திகம்பரனாகவே (நிர்வாணமாகவே) எங்கெங்கோ ஊர்வசியைத் தேடிப் பார்த்தும் அவள் அகப்படாததால் பைத்தியம் பிடித்து, அந்தக் கோலத்துடனேயே கண்ட இடங்களில் திரிந்து கொண்டிருந்தான். இது இப்படியிருக்க ஒரு தினம் குரு÷க்ஷத்திரத்திலுள்ள ஒரு தாமரைத் தடாகத்திலே வேறு நான்கு தேவமங்கையருடன் ஊர்வசியும் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட புரூரவன், பைத்தியத்தைப் போலவே அவள் அருகே சென்று அடி என் காதலி! சிறிது நேரம் நில், சிறிது நேரம் என்னோடு பேசு, இருவரும் சிறிதுநேரமாகிலும் கூடியிருப்போம்! என்று பலப்பல காதல் வார்த்தைகளைச் சொல்லி அவளிடம் கெஞ்சினான். அதற்கு ஊர்வசி, பூலோக வேந்தே! உமது விவேகமற்ற செய்கை போதும், நான் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறேன், இந்த வருஷத்தின் முடிவில் இங்கு வாரும்! உமக்கு ஒரு நல்ல மகன் பிறந்திருப்பான். பிறகு நான் உம்மோடு ஒரு நாள் கூடியிருப்பேன் இப்போது போய்விடும்! என்று சொன்னாள். புரூரவனும் மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் நகருக்குப் போய்ச் சேர்ந்தான்.
அப்போது ஊர்வசி தன் தோழியரை நோக்கி தோழிகளே அவர்தான் புரூரவச் சக்கரவர்த்தி! அவருடன் கூடித்தான் நான் இத்தனை நாட்கள் விருப்பமும் மகிழ்ச்சியுமாகக் களித்திருந்தேன் என்று சொன்னாள். அதைக் கேட்ட தெய்வப் பெண்களும் அவன் மிகவும் அழகன், அரசர்க்கும் அரசன். ஆகையால் நாங்களுங்கூட அவனுடன் கூட சுகித்திருக்க விரும்புகிறோம், என்று சொன்னார்கள். பிறகு ஊர்வசியின் சொற்படி அந்த ஆண்டின் முடிவில் அவள் குறிப்பிட்ட அதே இடத்துக்கு புரூரவச் சக்கரவர்த்தி சென்றான். அங்கே ஊர்வசி, ஆயுசு என்ற ஒரு மகனைப் பெற்று, அரசனின் கைகளில் ஒப்படைத்து, ஓரிரவு அவனுடன் கூடியிருந்து ஐந்து பிள்ளைகளைப் பெறும்படியான கர்ப்பத்தையடைந்தாள். அன்றியும் அவள் அரசனை நோக்கி, அரசே! நம்மிடம் கொண்ட அன்பினால் கந்தர்வர்கள் உமக்கு வரங்கொடுக்க வந்திருக்கிறார்கள். ஆகையால் உமக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுக் கொள்ளும் என்றாள். ஆனால் புரூரவனோ பெருமூச்சு விட்டு, நான் பகைவர்கள் அனைவரையும் வென்று, இந்தரிய சக்தி தப்பாதவனாய் பந்துக்களிலும், சேனைகளிலும், பொக்கிஷத்திலும் குறைவற்றவனாகவும் இருப்பதால் எனக்கு வேண்டுவது வேறொன்றும் இல்லை. ஆனால் எனக்கு வேண்டுவது ஊர்வசியின் அருகே எப்பொழுதும் இணைபிரியாமல் இருப்பதேயாகும். ஆகையால் என் காலத்தை ஊர்வசியுடனே கழிக்க விரும்புகிறேன், என்றான். உடனே, கந்தர்வர்கள் அவனிடம் ஒரு அக்கினிஸ்தாலி ஒன்றைக் கொடுத்து, அரசனே! நீர் வேதத்தை அனுசரித்து இந்த அக்கினியை மூன்றாக்கி ஊர்வசியின் அருகிலேயே இருக்கும் பயனைக் கருதியாகஞ் செய்து உன் இஷ்டத்தைப் பெறுவீராக! என்றார்கள். அதன் பிரகாரம் புரூரவன் அந்த அக்கினி ஸ்தாலியை கையில் எடுத்துக் கொண்டு வரும் போது நடுக்காட்டில் இது என்ன மடமை! ஊர்வசியை நம்முடன் அழைத்துக் கொண்டு வராமல் அக்கினி ஸ்தாலியையன்றோ கொண்டு செல்கிறாய். இதனால் என்ன பயன்? என்று நினைத்து பித்தனைப் போல அந்த ஸ்தாலியை அங்கேயே வைத்து விட்டு பட்டணம் போய்ச் சேர்ந்தான். அங்கே, நள்ளிரவில் விழித்துக் கொண்டு, ஓகோ! ஊர்வசி சாலோக்கியத்தைப் பெறுவதற்காக கந்தர்வர் நமக்குக் கொடுத்த அக்கினி ஸ்தாலியை காட்டிலே போட்டுவிட்டு வந்தோமே! அதை இப்போதே போய்க் கொண்டு வரவேண்டும் என்று எண்ணி ஓடிச்சென்று, ஸ்தாலியை வைத்த இடத்தில் தேடினான், அதைக் காணாமல் அங்கே வன்னிமரத்தை நடுவிற்கொண்ட அரசமரம் ஒன்று இருப்பதைக் கண்டு, நம்முடைய அக்கினி ஸ்தாலிதான் இந்த மரமாகி இருக்கவேண்டும். ஆகையால் அக்கினி ரூபமான இதனையே கொண்டுசென்று அரணியாகக் கடைந்து அக்கினியை உண்டாக்கி அதனை உபாசிப்போம்! என்று கருதி, அதை அப்படியே நகரத்துக்கு எடுத்துச்சென்று காயத்திரி மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே அரணியைக் கடைந்தான். அந்த அரணியும் காயத்திரி மந்திர எழுத்துக்களின் கணக்குப்படி இருபத்து நான்கு அங்குல அளவுள்ளதாக ஆயிற்று. பிறகு அரணியைக் கடைந்து அக்கினியை உண்டாக்கி, அதை மூன்றாக்கி வேதவிதிப்படி ஊர்வசி சாலோக்கியத்தைக் கருதிப் பல யாகங்களைச் செய்தான். அதனால் கந்தர்வ லோகத்திற்கு புரூரவன் சென்று ஊர்வசியோடு இணைபிரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆதியில் இருந்த அக்கினி ஒன்றே அந்த ஒன்றே இந்த மனுவந்தரத்தில் மூன்றாக்கப்பட்டது.
7. கவுசிக வம்ச வரலாறு
மைத்ரேயரே, மேலும் கேளும். அந்தப் புரூரவ மாமன்னனுக்கு ஆயுசு, அமாவசு, விசுவாவசு, சுருதாயு, சதாயு, அயுதாயு என்ற ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அமாவசு என்பவனுக்கு பீமன் என்ற பிள்ளை பிறந்தான். அவனுக்குக் காஞ்சனன் பிறந்தான். காஞ்சனனுக்கு கதோத்திரன் அவனுக்கு ஜன்னு, அந்த ஜன்னு என்பவன் யாகஞ்செய்து கொண்டிருக்கும் போது கங்கை நதியானது அந்த யாகசாலைக்கு வந்து யாவற்றையும் முழுகடித்தது. அதைக்கண்டதும் ஜன்னு கோபத்தால் கண் சிவந்தான். ஸ்ரீயக்ஞ புருஷனைத் தியான பலத்தால் இதயத்தில் நிறுத்தி அந்த தேஜஸால் கங்கையைப் பானஞ்செய்துவிட்டான். பிறகு தேவ ரிஷிகள், அவனை வேண்டியபின் கங்கையை விடுவித்து, அந்த கங்கையை அவனுடைய மகளாக வைத்தார்கள். அதனால் கங்கைக்கு சான்னவி என்ற பெயர் உண்டாயிற்று. அந்த ஜன்னுவுக்கு சுமந்து என்பவன் பிறந்தான். அவனுக்கு அசகன், அவனுக்கு பலாகாசுவன், அவனுக்கு குசன், அவனுக்கு குசாம்பன், குசநாபன். அதூர்த்தரஜசுவசு என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் குசாம்பன் என்பவன் எனக்கு இந்திர சமானனான புத்திரன் உண்டாக வேண்டும் என்று தவஞ்செய்தான். அப்போது தேவேந்திரன், நமக்குச் சமானமாய் மற்றொருவன் உண்டாக வேண்டாம் என்று தானே அவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். அவன் பெயர் காதி, கவுசிகன் என்றும் அவன் வழங்கப்படுவான். அந்தக் காதிக்கு சத்தியவதி என்ற பெண் ஒருத்தி பிறந்தாள். அவளைப் பிருகு முனிவரின் மகனாகிய ரிசீக மாமுனிவர் தமக்குக் கொடுக்கும்படியாகக் கேட்டார். அதற்கு காதியானவன் இந்த முனிவரோ பிராமணர் மேலும் கிழவர், கோபக்காரர்! என்று நினைத்து அவளை அவனுக்குக் கொடுக்க மனமில்லாமல் அவரை நோக்கி ஒரு காது மட்டும் கறுப்பாகவும், மற்றைய அவயவங்கள் எல்லாம் சந்திரனைப் போலப் பிரகாசிக்கும் படியாகவும் காற்றைவிட வேகமாகச் செல்லக்கூடிய ஓராயிரம் குதிரைகளை கன்யாசுல்கமாகக் கொடுத்தால், என் புதல்வியை நான் உமக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன் என்றான். அதற்கு ரிசீக முனிவர் இணங்கி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு வருணனிடம் சென்று அஸ்வ தீர்த்தத்தில் பிறந்த ஆயிரம் குதிரைகளைக் கொண்டுவந்து அவனிடம் ஒப்படைத்து, அந்தக் கன்னியைக் கல்யாணம் செய்து கொண்டார். பிறகு ரிசீகமுனிவர் அவளுக்கும் புத்திரோற்பத்தி செய்வதற்கு ஒரு சருவைச் செய்து வைத்தார். சரு என்பது ஒருவகைச் சோறு ஆகும். அதைக் கண்ட அவருடைய மனைவியாகிய சத்தியவதி அவரைவேண்டித் தனது தாய்க்கு ஒரு புத்திரன் உண்டாவதற்காக ஒரு சருவைச் செய்விக்கும்படி செய்தாள். இவ்விதமாக ரிசீகமுனிவர் தமது பத்தினிக்குப் பிரம தேஜசுடன் கூடிய புத்திரன் உண்டாவதற்கான சருக்களைக் கொடுத்து, நீ இந்த சருவையும் உன் தாய் அந்த சருவையும் புசிப்பீர்களாக! என்று சொல்லி விட்டு வனத்துக்குச் சென்றார்.
பிறகு தாயும், மகளும் சருவைப் புசிக்கும்போது, சத்தியவதியின் தாய், மகளே! உலகத்தில் எவனுமே தன் புத்திரனுக்கே மேன்மையான குணங்கள் இருக்கவேண்டும் என்று விரும்புவான். அஃதன்றி தன் பத்தினியின் தம்பிக்கு அக்குணங்கள் இருக்கவேண்டும் என்று விரும்பமாட்டான். ஆகையால் உனக்கு உன் புருஷன் கொடுத்த சருவானது சிறப்பானதாக இருக்கவேண்டும். க்ஷத்திரிய ஜாதியான எனது மகன் பூவுலக ஆளவேண்டியவன். ஆகையால், இப்படிப்பட்டவனுக்கு மேலான குணங்கள் அமைந்தால் சிறப்பான பயன்கள் ஏற்படும். பிராமணனுக்குப் பல பராக்கிரம சம்பத்துகள் இருப்பதால் யாது பயன்? ஆகையால் உன்னுடைய சருவை எனக்குக் கொடுத்துவிட்டு, என் சருவை நீ வாங்கி சாப்பிடு! என்று சொன்னாள்; அதற்கு மகள் சத்தியவதியும் ஒப்புக்கொண்டாள். தன் சருவைத் தான் வாங்கிப் புசித்தாள். பிறகு ரிசீக முனிவர், காட்டிலிருந்து திரும்பி வந்து கருவுற்றிருக்கும் தமது பத்தினியின் தேகத்தை கண்டு அவளை நோக்கி, அடிபாதகீ! செய்யக்கூடாத காரியத்தை நீஏன் செய்தாய்? ஏனென்றால், உன் தேகமானது மிகவும் ரவுத்ர ரூபமாகக் காணப்படுகிறது. அதற்குக் காரணம் உன் தாய்க்குக் கொடுத்த சருவை நீ புசித்திருக்கிறாய் என்று தெரிகிறது. இது தகுதியற்றது. நான் அந்தச் சருவில் சகல ஐஸ்வரிய வீரிய பலங்களையும் ஏற்றியிருக்கிறேன். உன் சருவிலே ஞானம், சாந்தி, பொறுமை முதலிய பிராமண குணங்களை ஏற்றியிருக்கிறேன். இதை நீ மாற்றி விட்டாயாகையால் உனக்கு உக்கிரமான அம்புகளை எய்யக்கூடிய க்ஷத்திரிய ஆசாரமாய் நடக்கக்கூடிய புதல்வன் தான் பிறப்பான். உன் தாய்க்கோ பொறுமை முதலிய குணங்களையுடைய பிராமணச் சாரமுள்ள குமாரன் பிறப்பான் என்று கூறினார். தன் கணவன் இவ்வாறு கூறியதும் சத்தியவதி அவரது திருவடிகளில் வீழ்ந்து, பிராணநாதா! அடியாள் தெரியாத்தனத்தால் அப்படிச் செய்துவிட்டேன். அடியாள் மீது அருள்காட்ட வேண்டும். அத்தகைய புத்திரன் எனக்கு வேண்டாம் சருவின் பலம் தப்பாதாகையால் என் பேரன் அப்படியாகட்டும் என்று வேண்டினாள். அதனால் அவள் மீது ரிசீக முனிவர் கருணை கொண்டு நல்லது அப்படியே ஆகட்டும்? என்று அனுக்கிரகஞ் செய்தார். பிறகு, சத்தியவதி ஜமதக்னி என்ற மகனைப் பெற்றாள். அவளுடைய தாய் விசுவாமித்திரதைப் பெற்றாள். அந்த சத்தியவதி, சிலகாலம் சென்ற பிறகு கவுஷதி என்ற நதியானாள். அவளது பிள்ளையான ஜமதக்னி முனிவர், இஷ்வாகு வம்சத்து அரசனான ரேணு என்பவனின் புதல்வியான ரேணுகையைத் திருமணஞ்செய்து கொண்டார். அவளது வயிற்றில் ஸ்ரீமந்நாராயணனின் அம்சத்தால், சகல க்ஷத்திரிய வம்ச நாச காரணரான பரசுராமர் பிறந்தார். விசுவாமித்திரருக்கோ பிருகு வமிசத்தைச் சேர்ந்த சுனச்சேபனே, தேவதைகளால் மகனாகக் கொடுக்கப்பட்டான். தேவர்களால் கொடுக்கப்பட்டதால் அவன் தேவராதன் என்ற பெயரைப் பெற்றான். பிறகு விசுவாமித்திரருக்கு மதுச்சந்தன், தனஞ்சயன், கிருததேவன், அஷ்டகன், கச்சபன், ஹரிரன் என்ற வேறு பிள்ளைகளும் பிறந்தார்கள். அவர்களால் கவுசிக கோத்திரங்கள் உண்டாயின. அந்தக் கோத்திரத்தார் எல்லாம் வெவ்வேறு பிரவரம்(பிரவரம்-கோத்திரத் தலைவர் முறைமை) உள்ள குலங்களில் விவாகஞ் செய்து கொள்ள வேண்டியவராய் உள்ளனர்.
8. காசி அரசர்கள் வரலாறு
மைத்ரேயரே, மேலும் கேட்பீராக! புரூரவசின் மூத்தகுமாரனான ஆயுசு என்பவன் ராகுவின் மகளைத் திருமணஞ்செய்து நகுக்ஷன் க்ஷத்திர விருத்தன், ரம்பன், ரஜீ, அனேனசு என்ற ஐந்து பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் க்ஷத்திர விருத்தனுக்கு சுஹோத்திரன் பிறந்தான். அவனுக்கு காசியன், காசன், கிருச்சமதன் என்ற மூவர் பிறந்தனர். கிருச்சமதனுக்கு சவுனகன் பிறந்தான். அவன் நான்கு வர்ணங்களை உண்டாக்கினான், காசியன் என்போனுக்குக் காசி மன்னனான காசேயன் உண்டானான். அவன் மகன் ராஷ்டிரன், அவன் மகன் தீர்க்கத பசு, அவனுக்கு தன்வந்திரி பிறந்தான். முன்பு திருப்பாற்கடலில் உதித்தபோது எல்லாப் பிறவிகளிலும் எல்லா ஞானங்களையும் அறிந்த ஸ்ரீமந்நாராயணன் அந்த தன்வந்திரிக்கு நீ காசி ராஜவமிசத்திற் பிறந்து எண்வகையான வைத்திய நூல்களையும் செய்யக் கடவாயாக! வேள்விகளில் அவிர்ப்பாகமும் புசிக்கக் கடவாய்! என்று வரமளித்தார். அந்த தன்வந்திரியின் மகன் கேதுமான். அவன் மகன் பீமரதன், அவன் மகன் பிரதர்த்தனன். அவன் பத்திரசிரேணிய வமிசத்தை நாசஞ் செய்தமையால் சகல சத்துருக்களையும் நாசஞ்செய்தானென்று கொண்டு சத்துருஜித்து என்ற பெயரை அடைந்தான். அவன் தந்தையான திவோதாசன் அதிக அன்பினால், அவனை வத்சரன்று அழைத்து வந்ததால், வத்சன் என்ற பெயரும் அவனுக்குண்டு. அவன் மிகவும் சத்தியவானாகையால் சத்தியத்துவசன் என்ற பெயரையும் பெற்றான். அன்றியும் அவன் குவலயம் என்னும் புகழ்பெற்ற குதிரையொன்றை வைத்திருந்தால் குவலயாசுவன் என்ற பெயரையும் பெற்றான். அவன் மகன் அளர்க்கன், அவனைப் பற்றியொரு சுலோகம் இந்தக் காலத்தும் வழங்குகிறது. அதாவது, அளர்க்கனை விட மற்ற எவன் தான் அறுபத்தாறாயிரம் ஆண்டுக்காலம் இந்த பூமியை ஆண்டான்? என்பதுதான் அந்த சுலோகம் அவ்வாறு புகழப்படும் அளர்க்கன் என்பவனுக்கு சன்னதி என்ற மகன் பிறந்தான். அவன் மகன் சுநீதன், அவன் மகன் சுகேது, அவன் மகன் தரும கேது, அவன் மகன் சத்தியகேது, அவன் புத்திரன் விபு, அவன் புதல்வன் ஸ்வவிபு, அவன் தயைன் சுகுமாரன், அவன் குமாரன் திருஷ்டகேது, அவன் மகன் வீதியோத்திரன், அவனுக்குப் பார்க்கன், அவனுக்கு பார்க்கபூமி இவனிடத்திலிருந்து நான்கு வர்ணங்கள் உண்டாயின. இவர்கள் தான் காசியரசர்களாவார்கள்.
9. ரஜி வரலாறு
ரஜி என்பவனுடைய வம்சா வழியைக் கூறுகிறேன் கேளும். ரஜிக்கு ஒப்பற்ற பல பராக்கிரமம் பொருந்திய ஐந்நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். இது இப்படியிருக்க ஒரு சமயம் தேவாசுரப்போர் ஒன்று நடந்த போது தேவரும், அசுரரும் பிரம்மனிடம் சென்று, இந்த யுத்தத்தில் யாருக்கு வெற்றியுண்டாகும்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ரஜி மன்னன் யார் சார்பில் சேர்ந்து போர் செய்வானோ அவர்கள் பக்கமே ஐயம் உண்டாகும் என்றார். அதைக் கேட்டதும் அசுரர்கள் ரஜியிடம் முன்னதாகச் சென்று, தமக்கு யுத்த சகாயம் செய்ய வேண்டும் என்று அவனை வேண்டினார்கள். அதற்கு ரஜி மன்னன், அசுரர்களே! நான் தேவர்களை வென்ற பிறகு உங்களுக்கு நான் தேவேந்திரனாக இருக்கச் சம்மதித்தால் உங்கள் சார்பில் போர் செய்கிறேன் என்றான். அதற்கு அசுரர்கள், அரசே! நாங்கள் காரியத்திற்காக ஒன்றை முன்னதாகச் சொல்லிப் பிறகு மற்றொன்றைச் செய்யமாட்டோம். எங்களுக்கு பிரகலாதரே இந்திரராக இருக்கவேணடும். அதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டோம் என்றார்கள். பிறகு அவர்கள் போய் விட்டார்கள். அதன் பிறகு ரஜி மன்னனிடம் தேவர்களும் வந்து தமக்குத் துணை செய்ய வேண்டும் என்று வேண்டினார்கள். அவர்களிடமும் ரஜி மன்னன் தன் விருப்பத்தைச் சொன்னான். தேவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதனால் அந்த மன்னன் தேவர்கள் சார்பில் போர் செய்து அசுர சேனைகளை அழித்தான். அப்போது தேவேந்திரன் ரஜி மன்னனின் கால்களில் விழுந்து, அரசனே! ஆபத்தில் காத்ததாலும் அன்னமிட்டதாலும் நீ எங்களுக்குத் தந்தையானாய் இதனால் சகல உலகங்களிலும் உயர்ந்தவன் ஆகிவிட்டாய். நானோ உன் மகன் திரிலோகாதிபதியாக இருப்பது தந்தைக்குப் பெருமையல்லவா? என்றான். அதைக்கேட்டதும் ரஜி மன்னன் சிரித்து, இந்திரா! அப்படியே ஆகட்டும் என்றான். பிறகு ரஜி மன்னன் தன் நகரம் போய்ச் சேர்ந்தான்.
சில காலத்துக்குப் பிறகு, ரஜி மன்னன் மாண்டு போனான். அவனது பிள்ளைகளை நாரதர் தூண்டிவிட, அவர்கள் இந்திரனிடம் சென்று, நீ எங்கள் பிதாவின் புத்திரனாகையால் எங்களுக்கு உன் ராஜ்ஜியத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். இந்திரன் மறுத்தான். அவர்கள் இந்திரனை வென்று, அவனதிகாரத்தை தாங்கள் செலுத்தி வந்தார்கள். பலகாலம் சென்ற பிறகு, தேவேந்திரன் தனது குலகுருவிடம் சென்று, ஸ்வாமி! அடியேன் ஆட்சியை இழந்து இப்படி அலையலாமோ? ஆகையால் அடியேன் திருப்தியடையும்படிச் செய்யவேண்டும் என்று வேண்டினான். அதற்கு அவர் நீ முன்பே என்னிடம் வந்திருந்தால் இந்த ஆபத்து உனக்கு வந்திருக்காது. இனி உனக்காக நான் செய்யக்கூடியது எதுவுமில்லை. இன்னுஞ் சிறிது காலத்தில் உன் ஐசுவரியம் உனக்கு வரும்படிச் செய்கிறேன் என்று சொல்லி இந்திரனுக்கு தேஜஸ் வளரவும், பகைவர்களுக்கு புத்திமயங்கவும் ஒரு அபிசார ஹோமம் செய்தார். அதனால் ரஜியின் பிள்ளைகள் புத்தி மயங்கி, பிராமணத் துவேஷியராகவும், வர்ணாசிரம தர்மங்களை இழந்தவர்களாகவும் வேதத்திற்குப் புறம்பானார்கள். இதனால் இந்திரன் அவர்களை ஜெயித்து புரோகிதரின் வேள்வி வலிமையால் மகா தேஜசுள்ளவனாய், சொர்க்கத்தை மீண்டும் ஆண்டுவந்தான். இந்தவிதமாக இந்திரன் தனது சொர்க்கப் பதவியை மீண்டும் பெற்ற இந்தச் சரிதத்தைக் கேட்பவனுக்கு ஸ்தானப் பிரம்சமும் துராத்மாவாக இருத்தலும் ஏற்படுவதில்லை. ஆயுசுவின் மகனுக்கு சந்ததியில்லை. இனி க்ஷத்திரவிருத்தனுடைய சந்ததியைக் கூறுகிறேன், கேளுங்கள். க்ஷத்திரவிருத்தனின் மகன் பிரதிக்ஷத்திரன். அவன் மகன் சஞ்சயன், அவன் மகன் ஜயன், அவன் மகன் விஜயன், அவன் பிள்ளை கிருதன். அவன் மகன் ஹரியதனன், அவன் மகன் சகதேவன். அவனுக்கு அதீனன், அவன் பிள்ளை ஜயத்சேனன். அவன் மகன் சங்கிருதி, அவன் புத்திரன் க்ஷத்திர தருகன் இவர்கள் தான் க்ஷத்திரவிருத்தனுடைய வழிவந்தவர்கள்.
10. யயாதி மாமன்னன் கதை
மைத்ரேய நகுஷ வம்சத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். நகுஷ மன்னனுக்கு யதி; யயாதி, சம்யாதி, ஆயாதி, வியாதி, கிருதி என்ற ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களனைவரும் சிறந்தவீரர்கள். அவர்களில் யதி என்பவன் இராஜ்யத்தை விரும்பவில்லை. ஆகையால் யாயாதி என்பவன் அரசனானான். அவன் சுக்கிரன் மகளாகிய தேவயானியையும், விருஷபருவாவின் மகளாகிய சருமிஷ்டையையும் மணந்துகொண்டான். அவனது வம்சத்தைப் பற்றிய சுலோகம் ஒன்று உண்டு. தேவயானி என்பவள் யது, துர்வசு என்ற பிள்ளைகளையும் சருமிஷ்டை என்பவள் துருகிய, அனுபூரு என்ற பிள்ளைகளையும் பெற்றார்கள், என்று அந்த சுலோகம் கூறுகிறது. யயாதி மன்னன் தன் இரு பத்தினிகளில் சர்மிஷ்டை என்பவளிடம் அதிகப் பாசம் கொண்டிருந்ததால், தேவயானி பொறாமை கொண்டு தன் தந்தையான சுக்கிராச்சாரியாரிடம் தெரிவித்தாள். அதனால் சுக்கிராச்சாரி கோபங்கொண்டு, யயாதி மன்னனுக்கு கிழடு தட்டும் வண்ணம் அவன் ஜரையை அடைய வேண்டுமென ஒரு சாபமிட்டார். அதன் விளைவாக யயாதி மன்னன் தனக்கு அகாலத்தில் மூப்பு வரும்படிச் செய்ததால் மனவருத்தமுற்று, சுக்கிராச்சாரியாரின் பாதங்களில் வீழ்ந்து வேண்டிக்கொண்டான். அதனால் அவர் மனமிரங்கி மூப்பை ஒருவருக்குக் கொடுத்து அவருடைய வனத்தை ஏற்கலாம் என்றும் அனுக்கிரகஞ் செய்தார். பிறகு, யயாதி மன்னன் தனது முதல் மகனை நோக்கி, மகனே! உன் மாதாமஹருடைய சாபத்தால் எனக்கு நேர்ந்த இந்த மூப்பை அவரனுக்கிரகத்திற்கு ஏற்ப நான் உனக்குக் கொடுத்து உனது வாலிபப் பருவத்தை நான் ஏற்று இன்னும் ஓராயிரம் ஆண்டுக்காலம் உலக இன்பங்களை அனுபவிக்க விரும்புகிறேன். ஆகையால் இதற்கு நீ இணங்க வேண்டும் என்றான். அதற்கு மூத்த மகன் யது சம்மதிக்கவில்லை. அதனால் அவனது தந்தையும், உனது சந்ததி ராஜ்யத்தை இழக்கக் கடவது என்று சபித்தார். பிறகு துர்வசு, துருக்யு, அனு என்ற பிள்ளைகளையும் யயாதி மன்னன் வரவழைத்து தனது மூப்பை ஏற்றுக்கொண்டு அவர்களுடைய யவுவனத்தைத் தனக்கு வழங்கும்படி வேண்டினான். அவர்களும் அதை ஏற்கவில்லை. எனவே அவர்களையும் யயாதி மன்னன் சபித்தான். பிறகு சர்மிஷ்டையிடம் பிறந்த தனது கடைசிப் பிள்ளையான பூருவிடமும் அவன் அதுபோலவே வேண்டினான். பூரு தன் தந்தையை வணங்கி பிதாவே! தங்கள் விருப்பம்போல நான் இதற்கு இணங்குகிறேன் என்று சொல்லி தனது தந்தையின் மூப்புத்தன்மையைத் தான் ஏற்றுக்கொண்டு தன் யவுவனத்தை தந்தைக்கு கொடுத்தான். அதைப் பெற்ற யயாதி மன்னன் தர்ம விரோதமின்றி தக்க காலங்களில் தனக்கு இஷ்டமான சகல போகங்களையும் அனுபவித்து செங்கோலைச் செவ்வனே செலுத்தி வந்தான். அவன் விசுவாசி என்ற தேவமங்கையோடும் தேவயானியோடும் அனுபவித்து காமங்களின் முடிவை காண்பேன் என்று தினந்தோறும் அதே மனத்தினனாக இருந்தான். நாளுக்கு நாள் பெண் இன்பம் இனிமையானதாகவே அவனுக்கு தோன்றியது. எனவே அவன் இப்பாடல்களைப் பாடினான்.
காமமானது காம போகங்களால் ஒருபோதும் அடங்குவதில்லை. அவிகளைச் சொரியச் சொரிய அக்கினி வளர்வது போல் வளரத்தான் வளர்க்கிறது. இந்த பூவுலகிலுள்ள சகல தானியங்களும் பொன் முதலிய சிறந்த பொருள்களும் குதிரை, பசு முதலிய மிருகங்களும் அழகிய பெண்டிரும் ஒருவனுடைய ஆசைக்குப் போதாமலேயே இருக்கின்றன. ஆகையால் அந்த ஆசையை நிறைவேற்ற முயல்வது முடியாத காரியமாகும். ஆகையால் அதை ஒழித்தலே வேண்டும். சகல பூதங்களிடத்தும் விருப்பும் வெறுப்பும் வைக்காமல் சமமான எண்ணமுடையவனுக்கு எத்திசையிலும் சுகமே தோன்றும், புத்தியீனருகு விடக்கூடாததாயும், உடையவன் தளர்வுற்றலும் தளராததாயும் இருக்கக்கூடிய ஆசையை விட்டுவிட்டால், சுகத்தை அடையலாம். மனிதன் மூப்பினால் மெலிந்துபோக அவனுடைய ரோமங்களும், பற்களும் உதிர்ந்துபோகின்றன. உயிராசை பொருளாசை என்ற இரண்டும் ஒருபோதும் மெலிவதில்லை, இளைப்பதும் இல்லை. இதற்கு ஓர் உதாரணம் ஓராயிரம் ஆண்டுக்காலம் போகானுபவம் செய்துவந்த எனபகு ஆசையானது கொஞ்சமும் குறையாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆகையால் நான் இனி இந்த ஆசை என்னும் பைசாசத்தை விட்டு ஒழித்து மனதைப் பரம்பிரம்மனிடத்தில் செலுத்திக் தொந்தமும், மமதையும் நீங்கியவனாய்; மிருகங்களோடு மிருகம் போலத் திரிந்து கொண்டிருக்கக் கடவேன்! என்று இவ்விதம் சிந்தித்து யயாதி மாமன்னன் தன்னுடைய மகன் பூருவவின் யவுவனத்தை அவனுக்கே திருப்பி கொடுத்தவிட்டு தன்னுடைய மூப்பைத் தானே திருப்பிப் பெற்றுக்கொண்டு; தென்கிழக்கில் துர்வசுவையும் மேற்கில் துருகியுவையும் தெற்கில் துர்வசுவையும், மேற்கில் துருகியுவையும், தெற்கில் யதுவையும் சிற்றரசராக்கிச் சகல பூமண்டலத்துக்கும் பூருவை அதிபதியாகச் செய்து பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டு தவஞ்செய்ய வனஞ்சென்றான்.
11. கார்த்த வீரியார்ஜுனன்
இனி யயாதி மகாராஜாவின் மூத்த மகனான யதுவின் குலமுறையைக் கூறுகிறேன்; கேளுங்கள். மனிதர், சித்தர், கந்தருவர், இயக்கர், இராக்கதர், குகியகர், கிம்புருடர், அப்சரசுகள், நாகர், விஹகர், தயித்தியர், தானவர், ஆதித்தியர், வுத்திரர், வசுக்கள், அசுவினிகள், மருத்துக்கள், தேவரிஷிகள் ஆகிய இவர்களாலும் மோக்ஷம் பெறமுயன்றவர்களாலும் தர்மார்த்த காமங்களை விரும்பியவர்களாலும் தங்கள் தங்கள் இஷ்ட சித்தியின் பொருட்டுத் துதிக்கத்தக்கவராய், ஆதி மத்யாந்தரகிதராய், சகல உலகங்களுக்கும் இருப்பிடமாய், அளவிடக்கூடாத மகத்துவமுள்ளவராய் விளங்கும் ஸ்ரீமகாவிஷ்ணு பகவான் உலகத்திற்கு அருள் செய்வதர்காக திருவிளையாடல் புரிய ஏற்ற ஒரு திவ்விய மங்கள விக்கிரகத்தோடு அந்த வமிசத்தில் அவதரித்து அருளினார். இது சம்பந்தமாக ஒரு சுலோகம் வழங்கப்படுகிறது. யதுவின் வமிசத்தைப் பற்றி ஒருவன் கேட்பதால் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவான். ஏனென்றால் அந்த வம்சத்தில் பரப்பிரமமானது ஸ்ரீகிருஷ்ணன் என்ற திருநாமத்தோடு மனித உருவமாக அவதரித்ததல்லவா? என்பதுதான் அந்த சுலோகமாகும். அந்த யதுவுக்கு சகஸ்ரஜித்து, குரோஷ்டு, நளன், நகுஷன் என்ற நான்கு பிள்ளைகள் உண்டு. அவர்களில் சகஸ்ரஜித்தின் மகன் சதஜித்து அவனுக்கு ஹைஹயன், ஹேஹயன், வேணுஹயன் என்ற மூன்று பிள்ளைகள் உண்டு. ஹைஹயனின் மகன் தருமன், அவன் மகன் தருமேந்திரன், அவன் மகன் குந்தி, அந்தக் குந்திக்குச் சஹஸ்ரஜித்து, அவன் மகன் மகிஷ்மான், அவன் மாகிஷ்மதி என்னும் நகரம் ஒன்றை உண்டாக்கினான். அவன் மகன் பத்திசிரேணியன், அவன் மகன் தனகன் அவனுக்கு கிருதவீரியன், கிருதாக்கினி கிருததருமன், கிருதவுஜசு என்னும் நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள். கிருதவீரியனுடைய மகன் அர்ஜுனன் ஸ்ரீமந்நாராயணனின் அம்சமாகவும், அத்திரி குமாரராகவும் விளங்கிய தத்தாத்ரேய முனிவரை அவன் ஆராதித்து அவருடைய அனுக்கிரகத்தால் அதர்மத்திற் புகாமையும், ஸ்வதாமத்தில் பற்றும், ஆயிரங்கைகளும், யுத்தத்தில் வெற்றியும், பகைவரிடம் அவப்படாமையும் சகலலோகங்களும் கொண்டாடத்தக்க மகாபுருஷனால் மரணமும் ஆன இத்தகைய வரங்களைப் பெற்றான். அதனால் அந்த கார்த்தவீரியார்ச்சுனன் சகல தீவுகளுடன் கூடிய பூமண்டலமெல்லாம் பரிபாலனஞ் செய்து, பதினாயிரம் வேள்விகளைச் செய்தான். அவனைப் பற்றி ஒரு சுலோகம் வழங்குகிறது. எந்த மன்னரும், யாகங்கள் தவங்கள் தானங்கள் முதலியவற்றிலும் வணக்கம் முதலிய சற்குணங்களிலும் சாஸ்திரக்கல்வி கேள்விகளிலும் கார்த்தவீரியார்ச்சுனனை ஒவ்வார்கள். அவனுடைய ஆட்சியில் ஒருவனும் பொருள் இழந்தவனில்லை எந்தக் காலத்திலும் அவனது பெயரைச் சங்கீர்த்தனம் செய்தவனுக்கு இழந்த பொருள் கைகூடும்! என்று கூறப்பட்டுள்ளது.
இவ்விதம் எண்பத்தையாயிரம் ஆண்டுக்காலம் ஆரோக்கியம், செல்வம், பலம், பராக்கிரமம், ஆகியவற்றில் யாதொரு குறைவுமில்லாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தான். ஒருகாலத்தில் அந்த கார்த்தவீரியார்ச்சுனன் நர்மதை யாற்றில் மங்கையரோடு கூடி ஜலக்கிரீடை செய்து மதுபானத்தில் மயங்கியிருக்கும் போது, சகல தேவ தைத்திய, கந்தர்வர்களை வென்றதனால் செருக்கடைந்த இராவணன் திக்குவிஜய யாத்திரைக்காக அங்கு வந்தான். அதைக்கண்ட கார்த்தவீரியார்ச்சுனன் அவனைப் பசுவைப் போலக் கட்டிக்கொண்டு சென்று, மாகிஷ்மதி நகரத்தின் ஒரு மூலையில் போட்டிருந்தான். அத்தகைய மகாபலசாலியான கார்த்தவீரியார்ச்சுனனை அவன் விரும்பியவண்ணம் ஸ்ரீமந் நாராயணரது வம்சத்தில் அவதரித்த பரசுராமர் எண்பத்தையாயிரம் ஆண்டின் முடிவில் சங்கரித்து அருளினார். அவனுக்கு நூறுபிள்ளை பிறந்தார்கள். அவர்களில் சூரன், சூரசேனன், விருஷசேனன், மது, ஜயத்வஜன் என்ற ஐவர் முக்கியமானவர்கள். அவர்களில் ஜயத்வஜன் என்பவனுக்கு அவன் பெயரைக் கொண்ட நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் வீதி ஹோத்திரன், இரண்டாமவன் பரதன், அவனுக்கு விருஷன், அந்த விருஷனுக்கு மது என்ற மகன் பிறந்தான். அந்த மதுவுக்கு விருஷ்ணி முதலிய நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அதனால் அந்தக் குலத்தாருக்கு விருஷ்ணிகள் என்றும் மதுக்கள் என்றும் பெயர் வழங்கலாயிற்று. யதுவைப் பற்றி, அவர்களுக்கு யாதவர்கள் என்ற பெயரும் பிரபலமாயிற்று.
12. ஜயாமகனின் பிள்ளைப்பேறு
யதுவின் மகனான குரோஷ்டு என்பவனுக்குத் துவஜினீவான் என்ற மகன் ஒருவன் பிறந்தான். அவன் மகன் சுவாதி அவன் மகன் ருசங்கு, அவன் மகன் சித்திராதன். அவன் மகன் சசபிந்து, அவன் சக்கரம், ரசம், மணி, கட்கம், சருமம், கொடி, நிதி என்ற ஏழு பொருள்களுடன் மனைவி புரோகிதன் சேனாபதி பாக்கியங்களும் ஆகப் பதினான்கு ரத்தினங்களையுடைய சக்கரவர்த்தியாக விளங்கினான். அவனுக்கு லக்ஷம் மனைவியரும் பத்து லக்ஷம் பிள்ளைகளும் உண்டு. அவர்களில் பிருதுசிரவன், பிருதுகர்மா, பிருதுகீர்த்தி, பிருதுயசன், பிருதுஜயன், பிருதுதானன் என்ற அறுவர் முக்கியமானவர்கள். அவர்களில் பிருது கீர்த்தி என்பவனின் மகன் பிருதுதமன், அவனுக்கு உசனன், அவன் நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தான். அவனுக்கு சிதபு என்ற பிள்ளையுண்டு, சிதபுடன் மகன் ருக்குமகவசன். அவன் மகன் பராவிருத்து, அவனுக்கு ருக்குமேஷு பிருது ருக்குமன், ஜ்யாமகன் பலிதன் ஹரிதன் என்ற பிள்ளைகள் ஐவர் இருந்தார்கள். அவர்களில் ஜ்யாமகனைப் பற்றி ஒரு சுலோகம் உண்டு. அதாவது பெண்டாட்டிக்கு வசப்பட்டவர்கள் யாருண்டோ, அல்லது யார் உண்டாவார்களோ, அவர்கள் யாவரிலும் சயிப்பியையின் கணவனான ஜ்யாமகனே மேலானவன்! என்பதாகும். அவன் மனைவியான சயிப்பி என்பவள் பிள்ளையே பெறாமல் இருந்ததால், ஜ்யாமக மன்னன் பிள்ளைப் பேற்றிற்காக வேறு ஒரு கலியாணஞ் செய்துகொள்ள விரும்பினான். ஆயினும் தன் மனைவிக்குப் பயந்து, அப்படிச் செய்யாமல் இருந்தான். ஒரு சமயம் அவன் தன் போர்ப்படைகளுடன் சென்று பெரியதொரு யுத்தம் செய்து பகைவர்களை வென்றான். அப்போது அவனது பகைவர்கள், தங்கள் உறவினர்களையும் பொருள்களையும் விட்டு விட்டு ஓடினார்கள். அந்த சமயம் அதி அழகான ஒரு பெண் பயத்தால் கண் கலங்கிய வண்ணம் என்னைக் காப்பாற்ற வேண்டும் தாயே! தந்தையே சகோதரனே! என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் மீது காதல் கொண்ட ஜ்யாமக மன்னன் சிந்திக்கலானான். மலடியின் புருஷனாய் பிள்ளைப் பேறற்று இருக்கும் எனக்குப் பெண்களின் திலகம் போன்ற இந்தப் பெண்ணைத் தெய்வம் தான் பிள்ளைப் பேற்றுக்காக அளித்திருக்கிறது. ஆகையால் இவளை நான் திருமணஞ்செய்து கொள்வேன் ஒருவேளை என் மனைவி சயிப்பியை கோபித்தால் என்னாவது? ஆகையால் இந்தக் கட்டழகியை அவளிடம் காண்பித்து அவளது உத்தரவைப் பெற்றாவது இவளை கல்யாண் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அந்தப் பெண்ணை தன் தேரில் ஏற்றிக்கொண்டு, தன் தலைநகரத்துக்கு அழைத்துச் சென்றான். அரசன் வெற்றி வீரனாய் வருவதைக் காண்பதற்காக, அவனது மனைவியான சயிப்பியையும் தன் பரிவாரங்களுடன் அரண்மனை வாசலில் வந்து வரவேற்கக் காத்திருந்தாள். அரசன் தன் தேரில் தனக்கு இடதுபுறத்தில் ஒரு கன்னிகையை உடன் அழைத்து வருவதைக் கண்டாள். சயிப்பியை உடனே அவள் கோபத்தால் உதடு துடிதுடிக்க ஜ்யாமக மன்னனை நோக்கி, ஓ சபலசித்தமுடையவனே? தேரின் மீது எவளை ஏற்றிக்கொண்டு வந்தாய்? என்று கேட்டாள். ஜ்யாமகன் பயந்து தன் மனைவிக்குப் பதில் சொல்ல எந்தவித யோசனையுமில்லாமல், இந்த கன்னிகை என் மருமகள்! என்றான்.
அதைக் கேட்டதும் சயிப்பியை மிகவும் வியப்படைந்து, மணாளனே! நானோ பிள்ளை பெறவில்லை. உனக்கு வேறொரு மனைவியும் இல்லை. இப்படி இருக்கும்போது எந்தப் பிள்ளைக்கு இவளைக் கல்யாணம் செய்யப் போகிறாய்? என்று கேட்டான். அவளுடைய கோபத்தைக் கண்ட மன்னன் தன்னுடைய விவேகத்தையும், தைரியத்தையும் இழந்து பிராண நாயகி! இனி உனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கு மனைவியாகவே இவளை நான் கொண்டு வந்தேன்! என்றான். அதைக் கேட்டதும் சயிப்பியை புன்முறுவலுடன், நல்லது. அப்படியே ஆகட்டும்! என்று ஒப்புக்கொண்டான். பிறகு சயிப்பியை தன் கணவனை அழைத்துக்கொண்டு அந்தப்புரத்துக்குச் சென்றாள். இவ்வாறு சில காலங்கழித்த பிறகு, சயிப்பியை வயது முதிர்ந்தவளானாள். அப்படியிருந்தும் அதிசுத்தமான லக்கினம், ஓரை, திரேக்காணம், நவாம்சம் முதலிய அங்கங்களைக் கொண்ட காலத்தில் அரசனது வாக்கு வலிமையால் சயிப்பியை கருவுற்று ஒரு குமாரனைப் பெற்றாள். அந்தப் பிள்ளைக்கு விதர்ப்பன் என்று பெயர் சூட்டினார்கள். பிறகு ஜ்யாமக மன்னன் முன்புகொண்டு வந்த கன்னிகையை அந்தப் பிள்ளைக்கு விவாகஞ் செய்வித்தான். அப்பெண்ணிற்கு ஸ்நுஷை என்று பெயர். அவள், விதர்ப்பராஜனிடம் கிருதன், கைசிகன் என்ற இருபிள்ளைகளைப் பெற்றாள். பிறகு ரோமபாதன் என்பவனையும் பெற்றாள். அந்த ரோமபாத அரசன் நாரத முனிவரிடத்தில் ஞானம் பெற்றான். அவன் மகன் பப்புரு, அவன் மகன் திருகி, அவன் மகன் கைசிகன், அவன் மகன் சேதி, அவனது சந்ததியிற் பிறந்தவர்கள் சைத்தியர்கள் என்று வழங்கப்பட்டார்கள். முன்னே சொன்ன ஸ்நுஷையின் மகனான கிருதன் என்பவனின் மகன் குந்தி. அவன் மகன் திருஷ்டி, அவன் பிள்ளை விதிருதி, அவன் மகன் தசரர்கள், அவன் மகன் வியோமன், அவன் புதல்வன் நீமுதன், அவன் மகன் விகிருதி; அவன் பிள்ளை பீமரதன், அவன் புத்திரன் நவரதன், அவன் மகன் தசரதன். அவன் பிள்ளை சகுனி, அவன் மகன் காம்பி; காம்பி மகன் தேவராதன்; அவன் பிள்ளை தேவஷத்திரன்; அவன் மகன் மது. அவன் பிள்ளை குருவமிசன்; குருவமிசனின் பிள்ளை அனு, அவன் மகன் புரு; ஹோத்திரன். அவன் மகன் அம்சன்; அவன் மகன் சத்துவதன்; அந்த சத்துவதனாலேயே இனிச் சொல்லப்படவிருக்கும் அரசர்களுக்கு சாத்துவதர் என்ற பெயருண்டாயிற்று. இந்த ஜ்யா மகனுடைய வமிசத்தைப் பற்றி சிரத்தையோடு கேட்பவர்களின் பாவங்கள் அழியும்.
13. சியமந்தகமணியின் கதை
மைத்ரேயரே! முன்னே சொன்ன சத்துவதனுக்கு பஜனன், பஜமானன், திவியன், அந்தகன், தேவாபிருகன், மகாபோஜனன், விருஷ்ணி என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் பஜமானனுக்கு நிமி கிருகணன், விருஷ்ணி என்னும் மூவர் ஒருத்தி வயிற்றிலும், சதஜித்து சகஸ்ரஜித்து அயுதஜித்த என்பவர்கள் மற்றொருத்தியின் வயிற்றிலும் பிறந்தார்கள். அந்த தேவபிருதனுக்கு பப்புரு என்பவன் பிறந்தான். அவனை மனிதர்களிற் சிறந்தவன் என்றும் தேவ பிருதனைத் தேவர்களுக்கு ஒப்பானவன் என்றும் சொல்வார்கள் அவர்கள். இருவராலும் உபதேசிக்கப்பட்ட வழியினால் எழுபத்து நாலாயிரம் மக்கள் மோட்சமைந்தனர். ஆகையால் இவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாகப் பாராட்டப் பெற்றார்கள். மகாபோஜன் என்பவன் அதிதர்மவான். அவன் வமிசத்தில் பிறந்தோர் வோஜர் எனப்படுவார்கள். அவர்கள் மிருத்திகாவாம் என்ற நகரில் வாசஞ்செய்ததால் மார்த்திகாவார் என்றும் வழங்கப்பட்டார்கள். விருஷ்ணிக்கு சுமித்திரன், யுதாஜித் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். சுமித்திரனுக்கு அனமித்திரன், அவனுக்கு நிக்கினன், அவனுக்கு பிரசேனனும் சத்திராஜித்தும் உண்டானார்கள். அவர்களில் சத்திராஜித்து என்பவனுக்கு சூரியன் நண்பன், அவன் ஒரு காலத்தில் கடற்கரையில் நின்று சூரியனை மிகவும் பக்தியோடு துதித்தான். சூரியபகவான் அவனுடைய வழிபாட்டை மெச்சி, அவன் எதிரில் தோன்றினார். அவன் சூரியனை நோக்கி, பகவானே! உம்மை வானத்தில் நெருப்புக்கட்டியைப் போலக் காண்கிறேன் அன்றோ? அப்படித்தான் இப்போதும் உம்மைப் பார்க்கிறேன். ஆகையால் நீர் எனக்கு அனுக்கிரகம் செய்து பயன் ஒன்றும் இல்லையே? என்றான். அதைக்கேட்ட சூரியபகவான் தமது கழுத்திலிருந்து ஸ்யமந்தகம் என்ற இரத்தினத்தை கழற்றி ஒரு மறைவிடத்தில் வைத்தார். பிறகு அவர் கொஞ்சமாகச் சிவந்து, பிரகாசிப்பதாயும் குறுகிய தேகமும் பூனைக்கண் போன்ற சிறிது பொன்னிறமாயுமுள்ள விழிகளும் உடையவராகவும் காணப்படுவதைக் கண்டதும் சத்திராஜித்து சாஷ்டாங்கமாக அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் துதித்தான். அப்போது சூரியன் அவனைப் பார்த்து சத்திராஜித் உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். நான் தருவேன் என்றார். அதற்கு யாதவன் சத்திராஜித்து அந்த ஸ்யமந்தகமணியைத் தனக்குத் தரும்படி கேட்டான். சூரியபகவான், அதை எடுத்து அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தம்மிடம் சேர்ந்தார்.
பிறகு சத்திராஜித் அந்த ஸ்யமந்தக மணியைத் தரித்துக் கொண்டான். அதனால் அவன் சூரியனைப் போல நான்கு திசைகளையும் காந்தியுடன் விளக்கிக் கொண்டு துவாரகைக்கு வந்தான். அப்போது அவனைக் கண்ட துவாரகை மக்கள் கிருஷ்ண பரமாத்மாவின் சன்னதியில் சென்று சுவாமி, தங்களைச் சேவிக்கச் சூரியபகவான் வருகிறார் போலிருக்கிறதே! என்றார்கள். அதைக் கேட்டதும் கண்ணபிரான், புன்சிரிப்புடன் வருபவன் சூரியன் அன்று! நம்முடைய சத்திராஜித்தனே! சூரியனால் கொடுக்கப்பட் ஸ்யமந்தக மணியைத் தரித்துக்கொண்டு வருவதால் தான் அவன் அப்படித் தோற்றமளிக்கிறான். ஆகையால் அவனை அச்சமின்றிப் பாருங்கள்! என்றார். அவர் அருளிச்செய்தபடியே அவர்களெல்லாம் பார்த்தார்கள். சத்திராஜித்தனோ அதிகப் பிரகாசமான ரூபத்தடன் துவாரகைக்கு வந்து அந்த சிறப்பான இரத்தினத்தை தன் மாளிகையில் வைத்திருந்தான். அந்த ஸ்யமந்தகமணி நாள் ஒன்றுக்கு எட்டுப்பாரம் பொன்னை உண்டாக்கவல்லது. மேலும் அதன் மகிமையால் ராஜ்யத்தில் வியாதி, மழையின்மை, நெருப்பு பாம்பு முதலியவைகளின் பயம், பஞ்சம் முதலியன உண்டாவதில்லை. ஸ்ரீகிருஷ்ண பகவானோ, இந்த உத்தமமான பொருள் உக்கிரசேன மன்னனுக்கே தகுந்தது! என்று திருவுள்ளம் பற்றியிருந்தார். ஆயினும் குலத்தில் பேதமுண்டாகக்கூடாது என்பதனால் தாம் சக்திமானாக இருந்தும் அதைக் கவர்ந்து கொள்ளாமல் இருந்தார். சத்திராஜித்தும் தன் மனதிற்குள்; ஒருவேளை கண்ணன் இதைக்கொடுக்கும்படித் தன்னைக் கேட்டாலும் கேட்பார்! என்று நினைத்து அதைத் தன் சகோதரனான பிரசேனனுக்குக் கொடுத்து விட்டான். அந்த ஸ்யமந்தக மணியைப் பரிசுத்தமானவன் தரித்தால் பொன்னை உண்டாக்கிக் கொடுக்கும், அசுத்தன் தரித்தால் தரித்தவனுக்கு தீங்கையே வருவிக்கும். இதையறியாத பிரசேனன் அந்த ரத்தினத்தைத் தன் கழுத்தில் கட்டிக்கொண்டு குதிரை மீது ஏறி வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். அங்கு அவனையும், அவனது குதிரையையும் ஒரு சிங்கம் கொன்று விட்டது. அந்த சிங்கம் ரத்தினத்தை வாயில் கவ்விக்கொண்டு போகும்போது; கரடி அரசான ஜாம்பவான், அந்த சிங்கத்தைக் கொன்று ஸ்யமந்தக மணியை எடுத்துக் கொண்டு தன் குகைக்குச் சென்று சுகுமாரன் என்ற தனது மகனுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுத்தான். இது இப்படியிருக்க, காட்டுக்குப் போன பிரசேனன் வராமல் இருந்ததால் யாதவரெல்லாம் குழம்பினார்கள். ஸ்ரீகிருஷ்ணன் அந்த இரத்தினத்தின் மேல் ஆசை கொண்டிருந்தாராகையால் அவர் தான் அதைத் தந்திரமாக அடைந்திருப்பார்! இது அவருடைய செயல்தான்! என்று யாதவர்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். கண்ணன் தனக்கும் இப்படிப்பட்ட அபவாதம் உண்டாகியிருப்பதை அறிந்து, அந்தப் பழியைத் துடைப்பதற்காகச் சகல யாதவ சேனைகளுடன் புறப்பட்டு; பிரசேனனின் குதிரை சென்ற வழியைப் பின்தொடர்ந்து சென்றார். காட்டில் ஓரிடத்தில் ஏறியிருந்த குதிரையுடன் பிரசேனன் சிங்கத்தால் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார். யாவரும் அங்கே சிங்கத்தின் காலடிகளையும் பிரசேனன் மீது தாக்கியிருக்கும் சிங்கத்தின் காலடி நகக்குறிகளையும் கண்டார்கள். அதனால் கண்ணபிரான் தமக்கு உண்டாகியிருந்த அபவாதத்திலிருந்து நீங்கினார்.
பிறகு அந்த மிருகேந்திரனான சிங்கம் சென்ற வழியை அவர் பின்தொடர்ந்து செல்லும்போது சிறிது தூரத்திலேயே அந்த சிங்கத்தைக் கரடி ஒன்று கொன்றதாகத் தெரிந்துகொண்டு அந்த ரத்தினத்தின் மகிமையைக் கருதி, அந்த கரடிசென்ற வழியையும் பின்தொடர்ந்து சென்றார். அங்கிருந்த ஒரு மலைச்சாரலில் கண்ணபிரான் தம் சேனைகள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு தாம் மட்டும் அந்தக் கரடியின் குகைக்குச் சென்றார். அங்கே சுகுமாரன் என்ற சிறுவனை லாலனை செய்து கொண்டிருந்த செவிலித்தாய், சிங்கம் பிரசேனனைக் கொன்றது சிங்கத்தை நம்முடைய ஜாம்பவன் கொன்றார். ஆகையால் ஸ்யமந்தகமணி உனதாயிற்று. குழந்தாய், அழாதே! என்று கொஞ்சுவதை கண்ணன் கேட்டார். அந்த செவிலித்தாயின் கையில் ஜொலித்துக் கொண்டிருந்த ஸ்யமந்தக மணியைக் கண்டார். அப்போது அந்த ஸ்யமந்தகமணியின் மேல் கண்ணோடி நிற்கும் ஒரு புதிய ஆடவனைக் கண்ட செவிலித்தாய் பயந்து என்னைக் காக்கவேண்டும்! என்று கூறினாள். அந்த அபயக்குரலைக் கேட்டதும் கரடி ராஜனான ஜாம்பவான் வெகுகோபத்தோடு அங்கே தாவி வந்தான். அவனுக்கும் கண்ணபிரானுக்கும் ஒரு கொடிய போர் மூண்டது. இருபத்தொரு நாள்வரை, அந்த யுத்தம் நீடித்தது. இது இப்படியிருக்க வெளியே இருந்த யாதவர் அனைவரும் ஏழெட்டு நாட்கள் வரையிலும் கிருஷ்ண பகவான் வராமையால் ஓஹோ! நமது கிருஷ்ணன் இந்தக் குகையில் நாசமுற்றிருப்பான். இல்லையென்றால் அவனுக்கு பகைவர்கள் ஜயிக்கத் தடையிருக்கமாட்டாது என்று கருதி கிருஷ்ணன் முடிந்தான் என்று சொல்லி விட்டார்கள். அதைக்கேட்ட அவருடைய உறவினர்கள், அவருக்குச் செய்ய வேண்டிய சாமக்கிரியைகளை யெல்லாம் செய்து விட்டார்கள். அவ்விதமாக வெகு சிரத்தையோடு சிரார்த்தம் செய்தால் ஸ்ரீகிருஷ்ண பகவானுக்குப் பலமும் புஷ்டியும் திருப்தியும் உண்டாயிற்று. ஜாம்பவானுக்கோ அங்கங்கள் தளர்ந்தன. ஆகாரமில்லாமøயால் உடல் மெலிந்தது. இந்நிலையில் சுவாமியால் மொத்துண்டு வெல்லப்பட்ட ஜாம்பவான் அவரது திருவடிகளில் வீழ்ந்து தண்டனிட்டு, சுவாமி சுராசுர யக்ஷராக்ஷச கந்தர்வாதிகளினாலும் தாங்கள் வெல்லக் கூடாதவராக இருக்கும்போது இந்த மண்ணுலகில் சஞ்சரிக்கும் மனிதர்களாலும் அவர்களுக்கு அடங்கும் விலங்குகளைச் சேர்ந்த எம்போன்றார் யாவராலும் வெல்லப்படுவீரோ, ஆகையால் எங்கள் சுவாமியான ஸ்ரீராமபிரானைப் போல் தாங்களும் சகல உலகங்களுக்கும் ஆதார பூதரான ஸ்ரீமந் நாராயணருடைய திருவவதாரமாகவே இருக்க வேண்டும்? என்று விண்ணப்பம் செய்து நின்றான். அவனை ஸ்ரீகிருஷ்ண பகவான் கடாட்சித்து, ஆம்! நீ நினைத்தபடி நாம் லோக ரக்ஷணார்த்தமாகவே இந்த அவதாரஞ் செய்தோம்! என்று அருளிச் செய்த அன்புடன் தமது திருக்கைகளால் ஜாம்பவானின் உடலைத் தடவிக் கொடுத்தார். அதனால் ஜாம்பவானுக்குப் போராட்டத்தால் நேர்ந்த நோயெல்லாம் நீங்கின. பிறகு கரடியரசனான ஜாம்பவான், ஸ்ரீகிருஷ்ணபகவானுக்குத் தண்டனிட்டு, மாளிகைக்கு அழைத்துச் சென்று உபசரித்து, அவருக்குத் தமது வளர்ப்பு மகளான ஜாம்பவதி என்பவளைக் கன்னிகாதானஞ் செய்து, ஸ்யமந்தக மணியையும் கொடுத்து தண்டம் சமர்ப்பித்தான். கிருஷ்ண பகவானும் அவனுடைய பக்தியினால் மனமகிழ்ந்துவிட்டு ஜாம்பவதியோடும் ஸ்யமந்தக மணியோடும் துவாரகைக்குத் திரும்பி வந்தார். அவர் வருவதையறிந்த துவாரகை மக்கள் பெரிதும் மகிழ்ந்தனர். கண்ணபிரானும் நடந்தவற்றையெல்லாம் யாதவ சமூகத்தினருக்குச் சொல்லி, ஸ்யமந்தக மணியை சத்திராஜித்திடம் கொடுத்து, தமக்கு வந்த அபவாதத்தைப் போக்கிக் கொண்டு, ஜாம்பவதியை அந்தப்புரத்தில் சேர்ந்து சுகமாகத் தங்கியிருந்தார்.
சத்திராஜித்தோ, நம்மால் கண்ணன் பேரில் வீண் அபவாதம் ஏற்பட்டுவிட்டது. அதை எப்படியாவது நிவர்த்திக்க வேண்டும் என்று நினைத்துத் தன் மகளான சத்தியபாமையை கிருஷ்ணபகவானுக்குச் சமர்ப்பித்தான். அந்த சத்யபாமையை முன்பு அக்குரூரன், கிருதவர்மா, சத்தனுவா முதலிய யாதவர்கள் கேட்டிருந்தார்கள். அவளைத் தங்களுக்குக் கொடுக்காததால், அவர்கள் அனைவரும் சத்திராஜித்தின் மேல் பகைமை பாராட்டினார்கள். ஒரு சமயம் அக்குரூரன் கிருதவர்மன் முதலியோர் சததனுவாவிடம் சென்று, சததனுவாவே! வெகுநாளாய் சத்தியபாமையைக் கேட்டுக் கொண்டிருந்த உன்னையும், எங்களையும் அவமானப்படுத்தி அவளை கிருஷ்ணனுக்குக் கொடுத்தானே அந்த சத்திராஜித்து! இனி அந்த அயோக்கியன் இருந்தாவதென்ன? நீ மிகவும் சமர்த்தன். ஆகையால் நீ அவனைக் கொன்று விட்டு அவனிடமிருக்கும் அந்த அபூர்வமான ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொள்வாயாக. கிருஷ்ணன் அதற்காக உன்னை எதிர்க்க வந்தால் நாங்கள் உனக்குப் பக்கபலமாக இருந்து துணை செய்கிறோம்! என்றார்கள். அவர்களால் தூண்டப்பட்ட சததனுவா ஒருநாள் சத்திராஜித்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்று ஸ்யமந்தகமணியை அபகரித்துக் கொண்டான். அந்தக் காலத்தில் பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் வெந்து போய்விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டு, கிருஷ்ண பகவான் அவர்கள் வாசஞ் செய்துகொண்டிருந்த வாரணாவத புரத்துக்குச் சென்றிருந்தார். கிருஷ்ண பகவானுக்கோ பாண்டவர்கள் வெந்து போகாமல் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள் என்பது தெரியும். அப்படித் தெரிந்திருந்தும் லோக மரியாதைக்காகவும் தாம் எழுந்தருளாவிட்டால் பாண்டவர்கள் பிழைத்திருக்கிறார்கள் என்று துரியோதனன் சந்தேகங்கொண்டு அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பான் என்பதாலும் அவனை அப்படிச் செய்யவொட்டாமல் தடுப்பதற்காகவும் கிருஷ்ணன் அங்கு விஜயம் செய்தார். ஆகையால் தான் சத்திராஜித்துக்கு அத்தகைய ஆபத்து நேரிட்டது. தகப்பனைக் கொலை செய்து விட்டார்களே என்ற துக்கம் தாங்காத சத்தியபாமை அதிக கோபங்கொண்டு தேரில் ஏறி வெகுவேகமாக வாரணாபுரத்துக்குச் சென்றாள். அங்கு கண்ணும் கண்ணீருமாய் கண்ணனைக் கண்டு, என் பிராணநாதா! என் தந்தை என்னைத் தங்களுக்குக் கொடுத்தார் என்ற பொறாமையால், சததனுவா என் தந்தையைக் கொன்று அவரிடமிருந்து ஸ்யமந்தகமணியை அபகரித்துக் கொண்டுவிட்டான். அது தங்களுக்கு இழைத்த அவமானமேயன்றி வேறல்ல, இதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதை யோசித்துச் செய்யுங்கள்! என்று விண்ணப்பஞ் செய்தாள்.
அதைக்கேட்ட கண்ணன், பாமா! நீ சொன்னதுபோல் இது எனக்குச் செய்த அவமானம் தான். அந்த துராத்மா இப்படி செய்ததை நான் சகிக்கமாட்டேன். மரத்தை விட்டு அதில் கூடுகட்டும் பறவைகளைக் கொல்லக்கூடாது. நீ ஏன் இதற்காக கதற வேண்டும்! வேண்டாம் நில்! என்று சொல்லி, அவளைச் சமாதானப்படுத்திவிட்டு, துவாரகை சென்றார். அங்கு தம் தமையரான பலராமருடன் ஏகாந்தத்தில் தனித்துப் பேசி, வேட்டையாடச் சென்ற பிரசேனன் சிங்கத்தால் அறையப்பட்டு இறந்தான். அவ்விருவரும் இறந்ததால் ஸ்யமந்தகமணியெனும் இந்த இரத்தினம் நம் இருவருக்கும் பொதுவாக உள்ளது. மற்றொருவன் கொண்டு போவதற்கு நிமித்தம் இல்லை. ஆகையால் எழுந்திருந்து தேரில் ஏறி சததனுவைக் கொல்வதற்கு முயல்வீராக! என்று கிருஷ்ணபிரான் சொன்னார். அதனால் பலராமர் அப்படியே ஆகட்டும் என்று அங்கீகரித்தார். இவ்வாறு பலராமர் கிருஷ்ணர் இருவரும் பிரயத்தினம் செய்திருப்பதை அறிந்த சததனுவா திகைத்து கிருதவர்மனிடம் சென்று, தனக்குத் துணைசெய்யும்படி வேண்டினான். அதற்கு அவன் மறுத்தான். பிறகு அவன் அக்குரூரனிடம் சென்று அவனையும் தனக்குப் பக்கபலமாக இருக்கும்படிக் கேட்டான். அவனோ, கேளப்பா! ஸ்ரீகிருஷ்ணனோ தம் திருவடித் தாக்குதலினாலேயே பூமியையெல்லாம் நடுங்கச் செய்யும் திறமுடையவன்; தேவர்களது பகைவர்களின் மனைவியரையெல்லாம் கைம்பெண்களாக்க வல்லவன் எப்படிப்பட்டவர்களாலேயும் தடைசெய்யக்கூடாத சக்கராயுதமுடையவன். அவன் அண்ணன் பலராமனோ மதத்தோடு சுழலும் கண்களால் பார்த்தவுடனேயே பகைவரது சமூகத்தை எரிக்கவல்லவர். மிகவும் பிரபல பகைவரான மதயானைகளையும் வயப்படுத்தும் திறனுடைய மரவெட்டி போன்ற கலப்பை ஆயுதமுடையவர்! அவ்விருவரோடும் யுத்தம் செய்யத்தக்க வலிமையுள்ளவன் தேவர்களில் கூட ஒருவனில்லை. அத்தகையவர்களை நாங்கள் எதிர்ப்பது எப்படி? ஆகையால் வேறு யாரையாவது உனக்குத் துணைசெய்ய வேண்டிக்கொள்! என்றான். அதைக்கேட்ட சததனுவா, அக்குரூரனே! நீ என்னைக் காக்கும் திறனில்லாதவன் என்று நினைத்தால், இந்த ஸ்யமந்தக இரத்தினத்தையாவது என்னிடமிருந்து வாங்கி நீ காப்பாற்றி வைக்கவேண்டும் என்று கெஞ்சினான். அதற்கு அக்குரூரன், அப்படியே செய்கிறேன் நீ மிகவும் துன்பப்பட நேரிட்டாலும் இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் இருப்பதாக எனக்கு வாக்குறுதியளித்தால், நான் இதைப் பத்திரப்படுத்திக் கொடுக்கிறேன்! என்றான். அதை சததனுவா ஒப்புக்கொண்டான். அக்குரூரனும் இரத்தினத்தை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டான். பிறகு சததனுவா, ஒப்பற்ற வேகமும், நூறுகாதம் வரை இளையாமல் சுமக்குந்திறமுடைய ஒரு பெண் குதிரையின் மீது ஏறிக்கொண்டு அதிவேகமாகச் சென்று விட்டான்.
அவன் ஓடிப்போனான் என்ற செய்தியை அறிந்த பலதேவர் கிருஷ்ணபிரான் இருவரும் சைனிய, சுக்ரீவ, மேக, புஷ்பவலாகம் என்ற நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். சததனுவாவை ஏற்றிச் சென்ற பெண்குதிரை நூறுகாத தூரம் அவனைச் சுமந்து சென்ற பிறகும் அதை அவன் வற்புறுத்தி செலுத்தியதால், அது ஓடமாட்டாமல் மிதிலை நகருக்கு அருகிலிருந்த ஒரு வனத்தில் இறந்தது. ஆகையால் அவன் கால்நடையாக ஓடத் துவங்கினான். அப்போது கிருஷ்ணபிரான் தன் தமையனிடம், கால்நடையாக ஓடிச்செல்லும் அந்த அதமனை நானே பின்தொடர்ந்து ஓடிப்பிடித்துக் கொன்றுவிட்டு வருகிறேன். அதுவரையில் நீர் இந்தத் தேரில் இருப்பீராக. இங்கு சததனுவாவின் குதிரை செத்திருப்பதைக் கண்டதால் நமது குதிரைகள் பயமடைந்துள்ளன. ஆகையால் இவற்றை இங்கிருந்து அப்புறம் ஓட்டிச் செல்ல வேண்டாம் என்று சொன்னார். இவ்விதம் தம்பியான ஸ்ரீகிருஷ்ணன் கூறியதைக் கேட்ட பலராமர், அதன்படி ஒப்புக்கொண்டார். ஸ்ரீகிருஷ்ணனும் இரண்டு குரோசதூரம் ஓடிச்சென்று, தூரத்திற் காணப்பட்ட சததனுவாவை குறித்து அங்கேயே இருந்தவண்ணம் தமது சக்கரத்தைப் பிரயோகித்து அவன் சிரத்தைச் சேதித்துப் பின்பு கிட்டப்போய் அவனுடைய உடலையும் ஆடைகளையும் சோதித்துப் பார்த்தார்; அப்படிப் பார்த்ததும் ஸ்யமந்தக மணியைக் காணாததால் அவர் திரும்பி வந்து பலராமரிடம் அண்ணா! சததானுவாவை நாம் வீணாகக் கொன்றாய்? எவ்வளவு தேடியும் அந்த மகத்தான இரத்தினம் கிடைக்கவில்லை என்றார். அதனால் பலபத்திரர் மிகவும் கோபங்கொண்டு ஸ்ரீகிருஷ்ணனே நோக்கி, தம்பீ! நீ பொருள் நாட்டம் உடையவனாய் தீயவழியில் செல்கிறாய். சீச்சீ! இத்தகைய நீ இத்தகைய நீ நிந்திக்கத்தக்கவன்! இவற்றையெல்லாம் உன்னுடன் பிறந்த தோஷத்துக்காக நான் பொறுத்தேன். ஆகையால் இனிமேல் நீ உன் இஷ்டப்படி எங்கேயும் போகலாம். நான் உன்னுடன் வரமாட்டேன். எனக்குத் துவாரகையினாலாவது உன்னாலாவது மற்றுமுள்ள பந்துக்களினாலாவது ஆகவேண்டியது ஒன்றுமில்லை, நீ என் எதிரில் வந்து அநேகம் பொய்ச்சத்தியங்களைச் செய்கிறாய்! உன் சரித்திரம் கொஞ்சமும் நன்றாக இல்லை! என்று நிந்தித்தார். பிறகு அவர் தம்பியுடன் பேசாமல் மிதிலை நகருக்குச் சென்றார். அங்கே ஜனக மன்னன், அவரை வரவேற்று உபசரித்துத் தம் மாளிகை ஒன்றில் தங்க வைத்திருந்தான். அங்கு பலராமரும் மகிழ்ச்சியுடன் தங்கியிருந்தார். அத்தருணத்தில் துரியோதனன் அஸ்தினாபுரத்தினின்றும் அங்கு வந்து பலராமரிடம் கதாயுத்தாப்பியாசஞ் செய்து கொண்டிருந்தான். ஸ்ரீவாசுதேவரோ துவாரகைக்குப் போய்விட்டார். மூன்றாண்டு காலங் கடந்த பிறகு பப்புரு, உக்கிரசேனன் முதலிய யாதவர்களனைவரும் ஸ்யமந்தக மணியை கண்ணன் அபகரிக்கவில்லையென்று தெளிந்து, அந்தக் கருத்தைப் பற்றி தம்பியினிடம் மனம் முறிந்து மிதிலையில் தங்கியிருக்கும் பலராமரிடம் சென்று அவரைச் சமாதானப்படுத்தி துவாரகைக்கு அழைத்து வந்தார்கள்.
அக்குரூரனோ ஸ்யமந்தக மணியின் மகிமையால் உண்டான பொன்னைக் கொண்டு, எம்பெருமானிடத்தில் சித்தமுடையவனாய், எப்போதும் யாகங்கள் செய்து கொண்டிருந்தான். யாகஞ்செய்து கொண்டிருக்கும்போது, க்ஷத்திரியனையாவது வைசியவையாவது கொன்றவன் பிரமஹத்தி தோஷமடைவான் என்று சாஸ்திரம் கூறுவதால் தனக்கு ஸ்ரீகிருஷ்ணனால் யாதொரு துன்பமும் நேரிடமாட்டாது என்று எண்ணிய அக்குரூரன் யாக தீட்சையாகிய கவசத்தை அணிந்திருந்தான். ஸ்யமந்தக இரத்தினத்தின் மகிமையால் அங்கு அறுபத்திரண்டு ஆண்டுகள் வரை பஞ்சமும் கொள்ள நோயும் ஏற்படாமல் இருந்தது. இப்படியிருக்கும் போது சததுவதனுடைய பேரனுக்குக் குமாரனான சத்துருக்கினன் என்பவனை, அக்குரூரனைச் சேர்ந்த போஜர்கள் அழித்ததால் சாத்துவதருடைய பகைமையுடன் துவாரகையில் வாசஞ்செய்வது நியாயமல்ல என்று எண்ணி அக்குரூரன் துவாரகையிலிருந்து தன்னுடைய இனத்தாரோடு கூடப்போய் விட்டான். அவன் துவாரகையை விட்டுப்போனது முதல் அங்கு வியாதியும் பஞ்சமும் தோன்றின. இதைக் கண்டு யாதவர்கள் அனைவரும் பலராமர், உக்கிரசேனன் முதலியவர்களுடன் சென்று அதன் காரணத்தை ஆலோசிக்கத் துவங்கினார்கள். அந்த சங்கத்தில் கருடத்வஜனான கிருஷ்ணபரமாத்மா மற்றவர்களை நோக்கி, இதென்ன இங்கு அநேக துன்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கின்றன? இது ஏன் என்று ஆலோசியுங்கள்! என்று கூறினார். அப்போது அந்தகன் என்னும் பெயருள்ள யாதவ மூப்பன் ஒருவன், கேளுங்கள் யாதவர்களே! அக்குரூரனுடைய தந்தை சுவபல்க்கன் என்று ஒருவன் இருந்தானே, அவன் இருந்த இடங்களிலெல்லாம் துர்ப்பிஷங்கள் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் காசி ராஜ்யத்தில் மழையில்லாமல் துன்பம் நேரிட்டது. காசியரசன் சுவபல்க்கனைத் தன் நகரத்துக்கு அழைத்துச் சென்றான். அதனால் மழை பெய்து நாட்டில் ÷க்ஷமம் உண்டாயிற்று. அந்த அரசனுக்கு மகள் ஒருத்தி இருந்தாள். அரசன் தனது நாட்டுக்கு நன்மை செய்ததற்காக, தன் புதல்வியை சுவபல்க்கனுக்கு கல்யாணம் செய்து கொடுத்தான். அவள் கருப்பத்திலிருந்து பிரசவ காலம் நேர்ந்தும் வெளியே வராமல் தாய்க்கு அதிகத் துன்பம் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். இதுபோலப் பன்னிரண்டு ஆண்டுகள் சென்றன. இப்படியிருக்கக் கணவன் தன் மனைவியின் கருவிலிருந்த சிசுவை நோக்கி மகளே! நீ ஏன் இன்னும் பிறக்கவில்லை? சீக்கிரம் வெளியில் வருவாயாக! உன் முகத்தைப் பார்க்க விரும்புகிறேன். உன்னை வயிற்றில் தாங்கியிருக்கும் உன் தாயை நீ ஏன் நெடுநாளாக வருத்தி வருகிறாய்? என்று சொன்னான்; உடனே வயிற்றிலிருந்த அந்தக் கன்னி ஐயா இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு பசுவைப் பிராமணருக்குத் தானஞ்செய்து வருவீராயின் மூன்றாண்டுகள் கழித்து நான் வெளிவருவேன் என்று சொன்னான். அதன்படி அரசன் தினந்தோறும் கோதானம் செய்ததனால் அவள் பிறந்தாள். ஆகவே அரசன் அவளுக்குக் காந்தினி என்று பெயரிட்டான். அப்படிப்பட்டவள் வயிற்றில் அப்படிப்பட்ட சுவபல்க்கனுக்குப் பிறந்தவன் இந்த அக்குரூரன். இத்தகைய சுத்தமான பிறவியும் நல்ல ஒழுக்கமுடையவர் இங்கிருந்து நீக்கியதால் இந்த உபத்திரவங்கள் யாவுமே உண்டாயின. குணவானாக இருப்பவனிடத்தில் குற்றம் பாராட்டுதல் கூடாது. ஆகையால் அக்குரூரனை இங்கே வரவழைக்க வேண்டும் என்று அந்தக் கிழவன் கூறியதை கிருஷ்ணபிரானும் மற்றவரும் கேட்டார்கள். அவர்கள் அக்குரூரனைத் துவாரகைக்கு அழைத்து வந்தார்கள்; அவன் வந்தவுடன் அவனிடமிருந்த ஸ்யமந்தக மணியின் பிரபாவத்தால் மழையின்மை, கொள்ளை நோய் முதலிய தொல்லைகள் நீங்கின.
அப்போது கண்ணபிரான் இந்த அக்குரூரனுக்கு இவ்வளவு மகிமை இருப்பதற்கு இவன் சுவபல்க்கனுக்கும் காந்தினிக்கும் பிறந்தான் என்பது போதிய காரணமல்ல இது மிகவும் சாதாரண விஷயம்! மழையின்மை முதலிய துன்பங்களை நீக்குவது என்பது மகாயோகிக்கும் அரிய காரியமாகும்! ஆகையால் ஸ்யமந்தகமணியானது இந்த அக்குரூரனிடம் தான் இருக்க வேண்டும்! என்று உறுதியாக நம்பினார். எனவே அவர் யாதவர்களனைவரையும் தமது மாளிகைக்கு வரவழைத்தார். அவர்கள் அனைவரும் கூடிய பிறகு அவர் அக்குரூரனை நோக்கி, தானபதியான அக்குரூரரே! சததனுவா அந்த ஸ்யமந்தக மணியை உமக்குக் கொடுத்தது நமக்குத் தெரியும். அந்த மணி உம்மிடம் தான் இருக்கிறது. அதன் பயன் இந்த ராஜ்யம் முழுவதும் அனுபவித்து வருகிறது. நாமெல்லாம் அனுபவித்து வருகிறோம், ஆனால் நமது பலபத்திரருக்கு அதை நான் எடுத்துக் கொண்டதாக ஒரு நினைப்பு அதற்காக அந்த மணியை இங்கு காண்பிக்க வேண்டும்! என்று கூறிவிட்டு, மவுனமாக இருந்தார். அக்குரூரர், யோசிக்கலானார். இப்பொழுது நாம் என்ன செய்வது? இல்லையென்றால், இந்த சபையிலேயே நமது ஆடைகளைச் சோதித்து ரத்தினத்தை சுவாமி எடுத்து விடுவார். பிறகு நாம் அவருக்கு விரோதியாகி விடுவோம் அது நல்லதல்ல என்று ஆலோசித்து, சகல ஜகத்காரணரான கண்ணபிரானை நோக்கிக் கூறலானார். சுவாமி! ஸ்யமந்தகமணியை சததனுவா எனக்குக் கொடுத்தான். அவன் போன பிறகு இன்றையோ நாளையோ சுவாமி நம்மைக் கேட்பார் என்ற நினைப்பில் இத்தனை நாள் வரையில் அதை நான் வைத்திருந்தேன். அதை வைத்திருக்கும் வருத்தத்தினால், சகல போகங்களிலும் மனப்பற்றில்லாமல் சிறிதும் சுகமறியாமல் இருக்கிறேன். இந்த இரத்தினத்தை தரித்துக் கொண்டாகிலும் இந்த ராஜ்யத்துக்கு ÷க்ஷமத்தை உண்டாக்கும் உபகாரத்தைச் செய்யாமல் நம்முடைய கையில் கொண்டுவந்து கொடுக்கிறானே என்று தாங்கள் நினைப்பீர்களே என்ற பயத்தால் அதை நான் வலுவில் வந்து இத்தனை நாளும் சமர்ப்பிக்காமல் இருந்தேன். ஆகையால் நீங்களே அதை யாருக்காயினும் கொடுக்கலாம்! சொல்லி தம் மடியில் முடித்து வைத்திருந்த மிகச்சிறிய பொற்சிமிழை எடுத்துத் திறந்து வைத்தார். உடனே சபை முழுவதும் அந்த மணியின் ஒளி வெள்ளம் பளபளவென்று மின்னியது. அக்குரூரர், சபையோரை நோக்கி சபையோர்களே! இந்த ஸ்யமந்தக மணியை சததனுவா என்னிடம் கொடுத்து விட்டுப் போனான். இதோ இதை நான் இங்கு வைத்து விட்டேன் இது யாரைச் சேர வேண்டியதோ, அவர் இதை எடுத்துக்கொள்ளலாம்! என்றார். யாதவர்கள் அனைவரும் நன்றாய் இருக்கிறது? என்று மகிழ்ந்து புகழ்ந்தனர். பலபத்திரரான பலராமரோ, இது நமக்கும் தனக்கும் பொதுவில் இருக்கட்டும் என்று கண்ணபிரானே முன்பு கூறியிருக்கிறான்! என்று நினைத்து அதன் மீது ஆசை கொண்டிருந்தார். சத்தியபாமாவோ, இது என் தந்தை வீட்டுத் தனம் அல்லவா? ஆகையால் இது எனக்கே உரியது! என்று நினைத்திருந்தாள். கண்ணன் அவர்கள் இருவருடைய கருத்தையும் புரிந்து கொண்டு, எருதுக்கும் சக்கரத்துக்கும் இடைப்பட்ட ஜந்துவைப் போல சங்கடப்பட்டார்.
அவர் சபையில் அக்குரூரரை நோக்கி, அக்குரூரரே! நான் இப்போது இந்த மணியை இங்குள்ளோர் அனைவர்க்கும் எதிரில் வைக்கச் சொன்னது ஏன் தெரியுமா? இதை நான் அபகரித்தேன் என்று இங்குள்ள சிலர் எண்ணியிருப்பதை மாற்றுவதற்காகவே தான்! இதுவோ, என் தமையனுக்கும் எனக்கும் பொதுவானது. நன்றாய் யோசித்தால் இது சத்தியபாமையின் பிதுர்த்தனம் ஆகையால் அவளுக்கு உரியது. இதனால் நாட்டிற்கு நலனும் சுகமும் உண்டாகிறது. எனவே, இதனை மகாபரிசுத்தனாகவும் பிரம்மசரிய விரதத்தில் உயர்ந்தவனாகவும் இருப்பவனே வைத்திருக்க வேண்டும் அசுத்தனாக இருப்பவன் இதை வைத்திருந்தால் தீமைகளே உண்டாகும்! நானோ, பதினாயிரம் பெண்களை வைத்திருப்பவன்! ஆகையால் நான் இந்தப் புனிதமான மணியை வைத்திருக்கும் யோக்கியத்தை உடையனவல்லன். சத்தியபாமையும் இதை வைத்திருப்பதற்கு அருகதையுடையவளல்ல! பலபத்திரரோ இதைத் தரிப்பதற்காகச் சுராபானம் முதலிய போகங்களையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும். ஆகையால், யாதவ கூட்டமும் பலராமரும் நானும் சத்தியபாமையும் உம்மைப் பிரார்த்திப்பது என்னவெனில் இத்தனை நாட்களையும் போலவே இனிமேலும் இந்த நாட்டின் நலனுக்காக அக்குரூரரே இந்த மணியைத் தரித்திருக்க வேண்டும்! இதை அவர் மறுக்க வேண்டாமென்று சபை முன்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார். புன்முறுவலோடு அதைக் கேட்டதும் அக்குரூரரோ, சுவாமியின் நியமனத்துக்கு மாறாக நான் நடப்பதற்குச் சக்தியற்றவன். ஆகவே கண்ணபிரான் திருவுரைப்படி நடக்கச் சித்தமாக இருக்கிறேன்! என்று சொல்லி அந்த இரத்தினத்தை தமது கழுத்தில் தரித்துக் கொண்டார். மைத்ரேயரே! இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணபகவானுக்கு நேர்ந்த வீண் அபவாத நீக்கத்தை நினைப்பவர்களுக்கு ஒருபோதும் அபவாதம் கிஞ்சித்தும் நேரிடுவதில்லை. கரணகளே பரங்கள் மெலிவுறாமல் வாழ்ந்து சகல பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள்!
14. அனமித்திர வம்ச வரலாறு
அனமித்திரனின் மகன் சினி என்று ஒருவன் இருந்தான். அவன் மகன் சத்தியகன், அவனது மகன் சாத்தியகி, அவனுக்கு யுயுதானன் என்ற பெயருமுண்டு. அவன் மகன் சஞ்சயன், அவன் மகன் குணி, அவன் பிள்ளை யுகந்தரன், இவர்கள் தான் சைனேயர் என்று வழங்கப்பட்டனர். அந்த அனமித்திரனின் வமிசத்தில் விருஷ்ணி என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மகன் தான் சுவபல்க்கன் அவனுக்குச் சிதிரகன் என்று ஒரு தம்பி உண்டு. சுவபல்க்கனுக்கு காந்தினியிடத்தில் அக்குரூரர் பிறந்தார். அந்த சுவபல்க்கனுக்கே மற்றொருத்தியின் வயிற்றில் உபமத்கு என்பவன் பிறந்தான். உபமத்குவுக்கு மிருதாமிருதன், விஸ்வன், அரிமேஜயன், கிரிக்ஷத்திரன், உபக்ஷத்திரன், சத்ருக்கினன், அரிமர்த்தனன், தருமதிருக்கு, திருஷ்ட தருமன் கந்தமன், ஓஜவாஹன் என்ற பிள்ளைகளும், சுதாரை என்ற பெண்ணும் பிறந்தார்கள். அக்குரூரருக்குத் தேவவான், உபதேவன் என்பவர்கள் பிறந்தார்கள். சித்திரகன் என்பவனுக்கு பிருது விபுருது முதலிய மக்கள் பலர் இருந்தார்கள். முன்பு சொன்ன சத்துவத குமாரனான அந்தகனுக்குக் குகுரன், பஜமானன், சுசி, கம்பலன், பராஹிதன் என்ற நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் குகுரனுக்குத் திருஷ்டன் என்பவன் பிறந்தான். அவன் மகன் கபோதரோமா, அவன் மகன் விலோமா, அவனுக்கு தும்புரு என்ற கந்தர்வனுடைய நண்பனான அனு என்பவன் பிறந்தான். அந்த அனுவுக்கு ஆனகதுந்துபி, அவனுக்கு அபிஜித்து, அவனுக்கு புனர்வசு, அவனுக்கு ஆகுகன் என்ற மகனும் ஆகுகி என்ற மகள் ஒருத்தியும் உண்டானார்கள். ஆகுகனுக்குத் தேவகன், உக்ரசேனன் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் தேவகனுக்கு தேவவான், உபதேவன், சகதேவன், தேவரக்ஷிதா என்ற நான்கு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு விருகதேவை, உபதேவை தேவரக்ஷிதை, ஸ்ரீதேவை, சாந்தி தேவை, சகதேவை, தேவகி என்று ஏழு சகோதரிகள் உண்டு. அந்த ஏழு பெண்களையும் வாசுதேவர் திருமணஞ் செய்து கொண்டார். உக்ரசேனனுக்கு கம்சன் நியக்ரோதன், சுநாமா, அனகா, ஹ்வன், சங்கு, சுபூமி ராஷ்டிரபாலன், யுத்ததுஷ்டி சுதுஷ்டிமான் என்ற பிள்ளைகளும், கம்சை கம்சவதி சுதனூராஷ்டிர பாலிகை என்ற பெண்கள் நால்வரும் பிறந்தார்கள். பசமானன் என்பவனுக்கு விடூரதன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சூரன் அவன் மகன் சமி, அவன் மகன் பிரதிக்ஷத்திரன், அவன் மகன் போஜன், அவன் மகன் இருதிகன், இருதிகனுக்கு கிருதவர்மா, சததனு; தேவார்ஹன் தேவகர்ப்பன் என்ற பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் தேவகர்ப்பனுக்கு சூரன் என்பவன் பிறந்தான். அவனுக்கு மாரிஷை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள். சூரன், அவன் மூலம் வசுதேவன் முதலிய பத்துப் பிள்ளைகளைப் பெற்றான். அந்த வசுதேவன் பிறக்கும் போது அவரிடம் கண்ணபெருமான் திருவவதாரம் செய்யப் போகிறார் என்பதை அறிந்து தேவர்கள் ஆனகம், துந்துபி முதலிய வாத்தியங்களை முழக்கினர். அதனால் வசுதேவருக்கு ஆனக துந்துபி என்ற பெயர் உண்டாயிற்று. அவருக்கு தேவபாகன், தேவ சிரவன், அஷ்டகன், ககுச்சக்கிரன், வச்சதாரகன், சிருஞ்சயன், சியாமன், சமிகன், கண்டூஷன் என்ற ஒன்பது சகோதரர்களும் பிருதை, சுருததேவை, சுருதகீர்த்தி, சுருதசிரவை, ராஜாதிதேவி என்ற ஐந்து சகோதரிகளும் இருந்தார்கள். அந்த சூரமாமன்னனுக்கு குந்தி என்ற நண்பன் ஒருவன் இருந்தான்.
அவன் அபுத்திரனாக இருந்ததால், பிருதை என்னும் தனது தலைமகளை அவனுக்குத் தத்தஞ் செய்து கொடுத்தான். அந்த பிருதையை பாண்டு மகாராஜன் திருமணஞ் செய்துகொண்டான். பிருதைக்கு தருமன், வாயு, இந்திரன் இவர்களால் யுதிஷ்டிரன், பீமசேனன், அர்ச்சுனன் என்ற மூன்று குமாரர்கள் உண்டாக்கப்பட்டனர். மேலும் பிருதை எனும் குந்திதேவி கன்னியாக இருந்த காலத்தில் சூரியபகவானால் கர்ணன் என்பவன் உண்டாக்கப்பட்டிருந்தான். அந்த குந்திக்கு மாத்திரி என்று ஒரு சக்களத்தி இருந்தாள். அவளுக்கு நாசத்தியன்; தசிரன் என்ற தேவர்களால் நகுலன், சகாதேவன் என்ற பிள்ளைகள் உண்டாக்கப்பட்டனர். இந்தக் குந்திதேவியின் சகோதரியான சுருததேவை என்பவளைக் காருக தேசத்து அரசனான விருத்ததர்ம மன்னன் மணந்தான். அவள் வயிற்றில் தந்தவக்கிரன் என்ற அசுரன் ஒருவன் பிறந்தான். மற்றொரு சகோதரியான சுருத கீர்த்தியை கேகய மன்னன் மணந்தான். அவன் வயிற்றில் சந்தர்த்தனன் முதலிய ஐவர் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அடுத்த சகோதரி ராஜாதிதேவி, அவந்தி மன்னனுக்கு மனைவியாகி, விந்தன், அனுவிந்தன் என்பவர்களைப் பெற்றாள். மற்றொரு சகோதரியான சிருத சிரவசு என்பவள் சேதி தேசத்து மன்னனின் மனைவியாகிய சிசுபாலன் என்ற மகனைப் பெற்றாள். சிசுபாலன் முற்காலத்துப் பிறவியில் அசுரர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கி ஹிரண்யகசிபு என்பவனாகும். சகல லோக குருமூர்த்தியாகிய நரசிம்ம மூர்த்தியால் ஹிரண்யன் சங்காரம் செய்யப்பட்டு மீண்டும் அவன் அளவற்ற வீரிய, சவுகரிய பராக்கிரம சம்பத்துக்கள் வாய்ந்தவனாகவும், மூவுலகத்தாரையும் தன் வயப்படுத்தி அடக்கியாளும் திறமையடைந்தவனாகவும் உள்ள ராவணனாகப் பிறந்தான். அந்தப் பிறப்பில் ஸ்ரீராமாவதாரஞ் செய்த எம்பெருமானாலேயே சங்கரிக்கப்பட்டான். பிறகு இப்பிறவியில் அவன் சிசுபாலனாகப் பிறந்த போதும், பூபாரந் தீர்ப்பதற்காக கண்ணபெருமானாக அவதரித்த பகவானிடம் அவன் பகைமையை பாராட்டி வந்தான், அதனால் கண்ணபிரானாலேயே சங்கரிக்கப்பட்டு, எப்போதும் அவ்வெம்பெருமானையே நினைத்திருந்ததால் பரமாத்வாவிடத்திலே சாயுஜ்யம் பெற்றான். பக்தியோடு தன்னைத் தியானிப்பவர்களுக்குத் திருவுள்ளம் உவந்து மோட்சம் அளிப்பதைப் போலவே, பகைமை கொண்டாவது தன்னை இடைவிடாமல் நினைத்திருந்தவருக்கும் பகவான் திருவுள்ளம் உகக்காமலும் அந்த மோட்சத்தைத் தந்தருள்கிறான்.
15. பகவானின் திருவம்சம்
மைத்ரேய முனிவர் குறுக்கிட்டு பராசர மகரிஷியை நோக்கி, சுவாமி! இந்த சிசுபாலன் ஹிரண்யகசிபுவாக இருந்தபோதும் இராவணனாக இருந்தபோதும் ஸ்ரீவிஷ்ணுபகவானால் சங்கரிக்கப்பட்டான். அந்தப் புண்ணியத்தாலே மகா போக போக்கியங்களைப் பெற்றிருந்தானே தவிர, சாயுஜ்யப் பதவியை அடையவில்லையே? அப்படியிருக்க இப்பொழுது மட்டும் சாயுஜ்யப் பதவியை அடைந்தது எப்படி? இதை அடியேனுக்கு விளக்கமாக அறிவிக்க வேண்டும்? என்று கேட்டார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! சகல லோகங்களுக்கும் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹார கர்த்தாவாகிய விஷ்ணுபகவான், அகம்பாவியான ஹிரண்யகசிபுவைச் சங்காரம் செய்வதற்காக நரசிம்மாவதாரம் செய்தபோது, அவ்வசுரனுக்கு இவர் மகாவிஷ்ணு என்ற ஞானம் உண்டாகாமல், புண்ணியவசத்தால் மகிமை பெற்ற ஒரு ஜந்து என்ற நினைப்பே உண்டாயிற்று. ஆகையால் அந்த அசுரன் ரஜோகுணத்தின் மிகுதியால் அப்படிப்பட்ட விபரீத பாவனையைப் பெற்று, நரசிம்ம மூர்த்தியினால் சங்கரிக்கப்பட்டான். அந்தப் புண்ணியத்தால் மூன்று உலகங்களையும் ஆளத்தக்க மேன்மையான செல்வத்தைப் பெற்றான். ஆதிமத்யாந்த ரஹிதனாகவும் பரப்பிரம்மமாகவும் இருக்கும் பகவானிடத்தில் அவன் லயமடையவில்லை. அதுபோலவே, அவன் இராவணனாக இருக்கையிலும் காமப்பரவசனாகி, சீதாபிராட்டியிடம் மிகவும் அன்புள்ள ஸ்ரீராம ரூபியான எம்பெருமானால் கொல்லப்பட்ட போதும் அவனுக்கு அந்த சுவாமியைப் பகவான் என்று அறியும் ஞானம் உண்டாகாமல் மனுஷ்யன் என்கின்ற ஞானமே உண்டாயிருந்தது. மீண்டும் எம்பெருமானாலே வதை செய்யப்பட்ட மகிமையால் அவன் மறுபடியும் சேதி ராஜகுலத்தில் சிசுபாலனாகப் பிறந்து பூமண்டலத்தோர் கொண்டாடத்தக்க ஐசுவரியத்தைப் பெற்றான். ஆனால் அந்தப் பிறவியில் எம்பெருமானுடைய சகல திருநாமங்களையும் நிந்திப்பதற்கு அவன் காரணமானான். அப்படி சிசுபாலன் நிந்தித்தும் கண்ணபெருமானின் திருப்பெயர்களையே அவன் அடிக்கடி உச்சரித்து வந்தான். மேலும் செந்தாமரை போன்ற திருவிழிகளுடன் பிரகாசமான பீதாம்பரத்தைத் தரித்துக் கொண்டும் திவ்வியக் கிரீட, கேயூர, ஹார கடகங்கள் முதலிய திவ்வியாபரணங்களைத் தரித்துக் கொண்டும் திரண்டு பருத்த நீண்ட நான்கு திருக்கைகளோடு திருவாழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்கள் தரித்துக் கொண்டும் விளங்கும் கண்ணபிரானின் திவ்விய ரூபத்தையே சிசுபாலன் உண்ணும் போதும் உறங்கும் போதும், படுக்கும் போதும், உலாவும் போதும், குளிக்கும் போதும் ஒரே பிடிப்பாய் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். அதனால் அவனுடைய கண்களுக்கு எங்கும் அந்த கண்ணபெருமானின் தோற்றமே விளங்கப்பெற்று கோபதாபத்திலும் கூட அவரது திருப்பெயரையே உச்சரித்து வந்தான். எம்பெருமானது திவ்விய சக்கரத்தினாலே அந்த சிசுபாலன் சங்கரிக்கப்பட்டான்; அவ்வெம்பெருமானுடைய ஸ்மரணைகளால் சகல பாபங்களும் நசிக்கப்பெற்று அவன் எம்பெருமானிடமே லயத்தை அடைந்தான்.
மைத்ரேயரே! சிசுபாலனின் மோட்சம் பற்றிய யாவையும் நான் உமக்குச் சொன்னேன். எம்பெருமானைப் பகைத்தாவது அவரது திருநாமங்களை சங்கீர்த்தனம் செய்வோருக்கும், நினைப்பவருக்கும், சுராசுரர்களும் அடையமுடியாத பெரும் பயனை எம்பெருமான் அளிப்பார். அப்படியிருக்க நன்றாகப் பக்தி செய்பவருக்குப் பயனளிப்பதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? இது இருக்கட்டும். ஆனக துந்துபி என்ற வசுதேவருக்குப் பவுரவி, ரோகிணி, பத்திரை, மதுரை, தேவகி முதலாக அநேக மனைவியர் இருந்தார்கள். அவர்களில் ரோகிணிக்கு பலபத்திரன், சடன்சாரணன், துர்மதன் முதலிய புத்திரர்கள் உண்டானார்கள். அவர்களில் பலபத்திரர் என்னும் பலராமர் தம் மனைவி ரேவதியின் மூலம் விசடன், உலமுகன் என்ற பிள்ளைகளைப் பெற்றார். அவருடைய சகோதரன் சாரணனுக்கு சாஷ்டி மாஷ்டி சிசு சத்தியன் சத்திய திருதி முதலிய பிள்ளைகள் பிறந்தார்கள். பத்திராசுவன், பத்திரபாகு, துர்த்தமன், பூதன் முதலானவர்கள் ரோகிணியின் வம்சத்தில் பிறந்தவர்கள். மதிரை என்பவளுக்கு நந்தன், உபநந்தன், கிருதகன் முதலிய பிள்ளைகள் பிறந்தார்கள். பத்திரைக்கு உபநிதுகதன் முதலிய பிள்ளைகள் பிறந்தார்கள். வைசாலி என்பவளுக்கு கவுவிகன் என்ற பிள்ளை பிறந்தான். தேவகியிடம் கிர்த்திமான் சஷேணன் உதாயு பத்ரசேனன் குஜுதாசன் பத்திரதேவன் என்று ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் அனைவரையும் தேவகியின் தமையனான கம்சன் கொன்றான். மானின் நியமனப்படி நள்ளிரவில் தேவகியின் வயிற்றினின்றும் பெயர்த்து, ரோகிணியின் வயிற்றிலே சேர்ந்து விட்டது. அப்படியிழுக்கப்பட்டதால் அந்த ஏழாவது பிள்ளைக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் உண்டாயிற்று. பிறகு சகல லோகங்களாகிய மகாவிருட்சத்துக்கு வேராகவும் சகல சுராசுர முனிவர்களுடைய மனதுக்கும் எட்டாதவனாகவும், ஆதி மத்யாந்த ரஹிதனாகவும் சகலகுண ஐசுவரிய சம்பன்னனாகவும் உள்ள ஸ்ரீவாசுதேவன் தம்மை பிரம்மா முதலிய சகல தேவதைகளும் பூபாரத்தை நீக்கும் பொருட்டு பிரார்த்தித்ததால், தேவகியின் கர்ப்பத்தில் எழுந்தருளினார். எம்பெருமானின் அனுக்கிரகத்தால் வளரப்பெற்ற மகா மகிமையுடைய அந்த யோக நித்திரையும், நந்தகோபனின் மனைவியான யசோதையின் வயிற்றிலே பிறந்தது. தேவகியின் கர்ப்பத்தினின்று எம்பெருமான் கண்ண அவதாரமாகத் தோன்றிய போது, சகல லோகமும் தெளிந்த பிரகாசமுடைய சூரிய சந்திராதி கிரணங்களுள்ளதாகவும் சர்ப்பம் முதலிய பயமுற்றும் தெளிவான மனதுள்ளதாகவும் அதர்மம் நீங்கியதாகவும் ஆயிற்று. சுவாமி, அவதரித்ததால் யாவரையும் நன்மார்க்கத்தில் திருத்தியருளினார்.
இவ்விதமாகப் பூவுலகத்தில் கிருஷ்ணபிரானாக அவதரித்த எம்பெருமானுக்குப் பதினாயிரத்து நூற்றியொரு பத்தினிகள் இருந்தார்கள். அவர்களில் ருக்மிணி, சத்யபாமை; ஜாம்பவதி, சாருஹாசினி முதலிய எட்டு மங்கையர் முக்கியமானவர்கள். அப்பத்தினிகளிடம் சகல ரூபியான எம்பெருமான் லக்ஷத்து எண்பதினாயிரம் பிள்ளைகளை உண்டாக்கினார். அப்பிள்ளைகளில் பிரத்தியும்னன், சாருதேஷ்ணன் ஸாம்பன் முதலிய பதின்மூன்று குமாரர்கள் முக்கியமானவர்கள். பிரத்யும்னன் என்பவன் ருக்குமியின் மகளாகிய ருக்குமவதி என்பவளை மணந்து அனிருத்தன் என்பவளைப் பெற்றான். அந்த அனிருத்தன் ருக்மியின் பவுத்திரியான சுபத்தரை என்பவளை மணந்து, வஜ்ஜிரன் என்பவனைப் பெற்றான். அவன் மகன் பிரதிபாகு அவன் பிள்ளை ஸுசாரு. இவ்வாறு அனேக ஆயிரம் கிளைகளுள் யாதவ குலத்தின் புத்திர சங்கியையைச் சொல்ல அநேக ஆயிர ஆண்டுகள் போதாது. இதுபற்றி இரண்டு சுலோகங்கள் சொல்லப்படுகின்றன. யதுகுலப் பிள்ளைகளுக்கு வில்வித்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் எண்பத்தெட்டு லக்ஷம் பெயர்களாகும். அப்படியானால் மகாத்மாக்களாகிய யாதவரின் எண்ணிக்கையை அளவிட்டு அறிவதற்கு யாரே திறமுடையோர்? அந்தக் குலத்தின் தலைவனான ஆகுகன் ஒருவனே பதினாயிரம் பதினாயிரம் லக்ஷம் பேரோடு இருக்கிறான்! என்பது தான் அச்சுலோகங்களின் கருத்தாகும். மைத்ரேயரே; முன்பு நடந்த தேவாசுர யுத்தத்தில் இறந்த மகாபலசாலிகளான அசுரர்கள் யாவரும் லோக உபத்திரவம் பண்ணும்படியான மனிதர்களுக்குள்ளும் பிறந்தார்கள். அவர்களை அழிப்பதற்காகத் தேவர்கள் எல்லாம் யதுவம்சத்தில் பிறந்தார்கள். அவர்கள் நூற்றியோரு குலமுடையோர் இவர்கள் அனைவருக்கும் ஸ்ரீவிஷ்ணுபகவானே அதிபதியாக ஆண்டு வந்ததினால் அவருக்கு அடங்கி நடந்து வந்த யாதவர்கள் நாளுக்கு நாள் விருத்தியடைந்து வரலாயினர். ஆகையால் அந்த வம்சம் மிகவும் பெருகியது. இவ்வாறு வளர்ந்த அந்த விருஷ்ணிவம்ச வரலாற்றை எவன் ஒருவன் அன்போடு கேட்கிறானோ அவன் சகல பாபங்களும் ஒழிந்தவனாகி ஸ்ரீவிஷ்ணுலோகத்தை அடைவான்!
16. துர்வசு வம்சம்
மைத்ரேயரே! யதுவம்ச வரலாற்றை விளக்கமாகச் சொன்னேன், இனி துர்வசு வம்சத்தைச் சொல்லுகிறேன். துர்வசுவுக்கு வன்னி என்ற மகன் ஒருவன் உண்டு. அவன் மகன் பார்க்கன், அவன் பிள்ளை பானு, அவன் மகன் திரயீசானு. அவன் பிள்ளை கரந்தமன், அவன் மகன் மருத்தன். அவன் சந்ததியற்றவனாய் புரு வமிசத்தைச் சேர்ந்த துஷ்யந்தனைப் புத்திரனாக ஏற்றுக்கொண்டான். இவ்வாறு அந்த வம்சம் யயாதியின் சாபத்தால் விருத்தியற்றுப் பவுரவ வமிசத்தையே சேர்ந்து விட்டது.
17. துருகியு வம்ச வரலாறு
துருகியுவின் மகன் பப்புரு. அவன் மகன் சேது, அவன் பிள்ளை ஆரப்தன். அவன் மகன் காந்தாரகன், அவன் பிள்ளை கர்மன். அவன் மகன் கிருதன், அவன் பிள்ளை துர்த்தமன், அவன் மகன் பிரசேதன், அவன் குமாரன் சத்தருமன், அவன் மேற்கு வடநாட்டிலுள்ள அநேக மிலேச்சருக்கு அதிபதியாக விளங்கி வந்தான்.
18. அனு வம்சம்
யயாதி மன்னனின் நான்காவது மகனாகிய அனு என்பவனுக்கு சபாநலன், சட்சு, பரமேஷு என்ற மூன்று குமாரர்கள் உதித்தார்கள். அவர்களில் சபாநலனுடைய மகன் காலாநலன். அவன் மகன் சிருஞ்சயன். அவன் பிள்ளை புரஞ்சயன். அவன் மகன் ஜனமேஜயன், அவன் பிள்ளை மகாஜாலன். அவன் மகன் மகாமனசு. அவனுக்கு உசீதரன். திதிட்சு என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். உசீதரனுக்குச் சிபி, நிருகன், நவன், கிருமிவர்மன் என்ற ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். சிபிக்குப் பிரஷதர்ப்பன் கவீரன், கேகயன், பத்ரகன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். திதிக்ஷúக்கு ருஷத்திரதன் என்ற பிள்ளை பிறந்தான். அவனுக்கு ஹேமன், அவன் மகன் சுதமசு. அவன் மகன் பலி. அவன் மனைவியிடம் தீர்க்கதமசு என்ற முனிவரால், அங்கன், வங்கன், களிங்கன், சிம்மன், பவுண்டரன் என்ற பிள்ளைகள் பிறந்து அவ்வப்பெயர் கொண்ட ராஜ்யங்களை ஆண்டு வந்தார்கள். அந்த சந்ததியாருக்கும் அப்பெயர்களே வழங்கின. அங்கசந்ததியில் அனபானன் பிறந்தான். அவன் மகன் திவிரதன், அவன் மகன் தர்மராதன். அவன் மகன் சித்திரரதன். அவனுக்கு ரோமபாதன் என்ற பெயருமுண்டு. அவனுடைய நண்பனான தசரத மாமன்னன், சந்ததியில்லாத அவனுக்குச் சாந்தை என்பவளை மகளாகக் கொடுத்தான். ரோமபாதனன் மகன் சதுரங்கள். அவன் மகன் பிருதுலாக்ஷன். அவன் மகன் சம்பன். அவன் சம்பை என்ற நகரை உண்டாக்கினான். அவன் மகன் அரியங்கன், அவன் மகன் பிருகத்திரதன், அவன் பிள்ளை பிரகத் கருமன். அவன் மகன் பிரகத்பா. அவன் மகன் பிரகன்மனன். அவன் மகன் ஜயத்ரதன். பிராமண க்ஷத்திரிய வம்சம் கலந்த மங்கையொருத்தியை மணந்து அவள் மூலம் விஜயன் என்பவனை பெற்றான். அவன் மகன் திருதி. அவன் பிள்ளை திருதவிரதன். அவன் மகன் சத்தியகர்மா. அவன் மகன் அதிரதன். அவன் தான் கங்கையிலே குந்தியினால் எறிந்து விடப்பட்ட கர்ணன் என்ற குமாரனைப் பெட்டியிலிருந்து எடுத்து தன் புத்திரனாக வைத்துக் கொண்டவன், அவ்வாறு வளர்ந்த கர்ணனுக்கு விருஷசேனன் என்னும் மகன் பிறந்தான். அவ்விருஷசேனன் வரையில் உள்ளவர் தாம் அங்கதேசத்தை ஆண்டுவந்த அங்க வமிசத்தாராவார்கள்.
19. பூரு, பரத வம்சங்கள்
மைத்ரேயரே! இனி யயாதியின் கடைசி மகனான பூருவின் வம்சத்தைச் சொல்கிறேன். பூருவின் மகன் ஜனமேஜயன் அவன் மகன் பிரசின்வான். அவன் பிள்ளை பிரவீரன். அவன் புதல்வன் மனசியு, அவன் புத்திரன் அப்தன், அவன் மகன் சுத்தியு. அவன் மகன் பகுகதன், அவன் பிள்ளை சம்யாதி. அவன் மகன் அஹம்யாதி, அவன் மகன் ரவுத்திராசுவன். அவனுக்கு ருதேபு, க÷க்ஷபு, தண்டிலேபு, கிருதேபு, ஜலேபு, தர்மேபு, திருதேபு, தலேபு, சன்னதேபு வனேபு என்று பத்துப் பிள்ளைகள் உண்டு. ருதேபுவுக்கு ரந்திநாரன் என்ற மகன் ஒருவன் பிறந்தான். அவன் சுமதி, அப்பிரதிரதன், துருவன் என்ற பிள்ளைகளைப் பெற்றான். அப்பிரதிரதனின் பிள்ளை கண்ணுவன் அவன் மகன் மேதாதிதி, அவன் முதலாகக் கண்ணுவ வம்சத்தில் வந்தவரெல்லாம் பிராமணர்களானார்கள். அந்த அப்பிரதிரதனுக்கு ஐலீனன் என்ற மகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு துஷ்யந்தன் முதலிய நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். துஷ்யந்த மன்னனுக்குப் பிரதமா மன்னன் பிறந்தான். அவனைப் பற்றி தேவர்களால் ஒரு சுலோகம் பாடப்பட்டது. அதாவது தாயானவளின் கருப்பையில் எவனாலே புத்திரன் உண்டாக்கப்பட்டானோ அவனுக்கே அவன் புத்திரன். ஆகையால் துஷ்யந்த மாமன்னனே! பிள்ளையைப் பார்த்துக் கொள். சதுந்தலையை அவமானப்படுத்தாதே! அரசே! முன்பு யமனின் சபையிலிருந்து ஒரு புத்திரனை வீரியத்தை விட்டவனே கொண்டு போனான். இந்தக் கர்ப்பத்தை நீயே உண்டாக்கியவன் சகுந்தலை உண்மையை சொன்னாள்! என்பது தான் அந்த சுலோகத்தின் கருத்தாகும். அவ்வாறு துஷ்யந்த மன்னனால் உண்டான பரத மன்னனுக்குப் பத்தினிகளான மூவரிடத்திலும் ஒன்பது பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகளை நோக்கி, இவர்கள் எனக்குத் தக்கவர்களல்லர் என்று பிதாவே சொன்னதால், அப்பிள்ளைகளின் தாய்மார்கள் விபசார சந்தேகத்தால் தங்களை புருஷன் தள்ளி வைத்துவிடுவான்! என்று பயந்து தங்கள் பிள்ளைகளைச் சென்று விட்டார்கள். பிறகு, புத்திர உற்பத்தி வீணாகியதால் புத்திரன் வேண்டுமென்று பரதன் விரும்பி, மருத்துக்களைக் குறித்து சோமயாகம் செய்தான். அது பயனைத் தந்தது. தீர்க்க தமசு என்பவரால் பக்கத்தில் தள்ளப்பட்ட பிரகஸ்பதியின் வீரியத்தால், பத்தினியான மமதை என்பவளிடத்தில் பரத்வாஜன் என்னும் ஒருவன் பிறந்திருந்தான். அவனையே பரதனுக்குப் பிள்ளையாக மருத்துருக்கன் பிரசாதித்தார்கள். மூடையான பெண்ணே! நம் இருவராலும் பிறந்த இந்தப் பிள்ளையை நீயே காப்பாற்று என்று பிரகஸ்பதியும், அதுபோலவே பிரகஸ்பதியிடம் மமதையும் ஆகத் தந்தை தாய் இருவரும் சொல்லி விட்டதால் அந்தப் பிள்ளைக்கு பரத்வாஜன் என்ற பெயர் உண்டாயிற்று. பரதனுக்கு மக்கட்பேறு வீணானபோது, பிள்ளையாகக் கிடைத்ததால் பரத்வாஜனுக்கு விரதன் என்ற பெயரும் வழங்கலாயிற்று. அந்த விரதனுக்கு மன்யு என்பவன் பிறந்தான். அவனுக்கு பிரகத்க்ஷத்திரன் மகாவீரியன், நகரன், கர்க்கன் என்ற பிள்ளைகள் பிறந்தார்கள். நகரனுக்கு ஸங்கிருதி பிறந்தான், அவனுக்கு குருப்பிருதி ரந்திதேவன் என்று இருபிள்ளைகள் பிறந்தார்கள்.கர்க்கனுக்கு சினி பிறந்தான். அதனால் கார்க்கியர், சைனியர் என்று சொல்லப்பட்ட வம்சத்தார்களனைவரும் க்ஷத்திரியராக இருந்தும் பிராமணர்களானார்கள். மகாவீரியனுக்கு துரூக்ஷயன் என்ற மகன் பிறந்தான், அவனுக்கு திரையாருணி; புஷ்க்கரிணன், கபி என்ற மூன்று பிள்ளைகள் பிறந்து பின்னர் மகிமையால் பிராமணரானார்கள்.
பிரகத்க்ஷத்திரனின் மகன் சுஹோத்ரன். அவன் மகன் ஹஸ்தி, அவன் தான் ஹஸ்தினாபுரத்தை உண்டாக்கியவன். அவனுக்கு அஜமீடன், துவிஜம்மீடன், புருமீடன் என்ற மூன்று குமாரர்கள் ஜனித்தார்கள். பிறகு அஜமீடனின் மகன் கண்வன்; அவன் மகன் மேதாதிதி, அவ்வஜமீடனுக்கே பிரூகதிஷு என்ற வேறொரு மகன் இருந்தான். அவன் மகன் பிருகத்தனு; அவன் மகன் பிருகத்கர்மன்; அவன் மகன் ஜயத்திரதன், அவன் பிள்ளை விசுவஜித்து. அவன் குமாரன் சேனஜித்து, அவன் புதல்வர்கள் ருசிராசுவன், காசியன், திரிடஹனு வச்சஹனு என்பவராவர். ருசிராசுவனுக்கு பிருதுசேனன் பிறந்தான். அவன் மகன் பாரன். அவன் மகன் நீலன். அவனுக்கு நூறு பிள்ளைகள். அவர்களில் முக்கியமானவன் காம்பீலிய நகராதிபதியான சமரன். சமரனுக்கு பாரன், சுபாரன்; ஸதசுவன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். சுபாரனின் மகன் ஸுகிருதி அவன் மகன் விப்பிராசன், அவன் மகன் அனுஹன், அவன் சுகரின் மகளாகிய கீர்த்தியை மணந்தான். அவ்வனுஹனனுக்கு பிரமதத்தன் பிறந்தான். அவன் மகன் விஷ்வக்கேசனன், அவன் மகன் உதகஸேனன்; அவன் பிள்ளை பல்லாடன், முன்னே சொன்ன துவிஜமீடன் என்பவனின் பிள்ளை யவீநரன். அவன் திருதிமான், அவன் பிள்ளை சத்யதிருதி; அவன் மகன் திரிடநேமி; அவன் மகன் சுபாரிசுவன், அவன் பிள்ளை சுமதி, அவன் மகன் சன்னதிமான். அவன் மகன் கிருதன். அவன் இரணியநாபனால் யோகாப்பியாசம் செய்விக்கப்பெற்று பிராச்சிய சாமகருடைய இருபத்து நான்கு சங்கீதங்களைச் செய்தான். கிருதனின் மகன் உக்ராயுதன். அவனது தனயன் ÷க்ஷமியன், அவன் பிள்ளை சுதீரன், அவன் மகன் ரிபுஞ்சயன், அவன் புதல்வன் பஹீதரன். இவர்கள் தாம் புரு வம்சத்தார்கள். பவுரவர் என்றும் இவர்கள் வழங்கப்படுவார்கள். முன்னே சொன்ன அஜமீடனுக்கு நளினி என்று ஒரு மனைவி இருந்தாள். அவள் வயிற்றில் நீலன் என்பவன் பிறந்தான். அவன் மகன் சாந்தி; அவன் பிள்ளை சுசாந்தி. அவன் மகன் புரஞ்சயன். அவன் மகன் ரிக்ஷன், அவன் பிள்ளை அரியசுவன், அவன் மகன் திவோதாஸன்; அரியசுவனுக்கு அகலியை என்ற ஒரு பெண்ணும் உண்டு. அந்த அகலியை சரத்துவான் என்ற கவுதமருக்குப் பத்தினியாகி சதாநந்தர் என்பவரைப் பெற்றாள். சதாநந்தருக்கு சத்தியதிருதி என்பவர் பிறந்து தனுர் வேதத்தை முழுவதுமாகக் கற்றார். அவர் ஊர்வசி என்ற அப்சரசைக் கண்டபோது மோகவசத்தால் அவரது வீரியம் நழுவி நாணற்கட்டையிலே இருபிரிவாக விழுந்தது. அதிலிருந்து ஒருபுத்திரனும் ஒரு புத்திரியும் பிறந்தார்கள். அவர்களை வேட்டையாட வந்த சந்தனு மாமன்னன் கிருபையினால் பரிக்கிரகித்தான். அதனால் அந்தப் புத்திரனுக்கு கிருபன் என்றும், அந்தக் கன்னிகைக்கு கிருபி என்றும் பெயர்கள் உண்டாயிற்று. குமாரி கிருபியை, துரோணாச்சாரியாருக்கு மனைவியாகவும் அசுவத்தாமருக்குத் தாயாகவும் ஆனாள்.
திவோதாசன் என்பவன் மகன் மித்திராயு அவனுக்கு சியவனன் என்பவன் பிறந்தான், அவன் மகன் சுதாசன். அவன் மகன் சவுதாசன், அவன் மகன் சகதேவன், அவன் மகன் சோமகன், அவனுக்கு நூறு பிள்ளைகள், மூத்தவன் ஜந்து கடைசி மகன் பிருஷதன். பிருஷதன் மகன் துருபதன், அவன் மகன் திருஷ்டத்துயும்னன். அவன் மகன் திருஷ்டகேது, அஜமீடனுக்கு ரிஷன் என்று மற்றொரு மகன் உண்டு. அவன் மகன் சம்வரணன், அவன் மகன் குரு, அவன் தான் தரும÷க்ஷத்திரத்தைக் குரு÷க்ஷத்திரமாக்கினான். அவனுக்கு சுதனு, ஜன்னு, பரிக்ஷித்து முதலிய புத்திரர்கள் உண்டானார்கள். அவர்களில் சுதனுவின் மகன் சுகோத்திரன். அவன் மகன் சியவனன், அவன் மகன் உபரிசரவசு, அந்தவசுவுக்கு பிருகத்திரன், பிரத்தியகிரன், குசாம்பன், குசேலன், உபரிமாச்சியன் முதலிய ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள். பிருகத்திரதன் மகன் குசாக்கிரன்; அவன் மகன் விருஷபன், அவன் பிள்ளை புஷ்பவான். அவன் மகன் சத்யஹிதன். அவன் மகன் சுதனுவா, அவன் மகன் சந்து, அந்த பிருகத்திரனுக்கு இருபாதியாய் மற்றொரு பிள்ளை உண்டானான். அவன் ஜரை என்ற அரக்கியால் கூட்டப்பட்டதால் ஜராசந்தன் என்ற பெயரைப் பெற்றான். அவன் மகன் சகதேவன். அவன் மகன் சோம்பன்; அவன் மகன் சுருதி; சிரவசு இவர்கள் தான் மகத தேசத்தை ஆண்டு வந்த மன்னர்கள். இவர்கள் மாகதர் என்று வழங்கப்பட்டனர்.
20. சந்தனு வம்ச வரலாறு
பரிக்ஷித்து மகாராஜனுக்கு, ஜனமேஜயன், சுருதசேனன், உக்கிரசேனன், பீமசேனன் என்று நான்கு குமாரர்கள் இருந்தார்கள். ஜன்னு என்பவனுக்கு சுரதன் என்பவன் பிறந்தான். அவன் மகன் விடூரதன், அவன் பிள்ளை சர்வபவுமன், அவன் மகன் ஜயத்சேனன். அவன் புதல்வன் ஆராதிதன், அவன் பிள்ளை அயுதாயு, அவன் மகன் அக்கிரோதனன், அவன் புதல்வன் தேவாதிதி, அவனுக்கு ருக்ஷன் என்பவன் பிறந்தான். அவன் மகன் பீமசேனன், அவன் மகன் திலீபன், அவன் மகன் பிரதீபன், அவனுக்கு தேவாபி, சந்தனு பாகிலிகன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். தேவாபி, சிறுவயதிலேயே காட்டிற்குச் சென்று, அங்கு வசித்துக் கொண்டிருந்தான். அதனால் அவன் தம்பியான சந்தனு அரசனனான். அவனைப் பற்றி ஒரு சுலோகம் வழங்குகிறது. அதாவது அவ்வரசன் வயோதிகமான எவனைத் தன் கைகளால் ஸ்பரிசிக்கிறானோ அவன் யவுவனத்தை அடைகிறான். மேலும் மிகுந்த அமைதியையும் அடைகிறான். ஆதலால் சந்தனு என்ற பெயரைப் பெற்றான்! என்பது அச்சுலோகத்தின் கருத்தாகும். சந்தனு மன்னனின் ஆட்சியில், பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே பெய்யவில்லை, அதனால் ராஜ்யத்துக்கு உண்டான தீங்கை சந்தனு மகாராஜன் உணர்ந்து பிராமணர்களை அழைத்து சுவாமிகளே! நம்முடைய ராஜ்யத்தில் ஏன் மழையே பெய்யாமலிருக்கிறது? நான் செய்த அபராதம் என்ன? என்று கேட்டான். அதற்கு அவர்கள், வேந்தனே! மூத்தவன் இருக்க இளையவனாகிய நீ இந்தப் பூமியை ஆண்டு அனுபவிக்கிறாய், ஆகையால் மூத்தவனுக்கு விவாகம் இல்லாதிருக்கம்போது அவனது தம்பியாகிய நீ விவாகம் செய்து கொண்டால் என்ன பாதகம் உண்டோ, அந்த பாதகம் உன்னைச் சேர்ந்துள்ளது? என்றார்கள். அதற்கு என்ன செய்யவேண்டும்? என்று சந்தனு கேட்டான். அதனால் பிராமணோத்தமர்கள், அரசே! உன் தமையனான தேவாபி என்பவன் எந்தவொரு குற்றமும் பாதகமும் செய்யாமல் பரிசுத்தமானவனாக இருப்பதால், அவனுக்கு உரியது இந்த அரசாட்சி! ஆகையால் இதுவரை நீ அனுபவித்தது போதும். இனி இந்த இராஜ்யத்தை அவனுக்குக் கொடுத்து விடுவாயாக! என்றார்கள். சந்தனு மன்னன் தான் செய்த தவறுக்கு வருந்தி, தன் தமையனிடம் அரசுரிமையை வழங்க விரும்பி, அவன் இருக்கும் காட்டுக்குப் புறப்பட்டான். இதனிடையில் சந்தனுவின் அமைச்சனாகிய அசுமராவி என்பவன் அந்தக் காட்டுக்கு, வேதவாத விரோதஞ் சொல்லும்படியாகச் சில முனிவர்களை அனுப்பி வைத்தான். அவர்கள், சரியான புத்தியுடைய தேவாபியைக் கண்டு, அவனுக்குத் துர்ப்புத்திகளைப் போதித்தார்கள். இதனிடையில் சந்தனுவும் அவனுடன் சென்ற அந்தணர்களும் தேவாபியைச் சந்தித்து, மூத்தவனே இராஜ்யத்தை ஆளவேண்டும்! என்று வேதபிராமணமுள்ள நியாயங்களை அவனுக்கு போதித்தார்கள். அதையெல்லாம் கேட்ட தேவாபி, வேத விரோதமான யுக்திகளால் தூஷித்தான். அதனால் சந்தனுவுடன் சென்ற அந்தணர்கள் வெறுப்புற்றனர்.
அவர்கள் சந்தனு மன்னனை நோக்கி, அரசனே! இந்த விஷயமாக உன் தமையனை நிர்ப்பந்தஞ் செய்தது போதும். வா! இனி உன் அரசில் மழையின்மையாகிய குற்றம் நீங்கிவிடும். ஏனெனில் அநாதியான வேத வாக்கியங்களைத் தூற்றிய உன் அண்ணன் பதிதன் ஆனான். தமையன் பதிதன் ஆகிவிட்டதால் பரிவேத்துருத்துவம் என்ற குற்றம் உனக்கு இல்லை! ஆகையால் நீயே அரசாட்சி செய்ய வேண்டும்! என்று சொன்னார்கள். பிறகு சந்தனு தன் தலைநகரம் சென்று அரசாளத் துவங்கினான். தேவ தூஷணை செய்ததால், மூத்தவன் பதிதனாகி விட்டபடியால், இளையவனான சந்தனுவின் ஆட்சியில் மேகம் பொழிய, பயிர்கள் செழித்து வளர்ந்தன. பாகிலீகனின் மகன் சோமதத்தன். சோமதத்தனுக்கு பூரி, பூரிசிரவன், சல்லியன் என்று மூன்று பிள்ளைகள் உண்டு. சந்தனு மகாராஜனுக்கு தேவநதியான கங்கையிடம் சகல, நூல் அறிவும் மகா பலபராக்கிர கீர்த்திகளும் வாய்ந்த பீஷ்மர் என்பவர் பிறந்தார். மேலும் சந்தனு மன்னனுக்கு சத்தியவதி என்பவளிடம் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அதில் சித்திராங்கதன் என்பவன் இளமையிலேயே ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டான். விசித்திர வீரியனோ காசிமன்னனின் பெண்களாகிய அம்பிகை, அம்பாலிகை என்பவர்களை மணந்து, காம போகத்தில் மிகவும் உழன்றதனால் தொழுநோயால் மடிந்தான். பிறகு, அவர்களின் தாயான சத்தியவதி ஒரு கட்டளையிட்டாள். கிருஷ்ணத்துவை பாயனன் என்பவன் தாயின் வாக்கைத் தட்டக்கூடாது என்பதால் விசித்திர வீரியனின் மனைவிகளின் மூலமாக திருதராஷ்டிரன், பாண்டு என்பவர்களையும், ராஜபத்தினிகளால் ஏவப்பட்ட ஒரு தாதியிடத்தில் விதுரனையும் உண்டாக்கினாள். திருதராஷ்டிரன் காந்தாரி என்ற பத்தினியிடம் துரியோதனன் முதலிய நூறு பிள்ளைகளைப் பெற்றான். அவனுடைய சகோதரனான பாண்டு மன்னனோ, காட்டில் மிருக ரூபமாக இருந்த ஒரு முனிவரின் சாபத்தினால் புத்திர உற்பத்தி செய்யும் சக்தியை இழந்திருந்தான். அதனால் அவனுடைய மனைவியான குந்தியிடம் தருமன், வாயு, இந்திரன் என்ற தேவர்களால் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் என்ற குமாரர்களும் மற்றொரு மனைவியான மாத்திரியிடம் அசுவினி தேவதைகளால் நகுலன் சகாதேவன் என்பவர்களுமாக ஐந்து பிள்ளைகள் உண்டாக்கப்பட்டனர். பஞ்சபாண்டவர்களான அந்த ஐவருக்கும் திரவுபதி என்ற மனைவியிடம் குழந்தைகள் பிறந்தன.
யுதிராஷ்டிரரான தருமருக்கு திரவுபதியிடம் பிரதிவிந்தியனும் பீமனுக்கு சுருதசேனனும், அர்ச்சுனனுக்குச் சுருதகீர்த்தியும், நகுலனுக்கு சதானீகனும், சகதேவனுக்கு சுருதகர்மாவும் ஆக ஐந்து பிள்ளைகள் உண்டானார்கள். இவர்களைத் தவிர பஞ்சபாண்டவருக்கு வேறு பிள்ளைகளும் உண்டு. யுதிஷ்டிரருக்கு யவுதேயீ என்பவளிடத்தில் தேவகன் என்பவன் பிறந்தான். பீமனுக்கு இடும்பை என்னும் அரக்கியிடம் கடோத்கஜனும், காசி என்னும் மங்கையிடம் சர்வகன் என்பவரும் பிறந்தார்கள். சகதேவனுக்கு விஜயை என்பவளிடம் சுகோத்திரனும், நகுலனுக்கு ரேணுமதி என்பவளிடம் நிசமித்திரனும் பிறந்தார்கள். அர்ச்சுனனுக்கு உலூபி என்ற நாக கன்னிகையின் மூலம் இராவான் என்பவனும், மணலூர் பட்டண அதிபதியான பாண்டியனது குமாரியிடம், புத்திரிகா புத்திரனாய்ப் பப்புருவாகனன் என்பவனும் பிறந்தார்கள். மேலும் அர்ச்சுனனுக்கு சுபத்திரை என்பவளிடத்தில் இளமையிலேயே மகாபல பராக்கிரமசாலியாய்ச் சத்துருக்களையெல்லாம் ஜெயிக்கும் வல்லமை பொருந்திய அபிமன்யு என்பவன் பிறந்தான். அந்த அபிமன்யுவுக்கு உத்தரை என்பவளிடம் பரீக்ஷித்து பிறந்தான். அவன் கர்ப்பத்தில் இருக்கும்பொழுது குருவம்சத்தார் அனைவரும் நாசமாய்ப் போன பிறகு அசுவத்தாமா எய்த பிரம்மாஸ்திரத்தால் எரிக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய பிரபாவத்தினால் மறுபடியும் பிராணனை அடைந்தான். அதனால் அவனுக்குப் பரீக்ஷித்து என்ற பெயர் வழங்கலாயிற்று. மைத்ரேயரே! அந்த பரீக்ஷித்து மன்னன் தான் இப்போது இந்தப் பூவுலகையெல்லாம் யாதொரு குறைவுமில்லாமல் தர்மம் தழைக்கப் பரிபாலனஞ் செய்து கொண்டிருக்கிறான்.
21. பின்னிட்ட பாண்டவ வம்ச சரிதம்
மைத்ரேயரே! இனிவரும் அரசர்களைச் சொல்கிறேன் கேளும். இப்போது அரசனாக இருக்கும் பரிக்ஷித்து மன்னனுக்கு ஜனமேஜயன் சுருதசேனன் உக்ரசேனன் பீமசேனன் என்ற நான்கு பிள்ளைகள் பிறப்பார்கள். ஜனமேஜயனுக்கு சதானீகன் என்பவன் பிறப்பான். அவன் யாக்ஞவல்க்கியரிடம் வேதத்தையும், கிருபாசாரியரிடத்தில் வில் வித்தையும் கற்று கொடியவைகளான விஷயங்களில் வெறுப்புற்றுச் சவுகை முனிவரின் உபதேசத்தால் ஆன்மஞானத்தில் தேர்ந்து உத்தமமான மோட்சத்தை அடைவான். சதானீகனின் குமாரன் அசுவமேத தத்தன், அவன் மகன் அதிசீமகிருஷ்ணன், அவன் மகன் நிசக்குனு, அவன் காலத்தில் ஹஸ்தினாபுரம் கங்கையால் அழிக்கப்படும். பிறகு அவன் கவுசாம்பி என்ற நகரத்தில் வாசஞ்செய்வான். அவஷக்கு உஷ்ணன் என்ற ஒரு மகன் பிறப்பான். அவன் மகன் விசித்திரரதனன். அவன் மகன் விருஷ்ணிமான். அவன் மகன் சுஷேணன், அவன் மகன் சுனீதன், அவன் பிள்ளை நிருபசசக்ஷú, ஞூவன் மகன் சுகிபலன், அவன் மகன் பாரிபிலவன், அவன் மகன் சுநயநன். அவன் மகன் மேதாவி. அவன் பிள்ளை ரிபஞ்சயன். அவன் மகன் அருவன், அவன் குமாரன் திக்குமன், அவன் மகன் பிருகத்திரதன், அவன் மகன் வகதாசன், அவனுக்கு சதானீகன் என்றொரு மகனும் உண்டு. அவனுக்கு உதயன் என்பவன் பிறப்பான். அவனுக்கு விஹீநரன் பிறப்பான். அவனுக்கு தண்டபாணி என்ற புதல்வன் ஒருவன் உண்டாவான். இதற்கு ஒரு சுலோகமுண்டு. பிராமண க்ஷத்திரியர்களுக்கு ஆதாரமாய் தேவரிஷிகளினாலும் பூஜிக்கப்பட்ட பாண்டவ வம்சமானது, கலியுகத்தில் ÷க்ஷமகனோடு முற்றுப் பெறும்! என்பதுதான் அந்த சுலோகம்.
22. இஷ்வாகு வம்சம் (பிற்பகுதி)
இனி இஷ்வாகு வம்சத்தைப் பற்றிச் சொல்கிறேன். முன்பு, அந்த வமிசத்தில் பிருகத்பலன் என்பவன் உண்டானான் என்று சொல்லி முடித்தேன். அவன் மகன் பிருகத்க்ஷணன் அவனுக்கு உருஷயன், அவனுக்கு வச்சவியூகன் அவனுக்கு பிருத்வி யோமன், அவன் மகன் திவாகரன். அவன் மகன் சகதேவன். சகதேவனுடைய மகன் பிருகதசுவன். அவனுக்குக் குமாரன் பானுரதன், அவனுக்கு பிரதீதாசுவன். அவனுக்குச் சுப்பிரதீகன், அவனுக்கு மகன் மருதேவன். அவன் மகன் சுநக்ஷத்திரன், அவனுக்கு மகன் கின்னரன், அவன் மகன் அந்தரிக்ஷன். அவன் மகன் சுபர்ணன், அவனுக்கு அமித்திரஜித்து அவனுக்கு பிருகத்பாஜன். அவனுக்கு தருமி, தருமிக்கு கிருதஞ்சயன். அவன் மகன் ரணஞ்சயன். அவன் மகன் சஞ்சயன். அவன் மகன் சாக்கியன். சாக்கியன் மகன் சுத்தோதனன். அவன் மகன் ராகுளன். அவன் மகன் பிரசேனஜித்து. அவனுக்கு க்ஷúத்திரகன், அவனுக்கு குண்டகன், அவன் மகன் சுரதன், அவன் மகன் சுமித்திரன்; இவர்களே பிருகத்பல குலத்திற் பிறந்த இக்ஷúவாகு வமிசத்தாராவர். இதற்கும் ஒரு சுலோகம் உண்டு. இக்ஷúவாகுவின் குலம் கலியுகத்தில் சுமித்திரனோடு முடிவு பெறும் என்பதே அந்த சுலோகம்.
23. மாகத வம்சம் (பிற்பகுதி)
இனிமேல் பிரகத்திரதன் முதல் உண்டாகும் மாகதருடைய வம்சத்தைச் சொல்கிறேன். இந்த வம்சத்தில் ஜராசந்தன் முதலிய மகா பலபராக்கிரமசாலிகளான அரசர்கள் உண்டானார்கள். ஜராசந்தனுடைய மகன் சகதேவன், அவன் மகன் சோமாபி, அவன் மகன் அனுசுருதசிரவன். அவன் மகன் அயுதாயு, அவனுக்கு நிரமித்திரன், அவன் மகன் சுநேத்திரன்; அவன் மகன் சுதன் பிருகத்கருமா; அவன் மகன் சியேனஜித்து, அவன் மகன் சுருதஞ்சயன். அவன் மகன் விப்பிரன்; அவனுக்கு சுசி என்பவன் பிறப்பான். அவனுக்கு ÷க்ஷமியன் உண்டாவான். அவனுக்குச் சுவிரதன், சுவிரதனுக்கு தருமன் பிறப்பான்; அவனுக்கு சுசிரவன் தோன்றுவான். அவனுடைய மகன் திருடசேனன். அவன் மகன் சுபலன்; அவன் மகன் சுநீதன். அவனுக்கு சத்யஜித் என்பவன் பிறப்பான். அவனுக்கு விஸ்வஜித்து, அவனுக்கு ரிபுஞ்சயன். இவர்களே பிருக்திரத வம்சத்தின் வேந்தர்கள், இனி இவர்கள் ஓராயிரம் ஆண்டளவு பெருகியிருப்பார்கள்.
24. கல்கி அவதாரம்
பிருகத்திர வமிசத்தின் கடைசியில் ரிபுஞ்சயனின் மந்திரியாக சுனகன் என்பவன் விளங்குவான், அவன் தன் அரசனைக் கொன்று பிரத்தியோதனன் என்ற தன் மகனுக்கு அரசியல் பட்டாபிஷேகம் செய்வான். அந்த பிரத்தியோதனனுக்கு பாலகன் என்பவன் மகன்; அவன் மகன் விசாகயூபன்; அவன் மகன் ஜனகன். அவன் மகன் நந்திவர்த்தனன் ஆக இந்த ஐவரும் பிரத்யோதனர் என்றே வழங்கப்படுவார்கள்; அவர்கள் நூற்று முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிவார்கள்; பிறகு சிசுநாபன் என்பவன் உண்டாவான்; அவன் மகன் காகவர்ணன்; அவன் மகன் ஷேமதர்மன்; அவன் பிள்ளை க்ஷதளஜசு; அவன் மகன் விதிசாரன், அவன் புதல்வன் அஜாதசத்ரு, அவன் மகன் அர்ப்பகன், அவனுக்கு உதயணன், அவன் பிள்ளை நந்திவர்த்தனன்; அவனுக்கு மகாநந்தி, இவர்கள் அனைவரும் சைசுநாபர் என வழங்கப்பட்டு, முந்நூற்று அறுபத்திரண்டு ஆண்டுகள் அரசாட்சி செய்வார்கள். அந்த மகாநந்திக்கு சூத்திர மங்கையின் வயிற்றில் பிறக்கும் பேரரசனும் மகாபலமுடைய மகாபதும நந்தன் என்பவன் பரசுராமனைப் போல் க்ஷத்திரியரையெல்லாம் நாசஞ்செய்வான். அதற்குப் பிறகு சூத்திரர்கள் ஆள்வார்கள். அந்த மகாபத்ம நந்தன் தன் ஆக்ஞைக்கு ஒருவராலும் தடை ஏற்படாதவாறு, பூவுலகை ஒரு குடைக்குக் கீழ் ஆண்டு வருவான். அவனுக்கு சுமாலி முதலிய எட்டுப் பிள்ளைகள் தோன்றி அவனுக்கு பிறகும் நூறாண்டுகள் ஆட்சிபுரிவார்கள். பிறகு இந்த ஒன்பது நந்தர்களையும் கவுடில்யன் என்றும் விஷ்ணு குப்தன் என்றும் வழங்கப்படும். பிராமணன் ஒருவன் நாசஞ்செய்வான். அதன் பிறகு அந்த மகாநந்தனின் காதற்கிழத்தியான முரை என்பவள் வயிற்றில் பிறந்த சந்ததியார்கள் பூமியை ஆண்டு வருவார்கள். அவர்களில் சந்திரகுப்தன் என்பவனை அந்த கவுடில்யப் பிராமணனே சிங்காதனம் ஏற்றிப் பட்டாபிஷேகம் செய்து வைப்பான். அந்த சந்திரகுப்தனுக்கு பிந்துசாரன் என்பவன் உண்டாவான். அவன் மகன் அசோகவர்த்தனன், அவன் மகன் சுயன். அவன் மகன் சம்யுதன், அவன் மகன் சாலிசூகன், அவன் மகன் சோமசர்மா, அவன் மகன் சததனுவா, அவனுக்குப் பிறகு பிருகத்திருதன் என்பவன் உண்டாவான். இந்த மவுரிய வம்சத்துப் பதின்மரும் நூற்று முப்பத்தேழு ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டு வருவார்கள். அவர்களுக்கு முடிவாக சுங்கர் என்ற பதின்மர் இந்தப் பூமியை ஆண்டு வருவார்கள். முன்னே சொன்ன மவுரியரின் கடைசியரசனை அவனது சேனாதிபதியான புஷ்யமித்திரன் கொன்று, தானே அரசனாவான். அவன் மகன் அக்னி மித்திரன், அவன் மகன் சுச்சியேஷ்டன், அவன் மகன் வசுமித்திரன், அவன் மகன் உதங்கன், அவன் மகன் புலிந்தகன், அவன் மகன் கோஷவசு, அவன் மைந்தன் வச்சிரமித்திரன், அவன் மகன் சூனுபாகவதன், அவன் தனயன் தேவபூதி. இந்த சுங்கர்கள் அனைவரும் நூற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் பூமியை ஆள்வார்கள்.
பிறகு தேவபூமி என்ற சுங்கனை அவனது மந்திரியான வசுதேவன் என்னும் கண்வ குலத்தினன் கொலை செய்து, அரசனாவான். அதனால் பூமி இந்தக் கண்வரை அடையும். அவன் மகன் பூமித்ரன், அவன் மகன் நாராயணன், அவன் மகன் சுசர்மா கண்வவமிசத்தாரான இந்த நால்வரும் நாற்பத்தைந்து ஆண்டுக்காலம் அரசாள்வார்கள். சுசர்மனை அவனது வேலைக்காரனான ஆந்திரதன் பலிபுச்சகன் என்பவன் கொன்று ராஜ்யத்தை ஆள்வான். பிறகு அவன் தம்பி கிருஷ்ணன் அரசனாவான். அவன் மகன் சாந்தகர்ணி, அவன் மகன் பூர்ணோச்சங்கன், அவன் மகன் சாதகர்ணி, அவன் மகன் லம்போதரன், அவன் மகன் பாலகன், அவன் பிள்ளை மேகசுவாதி, அவன் மகன் படுமான், அவன் மகன் அரிஷ்டகர்மன், அவன் பிள்ளை புலிந்தசேனன், அவன் புத்திரன் சந்திரன், அவன் மகன் சாதகர்ணி, அவன் பிள்ளை சிவசுவாதி, அவன் புத்திரன் கோமதி அவன் மகன் பூனிமான். அவன் மகன் சாந்தகர்ணி, அவன் பிள்ளை சிவஸ்ரீ, அவன் பிள்ளை சிவஸ்கந்தன், அவன் மகன் யக்ஞஸ்ரீ, அவன் மகன் துவியக்ஞன், அவன் பிள்ளை புலோமாபி ஆக இந்த முப்பதின்மரும் நானூற்று எண்பத்தாறு ஆண்டுகள் பூமியை ஆள்வார்கள். பிறகு இந்த ஆந்திரரின் சேவகரான ஆபீரன் முதலிய எழுவரும் கர்த்தபீரான் என்ற பதின்மரும் அரசராவார்கள். அதற்கு பிறகு ஒரு குலத்துப் பதினாறுபேர் அரசாள்வார்கள். பிறகு யவனர் எண்மரும் துருக்கர் பதினால்வரும், முருண்டர் பதின்மூவரும், மவுனர் பதினொருவரும் ஆயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது ஆண்டுக்காலம் அரசர்களாவார்கள். பிறகு மவுனரில், ஒரு குலத்தைச் சேர்ந்த பதினொருவர் முந்நூறு ஆண்டுகள் அரசாள்வர். இவர்கள் அனைவரும் நசித்த பிறகு கிங்கிலை என்ற நகரத்தைச் சேர்ந்தவரும், அரசகுல சம்பந்தமற்றவருமான யவனரே மீண்டும் ஆள்வார்கள். அவர்களாவன, விந்தியசத்தி, புரஞ்சயன், ராமசந்திரன், தருமவர்மன், வங்கன் நந்தனன், சுநந்தி, அவன் தம்பி நந்தியசன், சுக்கிரன், பிரவீரன் என்ற இந்தப் பதின்மரும் நூற்றியாறு ஆண்டுக்காலம் அரசாள்வார்கள். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய ஜாதியில் பிறந்த பதின்மூவரும் பாகிலிக தேசத்தார் மூவரும் புஷ்யமித்திரர், படுமித்திரர் என்ற பதின்மூவரும் ஆந்திரர் எழுவரும் சிற்றரசராய் ஆட்சி செய்வார்கள். கோசல நாட்டை ஒன்பதின்மரும், நைஷத தேசத்தை ஒன்பதின்மரும் ஆள்வார்கள். மகதத்தில் விசுவஸ்படிகன் என்று ஒருவன் தோன்றி செம்படவர், வேடவர் முதலியவர்களுடன் கலந்த பார்ப்பாரை ஸ்தாபிப்பான். பத்மவதி என்ற பட்டணத்தில் நாகர் என்று வழங்கப்படும் ஒன்பது மாகதர்கள் சகல அரச பரம்பரைகளையும் அழித்து, கங்கையின் உற்பத்தி ஸ்நானம் முதல் பிரயாகை வரையிலுள்ள ராஜ்யத்தை ஆள்வார்கள். கோசலம், ஆந்திரம், புண்டரம், தாமிரலிப்தம், சமதபபுரி இவற்றை தேவரக்ஷிதன் என்பவன் அரசாள்வான்.
கலிங்கம், மாகிஷம், மாகேந்திரம் முதலியர் குகர் என்போர் ஆள்வார்கள். நிடதம், நைமிக்ஷகம், காலகோசகம் என்ற ராஜ்யங்களை மணி தானியகர் அரசு செய்வர். திரை ராஜ்யம், முஷிகம் என்பவற்றை கனகப் பேருடையான் புசிப்பான். சவுராஷ்டிரம், ஆவந்தி, சூத்திரம், ஆபிரம் என்ற நாடுகளையும், நர்மதையடுத்த பாலை நிலங்களையும் கெட்டுப் போன பார்ப்பாரும் இடையர் சூத்திரர் முதலியோரும் ஆள்வார்கள். சிந்து, தேவிகை, சந்திரிகை முதலான நதிக்கரை நாடுகளை கெட்டுப்போன சூத்திரர், மிலேச்சர் முதலியோர் கைப்பற்றுவார்கள். இவ்வரசர் யாவரும் ஒரே காலத்தில் ஆண்டு வருவார்கள். இவர்கள் அதிகக் கோபமும் அற்ப அனுக்கிரகமும் உடையவர்கள். பொய்யிலும் அதருமத்திலும் மனப்பற்றுடையவர்கள். மங்கையரையும் பாலகரையும், பசுக்களையும் வதைப்பார்கள். பிறர் பொருளைக் களவு செய்வார்கள். பேராசைக்காரர்கள் இவர்களால் தருமம் சிறிது சிறிதாகக் குறையும். அப்பொழுது பொருளே உயர்ந்த குலத்துக்குக் காரணமாகும், நற்குலப்பிறப்பு உயர்ந்ததாகக் கருதப்படமாட்டாது. வலிமையே சகல தரும காரணமாகும் நல்லொழுக்கமற்ற பெண் தன்மையே விவாகஞ்செய்யக் காரணமாகும். குலங்கோத்திரம் காரணமாகாது. பொய் சொல்லும் திறமையே விவகாரத்தில் வெற்றியடையக் காரணமாக இருக்குமே தவிர, நியாயமான தருமங்கள் வெற்றியை வழங்காது. முப்புரிநூலைத் தரித்திருப்பது ஒன்று மட்டுமே பிராமணத் தன்மைக்கு காரணமாக இருக்கும். வேத சாஸ்திர ஆசாரங்கள் பிரம்மத் தன்மைக்கு ஆதாரமாக இராது வலிமையில்லாமையால் பிழைப்பிராது. பயிர்கள் இல்லாமை பிழைப்பதற்குக் காரணமாகாது. பயமின்றி உரத்த குரலில் பேசுவதே பாண்டித்யமாக இருக்கும். பொருளின்மையே சாத்வீகத்துக்குக் காரணமாக இருக்கும். ஈகைதான் தருமமாகும். யாகங்கள் தருமமாகாது. வைதீக முறையை விட அங்கீகரிப்பு முறையே விவாகத்துக்குக் காரணமாக இருக்கும். நன்றாக வேடந்தரித்தவனே பாத்திரமாவதற்கு ஏதுவாகுமேயன்றி யோக்யதை அன்று தூரமான இடத்தில் இருந்து கொண்டு, வருந்தண்ணீரே தீர்த்த ஏதுவேயன்றி சுத்தியன்று, கபடவேடந்தரித்தலே பெருமைக்கு காரணமாகுமே அன்றி தவம் முதலியவை ஆகாது. இவ்வாறு அநேக தோஷங்கள் நிறைந்த பூமியில் எந்தச் சாதியானாலும் எவன் பலவானோ அவனே அரசனாவான். அப்படிப்பட்ட நிலையில் அவர்களது கையின் கீழ் இருக்கமுடியாமல் நன்மக்கள் மலைகளின் நடுச்சாரல்களில் தங்கி வசிப்பார்கள். காய், கிழங்கு, கீரை, இலை, தேன் முதலியவைகளை ஆகாரமாகவும், மரப்பட்டைகள், தழைகள் இவற்றை வஸ்திரமாகவும் கொண்டு காற்று, வெயில், மழை முதலியவற்றால் துன்பப்படுவார்கள். எவனும் இருபத்து மூன்று ஆண்டு வரையில் பிழைத்திருப்பதே அபூர்வமாக இருக்கும். இவ்விதம் கலியுகத்தில் ஜனங்கள் க்ஷயமடைந்து தர்மங்களெல்லாம் மிகவும் அழிந்து கலியுகமும் முடியலாகும்.
அப்போது சகல லோக சிருஷ்டி கர்த்தாவாயும், சராசரங்களுக்கு எல்லாம் குருவாகவும், ஆதிமத்யாந்த ரஹிதமாகவும், சாக்ஷõத் பிரம்மமாயும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுபகவான், தம் அம்சத்தால் சம்பளம் என்னும் கிராமத்தில் முக்கியமானவராக விளங்கும் விஷ்ணு யாஸு என்ற பிராமணருடைய மாளிகையில் எண்குண ஐஸ்வரிய சம்பன்னராய், கல்கி ரூபியாய் அவதரிப்பார். அளவற்ற சிறப்புடையவராகவும், மிலேச்சராகவும் திருடராகவும், துஷ்டாசாரம் கொண்டவராகவும் இருக்கும். அனைவரையும் கல்கி புருஷர் நாசஞ் செய்து அருளி, உலகமெல்லாம் தமது தருமத்தில் நிலைபெறச் செய்வார். பிறகு கலியுகம் முழுவதும் முடிவாகும் போது, இரவின் முடிவில் எழுந்தவர்களுக்கு ஏற்படும் நிர்மல புத்தியைப் போல் சகலருக்கும் புத்தி தெளிவு உண்டாகும். இனியண்டாமவர்க்குக் காரணமாக இருக்கும் அந்தக் காலத்து மனிதர்கள், மிகவும் கிழவர்களாக இருந்தாலும், தற்காலத்தில் புத்திர உற்பத்தி உண்டாகும். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அனைவரும் கிருதயுகத்தை அனுசரித்தவராகவே இருப்பார்கள். இது சம்பந்தமாக ஒரு சுலோகம் உண்டு. சந்திரனும் சூரியனும் குருவும் எப்போது புஷ்ய நட்சத்திரத்தில், ஒரே காலத்தில் பிரவேசிப்பார்களோ அப்போதே கிருதயுகம் உண்டாகும்! என்பதே அந்தச் சுலோகம். மைத்ரேயரே! சென்ற வருடம் இருப்பவரும் வருபவர்களும் ஆகிய அந்தந்த வமிசத்து அரசர்களைப் பற்றி உமக்குச் சொல்லி விட்டேன். பரீக்ஷித்து மகாராஜனின் உற்பத்திக் காலத்திலிருந்து நந்தன மன்னனுக்கு இராஜ்யப் பட்டாபிஷேகமாகும் காலம் வரையில் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் ஆகும். ஆகாயத்தின் வடக்கில் கிழக்கு நுனியாய் பெட்டி உண்டி போல் விளங்கும் சப்தரிஷி மண்டலத்தில் கிழக்கு நுனியில் உள்ள நட்சத்திரத்தில் இருப்பவர் மரீசி. அவருக்கு மேற்குத் திசையில் சிறிது தாழ்ந்து காணப்படுவது அருந்ததியோடு கூடிய வசிஷ்டன். அவருக்கு மேற்கில் சிறிது உயர்ந்து காணப்படுகிறவர் அங்கிரசு, அவருக்கு அண்மை மேற்கில் சதுக்கமாயுள்ள நான்கு நட்சத்திரங்களில் ஈசானியத்தில் இருப்பவர் அத்திரி. அத்திரிக்கு தெற்கில் இருப்பவர் புலஸ்தியர். அவருக்கு மேற்கில் புலகர், அவருக்கு வடக்கில் மண்டலத்துக்கு வாயவியத்தில் இருப்பவர் கிரது. வசிஷ்டருக்குத் தென்கிழக்கில் மிகச் சூட்சுமமாகக் காணப்படுவதே அருந்ததி. இந்த சப்தரிஷிகளை முன்னிட்டு உதயமாகும் புலஸ்திய கிருதுகளுக்கு இணையான தக்ஷிணேத்திர ரேகையின் தெற்குப் பக்கத்தில் அசுவினியாதி நட்சத்திரங்களில் எது காணப்படுமோ, அந்த நட்சத்திரத்தோடு கூடியவர்களாகவே, அப்த சப்தரிஷிகள் நூறாண்டுக்காலம் இருப்பார்கள். இந்தப் பரீக்ஷித்து மன்னனின் காலத்தில் அவர்கள் மகா நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். இப்போதுதான் தேவமானத்தில் ஆயிரத்திருநூறு ஆண்டுக் காலமான கலியுகம் துவங்கியது. இது முன்னமே தோன்றினும், எப்போதும் ஸ்ரீ சாக்ஷõத் விஷ்ணுபகவான் வசுதேவ குலத்தில் கண்ணாக அவதரித்து மறுபடியும் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினாரோ, அப்போது தான் கலியுகம் வந்ததென்று சொல்லவேண்டும். ஏனெனில் பகவான் தமது திருவடித் தாமரைகளால் இந்த பூமியை ஸ்பரிசித்துக் கொண்டிருந்ததால் கலியானது பூமியில் வியாபிக்கும் சக்தியற்றதாக இருந்தது. எம்பெருமானின் அம்சமான கண்ணன் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிய பிறகுதான் தருமபுத்திரர் விபரீதமான நிமித்தங்களைக் கண்டு, பரீக்ஷித்துக்குப் பட்டாபிஷேகம் செய்து தம்பியருடன் ராஜ்யத்தை விட்டு, மகாப் பிரஸ்தானம் போய்விட்டார். இனி சப்த ரிஷிகள் எப்போது பூர்வாஷாடா நட்சத்திரத்திற்குப் போவார்களோ அப்போது தான் நந்தர்களின் காலம்! அதிலிருந்து கலி விருத்தியடையும்!
எந்தத் தினத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவான் தமது திவ்யலோகத்திற்கு எழுந்தருளினாரோ அன்றே கலியானது பூவுலகில் பிரவர்த்தித்தது. மைத்ரேயரே! அதன் தொகையைச் சொல்கிறேன் கேளும். சந்ததிகளையும் சந்தியம்சங்களையும் நீக்கி கலியுகத்தின் பிரமாணத்தைக் கணக்கிட்டால் மூன்று லக்ஷத்து அறுபதினாயிரம் ஆண்டுகளாகும். இதைத் தேவமானத்தால் கணக்கிட்டால், சந்தியாதிகளுடன் சேர்ந்து ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாகும். இந்தக் கலியுகம் கொஞ்சமும் மிச்சமில்லாமல் நீந்தியவுடன் மீண்டும் கிருதயுகம் உண்டாகும். யுகம்தோறும் மகாத்மாக்களான பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணத்தாரும் கடந்து போயினர். நான் அவர்கள் யாவரையும் குலமுறைப்படி உமக்குச் சொல்லவில்லை. ஏனெனில் அவர்கள் தொகை அனந்தம் பெயர்கள் அநேகருக்குச் சமமானவை. எனவே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல நேரிடும். ஆகவே முக்கியமான சிலரையே உமக்குச் சொன்னேன். புருவமிசத்தைச் சேர்ந்த தேவாபியும், இக்ஷ்வாகு வமிசத்தானாகிய புருவும் மகத்தான யோக பலத்தைக்கொண்டு, கலா பக்கிராமத்தில் யாருக்கும் தெரியாமல் இருந்துகொண்டு, வருங் கிருதயுகத்தில் இங்கு வந்து க்ஷத்திரிய வமிசத்தைத் தோன்றச் செய்வார்கள். இவர்களே மனுக்குலத்துக்கு விதையாக ஏற்படுத்தப்பட்டவர்கள்; இந்தக் கிராமத்திலேயே மனு வமிசத்தாரால் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் என்று மூன்று யுகங்களும் அனுபவிக்கப்படுகின்றன. கலியுகத்திலோ, இப்போது தேவாபியும் புருவும் இருப்பது போல் சிலர் மட்டுமே விதைபோல இருப்பார்கள் மைத்ரேயரே! இந்த மனு வமிசத்தைத் தூக்குத் தொகையாகவே உமக்குச் சொன்னேன்; இந்த அரசர்கள் இந்தப் பூமி எனக்கு எப்படி வசப்படும்? என் மகனுக்கு எப்படி வசமாகும்? என் குலத்தாருக்கெல்லாம் எப்படி வசப்பட்டிருக்கும்? அத்தகைய உபாயத்தை நாம் செய்யவேண்டும்! என்ற கவலையிலேயே ஒழிந்தார்கள், இப்போதுள்ள அரசர்களுக்கு முன்பு இருந்தவர்களும் அவர்களுக்கும் முந்தியவரும், இனி உண்டாகப் போகிறவர்களும் யாவரும் இப்படிப்பட்டவர்களே ஆவார்கள். சரத்காலத்தில் வெற்றியடையும் பொருட்டுப் படையெடுத்துச் செல்லும் பேரரசரை நோக்கி, மலர்ந்த மலர்களாகிய பற்களினால் பூமி சிரிக்கின்றது போலும்! இந்த விஷயமாக பூமிதேவியால் பாடப்பட்ட பாடல்களைச் சொல்கிறேன்; கேளும் இவற்றைப் பூர்வத்தில் தருமக்கொடி நாட்டியிருந்த ஜனக மன்னனுக்கு அசிதர் என்பவர் கூறியிருக்கிறார்.
பூமாதேவியின்பாடல் கருத்துமிகவும் சாதுரியமுள்ள அரசர்களுக்கு இப்படிப்பட்ட அஞ்ஞானம் ஏன் இருக்கிறதோ! தண்ணீரில் உண்டாகும் நுரைக்குச் சமமான தம்மைச் சதமாக இவர்கள் எண்ணுகிறார்களல்லவா? முன்பு தங்களை வென்று பிறகு முறையே மந்திரிகளையும் சேவகரையும் மக்களையும் வென்று பிறகு முறையே மந்திரிகளையும் சேவகரையும் மக்களையும் வென்று பிறகு எதிரிகளையும் ஜயிக்க நினைக்கிறார்கள். பகைவர்களை இப்படி ஜெயிப்பதால் கடல் சூழ்ந்த பூமியையெல்லாம் கைவசப்படுத்துவோம் என்ற பேராசையால் முயற்சிக்கிறார்களேயல்லாது, தம்மை நெருங்கி மிருத்யு வந்திருப்பதை அவர்கள் அறிவதில்லை! நல்லது; அவர்கள் நினைப்பதுபோல கடல் சூழ்ந்த பூமண்டலமானது அவர்களது கைவசப்பட்டபோதிலும் இதற்கு முதற்காரணமான ஆன்ம ஜயத்துக்கு இது ஒரு பயனாகுமோ? மோக்ஷமன்றோ ஆன்ம ஜயத்தின் பயனாகும்! இவ்வாறு நினைத்துப் பாடுபட்ட இவர்களது பாட்டன். பூட்டன் எல்லாம் தம்மோடு கூடக் கொண்டுபோகமாட்டாமல் விட்டுப்போன என்னை, அவர்களது மக்களாகிய இவர்கள் வசப்படுத்த நினைக்கிறார்களே, இதென்ன மடமை? அகங்காரங் கொண்ட இந்த அரசர்களுக்குள் பிதாவுக்கும் புத்திரனுக்கும் அண்ணன் தம்பிமாருக்கும் என் நிமித்தமாகப் போர் உண்டாகிறதல்லவா? இந்தப் பூமியெல்லாம் என்னுடையதே என்றும் என் வமிசத்தாருக்கே இது சாஸ்வதமாக இருக்கும் என்றும் கருதும் இந்த ஈன புத்தியான அரசர்கள் எல்லோருக்கும் முந்தியவர்களின் மரணத்திற்குப் பின்னும் உண்டாகியே இருந்தது. இதென்ன விந்தை! இவ்விதமாக மமதை கொண்டு, என்னைக் கொண்டு போகமாட்டாமல் விட்டுவிட்டு மரணமடைந்த ஒருவனைப் பார்த்தும் பின்னுண்டாகிறவனுடைய சித்தத்தில் இத்தகைய மமதையானது எப்படிக் குடிகொண்டிருக்கிறது? தன்னுடைய தூதரை, பிற அரசரிடம் அனுப்பி, இந்தப் பூமி என்னுடையது நீ இதை விட்டு ஓடிப்போ! என்று சொல்லியனுப்பும் அரசரைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது! என்று பூமாதேவி பாடியுள்ளாள். இவற்றை நன்றாகக் கேட்பவருக்குச் சூரியனுக்கு முன்பு பனி அழிவதுபோல. மமதையானது அழிந்து போகும்!
உலகத்தைக் காக்கும் மகாவிஷ்ணுவின் அமிசாமிசங்களினால் அநேக மாமன்னர்கள் உண்டாகிய மனுவமிசத்தைப் பற்றி நான் உமக்குச் சொன்னேன். இதை முறையாகக் கேட்பவனது மனமானது தூய்மையாவதால் பாவமெல்லாம் போய்விடும். இந்தச் சூரிய சந்திர குலங்களைக் கேட்பதால் தனதானிய சம்பத்துகள் அதிகரிக்கும். இந்திரியங்களுக்கும் குறைவு ஏற்படாது. மகாபலசாலிகளாகவும் மகா வீரியமுள்ளவர்களாகவும் அளவற்ற பொருள் வளம் மிகுந்தவர்களாகவும் இருந்த இஷ்வாகு, ஜன்னு, மாந்தாதா, சகரன், ரகு, யயாதி முதலானவர்களெல்லாம் காலபலத்தால் ஒன்றுமின்றி மரணமடைந்து, கதையில் சொல்லத் தக்கவராய்ப் போனதைக் கண்டும் கேட்டும் விவேகமுடைய எவன்தான் பெண்டாட்டி, பிள்ளை, வீடு, நிலம் பொருள் முதலியவற்றின் காரணமாக மமதைகொண்டு திரிவான்? மகா வலிவுள்ள தோள்களுடன் கூடி பல்லாண்டுகள் தவஞ்செய்து, பலவிதமான பேறுகளைப் பெற்று, யாகாதிகளைச் செய்து மிகவும் புகழ் வாய்ந்தவர்களாக இருந்தவர்களும் கால பலத்தால் கதையிலே சொல்லப்படும்படி ஆனார்கள். பிருது என்பவன் சத்துருக்கள் அனைவரையும் வென்று சகல உலகங்களுக்கும் சென்றுகொண்டிருந்தான். அவனும் நெருப்பில் அகப்பட்ட இலவம் பஞ்சுப்போலக் காலச் சக்கரத்தில் பட்டு ஒரு நிமிஷத்தில் மாண்டுபோனான். பகைவர் அனைவரையும் வென்று, சகல தீவுகளையும் கைப்பற்றிய கார்த்த வீரியார்ச்சுனனும் கதைகளில் சொல்லப்படும் அப்படிப்பட்ட ஒருவன் இருந்தானாவென்று சந்தேகிக்கும்படி ஆகிவிட்டான்! எவரும் கொண்டாடும் படியான செல்வமும் கீர்த்தியும் பெற்றிருந்த இராவணன், அவிக்ஷதன், ரகுவமிசத்தார் முதலியவர்களுடைய சாம்பலும் இமயனுடைய புருவ நெறிப்புடன் கூடிய பார்வையினால் இந்த உலகத்தில் இல்லாமற் போயிற்றல்லவா? மாந்தாதா என்று பெயர் படைத்த மாமன்னனும் பழைய கதையானதைக் கண்டு எந்தப் புத்தியீனனும் மமதையை வகிக்கமாட்டான்! பகீரதன் முதலியோரும் சகரனும் காகுஸ்தனும் இராவணனும் ஸ்ரீராம லக்ஷ்மணரும் யுதிஷ்டிரர் முதலியோரும் முன்பு இருந்தார்கள் என்பது மெய்யோ, பொய்யோ என்னும்படி ஆகிவிட்டது. அவர்கள் இருந்தார்கள் என்பது மெய் என்றால் அவர்கள் இப்போது எங்கே போனார்கள் நமக்குத் தெரியவில்லை! பிராமண உத்தமரே! மாபெரும் மகிமையுடையவர்களாக நான் உமக்குச் சொன்ன பூர்வீகப் பேரரசர்கள் அடைந்த கதியை இப்போது இருக்கும் அரசர்களும் இனிமேல் வரப்போகிற அரசர்களும் அடைவார்கள். இந்தக் காரியத்தை அறிந்து, புத்திசாலியான மனிதன் அகந்தைக் கொள்ளக்கூடாது. இப்படியிருக்க புத்திரன், மனைவி முதலானவற்றில் மமதை கொள்ளக்கூடாது என்பதை நான் சொல்லவா வேண்டும்?இவ்வாறு பராசரர் கூறினார்.
நான்காவது அம்சம் முடிந்தது.
No comments:
Post a Comment