1. கடந்த மனுவந்தரங்கள்
மைத்ரேய முனிவர், பராசரரை நோக்கி, மகரிஷியே! பூமி, சமுத்திரங்கள், முதலானவற்றைப் பற்றியும், சூரியன் சந்திரன் முதலிய கோள்களைப் பற்றியும், தேவதைகள் ரிஷிகள் ஆகியோரின் படைப்பையும், துருவனுடைய சரிதத்தையும், பிரகலாதனின் வரலாற்றையும், அடியேனுக்குக் கூறினீர்கள். இனிமேல் சகல மனுவந்தரங்களையும், அவற்றின் அதிபதிகளையும், தேவர்களையும் பற்றித் தங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன் என்றார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! ஆதியில் சுவாயம்புவ மநுவிலிருந்து துவங்கி, சுவாரோ சிஷர், உத்தமர், தாமசர் ரைவதர், சாக்ஷúஷர் என்ற மனுக்கள் அறுவரும் முறையே சென்றனர். இப்பொழுது சூரியகுமாரரான வைவஸ்வத மனுவினுடைய அந்தரம் நடைபெறுகின்றது. இந்தக் கல்பத்தின் ஆதியில் நடந்த சுவாயம்புவ மநுவந்தரத்தையும் அதிலிருந்த தேவர், முனிவர் முதலானவர்களையும் சொன்னேன். இனி, சுவாரோசிஷ மனுவந்தரத்தில், பாராவாரர், துஷிதர் என்ற தேவதைகளும் விபச்சித் என்ற இந்திரனும் ஊர்ஜ ஸ்தம்பன், பிராணன், தத்தன், அக்கினி, ரிஷபன், நிஸ்வான், சார்வரீவான் என்ற சப்தரிஷிகளும் இருந்தனர். இப்படி இரண்டாவது மனுவந்தரம் நடந்தது. மூன்றாவது உத்தம மனுவந்தரம். இதில் சுசாந்தி என்பவன் இந்திரனானான். சுதாமாக்கள், சத்தியர், சிவர், பிரதர்த்தனர், வசவர்த்திகள் என்ற ஐந்து கணதேவதைகள் கணம் ஒன்றுக்குப் பன்னிருவராகச் சேர்ந்திருந்தார்கள். வசிஷ்டருடைய பிள்ளைகள் சப்தரிஷிகள், அஜன், பரசுதிவியன், முதலியவர்கள் மனுவின் குமாரர்கள். நான்காவது தாமச மனுவின் அந்தரத்திலே சுபாரர், ஹரிகள் சத்தியர் சுதீகர் என்ற கணதேவதையர் கணமொன்றுக்கு இருபத்தேழு பேர்களாக இருந்தார்கள். சிபிச் சக்கரவர்த்தி நூறு அசுவமேத யாகங்களைச் செய்ததால் வஜ்ரா யுதமேந்திய இந்திரனானான். ஜோதிர்த்தாமா, பிருகு, காரியன், சைத்திரன், அக்னி, தனகன், பீவான் என்ற சப்தரிஷிகள் இருந்தனர். நரன், கியாதி, சேதுரூபன், சானு, சங்கன் முதலியோர் அந்தத்தாமச மனுவின் புத்திரர்கள். ஐந்தாவது ரைவத மனுவந்தரம். இதில் விபு என்பவன் இந்திரன், அமிதாபர், பூதனயர் வைகுண்டர், சுசமேதர் என்பவர்கள் தேவகணங்களாய்க் கணத்துக்கு பதினான்கு பேர்களாக இருந்தார்கள். இரணிய ரோமா, வேதசிரீ ஊர்த்துவபாகு, அபரன், வேதபாகு, சுதாமா, பர்ச்சனியன் என்பவர்கள் சப்தரிஷிகள். சுசம்பாவியன், பலபந்து, சத்தியகன் முதலியவர்கள் இந்த மனுவின் குமாரர்கள்.
இந்தச் சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், நைவதர் என்ற மனுக்கள் நால்வரும் பிரியவிரதருடைய வமிசத்தில் பிறந்தவர்கள். அந்தப் பிரியவிரதர் என்பவர் ராஜரிஷியாவார். அவர் தவத்தால் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதித்து தன் குலத்தில் மனுவந்தராதியதிகள் உண்டாகும்படியான பாக்கியத்தைப் பெற்றார். ஆறாவது மனுவந்திரத்தின் அதிபதி சாக்ஷீஷர் என்ற மனுவாகும். மனோ ஜவன் என்பவன் இந்திரன், ஆப்பியர், பிரசூதர், பவியர், பிருதுகர், லேகர் என்ற ஐவர் கணதேவதைகள். இவர்கள் கணமொன்றுக்கு எட்டுப்பேராக இருந்தனர். இவர்கள் மகானுபாவர்கள். சுமேதன் விரஜன் அவிஷ்மான். உத்தமன் மது அதிநாமா சகிஷ்ணு என்போர் சப்தரிஷிகள். ஊரு பூரு சதத்தியும்னன் முதலான அந்த மனுவின் புத்திரர்கள் அரசரானார்கள். இனி இப்போது நடைபெறும் ஏழாவது மனுவந்தரத்துக்குச் சூரிய புத்திரரான சிரார்த்த தேவன் மனுவாகி இருக்கிறான். இதில் ஆதித்தியர், வசுக்கள், ருத்திரர் முதலானோர் தேவதைகளாக இருக்கிறார்கள். புரந்தரன் என்பவன் இந்திரன். வசிஷ்டர், காசியபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், விசுவாமித்திரர், பரத்வாஜர் என்போர் சப்தரிஷிகள். இஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், கரூஷன், விரூஷத்திரன் இந்த ஒன்பதின்மரும் மனுவின் புத்திரர்கள். உலக ரட்சணைக்குரிய ஒப்பற்ற ஸ்ரீவிஷ்ணுவின் சாத்வீக சுக்தியானது சகல மனுவந்தரங்களிலேயும் தேவதாவதாரத்தினால் மனு முதலானோரிடமும் வியாபித்துள்ளது. ஸ்ரீமகாவிஷ்ணு சுவாயம்புவ மனுவந்தரத்தில் ஆகுதி என்பவளிடம் யக்ஞன் என்ற திருப்பெயரோடு அவதரித்தார். பிறகு உத்தம மனுவந்தரத்திலே சத்யை என்பவளிடம் சத்தியன் என்ற திருப்பெயரோடு அவதரித்தார். மறுபடியும் அவர் தாம்ச மனுவந்தரத்திலே ஹரியை என்பவளது கர்ப்பத்தில் ஹரிகள் என்ற தேவர்களுடன் ஹரி என்ற திருப்பெயரில் அவதரித்தார். சாக்ஷúஷ மனுவந்தரத்தில் விகுண்டையின் கருவில் வைகுண்டர் என்ற தேவதைகளோடு வைகுண்டர் என்ற திருப்பெயரில் அவதரித்தார். இந்த வைவசுவத மனுவந்தரம் வந்தபோது, காசிபருக்கு அதிதியிடத்திலே வாமனரூபியாய் அவதரித்து மூன்றடிகளால் சகல உலகங்களையும் ஆக்ரமித்து பகையழித்து அவற்றைப் புரந்தரனுக்கு அளித்தார். இவ்விதமாக ஸ்ரீவிஷ்ணுபகவான் ஏழு மனுவந்தரங்களிலும் ஏழு திருவவதாரம் செய்து மனு முதலான சகல பிரஜைகளையும் காத்து வருகிறார். அந்த சுவாமியானவர் தமது சக்தியினால் மனு முதலான சகல பிரபஞ்சத்தையும், அனுப்பிரவேசித்திருப்பதால் விஷ்ணு என்ற திருப்பெயரைப் பெற்றார். சகல மனுக்களும் சகல சப்த ரிஷிகளும், சகல மனுகுமாரர்களும், இந்திரர்களும் யாவரும் ஸ்ரீவிஷ்ணுவின் ஐசுவரியமானவர்கள் என்பதை அறிவீராக!
2. இனிவரும் மனுவந்தரங்களின் விளக்கம்
பராசரரே! இதுவரை உண்டான மனுவந்தரங்களைச் சொன்னீர்கள்! இனிவரும் மனுவந்தரங்களையும் அடியேனுக்குச் சொல்லியருள வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார். பராசரர் கூறலானார். சூரியனுக்கு சமிக்ஞை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள். அவர் விசுவகர்மாவின் மகள். சிரார்த்த தேவன் என்ற மனுவும் யமதர்மராஜனும் யமுனா என்ற நதியும் அவளுக்குப் பிறந்தனர். சமிக்ஞை தன் கணவனின் தேஜஸைச் சகிக்கமுடியாமல் தன் நிழல் என்று சொல்லும்படியான தன்னைப்போன்ற ஒருத்தியையுண்டாக்கி சாயாதேவியெனும் அப்பெண்ணைத் தன் கணவனுக்குப் பணிவிடைகள் செய்யும்படி வைத்துவிட்டு தவஞ்செய்யக் காட்டுக்குச் சென்றாள். சூரியன் அந்தச் சாயாதேவியைத் தன் பத்தினியாகிய சமிக்ஞை என்றே நினைத்து அவளிடத்திற் சேர்ந்து, சனியையும் மற்றொரு மனுவையும் தபதி என்பவளையும் பெற்றான். இது இப்படியிருக்க, ஒருநாள் யமன் சாயாதேவியைத் தனது தாயாகவே நினைத்து, உதைக்கப்போகும் போது சாயாதேவி கோபங்கொண்டு அவனை சபித்தாள். அவள் கருணையில்லாதவளாக இருந்ததால், அவள் தன் தாயல்ல என்பதை யமன் உணர்ந்தான். பிறகு சாயாதேவி உண்மையைச் சொல்லக் கேட்ட சூரியன், யோகதிருஷ்டியினால் ஆலோசித்தான். அப்போது தன் மனைவி சமிக்ஞை என்பவள் பெண் குதிரையின் வடிவில், வனத்தில் தவஞ்செய்து கொண்டிருப்பதை சூரியன் அறிந்தான். பிறகு சூரியன், தானும் குதிரையின் வடிவு எடுத்துக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்குச் சென்று அவளிடத்தில் அசுவினி தேவதைகள் இருவரையும், வீரியத்தின் கடைசிப் பாகத்தினால் ரேவந்தன் என்பவனையும் உண்டாக்கி மறுபடியும் அந்தச் சமிக்ஞையை தனது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். பின்பு விசுவகர்மாவானவன், சூரிய மண்டலத்தைத் தனது சாணைச் சக்கரத்தில் வைத்துத் தேய்த்து, அவனது தேஜசில் எட்டில் ஒரு பங்கைக் குறைத்து விட்டான். இவ்விதம் விசுவகர்மாவினால் தேய்த்துத் தள்ளப்பட்ட தேஜோபாகமானது, மிகவும் பிரகாசத்தோடு பூமியில் விழுந்தது. பூமியில் விழுந்த அந்தத் தேஜோ பாகத்தைக் கொண்டு விசுவகர்மா ஸ்ரீவிஷ்ணுவுக்குச் சக்கரத்தையும், சிவனுக்கு சூலத்தையும், சுப்ரமணியனுக்கு வேலாயுதத்தையும், குபேரனுக்கு சிபிகை என்ற ஆயுதத்தையும் செய்து கொடுத்தான்.
சூரியனுக்கு சாயாதேவியிடம் பிறந்த இரண்டாவது குமாரனை மனுவென்று சொன்னேன் அல்லவா? அந்த மனு முன்பிருந்த மனுவுக்கு இணையாக இருந்ததனால் சாவர்ணி என்று அழைக்கப்பட்டார். இனி வரும் எட்டாவது மனுவந்தரம் அந்தச் சாவர்ணியினுடையதாகும். அந்த மனுவந்தரத்தில் சுபதர், அமிதாபர் முக்கியர் என்ற தேவர்கள் உண்டாவார்கள். அந்தத் தேவர்கள் கணத்துக்கு இருபதின்மராக இருப்பார்கள். தீப்திமான், காலவர், இராமர், கிருபர், அசுவத்தாமா, எனது மகனான வியாசர், ருஷிய சிருங்கர் ஆகிய இவர்கள் அந்த மனுவந்தரத்தின் சப்தரிஷிகள். ஸ்ரீவிஷ்ணுவின் திருவருளால் பாதாளத்தில் வாசஞ்செய்து கொண்டிருக்கும் விரோசன குமாரரான பலிச்சக்கரவர்த்தி அந்த மனுவந்தரத்தில் தேவர்களுக்கு அரசனாவான். விரஜன், சர்வரீவரன், நிர்மோகன் முதலனா அந்த மனுவின் புதல்வர்கள் அரசராவார்கள். இனி ஒன்பதாவது மனு தக்ஷசாவர்ணி என்பவராவார்! அவரது அந்தரத்தில் வார், மரீசி கர்ப்பர் சுதர்மாக்கள் என்ற தேவர்கள் கணமொன்றுக்கு பன்னிருவராக இருப்பார்கள். அத்தேவதைகளுக்கு அற்புதன் என்போன் அதிபதியாவான். சவனன், தியுதிமான், அவியன் வசு மேதாதிதி, ஜோதிஷ்மான் சத்தியன் என்பவர்கள் சப்தரிஷிகள் ஆவார்கள். திருதகேது தீப்தகேது பஞ்சஹ்ஸ்தன் நிராமயன் பிருதுச் சிரவன் முதலியோர் அந்தத் தக்ஷõசார்வணி மனுவின் குமாரர்களாவர். இனிப் பிரமசாவர்ணி என்பவர் பத்தாவது மனுவாவர். அந்த அந்தரத்தில் சுதர்மாக்கள், வீருதர் என்ற தேவர்கள் நூறு நூறாய்ச் சேர்ந்த கூட்டமாக இருப்பார்கள். அவர்களுக்கு மகா பலசாலியான சாந்தி என்பவன் இந்திரனாவான். அந்த அந்தரத்தில் ஹவிஷ்மான், சுகிருதன், சத்தியன் தபோ மூர்த்தி, நாபாகன், அப்பிரதிமௌஜன், சத்தியகேது என்பவர்கள் சப்தரிஷிகளாவார்கள். சுஷேத்திரன், உத்தமன்ஜு, புரிஷேணன் முதலான பதின்மர் அந்த மனுவின் குமாரர்களாவார்கள். அவர்கள் இந்தப் பூமியை ரக்ஷித்து வருவார்கள். பதினோராவது மனு தர்மசாவர்ணி என்பவர், அவருடைய அந்தரத்திலே விகங்கமரென்றும், காமகமரென்றும், நிர்வாணரென்றும் ருசிகள் என்றும் சொல்லப்பட்ட தேவர்கள் முக்கியமாவார்கள். அவர்கள் கணம் ஒன்றுக்கு முப்பது முப்பது பேரிருப்பார்கள். விருஷா என்பவன் அவர்களுக்கு இந்திரனாவான். அப்போது நிச்சரன், அக்னித் தேஜன், வபுஷ்மான்; கிருணி; ஆருணி; அவிஷ்மான், அனகன் என்பவர்கள் சப்தரிஷிகளாவார்கள். சர்வத்திரகன்; ஸ்வதர்மா; தேவானீகன் முதலியவர்கள் அந்த மனுவின் புதல்வர்களாவார்கள். ருத்திர புத்திரராகிய ருத்திர சாவர்ணி என்பவர் பன்னிரண்டாவது மனுவாவார். அவருடைய அந்தரத்தில் ருது தாமா என்பவன் இந்திரனாவான். அரிதர், ரோகிதர், சமனசர், சுகர்மர்; சுராபர் என்ற தேவர் கூட்டம் ஒன்றுக்குப் பப்பத்துப் பேராக இருப்பார்கள். தபஸ்வீ, சுதபன், தபோமூர்த்தி, தபோரதி, தபோதிருதி, தபோதியுதி, தபோதனன் என்ற இந்த எழுவரும் சப்தரிஷிகள். தேவவான், உபதேவன், தேவசிரேஷ்டன் முதலான அந்த மனுபுத்திரர்கள் அரசர்களாவார்கள். ரவுச்சியன் என்பவர் பதின்மூன்றாவது மனுவாவர். சுத்திராமர், சுதாமர், சுகர்மர் என்ற தேவதைகள் கணத்துக்கு முப்பத்து மூவராக இருப்பார்கள். மகாவீரியனான திவஸ்வதி என்பவன் இந்திரனாவான். நிர்மோஹன், தத்துவதர்சி நிஷ்பிரகம்பியன், நிருச்சுகன், திருதிமான் புதல்வர்களான சித்திரசேனன், விசித்திரன் முதலியவர்கள் அப்பொழுது வேந்தராவார்கள். பதினாலாவது மனுவாக பவுமன் என்பவனாவான். அந்தக்காலத்தில் சுசி என்பவன் இந்திரனாக இருப்பான். சாக்ஷúஷர், பவித்திரர், கனிஷ்டர், பிராசிதர், வாசாவிருத்தர் என்று தேவகணங்கள் ஐந்துண்டு. அக்கினிபாகு; சுசி; சுக்கிரன், மாகதன், ஆக்னீத்திரன், யுத்தன், ததாஜிதன் என்போர் சப்தரிஷிகளாவார்கள். அந்த மனுவுக்கு உரு, கம்பீரபுத்தி முதலனா குமாரர்கள் பிறப்பார்கள். அவர்கள் தான் இந்தப் பூமியைக் காத்து வருவார்கள்.
கிருதயுக முதல் நான்கு யுகங்களின் முடிவில் வேதங்களுக்கும் அழிவுண்டாகும் அல்லவா? அப்போது அந்தச் சப்தரிஷிகள் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்து மீண்டும் அந்த வேதங்களைப் புதுப்பிப்பார்கள். கிருது யுகந்தோறும் அந்தந்த மனுக்கள் சுமீருதி என்ற தரும சாஸ்திரத்தை இயற்றி வருவார்கள். தேவதைகளோ மனுவந்தரம் முடியும் வரையில் யாகங்களில் ஹவிர்ப்பாகங்களைப் புசித்து வருவார்கள். மனுபுத்திரர்களாலும் அவரது குலத்தில் பிறக்கும் அரசர்களாலும் மனுவந்தரத்தின் இறுதிவரையிலும் பூமியானது ரக்ஷிக்கப்பட்டுவரும். இப்படியே மனுவந்தரம் தோறும் அவராலேயே உலகவுபகாரம் நிகழ்ந்து வரும். மனுவும் சப்தரிஷிகளும் தேவர்களும் இந்திரனும் மனுவின் புதல்வர்களும் எம்பெருமானுடைய சங்கல்ப காரியத்தை நிறைவேற்றும் அதிகார புருஷர்களாக விளங்குவார்கள். இவ்விதமாகப் பதினான்கு மனுவந்தரங்கள் கழியும்போது, ஆயிரம் யுகங்களின் அளவுள்ள ஒரு கல்பகாலம் சம்பூரணமாகின்றது. இது ஒரு பகற்காலம், இவ்வளவேயுள்ள இரவுக்காலமும் கழிந்த பிறகு பிரம சொரூபத்தை அனுஷ்டித்து எழுந்தருளியிருப்பவனும் முதல் சிருஷ்டி கர்த்தாவும், சகல ஐசுவரியமுள்ளவனும், சகல சொரூபியுமான ஸ்ரீஜனார்த்தன பகவான், மூவுலகையும் உட்கொண்டு யோக நித்திரையை ஆஸ்ரயித்து உலகமெல்லாம் அழிந்த மகார்ணவ ஜலத்திலே ஆதிசேடனாகிய படுக்கையிலே திருக்கண் வளர்வான். பிறகு, பகவான் யோக நித்திரையிலிருந்து விழித்து, ரஜோகுணத்தை யாச்ரயித்து முன்போலவே உலகப்படைப்பை நடத்துவான். மனுவந்தரந்தோறும் உள்ள மனு தேவ இந்திர சப்தரிஷி மனுபுத்திரர்கள் யாவரும் ஸ்திதியைச் செய்யவல்ல ஸ்ரீவிஷ்ணுவின் சாத்வீக அம்சமாவார்கள். உலகங்களை நிலைபெறச் செய்யும் தொழிலுடைய ஸ்ரீவிஷ்ணு சகல உயிரினங்களுக்கும் இதம் உண்டாகும்படிக் கிருதயுகத்தில் கபிலாதி சொரூபங்களைத் தரித்து உத்தமமான ஞானத்தைப் பிரகாசித்து அருள்வான். திரேதா யுகத்தில் அந்தந்தச் சக்கரவர்த்திகளின் சொரூபத்தைத் தரித்து, துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனங்களைச் செய்து வருகின்றார். துவாபர யுகத்திலே வேதவியாஸ சொரூபமாகி, ஒன்றாக இருக்கும் வேதத்தை இருக்கு முதலான நான்கு பிரதான பிரிவுகளாகவும் சாகா பேதங்களாலே அநேகம் பிரிவுகளாகவும் பிரிந்து உலகத்தை அனுக்கிரஹிக்கிறான். கலியுகத்திலோ கல்கி யவதாரஞ் செய்து, வேத சாஸ்திரங்களையும் தருமங்களையும் கடந்து நடக்கும் துஷ்டர்களை வழியிலே நிறுத்துகிறான். இவ்வாறு ஸ்ரீவிஷ்ணுபகவான் அந்தந்த ரூபத்தினால் உலகங்களைப் படைத்தும், காத்தும், சங்கரித்தும் வருகிறான். ஆகையால் சர்வபூத சொரூபியான எம்பெருமானைவிட ஒரு வஸ்துவும் இல்லை என்ற உண்மையை இந்தப் பிரகரணத்திலும் இதற்கு முந்தியவைகளாலும் உமக்கு தெளிவாகச் சொன்னேன். மைத்ரேயரே! இனித்தெரிந்து கொள்ள வேண்டியவை ஏதேனும் இருந்தால் கேட்பீராக.
3. வேதவியாசர்கள் வரிசை
பராசர முனிவரே! தாங்கள் கூறியதிலிருந்து, சகலமும் ஸ்ரீவிஷ்ணுவினிடத்தில் உண்டாகி, அவனிடத்திலேயே நிலைபெற்று லயித்து அவனுக்குச் சொரூபமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அந்த மகாத்மாவான எம்பெருமான் யுகந்தோறும் வியாசரூபியாகி வேதங்களைப் பிரித்தருளுகிறான் என்று கூறினீர்கள். எந்தெந்த யுகத்தில் யார் யார் வியாசர் ஆனார்களோ, அவர்களையும் வேதத்தின் சாகைகளைப் பற்றியச் சிறப்புகளையும் அடியேனுக்குச் சொல்லவேண்டும் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! வேதம் என்கிற மகாவிருட்சத்திற்குக் கிளைகள் பலவுண்டு. அளவற்ற அவற்றை விரித்துச் சொல்வது கடினம். ஆகையால் சுருக்கமாகச் சொல்கிறேன்; கேளும். எம்பெருமான் துவாபரயுகம்தோறும் வியாசராக அவதரித்து, மக்களுக்கு உற்சாகம், சாமர்த்தியம் ஓதித்தரிக்குஞ் சக்தி இவையெல்லாம் அற்பமாக இருப்பதைக் கண்டு, அவர்களின் நலனுக்காக ஒன்றாயிருக்கின்ற வேதத்தைப் பல பிரிவுகளாக்கி அருள்செய்கிறார். அந்த எம்பெருமான் எந்த உடலைச் சேர்ந்து, வேதபேதங்களைச் செய்தருளுகின்றானோ அவையெல்லாம் வேதவியாசர் என்ற திருநாமமுடைய திருமேனிகள் என்று அறிவீராக. இனி இந்த மனுவந்தரத்தில் யார் யார் வேதவியாசரானார்களோ அவர்களைப் பற்றியும் கூறுகிறேன்; கேளும். இந்த வைவஸ்வத மனுவந்தரத்திலே துவாபர யுகந்தோறும் மாமுனிவர்களால், இருபத்தெட்டு முறைகள் வேதம் பிரிக்கப்பட்டது. ஆகையால் இதுவரையிலும், இருபத்தெட்டு வியாசர்கள் சென்றிருக்கிறார்கள். முதலாவது துவாபர யுகத்தில் பிரம்மாவே வேதவியாசராக விளங்கினார். இரண்டாவது யுகத்தில் வைவஸ்வதமனு வியாசரானார். மூன்றாவது யுகத்தில் சுக்கிரரும், நான்காவதில் பிரகஸ்பதியும், ஐந்தில் சூரியனும், ஆறில் இயமனும், ஏழில் தேவேந்திரனும், எட்டாவதில் வசிஷ்டரும், ஒன்பதாவதில் சாரசுவதரும், பத்தாவதில் திரிதாமாவும், பதினோராவதில் திரிவிருஷாவும், பன்னிரண்டில் பரத்வாஜா மாமுனிவரும், பதின்மூன்றில் அந்தரிஷரும், பதினான்கில் தருமியும், பதினைந்தாவது யுகத்தில் திரையாருணியும், பதினாறாவது யுகத்தில் தனஞ்செயனும், பதினேழாவது யுகத்தில் கிருதஞ்சயனும், பதினெட்டாவது யுகத்தில் சஞ்சயனும், வேதவியாசரானார்கள். பிறகுள்ள துவாபரங்களில் முறையே பரத்வாஜர், கவுதமர், ஹரியாத்துமா என்று இதர புராணங்களில், கூறப்படும் உத்தமர் என்பவர், வாஜீசிரவன் என்ற மறுபெயருடைய வேனன், திருணபிந்து என்ற பெயருடைய சோமசுஷ்மாயணன், வால்மீகி என்னும் திருப்பெயரால் புகழ்பெற்ற பார்க்கவரிக்ஷர் இவர்கள் வேதவியாசராயினர். இதுபோல் இருபத்து நான்கு துவாபரயுகங்கள் கழிந்த பிறகு, இருபத்தைந்தாவது துவாபரத்தில் என் தந்தையான சக்தி மாமுனிவரும் இருபத்தாறாவதில் நானும், இருபத்தேழாவதில் ஜாதுகர்ணர் என்பவரும் வேதவியாசர்களானோம். பிறகு இருபத்தெட்டாவதான இந்தத் துவாபரயுகத்தில் என் மகனான கிருஷ்ணத் துவைபாயனன் வேதவிபாகஞ்செய்தான். இப்படி இருபத்தெட்டு மாமுனிவர்கள் துவாபரயுக முடிவான காலங்களில் வேதத்தை நான்காகப் பிரித்து உலக உபகாரம் செய்து வந்தார்கள். இனிவரும் துவாபர யுகத்தின் கடைசியில் துரோண குமாரனான அசுவத்தாமா வியாசராவார்.
ஏகாக்ஷர ஸ்வரூபமாய் நாசவிகாரங்களையடையாமலிருந்த பிரணவமானது உச்சரிக்கப்படுமளவில் தான் விரிவதனாலும் வேதத்தை விரிப்பதனாலும் பிரமம் என்று சொல்லப்படும், அஃது எவ்விதமெனில்; பிரணவத்தினிடத்தில் நித்தியமாக இருக்கிற முதல் மூன்று வியாகிருதிகளும் ரிக்கு முதலான நான்கு வேதங்களும் சொல்லப்படுகின்றன. ஆகையால் அத்தகைய மகிமையுள்ள பிரணவஸ்வரூபமான சுத்தப் பிரமத்தின் பொருட்டுத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! உலகத்தின் பிரளயத்திற்கும் உற்பத்திக்கும் எது காரணமாக இருக்கிறதோ, எது மகத்தத்துவத்திற்கும் மேன்மையானதாக மறைக்கப்படும் பொருளாக உள்ளதோ அத்தகைய பிரணவ பிரம்மத்திற்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். அகாதமாயும், அபாரமாயும் அழிவற்றதாயும் உலகத்தை யோகிப்பதாயுள்ள தமோ குணத்துக்கு இருப்பிடமாயும், சத்வகுணகாரியமான பிரகாசத்தினாலும் ரஜோகுண காரியமான பிரவர்த்தனத்தாலும் தருமம் முதலிய சகல புருஷார்த்த சாதகமாயும், சாங்கிய நூலறிவுடையோருக்குப் பிரகிருதி புருஷ விவேகத்தின் உபாயமாதலால் நிலைபெறும் இடமாகவும் சமதமாதி குணங்களைச் சாதிக்கவல்ல யோகியருக்கு அவற்றை சாதிக்கும் உபாயமாயும் விளங்குகிற அந்த சப்த பிரம்மத்துக்குத் தண்டனிடுகிறேன்! எது அவியக்தமாயும் அமுதமாயும் சாஸ்தவமாயும் இருக்கிற பிரவிருத்திப் பிரம்மாக இருக்கிறதோ அதை நான் வணங்குகிறேன். சர்வப் பிரபஞ்ச காரணமானப் பிரதானமாயும் பரமாத்ம ஸ்வரூபாதிகளைக் காட்டுவதனால் பரமாத்மாவுக்குக் காரணமாயும், உபநிஷத்துகளில் அக்ஷய முதலாய்ப் பிரதானம் ஈறாகவுள்ள சொற்களால் வெகுவிதமாய் சொல்லப்படுவதாயும், பிரிவற்றதாயும் சுத்தமாயும் இருக்கிற அந்தப் பிரணவப் பிரமத்தை வணங்குகிறேன்! பரமாத்மாவான ஸ்ரீவாசுதேவனுக்கு ஸ்வரூபமாக இருக்கிற அந்தப் பிரணவரூபமான பரப்பிரமத்திற்கு நிதம் எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். உறுப்பான அக்ஷர வகையால் மூன்றாய்ப் பிரிந்திருந்தாலும் அவயவ விஸ்வரூபத்தில் பிரிவற்றதாக இருக்கின்ற அந்தப் பிரணவமானது அந்த ஸ்ரீவாசுதேவனேயாகும்; சகல பூதங்களிலும் அந்த வாசுதேவன் ஒருவனே எழுந்தருளியிருந்தாலும், பேதபுத்தி விஷயங்களான பிரமம் சூத்திர இந்திராதி மூர்த்திகளை அநுஷ்டித்திருப்பதால் வெவ்வேறாகக் கருதப்படுகிறான். அவனே இருக்கு வேதசொரூபியும், யஜுர்வேத சொரூபியும், சாமவேத ஸ்வரூபியுமாய் இந்த மூன்று வேதாரசாரமான பிரணவ ஸ்வரூபியாகவும் புருஷார்த்த ஸ்வரூபியாகவும் இருக்கிறான். அவனே சகல ஆத்மாக்களிலும் அந்தராத்மாவாக இருக்கிறான், அவனே பிரிவற்ற வேதரூபமாக இருந்து பலவிதமான வேதங்களாகப் பேதிக்கப்படுகிறான். அந்த அனந்தனான ஸ்ரீபகவானே; வேத சாகைகளைப் பிரிக்கும் வியாசாதி ஸ்வரூபியாகிறான். சகல வேத சாகைகளின் ஞானமும் இந்த ஸ்ரீஅனந்தனே என்பதையும் அறிவீராக!
4. வேத சாகைகளின் பேதங்கள்
மைத்ரேயரே! ஆதியில் பிரம்மாவினால் அத்தியயனம் செய்யப்பட்ட வேதம், நான்கு பாதங்களையுடையதாகவும் அநேகவாயிரம் கிளைகளைக் கொண்டதாகவும் இருந்தது. அதிலிருந்து அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம் என்கிற ஐந்தும், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம யக்கியம் என்ற பஞ்சமகா யக்கியங்களும் ஆகப் பத்துவிதமான யக்கியங்களும், திரவியம், தேசம், பலம், காலம், ஞானம்; கர்மம், காரகம், சிரத்தை அவஸ்தை ஆகிருதி, நிஷ்டை என்ற உறுப்பினையுடையனவாக உண்டாயின. இந்த யாகங்கள் யாவும் சர்வபீஷ்டங்களையும் கொடுக்கும் திறமுள்ளனவாகும். பிறகு, இருபத்தெட்டாவது யுகத்தில் எனது மகனான வியாசர் மகா சமர்த்தராகையால் நான்கு பாதங்களைக் கொண்ட அந்தவொரு வேதத்தை நான்காகப் பிரித்தார். இவர் இப்பொழுது எப்படிப் பிரித்தாரோ, அப்படியே முந்திய யுகங்களிலும் நானும் மற்ற முனிவர்களும் பிரித்தோம். வியாசர் பிரித்ததைப் போலவே, ஸ்ரீமந் நாராயணாம்சம் பெற்று, மற்ற வியாசர்களும் அவ்வப்போது வேதத்தைப் பிரித்தருளினார்கள் என்பதை அறிவீராக. மைத்ரேயரே! இந்தப் பூவுலகத்தில் ஸ்ரீவாசுதேவனைத் தவிர மற்றொருவன் மகாபாரதம் இயற்ற வல்லவனாகான். ஆகையால் கிருஷ்ணத் துவைபாயர் என்ற பெயரையுடைய இந்த வியாசரை ஸ்ரீமந்நாராயண அம்சம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! இந்தத் துவாபார யுகத்தில் என் குமாரனான வியாசர் வேதங்களைப் பிரித்தவிதத்தைக் கூறுகிறேன்! கேளும். வியாச மாமுனிவர், வேதங்களைப் பிரிக்கும்படி சதுர்முகப் பிருமனால் நியமிக்கப்பட்டார். அவர் தாம் பிரித்த வேத சாகைகளை அத்தியயன பரம்பரையினால் பிரவர்த்திப்பிக்க வல்லவர்களான சீடர்களை ஆராய்ந்து தேடி இருக்கு வேதத்திற்கு பைல மகாமுனிவரையும், யஜுர் வேதத்துக்கு வைசம்பாயன மகாமுனிவரையும், சாம வேதத்துக்கு ஜைமினி முனிவரையும், அதர்வண வேதத்துக்கு சுமந்து முனிவரையும் இதிஹாச புராணங்களுக்கு மகா மேதையான ரோமஹர்ஷணர் என்ற சூதரையும் பரிக்கிரகித்து அருளினார். அத்துவர்யு உத்காதா, ஹோதா பிரம்மா என்ற நால்வகையான (சாதுர்ஹோத்திரம்) ரித்துவிக்குகளில் காரியமுள்ளதாகையால், யாக ஹேதுவாக இருந்த வேதம் ஒன்றையே நான்காகப் பிரித்தார். அவற்றினால் யக்கியங்களை நடத்தியருளினார். யஜுர் வேதங்களினால் அத்துவாயு காரியத்தையும் இருக்கு வேதங்களினால் ஹோதாவின் காரியத்தையும், சாம வேதங்களினால் உத்காதாவின் செயலையும் இந்த மூன்று வேதங்களினாலேயும் அரசர்களுக்கு வேண்டிய சாந்திக பவுஷ்டிகாதிகளையுடைய அதர்வண வேதத்தாலேயும் பிரம்மாவின் செயலையும் ஏற்படுத்தினார்.
இனி வேதங்களைப் பிரித்தது எப்படியெனில், அகண்டமான வேதத்திலிருந்து இருக்குகளையெல்லாம் பிரித்தெடுத்து ஒன்றாக்கி அதனை இருக்கு வேதம் என்றும், யசுகளைப் பிரித்தெடுத்துச் சேர்த்து யஜுர்வேதம் என்றும், சாமங்களைப் பிரித்தெடுத்து சேர்த்து சாமவேதம் என்றும், மூன்று வேதங்களைச் செய்து, அரசர்களுக்கு முக்கியமான காரியங்களையும் புரோகித கிருத்தியத்தையும் நிறைவேற்றுவதற்காக அதர்வ பாகங்களையெல்லாம் சேர்த்தெடுத்து அதர்வண வேதத்தையும் செய்தருளினார். இவ்விதமாக, முன்பு ஒன்றாக இருந்த வேத விருட்சமானது நான்கு கிளைகளாகப் பிரிந்து பிறகு பெருங்காடாயிற்று. பைலமா முனிவருக்கு வேதத்தை இரண்டு சம்ஹிதைகளாகச் செய்து இந்திரப் பிரமாதி என்பவருக்கு ஒன்றையும், பாஷ்களர் என்பவருக்கு மற்றொன்றையும் அருளினார். அந்தப் பாஷ்கள முனிவர் தாம் பெற்ற சம்ஹிதையை நான்காகச் செய்து போத்தியர், அக்கினி, மாடகர், யாக்கியவல்கியர், பராசரர் என்ற நால்வருக்கு, ருக்கு வேத சாகையின் பிரிவுகளான சாகைகளைப் போதித்தருளினார். அந்த இந்திரப் பிரமதி என்ற முனிவர் தாம் ஓதிய ரிக்வேத சம்ஹிதையை தமது மகனான மாண்டூகேயர் என்பவருக்கு போதித்தார். அந்த சம்ஹிதை சிஷ்ய பிரசிஷ்ய பரம்பரையினாலே வளர்ந்து கொண்டிருந்தது. இப்படியிருக்கும் பொழுது வேதமித்திரன் என்ற சாகலயர் தாம் ஓதிய இந்திர பிரமதி சாகையை ஐந்தாகச் செய்து முத்கலன் கோமுகன் வாச்சியன், சாலீயன், சைச்சிரன் என்ற தம்முடைய மாணவர் ஐவருக்குக் கொடுத்தார். அந்தச் சாகலருடைய சப்பிரமசாரியாண சாகபூர்ணா என்பவர் இந்திரபிரமதி சம்ஹிதையை மூன்றாகச் செய்து நிருத்தம் என்ற வேதாங்கம் ஒன்றையும் செய்து ஆக நான்கையும் தமது மாணவரான கிரவுஞ்சன், வைதாளிகன், பலாகன், நிருத்தன் என்ற நால்வருக்கும் வழங்கினார். முன்பு சொல்லிய சாகலியருடைய சப்பிரமச்சாரியான பாஷ்கலி என்பவர், இந்திர பிரமிதி சாøயை மூன்றாக்கி காலாயனி, கார்க்கியர், ஜபர் என்ற மாணவர் மூவருக்கு வழங்கினார். இந்தவிதமாக ரிக் வேதத்தின் சாகைகளும் அனு சாகைகளும் பிரதி சாகைகளும் உண்டாயின. மைத்ரேயரே! ருக்வேதசாகா கர்த்தாக்களான பஹ்ருசரை நான் உமக்குத் தெரிவித்தேன்.
5. யஜுர் வேத சாகைகள்
மைத்ரேயரே! யஜுர்வேத விருட்சத்துக்குப் பிரதானமான இருபத்தேழு சாகைகளை வைசம்பாயன மகாமுனிவர் செய்தார். பிறகு அவற்றைத் தமது சீடர் அநேகருக்குக் கொடுத்தார். அவர்களும் முறைப்படி ஓதி வந்தனர். அந்த வைசம்பாயன மகாமுனிக்கும் பிரமராதருடைய குமாரரான யாக்கியவல்க்கியர் என்பவர் சீடராக இருந்தார். அவர் முக்கியமான தருமங்களையெல்லாம் அறிந்தவர். அவர் குருவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். முன்பொரு சமயம், மகாமேருவிலே முனிவர்களெல்லாம் கூடித் தமது சபைக்கு எந்த ரிஷி இன்று வராமலிருக்கிறாரோ அவருக்கு ஏழு தினங்களுக்குள் பிரம்மஹத்தி தோஷம் வரக்கடவது என்று ஒரு சாபம் உண்டாக்கி இருந்தார்கள். அந்த ஏற்பாட்டைக் கடந்த இந்த வைசம்பாயன மகாமுனிவர் ஒரு நாள் தம்முடன் பிறந்தவனின் புத்திரரான பாலகன் ஒருவனைக் காலினால் தீண்ட, அந்தப் பாலகன் மரணமடைந்தான். அதனால் அவருக்கு பிரமஹத்தி தோஷம் சம்பவித்தது. அப்பொழுது வைசம்பாயனர் தமது சீடர்களை நோக்கி, ஓ சீடர்களே! எனக்காக நீங்கள் பிரம்மஹத்தி நீங்கும்படியான விரதத்தைச் செய்யுங்கள். வேறு ஒன்றும் நினைக்காதீர்கள்! என்று நியமித்தார். அப்போது யாக்கியவல்கியர் குருவை நோக்கி, ஆசாரியாரே! அற்ப தேஜஸ் உள்ளவர்களான இவர்களை ஏன் வருத்தவேண்டும்? அடியேன் ஒருவனே அந்த விரதத்தைச் செய்கிறேன் என்று சொல்ல, குருவானவர் கோபமடைந்து, யாக்கிய வல்கியரை நோக்கி, நீ பிராமணரை அவமானம் செய்தாய்! இத்தகைய நீ எனக்கு சீடனாக இருக்கத் தகாது. ஆகையால் என்னிடத்தில் ஓதிய வேதங்களை விட்டுவிடு. உத்தமமான பிராமணர்களை தேஜஸ் இல்லாதவர்கள் என்று சொன்னாய், இத்தகைய சீடர் எனக்கிருந்து ஆவதென்ன? அன்றியும் என் கட்டளையையும் பங்கப்படுத்தினாய். ஆகையால் வேதங்களை விட்டுவிடு! என்று கண்டித்தார். உடனே யாக்யவல்கியர், ஓ ஆசாரியாரே! தங்களிடமுள்ள பக்தியினால் இப்படிச் சொன்னேனேயல்லாது வேறில்லை. அப்படியிருக்கக் கோபித்துக் கொள்கிற உம்மாலேயும் எனக்கு ஆகவேண்டியதில்லை. உம்மிடத்தில் ஓதின வேதமும் எனக்கு வேண்டாம்! என்று சொல்லி, உதரத்தினால் பூசப்பட்ட ரூபமுடையவைகளாய்க் காணப்பட்ட யஜுர் வேதங்களைக் கக்கி, இதோ உங்களது வேதங்களை உங்களிடமே கொடுத்தேன்! என்று சொல்லிவிட்டுத் தம்முடைய மனதின் படிபோய்விட்டார். பின்பு யாக்யவல்கியர் கக்கிய வேதங்களை மற்றப் பிராமணர்கள், நேரடியாக இந்தக் கக்கலை உண்பது தகுதியல்ல வென்று எண்ணித் தித்திரி என்ற பறவைகளாக மாறி உண்டார்கள். ஆகையால் அவர்களுக்குத் தைத்திரீயர்கள் என்ற பெயர் உண்டாயிற்று. பிறகு வைசம்பாயனரின் மாணவர்கள் அனைவரும் தமது குருவின் கட்டளையை ஏற்று, பிரம்மஹத்தி நீங்குவதற்கான விரதத்தை ஆஸ்ரயித்து அனுசரித்தார்கள். அவர்களுக்கு அதனால் சரணாத்துவர்யுக்கள் என்ற பெயர் வழங்கலாயிற்று.
யாக்கியவல்கியரோ, சூரிய பகவானிடமே யசுசுகளைக் கிரகிக்க வேண்டும் என்று கருதி பிராணாயாமம் முதலியவற்றால் சூரியனைத் துதித்துப் போற்றலானார். மோட்சத்துக்கு மார்க்கமாயும், அளவற்ற தேஜஸைக் கொண்டவராயும், ருக்கு, யஜுர், சாம வேதங்களின் ரூபமாயும் இருக்கிற சூரியனை வணங்குகிறேன்! வெய்யிலுக்கும் மறைக்கும் ஹேதுவாக இருப்பதால் அக்கினி சோம ரூபியாகவும் அதன் காரணமாக உலகத்துக்குக் காரணமாயும், வெளிச்சத்தைத் தருபவராயும் அமிர்த ஹேதுவான காந்தியை பரிப்பவராயும் இருக்கும் அவருக்குத் தண்டனிடுகிறேன்! கலை காஷ்டை, நிமிஷம் முதலிய காலத்தை அறிவிக்கும் சொரூபத்தைக் கொண்டவராயும், தியானிக்க தக்கவராயும், பிரணவ ரூபியாயும், பிரபஞ்ச ரூபியாயும் இருப்பவருக்கு எனது வந்தனம் உரியதாகுக! தனது கிரணங்களினாலே சந்திரனைப் போஷித்துத் தேவதைகளையும், ஸ்வதாமிர்தத்தினாலே பிதுர்க்களையும் காத்து ரட்சித்து வருகின்ற திருப்தி ரூபமானவருக்கு நமஸ்காரஞ் செய்கிறேன். பனி, வெப்பம், மழை ஆகியவற்றை உண்டாக்கி, ஹரிக்கின்றவராயும் முக்காலங்களின் ஸ்வரூபியாகவும் இருக்கும் சூரியபகவானுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். இந்த உலகத்தின் இருளைப் போக்கி, ஜகத்துக்கெல்லாம் அதிபதியாயும், சத்துவகுணசரீரம் உள்ளவராயும் இருக்கிற ஆதித்த பகவானுக்கு நமஸ்காரங்களைச் செய்கிறேன். எந்தத் தேவன் உதயமாகாமற் போனால் ஜனங்கள் சத்கருமங்களைச் செய்வதற்குத் தகுதியுடையவராக மாட்டார்களோ, தண்ணீரும் சுத்த ஹேதுவாக மாட்டாதோ, அத்தகைய சூரியதேவனை வணங்கித் தொழுகிறேன்! எந்தத் தேவனது கதிர்களால் ஸ்பரிசிக்கப்பட்டு மனிதன் சத்காரியங்களுக்கு யோக்கியன் ஆகின்றானோ, அத்தகைய சுத்தி காரணமான தேவனைத் தொழுகின்றேன்! பிரேரகனாயும் உற்பத்தி செய்பவனாயும் அந்தகாரத்தைப் போக்குவோனாகவும் இருக்கின்ற தேவனுக்கு எனது வணக்கங்கள்! தேவர்களுக்கெல்லாம் அதியாய் இருக்கும் ஆதித்த பகவானுக்கு பலமுறைகள் வந்தனஞ் செய்கிறேன். எந்த தேவனுடைய தேரானது இதமும் ரமணீயமுமான தேஜோமயமாக இருக்கிறதோ, குதிரைகள் ஞானரூபங்களாயும், அமிர்தங்களாயும் இருந்து அந்த ரதத்தை இழுக்கின்றனவோ, உலகங்களுக்கெல்லாம் கண்ணாக இருக்கும் அந்தப் பகவானைத் தொழுகிறேன்! என்று இவ்விதமாக யாக்கியவல்கியர் சூரியனை வணங்கி வழிபட்டு வந்தார். அப்போது சூரியபகவான் குதிரை வடிவில் அவர் முன்பு, தோன்றி, ஓ முனிவரே! உமக்கு வேண்டும் வரத்தைக் கேளும்; என்றார். அதனால் யாக்கியவல்கியர் சூரியனைத் தொழுது, சுவாமி! எனது குருவான வைசம்பாயன மகாமுனிவருக்கும், தெரியாத யஜுர் வேதங்களை எனக்கு வழங்கி அருள்புரிய வேண்டும்! என்று வேண்டினார். உடனே சூரியபகவான், அவருக்கு அவர் வேண்டிய வண்ணம் வியாசரது உபதேசமில்லாமையால், வைசம்பாயன முனிவருக்குத் தெரியாத அயாதயாமங்கள் என்ற யஜீசுகளை வழங்கியருளினார். அந்த சாகைகளை அத்தியயனஞ் செய்தவர்களுக்கு வாஜிகள் அல்லது வாஜசனேயர் என்ற பெயர் வழங்கலாயிற்று. சூரியன் (வாஜி) குதிரை வடிவத்தில் அந்த வேதத்தை உபதேசித்ததால் அந்தப் பெயர் உண்டாயிற்று. அந்த வாஜசனேய, சங்கிசையை யாக்கியவல்கிய முனிவர் காண்வசாகை முதலிய பதினைந்து சாகைகளாகப் பிரித்தார். இவ்வாறு தான் யஜுர் வேதத்தின் பிரிவுகள் உண்டாயின.
6. சாம, அதர்வண வேதங்கள், புராணங்கள்
மைத்ரேயரே! சாமவேத விருட்சத்தின் சாகா பேதங்களையும் கேட்பீராக, வியாசரது சீடரான ஜைமினியானவர், தம்முடைய குமாரரான சுமந்து என்பவருக்கு ஒரு சம்ஹிதையை உபதேசிக்க அவரும் தம்முடைய மகனான சுத்துவா என்பவருக்கு அதை உபதேசித்தார். பிறகு அந்தச் சுத்துவாவின் மகனான சுகர்மா என்பவர் தம் தந்தையிடம் தாம் கற்ற அந்த ஜைமினி சம்ஹிதையை ஓராயிரம் பிரிவுகளாகப் பிரித்துத் தமது மாணவருக்கும் கொடுத்தார். கவுசல்யர் என்னும் பெயர் பெற்றிருந்த அந்த ஹிரண்யநாபருக்கு வடநாட்டார் ஐநூறு பேர், சாம சாகையை ஓதும் சீடர்களானார்கள். அவர்கள் ஐநூறு சாகைகளை ஓதிக்கொண்டு ஒரு காலத்தில் கீழ்த்திசையில் இருந்ததால் கீழ்த்திசை சாமகர் என்று வழங்கப்பட்டனர். அந்த பவுஷ்பிஞ்சி என்பவருக்கும் லோகாக்ஷி கவுமுதி, கக்ஷீவான் லாங்கலி முதலிய சீடர்கள் இருந்தனர். அவர்கள் தாங்கள் ஓதிய சங்கிதைகளைப் பலவாக விரிவுரை செய்தனர். முன்னே சொன்ன இரணிய நாபருடைய சீடர்களில் ஒருவரான கிருதநாமா என்பவர் இருபத்து நான்கு சங்கிதைகளைத் தமது மாணவருக்கு ஓதுவித்தார். அவர்களும் இந்தச் சாம வேதத்தை மிகவும் விரிவுபடுத்தினர். இவ்விதமாகச் சாமவேதச் சாகைகளின் பிரிவுகள் உண்டாயின. இனி அதர்வண வேதத்தின் விரிவைச் சொல்கிறேன். வேதவியாச முனிவரிடம் அதர்வண வேதத்தைக் கற்றறிந்த சுமந்து என்ற முனிவர், அந்த அதர்வண வேதத்தைத் தமது சீடரான கபந்தர் என்பவரிடம் வழங்கினார். அந்த கபந்த முனிவர் அதை இரண்டு பிரிவுகளாக்கி தேவதரிசர், பத்தியர் என்ற சீடருக்கு வழங்கினார். அந்தத் தேவதரிசருக்கு, மேதன் பிரமபலி, சவுல்கா யனிபிப்பலாதன் என்ற நான்கு மாணவர்கள் இருந்தனர். அவர்கள் தேவதரிசர் செய்த நான்கு சங்கிதைகளையும் முறையே ஓதிவந்தனர்; பத்தியருக்கு ஜாபாலி குமுதாதி, சவுனகர் என்ற மூன்று மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் தமது ஆசிரியர் பிரித்த மூன்று சங்கிதைகளையும் பல சங்கிதைகளாகச் செய்தனர். அந்த சவுனகர் என்பவர் தம்முடைய சங்கிதையை இரண்டாகச் செய்து பப்புரு என்பவருக்கும், சைந்தவர் என்பவருக்கும் வழங்கினார். சைந்தவரின் சீடரான முஞ்சிசேர் என்பவர் தாம் பெற்ற சங்கிதை இரண்டாகப் பிரித்தார். அந்த சங்கிதைகளில் முக்கியமான பாகங்கள் ஐந்தாகும். அவை நக்ஷத்திர கல்ப்பம், வேத கல்ப்பம், சங்கீதா கல்ப்பம், ஆங்கிரச கல்ப்பம், சாந்தி கல்ப்பம் என்பனவாகும். நட்சத்திர கல்பம் என்பது நக்ஷத்திராதிகளுடைய சொரூப குணாதிகளை விவரிப்பதாகும். வேதகல்ப்பமாவது, பிரமத்துவம் முதலிய புரோகித காரியங்களைத் தெரிவிப்பதாகும். சங்கிதா கல்ப்பம் என்பது மந்திரங்களின் ஏற்பாட்டை உணர்த்துவது ஆங்கிரச கல்ப்பம்; ஸ்தம்பனமோஹன மாரணாதிகளான அபிசாரங்களைக் காட்டுவது யானை குதிரை முதலியவை பற்றிய பதினெட்டு சாந்திகளை விதிப்பது-சாந்தி கல்ப்பமாகும். இவைகளே அதர்வண வேதத்தில் சிறப்பானவை. இவ்விதமாக நான்கு வேதங்களின் விகற்பங்களை நான் உமக்கு அறிவித்தேன்.
இனிமேல், புராணங்களின் வரலாற்றைக் கூறுகிறேன்; கேளும்! புராணம் என்பது சாஸ்திரங்கள் அனைவற்றிலும் முதன்மையானதாகும். அது கிருதயுகத்தில் பிரும்மாவினால் நூறுகோடி கிரந்த விஸ்தாரமாக இயற்றப்பட்டு, பிராம்மம் என்ற பெயருடன் ஒன்றாகவே இருந்தது. பின்பு, திரேதா யுகத்திலே அதை ரிஷிகள் நூற்றுப் பதினெட்டு சம்ஹிதைகளோடு கூடிய பதினெட்டுப் பிரிவுகளுடன் கோடிக்கிரந்த விஸ்தாரமாகச் செய்தனர். பிறகு, வேதவியாசர் துவாபரயுகத்தின் இறுதியில் அப்புராணங்களின் சாரங்களை எடுத்து, நான்கு லக்ஷம் கிரந்த விஸ்தாரமுடையதாய், பாரதாதி ஆக்கியானங்களும் பிருதிவீ கீதை பிதுரு கீதை முதலான காதைகளையும் வராக கல்ப்பாதி, கல்ப்ப நிர்ணயங்களும், சிருஷ்டி மனுவந்தராதிகளும், வமிச வமிசானு சரிதங்களும் விளங்கும்படியாக பதினெட்டுப் புராண சங்கிதைகளைச் செய்து, தமது மாணவரான சூதமுனிவருக்கு உபதேசித்தனர். அந்த சூதர் என்ற ரோம ஹர்ஷணருக்கு சுமதி, அக்கினி, வர்ச்சன், மித்திராயு, சாம்சபாயனன், அகிருதவிரணன், சாவர்ணி என்ற சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் அகிருத விரணரும் சாவர்ணியும்; சாம்சபாயனரும்; வியாச கிருதமான புராண சங்கிதையைப் பற்றி தாங்களும் சில சங்கிதைகளைச் செய்தனர்; இவற்றுக்கு எல்லாம் மூலமானதாக; ஒரு சங்கிதையை ரோமஹர்ஷணர் செய்தார். இந்த நான்கின் சாரத்தைக் கொண்டுதான்; நான் இந்தப் புராணத்தை இயற்றினேன். புராணங்கள் யாவற்றினும் முதன்மையாக இருந்தது பிரம்மபுராணம், அதை முதலாகக் கொண்ட பதினெட்டுப் புராணங்கள் உண்டென்று புராணங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அவையாவன, பிராம்மம், பாத்துமம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீபம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம் பவுஷ்யத்து, பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்காந்தம், வாமனம், கவுர்மம், மாச்சியம், காருடம், பிரமாண்டம் முதலியன அவற்றின் முறையே இதுவாகும். இந்தப் புராணங்கள் யாவும் சிருஷஅடி, சங்காரம், வமிசங்கள் மனுவந்திரங்கள். வமிசங்களுடைய வரலாறுகள் ஆகியவற்றை அறிவிப்பனவாகும்.
மைத்ரேயரே! உமக்கு இப்போது நான் சொல்லி வருவது பத்மபுராணத்துக்குப் பிற்படச் சொல்லிய விஷ்ணு புராணமாகும். இது புராண வரிசையில் மூன்றாவதாகும், எல்லாப் புராணங்களிலும் சொல்லப்படுகிற சிருஷ்டி முதலியவற்றில் ஸ்ரீவிஷ்ணுவே மூலம் என்று கர்த்துருத்துவாதி அறங்களைக் கொண்டு சொல்லப்படுகிறது. ஆன்ம கோடிகளில் அறியவேண்டிய அறங்கள் அனைத்தையும், முன்பு சொன்ன நான்கு வேதங்களும் அவற்றின் அங்கங்களான சிøக்ஷ வியாகரணம் காந்தம்; நிருத்தம்; ஜோதிடம்; கல்ப்பம் என்ற ஆறும், மீமாம்சையும், நியாய நூலும், இதிகாச புராணங்களும், அறநூல்களும் ஆகிய பதினான்காகும். இவற்றுக்கு வித்யா ஸ்தானங்கள் என்றும் பெயர் உண்டு. இவை தவிர ஆயுர்வேதம் என்ற வைத்திய சாஸ்திரமும் தனுர்வேதம் என்ற ஆயுத சாஸ்திரமும் அர்த்தி சாஸ்திரம் என்ற ராஜநீதி சாஸ்திரமும் உபவித்தைகள் என்று சொல்லப்படும். இவையனைத்தும் பதினெட்டு வித்தைகள் என்று பொதுப்பட வழங்குகின்றன. இந்த வித்தைகளை வகுத்தவர்கள் பிரமரிஷிகள், தேவரிஷிகள், ராஜரிஷிகள் என்ற மூவகை முனிவர்களாவர். மைத்ரேயரே! நீங்கள் கேட்டபடி வேதத்தின் மூல சாகைகளையும், அச்சாகைகளின் பிரிவுகளையும் அவற்றின் கர்த்தாக்களையும் அவை பிரிவதன் காரணத்தையும் உமக்குத் தெரியும்படிச் சொன்னேன். சகல மனுவந்திரத்திலேயும் இப்படி சாகைகளின் பிரிப்பது சமமாக நிகழ்ந்துவரும், ஆதியில் பிரும்மாவினால் அறியப்பட்ட வேதம் நித்தியமானது. ஆகையால் இந்தச் சாகைகள் அனைத்தும் அவற்றின் விகற்பங்கள் ஆகும். இவ்விதமாக வேத சம்பந்தமான யாவற்றையும் சொல்லிவிட்டேன். இனி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!
7. வைணவத்தின் பெருமை
மைத்ரேயர் தமது குருவை நோக்கி, முனிவர் பெருமானே! நான் கேட்டவற்றுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லிவிட்டீர்கள். இனியும் ஒரு விஷயம் இருக்கிறது அதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். அதாவது சப்தத்துவீபங்களும் பாதாளங்களும் மேலேழு உலகங்களும் அடங்கியிருக்கிற இந்தப் பிரம்மாண்டத்துக்குள்ளே ஸ்தூலங்களும் சூஷ்மங்களும், சூஷ்மத்தில் சூஷ்மங்களும் ஸ்தூலங்களில் ஸ்தூலங்களுமாக ஏராளமான உயிரினங்கள் வாசஞ்செய்கின்றன. இத்தனை பெரிய பிரம்மாண்டத்துக்குள்ளே அங்குலத்தின் எட்டில் ஒரு பங்கு இடமானாலுங்கூட பிராணிகள் இல்லாமலிருப்ப தில்லை. இந்த உயிரினங்கள் எல்லாம் கர்மபந்தத்தினாலே, இங்கே பிறக்கின்றன. பின்னர் ஆயுளின் முடிவிலே எமனுக்கு வயப்பட்டு, அவனால் நியமிக்கப்பட்ட அந்தந்த வாதனைகளை அனுபவித்து, அந்த வாதனைக்காலம் தீர்ந்த பிறகு தேவாதி யோனிகளிலே பிறந்திருக்கிறார்களே இவ்விதமாக உயிரினங்கள் ஜனன மரணக்கிரமத்தில் சுழன்று கொண்டேயிருக்கின்றன என்பது சாஸ்திரங்களின் நிச்சயம். இத்தகைய சம்சாரத்திலே சரீரிகள் எந்தக் காரியஞ்செய்தால் எமனுக்கு வயப்படாமல் தப்புவார்கள். அந்தக் காரியம் யாது? இதை அடியேனுக்குக் கூறியருள வேண்டுகிறேன் என்று வேண்டினார், பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! இந்தக் கேள்வியைத் தான் முன்பு ஒரு காலத்தில் நகுலன் பீஷ்மரைக் கேட்டான். அதற்குப் பீஷ்மர் சொன்னதாவது, குழந்தாய்! கலிங்க தேசத்திலிருந்து எனக்கு நண்பரான பிராமணர் ஒருவர் வந்திருந்தார். அவரை நான் கேட்டவைகளில் எதெது எப்படியெப்படியாகும் என்று சொல்வாரோ, அப்படியப்படியே நிகழ்ந்தன. அவர் பூர்வஜன்ம ஞானமும் யோக திருஷ்டியும் உடையவர். ஆகையால், நான் கேட்டவைகளுக்கு அவர் சொன்னது ஒருபோதும் பொய்த்ததில்லை. அந்த நம்பிக்கையினாலே நீ கேட்ட கேள்வியை நானும் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் யோகியானவர், நான் கேட்ட கேள்வியைக் குறித்து மிகவும் இரகசியமான யமகிங்கர சம்வாதம் ஒன்றை என்னிடம் சொன்னார். அதாவது ஒரு காலத்தில் பாசக்கயிற்றைக் கைகளில் எடுத்துக் கொண்டு பிராணிகளைக் கவர்ந்து வரச்சென்ற தன்னுடைய சேவகனை யமதர்மராஜன் தன்னருகே அழைத்து, தூதுவனே! நீ உனது தொழிலை நடத்தும்போது ஸ்ரீமதுசூதனை ஆஸ்ரயித்தவரைத் தீண்டாதே விட்டு விடு. நான் மற்றவர்களுக்கு பிரபுவேயல்லாது வைணவருக்குப் பிரபுவல்லேன் சகல தேவதைகளாலும் ஆராதிக்கப்பட்ட பெருமாளாலே நான் எமன் என்று பெயரிடப்பட்டுச் சகல பிராணிகளுடைய பாப புண்ணியங்களையெல்லாம் ஆராய்ந்து நடத்தும்படி நியமிக்கப்ப்டேன்! ஆகையால், அந்த ஸ்ரீஹரிக்கு வசப்பட்டு இருக்கிறானே தவிர, சுதந்திரனாக இல்லை. அவர் எனக்கிட்ட அதிகாரத்தில் நான் சிறிதளவு தவறினாலும் கூட என்னையும் அந்த ஸ்ரீவிஷ்ணுவானவர் தண்டிப்பார். கை வளையல், கிரீடம், குண்டலம் முதலிய ஆபரணங்களிலேயும் காரணமான ஸ்வர்ணம் ஒன்றே வியாபித்திருக்கிறது. அதுபோல சுரர், நரர் பசு முதலான சகல காரிய வர்க்கங்களிலும் அந்த ஸ்ரீஹரி ஒருவனே வியாபித்திருக்கிறார். ஆகையால் அவரே சர்வேஸ்வரனாகும்.
மற்ற தேவர்கள் எல்லாம் அவருடைய வியாப்தியைக் கொண்டு அவரிட்ட கட்டளைகளைச் செலுத்தி வருகிறார்கள். காற்றினால் கிளப்பப்பட்ட மண்புழுதி, காற்றடங்கியதும் மறுபடியும் பூமியிலேயே படிவது போல், பகவத் சங்கல்பத்தினால் உண்டான சுரநராதிகள் அனைத்தும், பகவத் குணவைஷம்யம் அடங்கியதும் அந்தப் பகவானிடத்திலேயே லயமடைந்து விடுகின்றன. சகல தேவதைகளாலும் அர்ச்சிக்கப்பட்ட திருவடித்தாமரைகளுள்ள அந்த ஸ்ரீஹரியை எந்த மனிதன் நிருபாதிகமாகச் சேவித்துக் கொண்டிருப்பானோ அந்த மனிதனைக் கண்டதும் நெருப்பைக் கண்டதுபோல் தூரத்தில் விட்டோடிப் போகக் கடவாயாக! என்று கட்டளையிட்டான். அதற்கு கிங்கரன், எமதேவரே! அந்த ஸ்ரீவிஷ்ணுவினுடைய பக்தனை இன்னான் என்று நான் அறிந்து நடப்பதற்காக அந்த மகா புருஷனுடைய லக்ஷணங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன் என்றான். அதற்கு யமதர்மன், கேளாய்; கிங்கரனே! எவன் தன்னுடைய வருணாசிரம தர்மங்களை பகவானுடைய ஆக்ஞா கைங்கரியங்களாகக் கருதி, அதனின்று தவறாமலும், தனது நண்பனிடத்திலும் பகைவரிடத்திலும் பாரபட்சமின்றி சமபுத்தியுள்ளவனாகவும், ஒரு பொருளையும் அபகரிக்காதவனாகவும், ஓருயிரையுங் கொல்லாதவனாகவும் மிகவும் தூய்மையான இதயமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அந்தப் புருஷனையே ஸ்ரீவிஷ்ணுபக்தன் என்று அறிந்து கொள்வாயாக. தூய்மையான ஞானமுடைய எவனுடைய சித்தமானது கலி சம்பந்தமான ராகத்துவேஷங்களால் அழுக்கடையாமல் எப்போதுமே ஸ்ரீமந்நாராயணன் வாசஞ்செய்யப்பெற்று விளங்குமோ, அந்த மனிதனை ஸ்ரீஜனார்த்தனனுடைய பரமபக்தன் என்று அறிவாயாக. அன்பர்களின் இதயகமலங்களில் படிக மலைபோல் ஸ்ரீபகவான் நிர்மலனாய் எழுந்தருளியிருக்கும் போது மாச்சரியம் முதலான தோஷங்கள், பறந்து போகும். குளிர்ச்சியான சந்திரனுடைய கதிர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் அக்கினியின் காந்தியும்; சிறப்பும் பெருமையடையாததுபோல்! எவனது இதயத்தில் ஸ்ரீவாசுதேவன் எழுந்தருளியிருப்õனோ, அந்த மனிதன் நிர்மல புத்தியுடையவனாகவும், மாச்சரியம் முதலிய குறைகள் அற்றவனாகவும், மிகவும் சாந்தனாகவும், தூய்மையான ஒழுக்கமுடையவனாகவும், இனிமையாகவும் மிதமாகப் பேசுபவனாகவும்; கர்வம், வஞ்சனையற்றவனாகவும் விளங்குவான். அந்த அனாதியான பகவான் எவனுடைய இதயத்தில் எழுந்தருளியிருக்கிறானோ அவன்; இளமையான தேமாமரமானது தானிருக்குஞ் செழிப்பினாலேயே தனக்குள் இருக்கிற பூசாரத்தைக் காட்டுவதுபோல, உலகத்திலுள்ள எவருக்குள்ளும் சாந்தனாய் விளங்குவான். அந்த அவியயனாய் அநாதியான ஸ்ரீஹரிபகவான் சங்கு, சக்கராதி ஆயுத சமேதனாய் ஒருவனுடைய இதயத்தில் வீற்றிருப்பானானால் அந்தப் புருஷனுடைய பாவமெல்லாம் சூரியன் இருக்குமிடத்திலே அந்தகாரம் மறைவது போல, பாபவினாசனனான அந்தப் பகவானாலே கண்டிக்கப்பட்டுபோம். இயம, நியமாதிகளாலே பாவத்தைக் கழித்தவர்களாயும் எப்பொழுதும் ஸ்ரீ அச்சுதனிடத்திலே பற்றி நிற்கின்ற சித்தமுள்ளவர்களாயும் மாச்சரியம் மதம் முதலிய குற்றங்கள் கழித்தவர்களான புருஷர்களைக் கண்டால்; கிங்கரனே; நீ மிகவும் தூரத்தில் விலகிப்போய் விடுவாயாக.
எந்தப் புருஷன் யாருமில்லாத ஏகாந்த ஸ்தானத்திலே பிறரது பொருளான சுவர்ணராசி ஜொலித்துக் கொண்டிருக்கக் கண்டாலும் அதைத் துரும்பு போல நினைத்துத் தீண்டாமற் போவானோ, எம்பெருமான் ஒருவனையேயன்றி மற்ற எதையும் புத்திபிற்பற்றாமல் இருப்பானோ அவன் ஸ்ரீவிஷ்ணு பக்தன் என்று தெரிந்து கொள்வாயாக. இனிமேல் ஸ்ரீவிஷ்ணு பக்தியற்ற பாவியினுடைய இலக்கணமுஞ் சொல்கிறேன், கேட்பாயாக. எவன் பிறரது பொருளை எவ்விதத்திலாவது அபகரிப்பவனாகவும், உயிர்களைக் கொல்வோனாகவும், கடினமாகப் பேசுவோனாகவும், தீவினையால் வீணான மதம் பொருந்திச் சித்தங்கலங்கியவனாகவும் இருக்கிறானோ; அவனது இதயத்தில் அந்த ஸ்ரீஅனந்தன் வாசஞ்செய்யமாட்டான். எவன் நற்புத்தியில்லாதவனாய் பிறருடைய செல்வத்திலே பொறாமைப்படுபவனாயும், எம்பெருமானை ஆராதியாமலும் பாகவத விஷயத்தில் திரவியத்தை வினியோகப்படுத்தாமலும் இருக்கிறானோ, அந்த அதமனுடைய மனதில் ஸ்ரீஜனார்த்தனன் எழுந்தருளமாட்டான். எவன் தனது நண்பனிடத்திலும், உறவினரிடத்திலும், மனைவியிடத்திலும், மக்களிடத்திலும், பெற்றோரிடத்திலும் வஞ்சனையுள்ளவனாய், பணமே பெரிதாகப் பேராசை கொண்டவனாக இருக்கிறானோ, அந்த அதம் ஸ்ரீவிஷ்ணு பக்தனல்ல என்பதைத் தெரிந்துகொள். எவன் அயோக்கிய நினைவும் அயோக்கிய செயலிலும் நாட்டமும், அயோக்கிய சகவாசமும் பாபகர்மச் செயலும் செய்பவனாகக் கழிக்கின்றானோ அந்த மனித மிருகத்தை ஸ்ரீவிஷ்ணு பக்தன் அல்லன் என்று அறிந்து கொள்வாயாக! பரமபுருஷனான ஸ்ரீவாசுதேவனொருவனே சகல பிரபஞ்சமும் தாமுமாகத் திருமேனியுடையவனாக இருக்கிறான் என்று யாருக்கு ஸ்ரீஅனந்தனிடத்திலே சர்வ வியாபகத்துவ புத்தி ஸ்திரமாக இருக்கிறதோ, அத்தகைய மகான்களைக் கண்டால் தூரத்தில் விலகிப் போவாயாக! ஓ பத்மநாபா! வாசுதேவா, விஷ்ணுவே, தரணீதரா, அச்சுதா, சங்கு சக்கர கதாபாணி, நீ அடியேங்களுக்கு சரணமாக வேண்டும், என்று யாரால் சொல்லிக் கொண்டிருப்பார்களோ, அத்தகைய மகாபரிசுத்த புருஷர்களை நீ கண்ணெடுத்தும் பாராமல் தூரமாக ஓடிப்போவாயாக. சத்தியஞானானந்தமயனாய்ப் பிரகாசிக்கும் அந்த எம்பெருமான் எவனுடைய இதயகமலத்தில் வாசஞ்செய்து கொண்டிருப்பானோ அந்த மகாபுருஷனுடைய கடாக்ஷம் இருக்குமிடமெல்லாம் நீ செல்லத்தக்கவனல்ல, நானும் அங்கு செல்லத்தக்கவன் அல்லேன் பதறிச் சென்றால், எம்பெருமானது திருவாழியின் தேஜோவிசேஷத்தால் பதராக்கப்பட்டு விடுவோம். அந்த மகான், ஸ்ரீவைகுண்ட திவ்வியலோகத்துக்கே எழுந்தருளத்தக்கவன். ஆகையால் சூரியாதி உலகங்களைப் போல நம்முடைய லோகம் அந்தப் பரமபாகவதன் பரமபதத்துக்குச் செல்லும் வழியாகாமையினால், அவனது கடாக்ஷத்தக்கும் உரியதல்ல என்று சூரியனது மகனான யமகர்மராஜன் தன் சேவகனுக்குக் கட்டளையிட்டான். அந்த யமகிங்கரன், இந்த ரகசியத்தை எனக்கு உபதேசித்தான். பீஷ்மரே! உம்மிடம் உள்ள நட்பினால் அதை நான் உமக்குப் போதித்தேன்! என்று அந்த கலிங்கதேசத்துப் பிராமணர் எனக்குக் கூறினார். அந்த ரகசியத்தை நான் உமக்குச் சொன்னேன். இந்தச் சம்சாரப் பெருங்கடலில் ஆழ்ந்து கிடக்கும் பிராணிகளுக்கு ஸ்ரீமந்நாராயணனைவிடப் புகலிடம் வேறில்லை. எவன் எம்பெருமானிடம் ஆன்ம சமர்ப்பணம் செய்துள்ளானோ, அவன் திறத்திலே யமகிங்கரரும்; காலதண்டமும்; காலபாசமும் ஒன்றுஞ் செய்ய இயலாது. இதை நீர் நன்றாக அறிந்து கொள்வீராக என்று பீஷ்மர் நகுலருக்குப் போதித்தார். மைத்ரேயரே! நான் அதை உமக்குச் சொன்னேன். இனி யாது கேட்கவேண்டுமோ கேளும்.
8. ஆராதனை முறையும் வருணாசிரம தருமமும்
சுவாமீ! இந்த சம்சாரத்தை வெல்ல வேண்டுவோர் ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதிக்க வேண்டும் என்பது சித்தமாயிற்றல்லவா? இனிமேல் அந்த லோகநாதனை ஆராதிக்க வேண்டிய வழிமுறைகளையும், அப்படி ஆராதிக்கும் மனிதர், எந்தப் பயனை அடைவார்கள் என்பதையும் நான் அறிய விரும்புகிறேன். எனவே அவற்றை அடியேனுக்கு விளக்கியருள வேண்டும் என்று மைத்ரேயர், பராசர முனிவரிடம் வேண்டி நின்றார். பராசரரான பிரமரிஷி கூறலானார். மைத்ரேயரே! நீங்கள் இப்போது என்னைக் கேட்ட விஷயத்தை முன்பொரு காலத்தில் சகரமாமன்னன், அவுர்வ மகாரிஷியைக் கேட்டான். அதற்கு அந்த முனிவர் கொடுத்த விடையை நான் உமக்குச் சொல்லுகிறேன் கேளும். சகர மகாராசன், பிருகு மாமுனிவரின் குமாரரான அவுர்வ மகாமுனிவரை வணங்கி, ஸ்ரீவிஷ்ணுவின் ஆராதனை சம்பந்தமான காரியத்தையும், அந்த ஆராதனையால் விளையும் பயனையும் கேட்க அந்த முனிவர் அருளி செய்கிறார். சகர மாமன்னா! ஸ்ரீமந்நாராயணனை ஆராதனை செய்பவன் இந்தப் பூலோக வாழ்வுக்குரிய ஐசுவரியங்களையும் சொர்க்கலோக சம்பந்தமான இந்திராதி போகங்களையும், சொர்க்கத்திலிருப்பவரும் விரும்புகின்ற சதுர்முகாதி பதங்களையும் யாவற்றுக்கும் மேலான மோட்சானந்தத்தையும் பெறுவான். ஆராதனை செய்பவன் எதை எதை எவ்வளவுக்கெவ்வளவு விரும்புகிறானோ அதையதை அவ்வவ்வளவும் பெறுவான். இதில் ஐயமில்லை. அந்தச் சுவாமியை ஆராதிக்கும் வகையெப்படி என்றால், அதையும் சொல்கிறேன் கேட்பீராக. வர்ணாசிரமங்களுக்கு ஏற்ற ஒழுக்கமுள்ளவனாலேயே அந்தப் பரமபுருஷன் ஆராதிக்கப்படுவான். இந்த வழியேயல்லாமல் வேறுவழிகள் அவ்வெம்பெருமானுக்கு மகிழ்ச்சியளிப்பதல்ல. இந்திராதி தேவதாந்தா சம்பந்தமுடையவைகளாகத் தோன்றும் சகல யாகங்களினாலேயும் யாரும் அந்த எம்பெருமானையே பூஜிக்கின்றான். எந்த மந்திரங்களை ஜெபித்தாலும் அவனையே ஜபிக்கிறான். இதுபோலவே அன்னியரை ஹிம்சை செய்தாலும் அவனையை இம்சித்தவனாகிறான். எம்பெருமானே சகல தேவதைகளிலும் வியாபித்திருப்பவன். ஆகையால் எவனும் தனக்குள்ள வர்ணாசிரமங்களுக்குரிய நல்லொழுக்க முடையவனாயிருந்தே அந்த சுவாமியை ஆராதனை செய்ய வேண்டும். பிராமணனானாலும், வேந்தனானாலும், வைசியனானாலும், சூத்திரனானாலும் தனக்குரிய தருமத்தோடு எம்பெருமானை ஆராதிக்க வேண்டுமேயன்றி வேறுவிதமாக ஆராதித்தல் கூடாது. யார் பிறர்மீது அபவாதஞ் சொல்வதும், கோட் சொல்வதும், பொய் பேசுவதும் பிறர் நடுங்கும்படியாகப் பேசுதலுமாகிய குற்றங்களில்லாதவனோ அவனாலே தான் எம்பெருமான் ஆராதிக்கப்படுவான். எவன் பிறர் மனையாளிடத்திலும் பிறர் பொருளிடத்திலும், பிறரைத் துன்புறுத்தலும், மனம் பற்றாமல் இருப்பவனோ அப்படிப்பட்டவனாலேயே, பரமபுருஷன் மகிழ்விக்கப்படுவான். எவன் உயிரினங்களை அடிக்காமலும், துன்புறுத்தாமலும், கேடு நினைக்காமலும் இருப்பானோ, அவனால் தான் புரு÷ஷாத்தமன் மகிழ்விக்கப்படுவான். தேவர் விப்பிரர், ஆசாரியார் ஆகியவர்களுடைய பணிவிடைகளில் எவன் நிராதனாக இருப்பானோ அவனாலேதான் ஸ்ரீயப்பதி மகிழ்வடைவான். எவன் தனது மக்கள் மனைவி முதலியவரிடத்தில் அன்போடு நன்மைகளை நினைப்பதைப்போலவே, பிறரிடத்திலும் நன்மையை நினைத்திருப்பானோ, அவனே ஸ்ரீமந்நாராயணனுக்கு மகிழ்ச்சியூட்டவல்லவன்! யாருடைய மனம், ராகத் துவேஷாதிகளால் கெட்டுப் போகாமலிருக்குமோ, அந்தத் தூய்மையான மனத்தினாலேயே ஸ்ரீகோவிந்தன் மகிழ்விக்கப்படுவான், அரசனே வருணாசிரமங்களில் சாஸ்திரங்களினால் ஏற்பட்ட தருமங்கள் எவைகள் உண்டோ, அவைகளில் தவறாமல் நிற்பவன் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதிக்கத் தக்கவன் என்று அதர்வமா முனிவர் சொன்னார்.
அதைக் கேட்ட சகர மாமன்னன், முனிவரே! வர்ணாசிரமங்களையும் அவற்றிற்குரிய தருமங்களையும் நான் அறிய விரும்புகிறேன், ஆகையால் அவற்றை அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய முனிவர் தொடர்ந்து கூறலானார். அரசே! பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வகை வருணத்தாரின் தர்மங்களையும் நான் சொல்கிறேன். மனம் ஒன்றிக் கேட்பீராக. பிராமணன் தானம் கொடுக்கவும், தானம் பெறவும், யாகங்கள் செய்யவும் அதிகாரமுடையவனாய், வேத அத்தியயனத்தை விடாமற் செய்து கொண்டு நாள்தோறும் ஸ்நானத் தர்ப்பணாதிகளையும் சிரவுதஸ்மார்த்த அக்னி ஹோத்திரங்களையும் செய்து வரவேண்டும். பிழைப்புக்காகப் பிறருக்கு வைதிக கருமங்களைச் செய்வித்தலும், வேதசாஸ்திரங்களை ஓதுவித்தலும் நியாயமான நேர்மை வழிகளில் சம்பாதித்த பொருளைக் கொண்டு பிறர் கொடுக்கும் யோக்கியமான தானங்களை ஏற்றுக்கொள்வதுமாகிய செயல்களைச் செய்யலாம். பிராமணன் உயிரினங்கள் அனைத்துக்கும் நன்மையைச் செய்யவேண்டுமேயல்லாது தீமையைச் செய்யலாகாது. ஏனெனில் எல்லா உயிரினங்களிடத்தும் அன்பாக இருப்பதே பிராமணனுக்கு உயர்வு ஆகும். இந்தத் தன்மைதான் அந்தணன் என்கின்ற பெயருக்குக் காரணமாகும். பிறருடைய ரத்தினக் கற்களை, பருக்காங் கற்களைப் போல சமமான எண்ணங்கொண்டு கருதவேண்டும். ரிது காலத்திலே தன் பத்தினியோடு சேர்வது பிராமணனுக்கு நியாயமாகும். இனி க்ஷத்திரியன், தன் விருப்பப்படி பிராமணருக்குத் தானங்கள் கொடுக்கவும், யாகங்களைச் செய்யவும் வேதசாஸ்திரங்களை ஓதவும் அதிகாரமுடையவன். அவனுக்கு ஆயுதம் எடுத்துச் சேவிப்பதும், பூமியைக் காப்பதும் ஜீவனங்களாகும். ஆயினும் பூமியைக் காப்பதே முக்கியமாகும். அரசர்கள் யாவரும் பூமியைப் பரிபாலனம் செய்தே கிருத கிருத்தியராகிறார்கள். ஏனென்றால், அந்தத் தேசத்தில் நடக்கும் யாகம், தவம் முதலிய புண்ணிய கருமங்களில் அரசனுக்கும் பங்குண்டாகிறது என்பதையும் அறிவீராக. எந்த அரசன் துஷ்டரைத் தண்டித்து, நல்லோரைப் பரிபாலனஞ் செய்து, வருணாசிரம தர்மங்களை நிலைநிறுத்துகிறானோ அந்த அரசன் தனக்கு இஷ்டமான புண்ணிய உலகங்களை அடைகிறான். இனி வைசியன், பிரம்மதேவனின் பசுக்களைப் பரிபாலனஞ் செய்தலும் பயிர் செய்தலுமாகிய செயல்களைப் பிழைப்பாகக் கற்பித்தான். அவனுக்கும், வேத அத்தியயனமும் தானமும், யாகமும் செய்ய அதிகாரமுண்டு. மேலும் அவன் முந்தியவர்களைப் போல, நித்திய நைமித்திய தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டும் வரவேண்டும். சூத்திரனோ முந்தியவருக்கு ஊழியஞ் செய்து பிழைத்தலும் அவர்களுக்குச் சேவ பூதனாக இருந்து அவரால் போஷிக்கப்படவும் வேண்டும் அல்லது சரக்குகளைக் கொண்டு விற்றுவரும் பொருளினாலாவது பிழைப்பதையுமே பிழைப்புத்தொழிலாகக் கொண்டிருக்கிறேன். மேலும் அவனுக்குத் தானங்கொடுக்கவும் பாகயக்ஞவிதியினால், பிதுர்க்கிரியை முதலான கருமங்களைச் செய்யவும் அதிகாரமுண்டு. வேத வேதங்கள் ஒழிந்தவற்றை ஓதலாம். சகல வர்ணத்தாரும் தங்கள் ஊழியக்காரர் முதலானவர்களைப் போஷிப்பதற்காக வேண்டும் பொருள் நியாயமான வழிகளில் சம்பாதிக்கலாம். சந்ததிக்காகத் தத்தமது பெண்டிரிடத்தில் ருதுக்காலங்களில் சேரலாம். எல்லா வருணத்தாருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய குணங்களாவன.
சகல பூதங்களிடமும் தயை, பொறுமை, கர்வமில்லாமை சத்தியம், சித்தி, வீண் வருத்தமின்மை, மங்களச் செய்கை, இனிமையாகப் பேசுதல், சிநேகிக்கும் குணம், வீணாசையின்மை, லோபியாகாமை அழுக்காறின்மை ஆகியவை முக்கியமாகும். பிரம்மச்சரியம் முதலிய ஆசிரமங்களுக்கும் இந்தத் தருமங்கள் பொதுவானவையாகும். ஆயினும் பிராமணாதிகளுக்கு ஆபத்தருமங்களைச் சொல்கிறேன் கேட்பீராக. பிராமணன் அரசனது கருமத்தையும் க்ஷத்திரியன் வைசியரது கருமத்தையும், வைசியர் சூத்திரரது கருமத்தையும் செய்யலாம். பிராமணர், க்ஷத்திரியர் ஆகிய இருதரத்தாரும் சூத்திரரது கருமத்தைச் செய்யலாகாது. பிராமணர், க்ஷத்திரியர் ஆகிய இருதரத்தாரும் சக்தியுடையோராக இருந்தால் கீழோருடைய கருமங்களை விட வேண்டும். ஆபத்தில் சூத்திர கருமம் தவிர மற்றையக் கீழான தருமங்களைச் செய்யலாம். இவ்விதமாக அல்லாமல் அவனவன் நினைப்பது போல் அந்தந்தத் தொழில்களைச் செய்து சாதி சங்கரஞ் செய்யலாகாது. அரசே! வருண தருமங்களை இப்போது நான் உனக்குச் சொன்னேன், இனிமேல் ஆசிரம தருமங்களை சொல்கிறேன். கேட்பாயாக என்று அவுர்வ மகாமுனிவர் சகர மாமன்னனிடம் கூறலானார்.
9. வாழ்க்கையின் நான்கு தருமங்கள்
சகர மாமன்னனே! கேட்பாயாக. முதலில் பிரும்மசரியா சிரம தர்மத்தைச் சொல்கிறேன், சிறுவனாக இருப்பவன் உபநயனம் செய்யப்பெற்று, விரத நியமங்களோடு வேதங்களை ஓதிக்கொண்டு, குருவின் இல்லத்திலேயே இருக்க வேண்டும். சவுசாசார சம்பன்னனாய்க் குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும். விரத அனுஷ்டானமுடையவனாய் வேதங்களை ஓதவேண்டும். காலையிலும் மாலையிலும் சூரியனையும் அக்கினியையும் மனம் ஒன்றிப் பூஜிக்க வேண்டும். குருவை வணங்கி வரவேண்டும். சீடன் தன் குருநாதர் நிற்கும் அளவில் தானும் நிற்கவும், அவர் போகும்போது தானும் உடன் செல்லவும், அவர் மேலே உட்கார்ந்தால் கீழே உட்காரவும் வேண்டும். ஒருபோதும் அவருக்கு விரோதமான காரியங்களைச் செய்யக்கூடாது அவர் ஓதென்று கட்டளையிட்டவுடனேயே அவருக்கு எதிரில் நின்றுவேறு நினைப்பின்றி வேதத்தை ஓதி உணரவேண்டும். அதன் பிறகு, குருவின் அனுமதியைப் பெற்று பிøக்ஷயினால் தான் கொண்டு வந்த அடிசிலை உண்ண வேண்டும். ஆசிரியர் நீராடியபிறகு அந்த நீரில் சீடன் நீராட வேண்டும். தினந்தோறும் காலையில் சமித்து, தருப்பை முதலியவைகளைக் குருவுக்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இவ்விதமாகக் குருவினிடத்தில் ஓதவேண்டிய வேதங்களை அந்தந்த ஞானம் வருமளவும் ஓதிய பிறகு அவரிடம் அனுமதி பெற்று குருவுக்கு காணிக்கை அளித்துவிட்டுக் கிருகஸ்தாசிரமத்துக்குப் போக வேண்டும். இனி கிருகஸ்தாசிரமம் என்ற இல்லற வாழ்க்கையின் ஒழுக்கத்தைச் சொல்கிறேன். பிரம்மச்சரியத்தைக் கழித்த பிறகு விதிப்படி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தனக்குத் தகுந்த தொழிலில் திரவியஞ்சம்பாதித்து, இல்லற வாழ்வை நடத்த வேண்டும். பருவக்காலங்களில் பிண்டம் இடுவதினாலும் எள்ளுடன் கூடிய தண்ணீராலும் பிதுர்க்களையும், யாகங்களினால் தேவர்களையும், அன்னங்களினால் அதிதிகளையும், வேத அத்தி யமனத்தினால் முனிவர்களையும், சந்ததியினால் பிரமதேவனையும் பூதபலி கர்மத்தால் பூதங்களையும், வாத்சலியம் அன்பினால் சகல உலகங்களையும் திருப்திப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இவ்விதம் செய்து வருகிற கிரஸ்தன் தனது சுக கர்மங்களினால் சம்பாதிக்கப்பட்ட அநேக புண்ணிய உலகங்களை அடைவான். பிøக்ஷயெடுத்துண்ணும் துறவிகள் பிரமச்சாரிகள் யாருண்டோ, அவர்கள் யாவரும் கிருகஸ்தனிடத்திலேயே நிலைபெற்றிருக்கின்றனர். ஆகையால் இந்த இல்லறமானது உயர்ந்ததாகும். மேலும் வேதங்களைக் கற்பதற்காகவும் தீர்ந்த ÷க்ஷத்திர யாத்திரைக்காகவும் பூமியைப் பார்ப்பதற்காகவும், பிராமணர்கள் சுதேசம் விட்டுத் திரிந்து கொண்டிருக்கின்றனர். சிலர் ஓரிடம் என்றில்லாமலும் ஆகாரமில்லாமலும் அஸ்தமனமாகும் இடமே வீடாகக் கொண்டு தங்குவோராகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகையோர் அனைவருக்கும் இல்லறத்தோரே சார்பாகவும், ரட்சிப்போராகவும் இருக்கின்றனர். இத்தகைய தேசாந்திரிகள் வருமளவில் நல்வரவு கேட்பது போன்ற இனிமையான பேச்சுக்களை இல்லறத்தோன் பேசி, ஆசனம், போஜனம், சயனம் முதலியவற்றை வழங்கவேண்டும். அதிதியானவன் எவனிடம் வந்து தன்னாசை கெட்டுத் திரும்பிப் போகிறானே, அந்த அதிதியானவன் அந்த இல்லறத்தானுக்குத் தனது பாவத்தைக் கொடுத்து விட்டு, அவனது புண்ணியத்தைத் தான் கொண்டு போகிறான்.
இல்லறத்தில் இருப்பவனுக்குப் பிறரை அவமதித்தல், அகங்காரம், டம்பம் கொடுத்து விட்டோமே என்ற மனத்தவிப்பு அடித்தல்; வைதல் இவையெல்லாம் மேன்மையாக மாட்டா! இத்தகைய கெட்ட குணங்களில்லாமல் நற்குணமுடையவனாய்; எந்த கிரஸ்தன் தனக்குரிய தர்மங்களை நன்றாகச் செய்து வருகின்றானோ அவன் சகல இடையூறுகளிலிருந்தும் விடுபட்டு உத்தமமான உலகங்களை அடைவான். இப்படிக் கிருஸ்தா சிரமத்திலிருந்து செய்ய வேண்டியவைகளைச் செய்து; வயது முதிர்ந்தவுடன் தனது புத்திரர்கள் வசம் தனது பத்தினியை ஒப்புவித்தாகிலும் அவளையும் தன்னுடன் அழைத்து கொண்டாகிலும் வனத்திற்குச் செல்லவேண்டும். அவ்வாறு செல்லுதலே வானப் பிரஸ்தாசிரமமாகும். இனி; வானப்பிரஸ்தாசிரம தர்மங்களைச் சொல்கிறேன். வானப்பிரஸ்தனானவன் இலை, கனி, கிழங்கு வகைகளைப் புசித்துக் கொண்டு தாடியும் சடையும் தரித்தவனாய், எல்லாப் பொருள்களிலும் பற்றற்று முனிவனாய் அந்தக் காட்டில் தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். முனிவனாக இருப்பவன், தோலையாகிலும் நாணற்புல் மரவுரி முதலியவற்றையாகிலும் உடுக்க வேண்டும். முச்சந்திகளிலும் நீராட வேண்டும். அந்த வானப்பிரஸ்தனுக்குத் தேவதா ஆராதனையும் ஹோமமுமான காரியங்களாகும். அரசே! முனிவனானவன் அப்பியஞ்சனம் செய்து கொள்ள வேண்டுமாயின் காட்டெண்ணையினால் செய்து கொள்வதே தகுதியானதாகும்! தவஞ்செய்தலும் குளிர்வெப்பம் முதலியவற்றை சகித்துக் கொள்வதும் முனிவனுக்குச் சிறப்பான தர்மங்களாகும். இத்தகைய முறையில் எந்த முனிவன் வானப்பிரஸ்த தருமத்தை அனுஷ்டிப்பானோ, அவனது தீராத தோஷங்களையெல்லாம் அக்கினி தகிப்பது போலத் தகித்து நிலையான உலகங்களை அடைவான். நான்காவது சந்நியாசிக்குரிய ஆசிரமம் என்று சொல்வார்கள். எவன் புத்திரக்களத்திராதிகளிலும் பொருள் முதலானவைகளிலும் மனப்பற்றில்லாமல் இருக்கிறானோ அவன் நான்காவதாச் சிரமத்தில் பிரவேசிக்க வேண்டும். இவ்விதமாகக் காமக்குரோத மாச்சரியங்கள் இல்லாமல் சந்நியாசம் பெற்றுத் தர்மார்த்த தர்மங்களுக்கு உரிய சகல முயற்சிகளையும் விட்டு; பிரம்மஞான நிஷ்டை செய்து வரவேண்டும். அந்தச் சந்நியாசி நண்பரிடமும் பகைவரிடமும் ஒரேவிதமான மித்திர பாவத்துடனிருந்து, மிருகங்கள், பறவைகள் முதலிய பலவற்றுக்கும் வாக்கு, மனம், காயம் என்ற மூன்றிலும் துரோகஞ் செய்யாமல் இருக்க வேண்டும். புத்திராதித் தொடர்புகளையும் விட்டுவிட வேண்டும். கிராமத்தில் ஓரிரவும், பட்டணத்தில் ஐந்து இரவுகளும்; இப்படி யாக இடத்துக்குத் தக்கவாறு வாசஞ்செய்து கொண்டு ஒருவருடைய பகைமையோ; நட்போ வராதவாறு நடந்து கொள்ள வேண்டும். யதியானவன்; வீட்டில் இருப்போரெல்லாம் புகிக்கும் காலம் அறிந்து சாதி குலாச்சாரங்களில் சிறந்தவர் வீட்டுக்கு யாசகத்துக்குப் போகலாம். சந்நியாசியானவன் காமக்குரோத, லோப மதபேதங்களை விட்டு விட்டு ஒன்றிலும் எனது என்ற அபிமானம் இல்லாதவனாக இருக்க வேண்டும். எந்தத் துறவி சகல, பூதங்களுக்கும் அபயங்கொடுத்துச் சஞ்சரிக்கிறானோ; அவனுக்கு சகல பூதங்களாலும் பயமில்லை. இப்படி பிராமணன் துறவியாகித் தன்னுடைய அக்கினி ஹோத்திரத்தை, தனது சரீரத்திலேயே இருக்கச் செய்து தன் சரீரத்தில் இருக்கும் அக்கினியைக் குறித்து, தன் முகமாகிய குண்டலத்தில், பிøக்ஷயினால் கிடைத்த அவிசுகளை விதிப்படி ஓமஞ்செய்து வருவானாகில் அவன் அக்கினி சயனஞ் செய்தவர்கள் அடையும் உலகங்களை அடைவான். இது சாதாரண சந்நியாசிகளைக் குறித்ததாகும். விசேஷ சந்நியாசிக் கிரமத்தைக் கேட்பீராக. எவன் நிச்சய புத்தியுள்ளவனாய், தூய்மையாளனாய் இந்தச் சந்நியாசத்தை முறைப்படி ஆஸ்ரயிக்கிறானோ அவர் எரிகரும்பில்லாத அக்கினியைப் போல, மிகவும் சாந்தமான ஜோதியாய் விளங்கும் பிரமலோகத்தை அடைவான்.
10. விரத விவாகக் கிரியைகள்
சகர மாமன்னன், அவுர்வமா முனிவரை நோக்கி, முனிவரே வருணாசிரம தர்மங்களைத் தாங்கள் கூறியருளினீர்கள். இனி, புருஷனுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கூறவேண்டும் என்றான். அரசனே; நீ கேட்ட தருமங்களைச் சொல்கிறேன். கவனமாகக் கேட்பாயாக. தந்தை முதலில் காப்பாதானம் முதலியவற்றைச் செய்து; பிள்ளை பிறந்தவுடன் அதற்கு ஜாதகர்மாதிகளான சகல கிரியைகளையும் அப்யுதயங்களாயும் செய்ய வேண்டும். பிராமணர்கள் தேவக் கிரியையாகிலும் நாந்தீ பிதுர்க்கிரியையாகிலும் செய்யும்போது பிராமணர்களை இரட்டையாகவும்; கிழக்குமுகமாக எழுந்தருளச் செய்து; திருப்தியடையும்படி திருவமுது செய்விக்க வேண்டும். நாந்தீ முகர்களான பிதுர்க்களைக் குறித்து தயிர், யவங்கள், இலந்தை இவற்றோடு கலந்த பண்டங்களை மகிழ்ச்சியோடு தேவ தீர்த்தத்தினாலேயாகிலும் பிரஜாபத்திய தீர்த்தத்தினாலே யாகிலும் பிரதக்ஷிணமாகக் கொடுக்க வேண்டும். இதுபோலவே மற்ற விருத்திகளிலும் செய்வது அவசியம். பிறகு தகப்பன் பத்தாவது நாள் முதலாக சாஸ்திரங்களில் சொல்லிய நாட்களில் தகப்பனே அந்தப் பிள்ளைக்குப் பெயர் சூட்ட வேண்டும். தன் குலதெய்வத்தின் பெயரையாவது, தன் மூதாதையரின் பெயரையாவது முன்னிட்டதாயும், புருஷனுக்குப் புருஷவாசகமாயும், ஸ்திரீக்கு ஸ்தீரிவாசகமாயும், பொருட் குறைவற்றதாயும், வெட்கமாகவோ, அருவருக்க வைப்பதாகவோ இராததாகவும், சமமான எழுத்துள்ளதாயும், மிக நீளாததாயும், மிகவும் குறுகாததாயும், அதிகக் கடினமான எழுத்தற்றதாயும், எளிதில் அழைக்கக் கூடியதாயும் உள்ள பெயரை வைக்க வேண்டும். அந்தப் பெயரானது பிராம்மணருக்கு சர்வ என்ற சொல்லோடும்; க்ஷத்திரியருக்கு வர்ம என்ற சொல்லோடும்; வைசியருக்கு குப்த என்ற சொல்லோடும், சூத்திரருக்குத் தாஸ என்ற சொல்லோடும் இறுதியில் அமைந்ததாக இருக்க வேண்டும். விஷ்ணுசர்மா; இந்திர வர்மா, சந்திரகுப்தன், ஹரிதாஸ் என்பது போலப் பெயரிட வேண்டும்.
இதுபோலப் பெயரிட்ட பிறகு, உபநிஷ்கிரமணம் முதல் உபநயனம் ஈறாகவுள்ள சம்ஸ்காரங்களைப் பிதாவினால் செய்யப் பெற்றவுடன், அந்தப் பிள்ளை குருவிடம் சென்று, முன் சொல்லிய விதிப்படி வேதசாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்து குருவுக்குத் தக்ஷிணை கொடுத்து; வேத விரதங்களை அனுஷ்டித்து; கிருதஹஸ்தாசிரமத்துக்குப் போக இச்சிப்பாணாகில்; அவன் திருமணஞ்செய்து கொள்ள வேண்டும். அல்லது நைஷ்டிக பிரமச்சாரியாகக் காலத்தைக் கழிக்க வேண்டும். அப்படிப் பிரமச்சாரியாக வாழ்ந்தால்; குருவுக்கோ அல்லது குருபுத்திரர்களிடமோ பணிவிடைசெய்து வரவேண்டும். அதுவுமில்லையெனில் தன் விருப்பம் போல வானப்பிரஸ்தனாகவோ, சந்நியாசியாகவோ ஆகலாம். ஒருவன் திருமணஞ் செய்துகொள்ளும் விஷயத்தில்; தன் வயதுக்கு மூன்றில் ஒரு பங்குக்கு மேற்படாத வயதுள்ள பெண்ணாகவும், அதிக அடர்த்தியான கூந்தலும் மிகக்குறைவான கூந்தலும் இல்லாதவளாகவும், அதிக கறுப்பாகவோ, வெளுப்பாகவோ இல்லாத நல்ல நிறமுடையவளாகவும், அளவுக்கு மேற்படாமலும் குறையாமலும் உள்ள அவயவங்கள் வாய்ந்தவளாகவும், சூத்திராதிகளால் வளர்க்கப்படாதவளாகவும், இழிகுலத்தில் பிறவாதவளாகவும், உடம்பில் மிகவும் ரோமங்கள் மொய்த்திராதவளாகவும், வியாதியில்லாதவளாகவும்; துஷ்டத்தனமும் துஷ்ட வார்த்தைகளும், அற்றவளாகவும் குஷ்டம் முதலிய நோயுடைய தாய் தந்தையருக்குப் பிறவாதவளாகவும்; மீசை முதலான புருஷ லட்சணங்கள் இல்லாதவளாகவும்; ஆண் பிள்ளையைப் போன்ற தோற்றம் இல்லாதவளாகவும்; பருத்த கனமான குரலில்லாதவளாகவும், மெலிவற்றவளாகவும், காக்கை போன்ற குரலற்றவளாகவும், இமைகளில் மயிர்ச் செறிவுள்ளவளாகவும், வட்டமாகவோ, வேறுவிதமாகவோ அவலக்ஷணப்படாத நேத்திரங்களைக் கொண்டவளாகவும், ரோமம் நிறைந்த கணைக்கால்களும் உயர்ந்த புறக்கால்களும் இல்லாதவளாகவும்; சிரிக்கும்போது கபோலங்கள் பாழி போல் குழிவடையாதவளாகவும் உக்கிரமான காந்தியும் மிகச் சிவந்த கண்களும், மிகப் பெருத்த கைகால்களும் இல்லாதவளாகவும் இரண்டு புருவங்களும் சமமாக அமைந்தவளாகவும் அப்புருவங்கள் நெருங்கி ஒன்றோடொன்று இணைந்திராதவளாகவும் மிகவும் இடைவெளியுள்ள பற்களற்றவளாகவும், கொடுமையும் பயங்கரமுமான தோற்றமில்லாதவளாகவும் உள்ள பெண்ணையே திருமணஞ் செய்துகொள்ள வேண்டும். மேலும் அந்தப் பெண்ணின் தாய்வழியில் ஐந்து தலைமுறைக்கும் தகப்பன் வரிசையில் ஏழுதலைமுறைக்கும் உட்படாதவளாக இருக்கவேண்டும். இத்தகைய கன்னிகையை நியாயமான விதிமுறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்தத் திருமணம் பிராம்மம் தைவம் ஆரிஷம் பிரஜாபத்தியம், ஆசுரம் காந்தருவம் ராக்ஷசம், பைசாசம் என்ற எட்டுவகையாகும். இவற்றினுள் எந்த வருணத்துக்கு எது தகும் என்று முனிவர்கள் விதித்துள்ளனரோ அந்த விவாகத்தையே செய்யவேண்டும். மற்றவற்றை ஒதுக்கிவிடவேண்டும். இவ்விதமாகத் திருமணஞ் செய்து கொண்டவளுடன், யாதொரு குறைவுமில்லாமல் இல்லறம் நடத்தி வருபவன் சுகமும் பயனும் பெறுவான்.
சகர மாமன்னன் அவுர்வ முனிவரை நோக்கி, சுவாமி! இல்லறத்தான் கடைபிடிக்க வேண்டிய நல்ல ஒழுக்கங்களைப் பற்றி நான் அறியவிரும்புகிறேன். எத்தகைய நல்லஒழுக்கங்களில் ஒரு மனிதன் இம்மையிலும் மறுமையிலும் துன்பமடைய மாட்டானோ அத்தகையவற்றை எனக்குச் சொல்லியருள வேண்டும் என்றான். அரசனே! நல்ல ஒழுக்கமுறைமையைச் சொல்கிறேன் கேட்பாயாக. நல்லொழுக்கமுடையவனால் இம்மை மறுமைகள் சாதிக்கப்படும். சாதுக்கள் என்போர் தோஷம் இல்லாதவர்கள். அவர்களுடைய ஒழுக்கமே சதாசாரம் எனப்படும். இவற்றைச் சொன்னவரும் செய்தவரும் சப்த ரிஷிகளும் மனுக்களும் பிரஜாயதிகளுமாவர். புத்திசாலியாக இருப்பவன் பிராம்ம முகூர்த்தத்தில் விழித்து எழவேண்டும். மனதிலே தருமத்தையும் அதனோடு விரோதப்படாத அர்த்தத்தையும் சிந்திக்கவேண்டும். இந்த இரண்டுக்கும் எந்தவிதமான விரோதமும் உண்டாக்காத காமத்தைச் சிந்திக்கலாம். இப்படி சிந்திப்பதால் இம்மை மறுமைப் பயன்கள் கெடாமல் இருக்கும். தர்ம விரோதிகளான அர்த்த காமங்களை விடவேண்டும். தருமமேயானாலும் பின்பு சுகத்தையுண்டாக்காததாயும் லோக விரோதமாயும் இருக்குமானால் அதை விட்டுவிட வேண்டும். இவ்விதமாகச் சிந்தித்து எழுந்த பிறகு, நைருதி மூலையில், அம்பு பாயுமளவு தூரத்துக்கு அப்பால் சென்று, ஜலமலாதிகளைக் கழிக்க வேண்டும். வீட்டிலேயே கால் கழுவுதல் முதலிய அசுத்தமான காரியங்களைச் செய்யக்கூடாது.
தனது நிழல், மரத்து நிழல், பசு, சூரியன், அக்கினி, காற்று, பெரியோர் ஆகியவைகளுக்கு எதிராக இருந்து மலஜலங் கழிக்கலாகாது. உழுத நிலத்திலும் பயிர்களின் நடுவிலும், பசுக்கள் இருக்குமிடத்திலும், ஜன சமூகத்திலும் வழியிலும் ஆற்றங்கரைகளிலும், தண்ணீரிலும் மயானத்திலும் மலஜலங் கழிக்கலாகாது. பூணூலை காதில் சுற்றிக் கொண்டு வஸ்திரத்தால் தலையை மூடிக்கொண்டு, பகலில் வடக்கு முகமாகவும், இரவில் தெற்கு முகமாகவும் இருந்து மல ஜலாதிகளைக் கழிக்க வேண்டும். இவ்விதம் செய்யச் சங்கடமாக இருந்தால் தக்கவாறு செய்யலாம். அந்த இடங்களில் நெடு நேரம் இராமலும் ஒன்றும் பேசாமலும் காரியம் முடிந்தவுடன் செத்தைகளால் அந்த இடத்தை மறைத்துவிட்டு வரவேண்டும். பிறகு புற்றுமண், பெருச்சாளி தோண்டிய மண், தண்ணீருக்குள் இருக்கிற மண், சவுசஞ் செய்து மிகுந்த மண், அசுத்த பூமியிலிருக்கும் மண், மிகச்சிறிய பூச்சிகளோடு கூடிய மண், கலப்பையால் கிளப்பப்பட்ட புழுதி மண், ஆகியவற்றை விட்டு வேறுமண்ணைக் கொண்டு வந்து, முதலாவதாக அசுத்தத்தின் நாற்றமும் பற்றும் போகும்படிச் சவுசம் செய்து, பிறகு சுத்திக்காக இலிங்கத்தில் ஒருமுறையும், அபானத்தில் மூன்று முறையும் இடக்கையில் பத்துத் தரமும், மறுபடியும் இரண்டு கைகளிலும் ஏழு முறைகளும் மண்ணிட்டுச் சுத்தமான நீரினால் கழுவிக்கொண்டு, சுத்தமாயும் துர்க்கந்தமற்றதாயும், குமிழி கிளம்பாததாயுமுள்ள ஜலத்தினால் மும்முறை ஆசமனஞ்செய்து தலையைத் துடைத்து, சிரசில் புரோஷித்தல், இருதயம் முதலான அங்கங்களைத் தொடுதல் முதலிய விதிகளை முறைப்படிச் செய்து, பிறகு அகமர்ஷண சூத்த முதலான மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே நீராடி, சந்தியா வந்தனம் முதலிய கிரியைகளை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். பிறகு தலை ஆற்றி, அலங்கரித்தல் முதலிய மங்களங்களைச் செய்து கொண்டு தனக்கு விதித்திருக்கிற வகையால் திரவிய சம்பாதனை செய்தல் வேண்டும். சோமஸ்ம்ஸ்தைகள், ஹவிஸ் ஸம்ஸ்தைகள், பாக ஸம்ஸ்தைகள் என்ற யாகங்களெல்லாம் திரவியத்தைக் கொண்டே செய்ய வேண்டியவைகளாகையால், பிராமணன் தனத்தைச் சம்பாதிக்க வேண்டும். நியாயமான முறையில் தனத்தைச் சம்பாதிக்க முயற்சிசெய்து, நடுப்பகலானவுடன் மறுபடியும் நீராட வேண்டும். எப்போதும் நதிகள், நதங்கள், தடாகங்கள் இவற்றின் நன்னீரிலே நீராட வேண்டும். இவைகள் கிடைக்காமற்போனால் கிணற்று நீரை எடுத்துக் கொண்டாகிலும் அதற்கும் சக்தியில்லாமற் போனால் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்தாகிலும் நீராட வேண்டும். இப்படிக் குளித்த பிறகு பரிசுத்தமான வஸ்திரங்களை அணிந்து தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும், பிதுர்களுக்கும் அவரவர் தீர்த்தத்தினாலே விதிப்படித் தர்ப்பணஞ் செய்ய வேண்டும்.
பிதுர்க்கள், பிதாமகர், பிரபிதாமகர், மாதாமகர் மாத்ரு பிதாமகர், மாத்ரு பிரபிதாமகர் ஆகியவைகளுக்கு தர்ப்பணஞ் செய்ய வேண்டும். காமியமாய் மாதா, மாதாமகி, அவர்களுடைய தாய், குருபத்தினி, குரு, அம்மான் முதலானோர், இஷ்டமித்திரன், அரசன், இவர்களுக்கும் ப்ரீதியுண்டாகும்படி தர்ப்பணஞ் செய்யலாம். அப்போது ஜெபிக்க வேண்டியது தேவாசுர, யக்ஷ, நாககந்தருவ, ராக்ஷச, பைசாச, குஹ்யக, சித்த, கூச்மாண்ட, தருக்களும் ஜலம், பூமி, காற்று இவைகளைப் பற்றிய ஜந்துக்களும் என்னால் கொடுக்கப்படும் இந்தத் தண்ணீரால் திருப்தியடைய வேண்டும். நரகங்களில் பல யாதனைகளில் இருப்பவர்களின் சோர்வு நீங்குவதற்காக இந்தத் தண்ணீரை நான் விடுகிறேன். எனக்கு உறவினராக இருப்பவர்களுக்கும் உறவினராகாதாருக்கும் ஜன்மாந்தரத்தில் பந்துக்களாக இருந்தவர்களுக்கும் என்னிடத்தில் தண்ணீரை வேண்டுவோருக்கும் எங்கேயாவது பசி, தாகங்களால் வருந்தியிருப்போருக்கும் நான் விடுகின்ற இந்த எள்ளுந் தண்ணீரும் திருப்தியை உண்டாக்கக் கடவன என்று இவ்விதமாகச் சொல்லித் தர்ப்பணம் செய்ய வேண்டும். அரசனே! இதற்குப் பெயர் காமியத் தர்ப்பணம், இதனால் சகல லோகத்துக்கும் பிரீதியுண்டாகும். இதனால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இதுபோல மனப்பூர்வமாகச் சிரத்தையோடு காமிய தர்ப்பணத்தைச் செய்து பிறகு மாத்தியான்னிகம் செய்து, வேதங்களாலே பிரகாசித்துக் கொண்டு உலகப் படைப்புக் கர்த்தாவாய், மகாசுத்தியுள்ளவராய்க் கர்மசாக்ஷியாய் ஸ்ரீவிஷ்ணு தேஜோமயராய் விளங்கும் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் என்று சொல்லியவண்ணம் சூரியார்க்கியம் விடவேண்டும். பிறகு தன் வீட்டிலிருக்கும் தேவதா பிம்பத்துக்குத் திருமஞ்சனம், திருமாலை, தூபதீபாதிகள் தளிகைகள் முதலிய உபசாரங்களினால் ஆராதனை செய்யவேண்டும். பிறகு, பிரமாகுதி முதலானவை சுவ தேவஞ்செய்து, கிரகங்கள், காசியபர், அனுமதி இவர்களுக்கு அன்னபலியிட்டு அதன் மீதியை பிருத்துவீபர்ச் சனியர்களுக்காக அவுபாசன சமீபத்திலிட வேண்டும். பிறகு, வீட்டின் வாசலில் தாதாவிதாதாக்களுக்கும், நடுவில் பிரம்மாவுக்கும் நான்கு திசைகளில் இந்திரன், யமன், வருணன், சந்திரன் என்ற நான்கு திக்குத் தேவதைகளுக்கும், வாயுவுக்கும் பிருமா அந்தரிஷம் சூரியன் இவர்களுக்கும் வடகிழக்கில் தன்வந்தரிக்கும் அன்ன பலியிட வேண்டும். இவ்விதமாக சைசுவதேவ பூதபலி கருமத்தைச் செய்து, விசுவதேவர், பூதங்கள், விசுவபதி, பிதுர்க்கள், யக்ஷர், இவர்களை எண்ணிப் பலியிட்டு, பிறகு அன்னத்தைச் சுத்தமான பூமியிலே சகல பூதங்களுக்காகப் போட்டு தேவதைகள், மனிதர், மிருகங்கள், பறவைகள், சித்தர் யக்ஷர் நாசர் தைத்தியர், பிரேதங்கள், பிசாசுகள், மரங்கள், எறும்புகள், பூச்சிகள், புழுக்கள் முதலிய சகல ஜந்துக்களுக்கும் யார் என்னாலே கொடுக்கப்படும். அன்னத்தை இச்சிக்கிறார்களோ அவர்களுக்கும் யாருக்கும் தாய் தந்தை சுற்றத்தார் யாவரும் இல்லாமலும் அன்னங்கிடைக்காது இருக்கிறார்களோ அவர்களுக்கும் இதோ இங்கு நான் அன்னத்தைக் கொடுத்தேன். இதனால் அவர்கள் திருப்தியடைந்து சுகமாக இருக்கக்கடவர். சகல பூதங்களும் நானும் இந்த அன்னமும் எல்லாம் ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபமேயல்லாது வேறில்லாமையால் சகல பூதங்களுக்கு சரீரமான இந்த அன்னத்தை அவர்களது சவுக்யத்துக்காக இங்கே இடுகிறேன். தேவகணங்கள் எட்டு வகையினருக்கும் ஒருவிதமான மனுஷ்ய கணமும், ஐந்து விதமான திரியக்குக் கணமுமாகிய பதினான்கு பூதகணங்களிலும் சேர்ந்த சகல பிராணிகளுக்கும் திருப்தி ஏற்பட இந்த அன்னத்தை இங்கு விடுகிறேன். இதனால் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடையக் கடவர்! என்று சொல்லிப் பூமியில் அன்னத்தைப் போடவேண்டும். இல்லறத்தானே எல்லோருக்கும் ஆதாரமானவன்.
பிறகு நாய், சண்டாளன், பறவைகள் இவைகளுக்காகவும், பதிதர்களினாலும் புத்திரர் இல்லாதவர்கள் யாரோ அவர்களுக்காகவும் நிலத்தில் அன்னத்தைப் போட வேண்டும். இப்படியெல்லாம் செய்த பிறகு கால்நாழிகையாவது அதிதிகளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். வந்த அதிதிகளை நல்வரவு கூறி வரவேற்று, ஆசனங்கொடுத்து உபசரித்து உட்காரவைத்து அன்போடு அன்னமிடுவதனாலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பிரியமாகப் பதில் சொல்வதனாலும் அவர்கள் போகும் போது அவர்கள் பின்சென்று வழியனுப்புவதனாலும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். குலமும் பெயரும் தெரியாதவனாக வேறிடத்திலிருந்து வந்தவனாக நிலையாக ஓரூரிலே வாசஞ்செய்யாதவனாக இருக்கிற அதிதியை நன்றாக பூஜிக்க வேண்டும். அன்னிய தேசத்திலிருந்து வந்தவனாகவும் தனக்கு யாதொரு உறவும் இல்லாதவனாகவும், தரித்திரனாகவும் இருந்து போஜனம் செய்ய வந்த அதிதியை பூஜித்துப் போஜனம் செய்வித்து விடாமல் தான் மட்டுமே சாப்பிடுகிறவன் நரகத்தை அடைவான். இவ்விதமாக வந்த அதிதியைக் குலம் கோத்திரம் சாகாதிகளை விசாரிக்காமல் சதுர்முகப் பிருமனைப் போல பாவித்து பூஜிக்க வேண்டும். மேலும் சுதேசியாய்ப் பஞ்சயக்ஞ பராயணனாய், குலகோத்திர ஆசாரங்களிலே தனக்கு நன்றாய்த் தெரிந்தவனாக இருக்கிற ஒருவனையாகிலும் பிதுருக்களுக்காகப் போஜனம் செய்விக்க வேண்டும். இதுவுந் தவிர தான் உண்டு மிகுதியான அன்னத்தை தனியே எடுத்து வைத்திருந்து அதை நன்றாய் வேதமோதியிருக்கிற பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும். சந்நியாசி பிரமசாரிகளுக்கும் மும்மூன்று கவளங்களுக்கும் குறையாமல் கொடுக்க வேண்டும். விபவமிருந்தால் தடையில்லாமல் எவ்வளவாகிலும் யாவருக்கும் வேண்டியமட்டும் கொடுக்கலாம். இவ்விதமாக முன் சொன்னவர்கள் உட்பட நான்கு வகைப்பட்ட அதிதிகளைப் பூஜிப்பவன் அதிகக்கடினமான பாதங்களிலிருந்தும் நீங்குவான். அதிதியானவன் எவனுடைய வீட்டுக்கு வந்து தனது ஆசை முறிந்து திரும்பிச் செல்கிறானோ அந்தக் கிருஹஸ்தனுடைய புண்ணியங்களையெல்லாம் அவன் கொண்டு செல்கிறான். தாதவும் பிரமனும் இந்திரனும் வசுக்களும் அக்கினியும் சூரியனும் ஆகிய இவர்கள் அதிதியினிடத்தில் பிரவேசித்து அவன் கொடுக்கும் அன்னத்தைப் புசிக்கிறார்கள். ஆகையால் அதிதி பூஜை செய்ய முயற்சிக்க வேண்டும். எவன் விருந்தினனை விட்டு உண்கிறானோ அவன் அன்னத்தைப் புசிக்காமல் பாவத்தைப் புசிப்பவனாவான். பிறகு புக்ககம் செல்லாத கன்னியரையும் கர்ப்பவதியையும் கிழவர்களையும் பாலர்களையும் முன்னதாகப் புசிக்கும்படி செய்து பிறகுதான் இல்லறத்தோன் புசிக்க வேண்டும். இவர்கள் எல்லாம் உண்ணாமலிருக்கத் தான் மட்டும், முன்னதாக உண்பவன் இவ்வுலகில் பாவத்தையே சாப்பிட்டு மரணமடைந்த பின் நரகத்திற்குச் சென்று சிலேஷ் மத்தை உண்பான். நீராடாமல் உண்பவன் மலத்தையே உண்கிறான். ஜபஞ்செய்யாமல் உண்பவன் சீழ் இரத்தங்களை உண்கிறான். வைசுவதேவாதி சுத்தியில்லாமல் உண்பவன், சிறுநீரை உண்கிறான். பாலர் முதலானோருக்கு முன்னதாக உண்பவன் மிருக மலத்தை உண்கிறான். ஹோமம் செய்யாமல் புசிப்பவன் கிருமிகளைப் புசிக்கிறான். அதிதிகளுக்குக் கொடாமல் புசிப்பவன் விஷத்தைப் புசிக்கிறான்.
அரசனே! கிருஹஸ்தன் எப்படிப் புசிக்க வேண்டுமோ எப்படிப் புசித்தால் பாப சம்பந்தம் வராமல் இம்மையில் ஒப்பற்ற ஆரோக்கியமும் பலவிருத்தியும் அனிஷ்ட சாந்தியும் உண்டாகுமோ, அந்த முறையையும் சொல்கிறேன் கேட்பாயாக. இல்லறத்தோன் விதிப்படி நீராடி, தேவ ரிஷி பிதுர்த் தர்ப்பணம் செய்து, ஜபத்தையும் ஓமத்தையும் நிறைவேற்றி விட்டு, சுத்தமான வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டு, அதிதிகளுக்கும் குருமார்களுக்கும் அடுத்தவர்களுக்கும் கொடுத்துத் தானும் நல்ல பரிமள புஷ்பங்களைத் தரித்து, சிறந்த இரத்தினாதிகளை கையில் இட்டுக் கொண்டு; நிலையாக இருந்து அமுதுண்ண வேண்டும். ஒற்றை வஸ்திரமுடையவனாகவும் ஈரமான கைகால்களையுடையவனாகவும் புசிக்கலாகாது. முகத்தைச் சுத்தம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாகப் புசிக்க வேண்டும். கிழக்கு முகமாகவாவது வடக்கு முகமாகவாவது உட்கார்ந்து புசிக்க வேண்டும். மூலைக்கு எதிராகப் புசிப்பதும் மனக்கவலையோடு புசிப்பதுங்கூடாது. மேலும் சிறப்பும் இதமுமான அன்னத்தையே சுத்த தீர்த்தத்தினாலே புரோக்ஷித்துப் புசிக்க வேண்டும். அங்கஹீனர் வியாதி பிடித்தவர் முதலியவர்கள் கொண்டு வந்ததும் அருவருப்பாக இருப்பதும் நன்றாகப் பக்குவம் செய்து பாகப்படாததுமான அன்னத்தைப் புசிக்கக் கூடாது. நாற்கலி, முக்காலி ஆகியவை மீது வைத்திருக்கும் பாத்திரங்களிலும், அசுத்தமான தேகங்களிலும் சந்தி முதலான காலங்களிலும், பலவிதமான ஜனங்கள் கூடியிருக்கும் இடங்களிலும், போஜனஞ்செய்யலாகாது. அக்கினிக்கும் பசியாக இருப்பவர்களுக்கும், யோக்கியர்களுக்கும் அன்னமிட்டுக் கோபதாபம் இல்லாதவனாய்ச் சிறந்ததும் சுத்தமுமான பாத்திரத்திலே பழையதாகாத யோக்கியமான அன்னத்தை, மந்திரங்களாலே மந்தரித்து உட்கொள்ள வேண்டும். கனிகள், கிழங்குகள், வற்றல்கள், நெல்லி வடகம் போன்ற வடகங்கள், லட்டு போன்ற பண்டங்களைத் தவிர, மற்றைய பழைய உணவுகளையும், சாரமற்ற உணவுகளையும் ஒருபோதும் உண்ணக்கூடாது. விவேகமுள்ளவன், தேன், நெய், மாவு இவற்றைத் தவிர மற்ற உண்டு மீதானவற்றை உண்ணலாகாது. மதுரமானவற்றை முதலிலும், புளிப்பு உப்புகளை இடையிலும், கைப்பு, காரம் முதலானவற்றைக் கடைசியிலும் உண்ணல் வேண்டும். முதலில் நீர்த்தவைகளையும் பிறகு கடினமானவைகளையும் மறுபடியும் நீர்த்தவைகளையும் புசிக்க வேண்டும். இவ்விதம் சாப்பிடுவதால் பலமும் ஆரோக்கியமும் குறையாது. சாப்பிடுவதற்கு முன்பு, அன்னத்தை நிந்திக்காமலும் மவுனமாகவும் பிராணாதி ஐந்து ஆகுதிகளை வெகு நியமமாகச் செய்ய வேண்டும். இவ்விதமாக நன்றாகச் சாப்பிட்டு ஆபோசனம் செய்து கைகளை அடிவரையிலும் நன்றாகச் சுத்தம் செய்து கொண்டு மீண்டும் ஆசமனம் செய்து சொஸ்தமும் சாந்தமுமான மனத்தோடு, கிழக்கு முகமாகவாவது, வடக்கு முகமாகவாவது ஆஸனத்தின் மீது உட்கார்ந்து இஷ்ட தேவதைகளைச் சிந்திக்க வேண்டும்.
மேலும் அக்கினியானது காற்றினால் வளர்க்கப்பட்டு ஆகாயத்தினால் இடங்கொடுக்கப் பெற்றிருக்கிற அன்னத்தை ஜீரணம் செய்து, என் தேகத்தை நிறைவு செய்ய; அதனால் எனக்கு சுகம் உண்டாகக் கடவது! அன்னமானது ஜீரணிக்கப்பட்டு; என் உடற்கூறான பிருதிவி; அப்பு; தேயு; வாயுக்களுக்கு பலமுண்டாக்க அதனால் எனக்குக் குறைவற்ற சுகம் உண்டாகக் கடவது! இந்த அன்னமானது என்னுடைய பிராணம் அபானம் புஷ்டியுண்டாக்க, எனக்கு இடையூறில்லாத சுகமுண்டாக்கக் கடவது. உதா அக்கினியும், வடவாக்கினியும் நான் புசித்த அன்னத்தையெல்லாம் ஜீரணம் செய்து அந்த அன்னத்தின் திரிபினால் விளைவதில் சுகத்தை எனக்கு உண்டக்கக் கடவது. ஸ்ரீவிஷ்ணு ஒருவரே சகல இந்திரியங்களுக்கும் தேகங்களுக்கும் ஆன்மாவாகி ஞானசக்தி; பல ஐஸ்வரிய வீரிய தேஜஸ் என்கிற ஷட்குண பரிபூரணராய், யாவற்றுக்கும் முக்கியராயிருக்கிறார் என்கின்ற யாதொரு சத்தியமுண்டோ அந்த சத்தியத்தினாலே நான் உண்ட அன்னமானது எனக்கு ஆரோக்கியம் ஏற்பட ஜீரணமாகக் கடவது! என்று உச்சரித்து வயிற்றைத் தடவிப் பிறகு எழுந்து ஆயாசம் உண்டாகமாட்டாத காரியங்களைச் சோம்பலில்லாமல் செய்ய வேண்டும். வேத மார்க்கத்துக்கு விரோதமாகாத நல்ல சாஸ்திரங்களைப் பார்ப்பது முதலான சத்காரியங்களாலே நாளைக் கழித்து நிலைபெற சித்தத்துடன் சந்தியாவந்தனம் செய்தல் வேண்டும். சாயங்காலச் சந்தியைக் கதிரவன் பாதி மறைத்துக் கொண்டிருக்கும்போதும் உதயகால சந்தியை நக்ஷத்திரங்கள் மறையாதிருக்கும்போதும் கைகால்களை நன்றாக சுத்தம் செய்து விதிப்படி உபாசிக்க வேண்டும். பிள்ளை பெற்றத் தீட்டு சாவுத்தீட்டு உன்மாத முதலானவற்றால் வந்த மனோவிகாரம் வியாதி பெரும்பயம் இவைகளுள்ள காலம் ஒழிந்த மற்றக் காலங்கள் எல்லாவற்றிலும் காலை மாலைச் சந்திகளில் சூரிய உபஸ்தானம் செய்தல் வேண்டும். முன்பு சொன்ன நோய் போன்ற துன்பங்களில்லாத காலத்தில் சூரியனால் உதயஞ்செய்யப்பெறும் விடப்பெற்றும் யாராவது தூங்குவானாகில் அவன் பிராயச் சித்தத்துக்கு உட்படுவான். அரசனே! சூரியன் உதயமாகும் முன்பே எழுந்து காலைச் சந்தியையும் உபாசிக்க வேண்டும். இந்தச் சந்தியாவந்தனங்களைச் செய்யாத துராத்மாக்கள் தாமிகிரம் என்ற நகரமடைவார்கள். சந்தியாவந்தனம் செய்த பிறகு பாகஞ்செய்த அன்னத்தை தன் மனைவியுடன் கூட, வைசுவ தேவத்திற்காகப் பலியிடவேண்டும். அப்போதும் சண்டாளர் போன்றோருக்கும் அன்னத்தைத் தரையிலிட வேண்டும். வந்த அதிதிகளுக்குக் கால் அலம்பத் தண்ணீர் கொடுப்பது, ஆசனம் கொடுப்பது வணக்கத்தோடு நல்வரவு கூறி விசாரிப்பது போன்ற உபசாரங்களினாலும் அன்னங்கொடுத்து படுக்க வசதி செய்து கொடுப்பது போன்ற அதிதி பூஜையைச் செய்ய வேண்டும். பகலில் வந்த அதிதியை பூசியாமற் போனால் என்ன பாதகம் உண்டு என்று சொல்லப்படுமோ அதைவிட எட்டு மடங்கு அதிகமான பாதகம் இரவில் அதிதி பூஜை செய்யாதவனுக்கும் ஏற்படும். ஆகையால் இரவில் வந்த அதிதியை நன்றாகப் பூஜிக்க வேண்டும். அதனால் சகல தேவதைகளும் பூஜிக்கப்பட்டவராவார்கள். அதிதிக்குப் போஜனம் கொடுக்க சக்தியில்லா விட்டால் ஏதாகிலும் சிறிதளவு உணவு அல்லது தண்ணீர் அல்லது படுக்கை அல்லது இடமாகிலும் கொடுத்து உபசரிக்க வேண்டும்.
அதிதி பூஜை செய்தபிறகு தானும் உண்டு, பாதங்களைக் கழுவிக்கொண்டு, வெடிப்பில்லாததும் யானைத் தந்தம் முதலியவற்றினாலாவது நல்ல மரத்தினாலவாது செய்யப்பட்டதும், விசாலமானதும், ஒடியாததும் மேடு பள்ளங்கள் இல்லாமற் சமமானதும் அழுக்கில்லாததும் ஐந்து மயமாகாததும் மேலே ஆடைகளால் பரப்பப்பட்டதுமான படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். படுக்கும்போது கிழக்கிலாவது தெற்கிலாவது தலைவைப்பது நல்லது. மற்ற திசைகளில் தலைவைப்பது ரோகங்களுக்குக் காரணமாகும். ருதுக் காலத்தில் தனது மனைவியிடம் சேர்வது நல்லது. அப்படிச் சேரும்போது கூட புருஷ நட்சத்திரத்திலே சுபமான காலத்திலே சஷ்டி முதலிய மேன்மேலும் சுபமான இரட்டைப்பட்ட இரவுகளிலே சேர்வதும் சிறப்பானதாகும். அனுகூலப்படாதவளையும், வியாதியினால் துன்பப்படுகிறவளையும், ருதுவுடையவளையும், இஷ்டப்படாதவளையும், கோபித்திருப்பவளையும், யோக்கியமாகாதவளையும், கர்ப்பிணியையும், திறமில்லாதவளையும் பிறன்மீது மனம் வைத்திருப்பவளையும் காமமில்லாதவளையும் மாற்றானது ஸ்திரீயையும் பசியால் வருந்துகிறவளையும், மிகப் புசித்திருப்பவளையும், ஜலமலாதி உபத்திரவங்களுள்ளவளையும் சேரலாகாது. மற்றும் எப்படிச் சேரவேண்டும் என்றால் ஸ்நானாதிகளினால் நிர்மலனாய்க் கந்தபுஷ்பாதிகளைத் தரித்தவனும் தகுந்த ஆகாரத்தை உண்டவனாய் ஆசையுங் காமமும் உள்ளவனாய்ச் சேரவேண்டும். சதுர்த்தசி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி, சூரிய சங்கராந்தி ஆகிய பாவ காலங்களில் எண்ணெயிட்டுக் கொள்ளுதல் பெண்டிரோடு புணர்தல், மாமிசம் உண்ணுதல் ஆகியவற்றைச் செய்பவன் மலமூத்திர போஜனம் என்ற நகரத்தையடைவான். ஆகையால் இத்தகைய பருவ காலங்களில் விவேகிகள் நியமம் உள்ளவர்களாய், நல்ல நூல்களை வாசித்தும் எம்பெருமானைத் தியானித்தும் மந்திர ஜபஞ் செய்து கொண்டும் இருக்க வேண்டும். அன்னிய ஸ்திரீயைச் சம்போகிப்பதும், மிருகங்களோடு கூடிச் சுகித்தலும் கூடாது. தேவதைகள், பிராமணர், ஆசாரியர், இவர்களுக்கு உரிய இடங்களிலும், நாற்சந்திகளிலும், தீர்த்தங்களிலும், ஆலயங்களிலும், கொட்டில்களிலும், ஜனங்கள் சேருமிடங்களிலும், மயானங்களிலும், அவற்றைச் சேர்ந்த பூங்காவிலும், புண்ணிய காலங்களிலும், பகலிலும், தரையிலும், சந்திகளிலும் மனதினாலும் ஸ்திரீ போகஞ் செய்ய எண்ணக்கூடாது. பிறர் மனையாளை மனத்தாலும் நினைக்கத்தகாது. வாக்கினால் பேசுவதும் மகாபாவமாகும். அத்தகையோர் இங்கும் ஆயுசு க்ஷீணிக்கப்பட்டு இறந்த பின் நரக வாதனைகளையும் அனுபவித்து அதன் பிறகு எலும்பில்லாத புழு முதலிய பிறவிகளாகப் பிறப்பார்கள். இவ்விதமாகப் பர ஸ்திரீகமனம் இருமையிலும் கேட்டைத் தருவது என்பதை நினைத்து, ஸ்வஸ்திரீகளிடத்திலேயே ருதுக்காலங்களில் சேரவேண்டும். ருதுக்காலமில்லாத போதும் முன்னுரைத்த குற்றங்கள் இல்லாமலும் புணரலாம்.
12. நல்லொழுக்கம்
சகர மாமன்னனே, மேலுங் கேட்பாயாக, தேவதைகள், பசுக்கள், பிராமணர் போன்ற பெரியோர்கள், ஆசாரியர் ஆகியோரைப் பூசிக்க வேண்டும். இருகாலங்களில் சந்தியை வணங்க வேண்டும். அக்கினிப் பரிசரியைச் செய்துவரவேண்டும். எப்பொழுதும் நல்ல ஆடைகளையும் சுபகரமான விஷ்ணுகிராந்தி முதலிய அவுஷதிகளையும் விஷநாசகமான கருடப்பச்சை முதலியவற்றையும் தரிக்க வேண்டும். நன்றாக அலங்கரிக்கப்பட்ட தலைமயிரும், உடம்பிலும் உசிதமான அலங்காரமுடையவனாய் நல்ல பூமாலைகளைத் தரித்திருக்கவேண்டும். கொஞ்சமாகிலும் பிறர் பொருளை அபகரியாமலும் அற்பமாகவாகிலும் பிரியமில்லாத பேச்சைப் பேசுவதிலும் பொய்யைப் பேசலாகாது. பிறருடைய குற்றங்களை எடுத்துச் சொல்வதுங்கூடாது. அயளான் மனையாளை விரும்புவதும் பகையை விரும்புவது கூடாத காரியங்களாகும். துஷ்ட வாகனத்தின் மேல் ஏறுவதும் தண்ணீர் அலப்பியிடித்த ஆற்றங்கரை முதலானவைகளைச் சேர்வதும் தகாத காரியங்கள். துவேஷியாய் இருப்பவன் பதி தன் பைத்தியம் பிடித்தவன், பலரோடு பகை கொண்டவன், அதிகத் துன்பப்படுத்துந் தன்மையுடையோன், விபசாரியைச் சேர்ந்தவன் வெள்ளாட்டியைக் கொண்டவன், அற்பன், பொய்யன் மிகச்செலவு செய்வோன், அபவாதம் உண்டாக்குவோன், வஞ்சகன் இத்தகையவரோடு நட்புக் கொள்ளலாகாது. ஒன்றியாய் வழிப்பயணஞ் செல்லக்கூடாது. வெள்ளத்துக்கு எதிராய் நீந்தக்கூடாது. தீப்பட்ட வீட்டில் பிரவேசித்தலையும் மரத்தின் நுனியில் ஏறுவதையும், பற்களைக் கடித்தலையும், மூக்கைத் தூக்குதலாக இழுப்பதையும் தவிர்க்க வேண்டும். வாயை மூடிக்கொள்ளாமல் கொட்டாவி விடுவதையும், பெருமூச்செறிவதையும் இருமுவதையும் செய்யவேண்டாம். இரைச்சலிட்டுச் சிரிப்பதும், ஓசையுடன் அபானவாயு விடுவதும், நகங்களை கடிப்பதும், செத்தையைக் கிள்ளிக் கொண்டிருப்பதும், மீசையைக் கடிப்பதும், உதட்டைக் கசக்குவதும் கூடாது. அசுத்தமும் அயோக்கியமுமான வெளிச்சங்களைப் பார்க்கலாகாது. அப்படியே நிர்வாணமாக இருக்கும் பெண்களையும், உதயாஸ்தமன காலத்துச் சூரியனையும் பார்க்கலாகாது. சவத்தைக் கண்டு ஊங்காரம் செய்யக்கூடாது. அந்தச் சவத்தின் சேரகமானது சோமனுடைய அம்சமாகும். நாற்சந்தி, மேடை அமைத்து பூஜிக்கப்படும். மரம், மயானம், உத்தியானவனம் கெட்ட பெண்களின் அண்மை இவற்றை இரவில் எப்போதும் விட்டுவிட வேண்டும். பூஜிக்கத்தக்கவர்கள், தேவர்கள், பிராமணர்கள் சோதிகள் இவற்றின் நிழல்களைக் கடக்கலாகாது. தனித்துக் காட்டுக்குப் போவது, பாழும் வீட்டில் வாசஞ்செய்வது இவையும் நல்லதல்ல. பயிர், எலும்பு, முள், அசுத்தம், பலியிட்ட சாம்பல் உமி குளித்த நீரால் நனைத்த நிலம் இவற்றைவிட்டு விலகிச் செல்லவேண்டும். யாராயினும் அயோக்கியராக இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ளலாகாது. சூதான வழிகளை நினைக்கக் கூடாது. பாம்புகள், மதயானைகள், செந்துக்களைத் தொடர்தல் அவற்றின் எதிரிலே எழுந்து நெடுநேரம் நிற்றல், முதலானவை கூடாது. அதிகம் விழித்திருத்தல், மிகவும் அதிகமாக நித்திரை செய்தல், அதிகமாக நிற்றல், அதிகம் படுத்திருத்தல், மிகவும் வருந்துதல் இவையெல்லாம் நல்லதல்ல.
பற்களினால் துன்புறுத்தும் செந்துக்களையும், கொம்புகளால் துன்பஞ் செய்யும் பிராணிகளையும் பனியையும் எதிர்காற்றையும் வெயிலையும் கண்டு விலக வேண்டும். நிர்வாணமாக இருந்துகொண்டும், கச்சத்தை விட்டுக் கொண்டும், குளிப்பதும் தூங்குவதும் ஆசமனஞ் செய்வதும் தேவபூஜை செய்வதும் கூடாது. அதுபோலவே ஹோமம் தேவபூஜை; ஆசமனாதி கிரியைகள், ஜபம் இவைகளை ஒற்றை வஸ்திரத்தோடும் செய்யவேண்டாம். நன்மையான நடத்தையுடையவரோடு ஒரு கணமாகிலும் சேர்ந்திருப்பது சிறந்ததாகும். அதமரோடுங்கூட பகைகொள்ள வேண்டாம். விவாகமானாலும், விவாதமானாலும் தனக்குச் சமமானவரோடு தான் செய்யவேண்டும். கலகத்துக்கு ஆரம்பஞ் செய்யவேண்டாம். வீணான பகைமையை விட்டுவிட வேண்டும். ஒருவரது பகையினால் கிஞ்சித்துக் கஷ்டம் வந்தாலும் சகித்துக் கொள்ளலாமே யல்லாமல் அதனால் வருகிற லாபத்தைக் கொள்ளலாகாது. குளித்தவுடன் வஸ்திரத்தால் உடம்பைத் துடைக்க வேண்டுமேயொழிய கையினால் துடைத்துக் கொள்ளக்கூடாது. பிறர்மீது தண்ணீர் தெறிக்கும்படி மயிரை உதறக்கூடாது. நின்று கொண்டு ஆசமனாதிகளைச் செய்யக்கூடாது. பாதத்தினால் பாதத்தை மிதித்துக்கொள்ளக் கூடாது. பெரியோரின் எதிரில் பாதத்தை நீட்டலாகாது. குருவுக்கு எதிராக படுப்பதும், உட்காருவதும் கூடாது. தேவாலயத்தையும், நாற்சந்தியையும் மங்களமானவற்றையும் பூஜிக்கத்தக்கவர்களையும் வலஞ்சுற்றிப் போக வேண்டுமேயல்லாமல் இடஞ்சுற்றிப் போகலாகாது. அல்லாதவற்றை இடப்புறம் சுற்றிப் போகவேண்டும். சந்திரன், சூரியன், அக்னி, தண்ணீர், காற்று, பெரியோர் ஆகியோருக்கு எதிரில் காறியுமிழ்வதும், மல மூத்திரங்களை விடுவதும் செய்யக்கூடாது. நின்றுகொண்டே சிறுநீர் முதலியவைகளை விடுதலும், வழியிலே அப்படிச் செய்வதும் கெட்ட காரியமாகும். கோழை, மலம், மூத்திரம், உதிரம் இத்தகையவற்றை மிதித்துப் போகக்கூடாது. போஜனாதி காலங்களிலும் ஜபஹோமார்ச்சனாதி காலங்களிலும், கோழையை உமிழ்தல், மூக்கை சிந்துதல் முதலிய செய்கைகளை செய்யலாகாது. ஜனங்களின் சமூகத்திலும் அப்படி செய்யலாகாது. பெண்டிர்களை அவமதிக்கவும் கூடாது. அவர்களிடம் அதிக நம்பிக்கை வைக்கவும் கூடாது. அவர்களைக் கண்டு பெருமைப்படவுங்கூடாது. அவர்களை இகழ்வதும் நல்லதல்ல. நல்லொழுக்கத்தை வேண்டுகிற விவேகியானவன் மங்களகரமானவற்றையும் புஷ்ப ரத்தினாதிகளையும் பெரியோர்களையும் சேவியாமல் வெளியே போகலாகாது. மகாஜனங்கள் சேருமிடங்களை வணங்க வேண்டும். வேத சாஸ்திரங்களில் வல்லவரான சான்றோரை அடுத்திருக்க வேண்டும். எவன் இப்படி தேவதைகளையும், ரிஷிகளையும், பிதுர்க்களையும், அதிதிகளையும், பெரியோர்களையும், அந்தந்த விதிப்படிப் பூஜித்துக் கொண்டு வருவானோ அவன் உத்தமமான உலகங்களை அடைவான்.
மேலும் மனவசியம் உள்ளவனாகித் தகுந்த காலங்களில் இருமாயும், பிரியமாயும், மிதமாயும் பேசுகிறவன், மகா சந்தோஷ காரணங்களாயும் அக்ஷயங்களாயும் இருக்கிற உலகங்களைப் பெறுவான். எவன் விவேகமும் தீயொழுக்கத்தில் நாணமும், பொறுமையும் உடையவனாய் வேதத்தில் நம்பிக்கை கொண்டு கல்வியிலும் குலத்திலும் மேலானவரிடத்திலும் வணக்கமாய் நடக்கிறானோ அவன் ஒப்பற்ற உத்தம உலகங்களை அடைவான். அகாலத்தில் மேக கர்ஜனை முதலானவை உண்டாகும்போதும், அமாவாசை முதலிய பருவ காலங்களிலும் ஆசவுசங்களிலும் கிரகண காலங்களிலும் வேதத் தியயனம் செய்யாமல் இருக்க வேண்டும். எவன் கோபங்கொண்டவர்களைச் சமாதானப்படுத்தியும், யாரிடத்தும் மாச்சரியமில்லாமலும் எல்லோருக்கும் உறவினனைப் போல இருப்பதும் பயப்பட்டவர்களுக்குத் தேறுதல் சொல்வதுமாய்ச் சாது வாயிருக்கிறானோ அத்தகையவனுக்குச் சொர்க்கமும் அற்பப் பலன் என்றே சொல்ல வேண்டும். மழை, வெய்யில் முதலானவைகளிலும், இரவிலும், காடுகளிலும் குடை மிதியடிகள் தடி முதலியவற்றைத் தரித்தவனாகி, தேகத்துக்கு தீங்கு நேராதவாறு சஞ்சரிக்க வேண்டும். அப்படி சஞ்சரிக்கும் போது மேற்பார்வையும், பக்கப் பார்வையும், தூரப் பார்வையும் விட்டு நுகத்தடியளவு தூரம் செல்லும் வழியை நன்றாகப் பார்த்துச் செல்ல வேண்டும். தீமைக்கு ஏதுவான எல்லாவற்றையும் விட்டு எவன் ஒருவன் நடக்கிறானோ அவனுக்குத் தர்மார்த்த கர்மங்களில் கொஞ்சமும் குறைவு வராது. எவன் நல்ல ஒழுக்கமும் விவேகமும் கொண்டவனாய் வித்தை, விநயம், இவற்றில் தேர்ந்தவனாய், தனக்குத் துரோகம் செய்பவனிடத்திலும், துரோக சிந்தனையில்லாதவனாய், தன்னை வைதவனிடத்திலும் பிரியமாய்ப் பேசுபவனாய் யாவரிடத்தும் கருணையுடன் மனவுருக்கத்துடன் இருப்பானோ, அவனுக்கு மோக்ஷம் அருகிலேயே இருக்கும். எவர்கள் காமக் குரோதிகளுக்கு உட்படாமல், நல்ல ஒழுக்கமுடையவர்களாய் இருக்கிறார்களோ, அவர்களது பிரபாவத்தினால் தான் இந்தப் பூமியே நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் பிறருக்கு நம் மீது அன்பு உண்டாகக் காரணமான சத்தியத்தையே பேசவேண்டும். சத்தியமேயானாலும் பிறருக்கு துக்க காரணமாகுமாயின் அந்த விஷயத்தில் ஒன்றும் பேசாமல் மவுனமாக இருக்க வேண்டும். ஒன்று ஒருவனுக்கு விருப்பமில்லாமல் இருக்கும்போது,அதுவே அவனது நலனுக்குக் காரணமாக இருக்கக்கூடும். ஆகையால் அதனையே சொல்ல வேண்டும். வேந்தனே! முடிவைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேட்பாயாக. இம்மையிலும் மறுமையிலும் எது பிராணிகளுக்கு நலனை உண்டாக்கவல்லதோ, அத்தகையக் காரியத்தையே மனோவாக்குக் காயம் என்கின்ற மூன்று காரணங்களிலும் செய்துவர வேண்டும்.
13. சிரார்த்த வகைகள்
அவுர்வ முனிவர் மேலுஞ் சொல்கிறார். பிள்ளை பிறந்தவுடன் தந்தையானவன் தான் உடுத்தியிருக்கும் வஸ்திரத்துடன் நீராட வேண்டும், உடனே ஜாதகர்மமும் அப்பியுதய சிரார்த்தமும் செய்யவேண்டும். அந்த சிரார்த்தத்தில் தேவர்களுக்காகவும், பிதுர்களுக்காகவும் இரட்டையாகப் பிராமணர்களை வரித்து அவர்களைப் பிரதக்ஷிண வரிசையாகப் பூஜித்துப் போஜனமும் செய்விக்க வேண்டும். கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ இருந்து கொண்டு இலந்தையுடன் தயிர் சேர்த்த அக்ஷதையுடன் செய்த பண்டங்களைத் தேவ தீர்த்தத்தினாலாவது பிரம்ம தீர்த்தத்தினாலாவது கொடுக்க வேண்டும். இந்தச் சிரார்த்தத்தினால் நாந்தீமுகமாக இருக்கும் பிதுர்க்கணம் மிகவும் திருப்தியடையும். ஆகையால் புத்திரன், புத்திரிகளுக்குத் திருமணஞ் செய்யும்போதும், கிரஹப்பிரவேசங்களிலும் சிறுவருக்குப் பெயரிடும்போதும் சீமந்தத்திலும் உன்னயனத்திலும், புத்திரன் முதலானோரின் முகதரிசனத்திலும் மற்றுமுள்ள விருத்திகளில் எல்லாம் நாந்தீ சிரார்த்தம் அவசியம் செய்ய வேண்டும். அரசனே! இதுவரை பிதுர்க்களின் பூஜாக்கிரமத்தைச் சொன்னேன். இனி இறந்தோருக்காகச் செய்யும் கர்மவிதிகளைச் சொல்கிறேன் கேட்பாயாக. இறந்தவருடைய தேகத்தை நல்ல தண்ணீரைக் கொண்டு நீராட்டி மாலைகளால் அலங்கரித்து விதிப்படித் தகனஞ் செய்து பந்துக்கள் அனைவரும் உடுத்திருக்கும் ஆடைகளுடனேயே நீராடிக் குளித்து தெற்குமுகமாக இருந்து இரு இன்னானுக்கு என்று தன் இருகைகளாலும் தண்ணீரை எடுத்துத் தர்ப்பணமாக விடவேண்டும். அப்படிச் செய்த பிறகு மாடுகள் பிரவேசிக்கும் போதாகிலும் நட்சத்திரங்கள் காணும்போதாகிலும் கிருகத்தினுள் பிரவேசித்து தரையில் புல் முதலியவற்றைப் பரப்பி அவற்றின்மீது படுத்துக் கொள்ள வேண்டும். இப்படியேயிருந்து தீட்டுக் காரியங்களைச் செய்யவேண்டும். அதாவது காலையில் மட்டும் ஒருமுறை புசித்துக் கொண்டு தினந்தோறும் இறந்தவனுக்குத் தரையில் பிண்டம் போடவேண்டும். பந்துக்கள் புசிப்பதனால் இறந்தவனுக்குத் திருப்தி ஏற்படும். ஒன்றாவது மூன்றாவது ஏழாவது ஒன்பதாவது நாட்களில் வஸ்திரத் தானமும் ஊருக்கு வெளியே ஸ்நானமும் செய்து எள்ளு தண்ணீரும் விடவேண்டும். நான்காவது நாளில் அஸ்தி சஞ்சயனஞ் செய்யவேண்டும். சஞ்சயனமான பிறகு ஏழுதலைமுறைக்கு உட்பட்டவரைத் தீண்டினாலும் குற்றமில்லை. ஏழுதலைமுறைக்கு மேற்பட்டவர்களான சமானோதகரோ வாசனைப்பூச்சு பூமாலை முதலிய போகங்களைத் தவிர மற்றெல்லா கிரியைகளுக்கும் யோக்கியராவர். சபிண்டரும் சஞ்சயனங் கழித்த பிறகு படுக்கையிற் படுக்கவும், ஆசனத்தில் உட்காரவுஞ் செய்யலாம். ஸ்திரீ போகம் மட்டுமே கூடாது. சிறுவனும், மகாநதி மலைகளினூடேயுள்ள தேசாந்திரங்களுக்குப் போனவனும் ஜாதி குலாச்சாரங்களை விட்டுப் பதிதனானவனும் சந்நியாசியும் மரணமடைந்தால் அப்போது ஸ்நானம் செய்வதாலேயே தீட்டுப் போகும். இப்படியே மனப்பூர்வமாக ஜலம், விஷம் உறிப்போட்டு கொள்ளுதல் முதலானவைகளினாலே செத்தவர்களைப் பற்றியும் தீட்டுக் கொண்டாட வேண்டுவதில்லை. இப்படியெல்லாம் இறந்தவர்களைப் பற்றி ஞாதிகளுக்குப் பத்து நாட்கள் தீட்டு உண்டு. ஆகையால் அந்தப் பத்து நாட்களும் அவர்களுடைய அன்னத்தை பிறர் புசிக்கக் கூடாது. அவர்களும் தானம் கொடுத்தல், தானம் வாங்குதல், யாகஞ்செய்தல், வேதம் ஓதுதல் முதலிய கர்மங்களைச் செய்யக்கூடாது.
பிராமணருக்குப் பத்துநாட்கள் தீட்டு, க்ஷத்திரியர்களுக்குத் தீட்டு பன்னிரண்டு நாட்கள், வைசியருக்கு அரைமாதம், சூத்திரருக்கு ஒரு மாதம் ஆகும். இப்படியாகத் தீட்டிலிருந்து அது அழியும் கடைசி நாளில் ஒற்றைப்படப் பிராமணரை வைத்து விதிப்படிப் போஜனாதிகள் செய்வித்து அந்தப் பிராமணர் புசித்த பாத்திரத்தின் சமீபத்தில் தருப்பைகளைப் பரப்பி, இறந்தவனுக்குப் பிண்டம் போட்டு, ஆதி ஏகோத்திஷ்ட சிரார்த்தத்தை நிறைவேற்ற வேண்டும். இதைச்செய்த பிறகு, பிராமணர் முதலிய நான்கு வருணத்தினரும் முறையே தண்ணீர், ஆயுதம், கசை, தடி இவற்றை ஸ்பரிசித்துச் சுத்தராக வேண்டும், பிறகு யாவரும் தங்கள் வர்ணங்களுக்குரிய வைதீக கர்மங்களையும் பிழைப்பு வேலைகளையுஞ் செய்யலாம். கர்த்தாவானவன் மாதந்தோறும் இறந்த திதிகளில் ஏகோத்திஷ்ட விதியினால் மாசிமகம் செய்து வரவேண்டும். அந்த ஏகோத்திஷ்டங்களில் ஆஹ்வானம், அக்கிநவுகரணம், வைசுவ தேவிகவிப்பிர நிமந்திரணம், ஆகிய இவற்றை செய்யலாகாது. மேலும் அதில் ஒரு பவித்திரத்தோடு ஒரு அர்க்கியம் கொடுக்க வேண்டும். பிராமணர் புசித்த பிறகு பிரேதனுக்கு ஒரே பிண்டம் போடவேண்டும். எஜமானன், அபிரம்யதாம் என்று கேட்க பிராமணர்கள் அபிரதாஸ்ம என்று பதில் சொல்ல வேண்டும். கடைசியாக இன்னாருக்கு இது அக்ஷயம் என்று சொல்ல வேண்டும். இப்படியே வருஷம் முடிவு வரையில் ஏகோத்திஷ்ட விதியால் சிரார்த்தம் செய்து பிறகு சபிண்டீகரணம் செய்ய வேண்டும். அதுவும் ஆண்டின் இறுதியிலாவது, ஆறுமாதத்திலாவது, பன்னிரண்டாம் நாளிலாவது ஏகோத்திஷ்ட விதியினாலேயே செய்ய வேண்டும். அதில் எள்ளும் வாசனைத் திரவியமும் கலந்த ஜலத்தினால் நிறைக்கப்பட்டவைகளாய், பிதுர்க்களுக்காக மூன்று அர்க்கிய பாத்திரங்களும், பிரேதனுக்காக ஒரு அர்க்கிய பாத்திரமும் வைத்து, அந்தப் பிரேத பாத்திர ஜலத்தை பிதுர்ப் பாத்திரம் மூன்றிலும் கலக்க வேண்டும். இப்படியாக அர்க்கிய சம்யோஜனஞ் செய்வதால் அந்தப் பிரேதன் பிதுருத்துவத்தை அடைய அவன் முதலான பிதுர்க்களைப் பார்வணம் முதலான சிரார்த்த விதிகளால் அர்ச்சிக்க வேண்டும்.
இறந்தோனுக்குக் கருமம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் புத்திரன், பவுத்திரன், புத்திரனுடைய பவுத்திரன் சகோதரன் அவனுடைய சந்ததி சபிண்டருடைய சந்ததி ஆகிய இவர்களில் முந்தினவரில்லாதபோது பிந்திவர் முறையே கனர்த்தாக்களாகிறார்கள். இவர்கள், எல்லோருமே இல்லாதபோது சமானோதகருடைய சந்ததியும் அதன் பிறகு தாயின் பக்ஷத்துச் சபிண்டருடைய சந்ததியும் அதன்பின் அந்தப் பக்ஷத்துச் சமானோதக சந்ததியும் முறையே கிரியை செய்யவேண்டும். இந்த இரண்டு குலங்களும் நசித்தப் போனால் பெண்டுகள் இந்தக் கிரியைகளை செய்யலாம். பிறகு பிதாவின் சார்பிலும்,மாதாவின் சார்பிலும் உள்ள சபிண்ட சமானோதர்களாகிலும் அல்லது சஹாத்தியாயி சீடன் முதலானவர்களாகிலும், ஒரு கூட்டத்தில் சேர்ந்தவர்களாகிலும், கர்மம் செய்யலாம். இந்தக் கிரியைகளில் பூர்வங்கள் என்றும் மத்திமங்கள் என்றும் உத்தரங்கள் என்றும் மூன்று விதங்களுண்டு. தகனந் தொடங்கி தண்ணீரைத் தீண்டுமளவில் உள்ளவைகள் பூர்வக்கிரியைகளாகும். மாதந்தோறும் செய்யத்தக்க மாசிகங்கள் மத்திமக் கிரியைகள், பிரேதன், பிதுர்க்களில் கலக்கத்தக்கதான சபிண்டீகரணத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய பிதுர்க்கிரியைகள் எல்லாம் உத்தரக் கிரியைகளாகும்! தந்தை தாய்களுடைய சபிண்ட சமானோதர்களினாலேயும், சகாத்தியாயி முதலானவர்களினாலேயும் பொருள் எடுத்துக் கொள்கிற ராஜாவினாலேயும் பூர்வக் கிரியைகள் செய்யப்படலாம். உத்தரக்கிரியைகளோ புத்திரன் முதலானவர்களினாலேயே செய்யப்படவேண்டும். அல்லது புத்திரியின் புத்திரர்களாலுஞ் செய்யலாம். பெண்டுகளுக்கும் ஆண்டுதோறும் இறந்த திதிகளிலே ஏகோத்திஷ்ட விதியினால் உத்தரக்கிரியை செய்ய வேண்டும். அரசனே! அந்த உத்தரக்கிரியைகளை எப்பொழுதும் எப்படியெப்படிச் செய்யவேண்டுமோ அந்தக் கிரமங்களைச் சொல்லுகிறேன்.
14. சிரார்த்த காலம்
ஒருவன் அக்கறையோடும், சிரத்தையோடும் சிரார்த்தம் செய்வதனால், பிரம்மா, இந்திரன், ருத்திரன், அசுவினி, தேவர், சூரியன், அக்னி வசுக்கள், வாயு, விசுவேதேவர், பிதுர்க்கள், முனிவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், சர்ப்பங்கள் முதலிய ஜந்துக்களும் மற்றுமுண்டான பூதங்கள் போன்ற யாவற்றையும் மகிழவைக்கிறான். மாதந்தோறும் அபர பக்ஷத்திலும் அமாவாசையிலும் அஷ்டகைகளிலும் சிரார்த்தஞ்செய்ய வேண்டும். அதற்குரிய காலத்தைச் சொல்கிறேன். சிரார்த்தத்துக்குத் தகுதியான பொருள்கள் கிடைத்தபோதும், தகுதியான பிராமணன் நேர்ந்தபோதும், வியதீ பாதத்திலும் அயனத்திலும் விஷுவத்திலும் சந்திர சூரிய கிரகணங்களிலும், சூரியன் பன்னிரண்டு ராசிகளில் பிரவேசிக்கும் காலங்களிலும், நட்சத்திர பீடையும் கிரக பீடையும் உண்டாகும் காலங்களிலும் கெட்ட கனவுகளைக் கண்டபோதும், தானியத்தைப் புதிதாகக் கொண்டு வந்தபோதும் காமியச் சிரார்த்தங்களைச் செய்யலாம். அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி ஆகிய நட்சத்திரங்களுடன் கூடுமேயானால் அப்பொழுது செய்கிற சிரார்த்தம் பிதுர்க்களுக்கு வருஷத்துக்குத் திருப்தியை உண்டாக்கும். திருவாதிரை, புனர்பூசம், பூசம் இந்த நட்சத்திரங்களுடன் கூடிய அமாவாசையில் செய்த சிரார்த்தத்தினால் பிதுர்க்கள் பன்னிரண்டு ஆண்டுகள் திருப்தியடைவார்கள். அவிட்டம், சதயம், பூரட்டாதியோடு கூடிய அமாவாசை தேவர்களுக்குங் கிடைக்காத புண்ய காலமாகும். இந்த ஒன்பது நட்சத்திரங்களிலும் அமாவாசை கூடியபோது சிரார்த்தம் செய்யலாம். இதனால் பிதுர்க்களுக்கு விசேஷ திருப்தியுண்டாகும்.
மாமன்னா! இன்னுங் கேட்பாயாக, பிதுர்க்களிடத்தில் அதிக பத்தியுடையவனான புரூரவ சக்கரவர்த்தி கேட்க; ஜனககுமாரர் கூறிய பாடலின் பொருளைச் சொல்கிறேன். வைகாசி மாதத்தில் சுக்கில பக்ஷத் திரிதியையும், கார்த்திகை மாதத்தில் சுக்கில பக்ஷ நவமியும், புரட்டாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத் திரயோதசியும், மாசி மாதத்து அமாவாசையுமாகிய இந்த நான்கு திதிகளும் யுகாதிகள் என்றும் மிகவும் புண்ணியகாலம் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றிலும் சந்திர சூரிய கிரணங்களில் மூன்று அஷ்டகைகளிலும் இரண்டு அயனங்களிலும் எள்ளுடன் கூடியத் தண்ணீரையாவது பிதுர்க்களை உத்தேசித்து ஒருவன் பக்தியுடன் விடுவானாகில் அவன் ஆயிரம் ஆண்டுகள் வருஷ சிரார்த்தம் செய்த பயனை அடைவான். இது ரகசியமான விஷயம் என்று பிதுர்க்கள் கூறுகின்றனர். மாசி மாதத்து அமாவாசையானது எப்போதாவது சதய நட்சத்திரத்துடன் கூடுமாயின் அது பிதுர்க்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். அற்ப புண்யமுள்ள மனிதர்களுக்கு அது கிடையாது. அரசே! அந்தக் காலத்தில் அவிட்ட நட்சத்திரம் சேருமானால், அப்போது அன்னம் அல்லது தண்ணீரைப் பிதுர்க்களைக் குறித்துக் கொடுத்தவனுக்கு பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்க்களைத் திருப்தி செய்த பயன் கிடைக்கும். அந்தக் காலத்திலேயே பூரட்டாதியும் சேருமானால் அதில் செய்யும் சிரார்த்தத்தால் பிதுர்க்கள் திருப்தியடைந்து ஆயிரம் யுகங்கள் வரை சுகமாகத் தூங்குவார்கள். கங்கை, யமுனை, விபாசை, சரஸ்வதி, கோமதி என்ற நதிகளுக்கும், நைமிசம் என்ற ÷க்ஷத்திரத்துக்கும் ஒருவன் சென்று குளித்து அன்போடு பிதுர்ப்பூஜை செய்தால், அவனது பாவங்கள் நீங்கும். அரசனே! பிதுர்க்கள் நாம் எப்போது புரட்டாசி மாதத்தில் புத்திராதிகள் செய்த அபர பக்ஷத் திரயோதசி சிரார்த்தத்தினால் திருப்தியடைந்து மாசி அமாவாசையிலும் புத்திரர்கள் செய்த புண்ணிய தீர்த்த ஜல தர்ப்பணங்களால் திருப்தியடைவோம் என்று பாடுகிறார்கள். மனிதருக்குத் தூய்மையானச் சித்தமும் பரிசுத்தமான பொருளும் மேன்மையான காலமும், சாஸ்திரங்களின் சொல்லப்பட்ட விதிகளும் சற்குணமுள்ள பாத்திரமும் சிறந்த அன்பும் சேருமானால் சகல இஷ்டங்களும் சித்தியாகும். மன்னனே, இது விஷயமாகப் பிதுர்க்கள் கீதமிசைப்பதைக் கேட்பாயாக.
பிதுர்க் கீதங்களாவன, எவன் திரவிய வஞ்சனையில்லாமல், நமக்குப் பிண்டங்களைப் போடத்தக்கவனோ விபவமுண்டானால் வஞ்சனையின்றி ரத்தினம், ஆடைகள், தனம் முதலிய சகல போகங்களையும் நமக்காகப் பிராமணருக்குத் தானஞ் செய்பவனோ, அன்னமிடுவதற்கு மட்டுமே தகுதியான விபவமுடையவனாகில் இத்தகைய காலங்களில் மிக்க அன்போடு நல்ல பிராமணருக்கு அன்னமிடுவானோ, அதற்கு சக்தியில்லாமற் போனால் இயன்ற அளவு தானியத்தையாவது பிராமணருக்கு ஆழமாய்த் தரவல்லவனோ, அல்லது சிறு தக்ஷிணையையாவது கொடுப்பவனோ, அதற்கும் சக்தியில்லையெனில் நுனிக்கையினால் சிற்சில எள்ளுகளையாவது நல்லதொரு பிராமணனுக்கு வணங்கி நமஸ்கரித்துக் கொடுப்பவனோ, அதுவும் வழியில்லையெனில் ஏழெட்டு எள்ளுடன் நமக்கு ஒரு கைத் தண்ணீராவது விடவல்லவனோ, இதுவுமுடியாதபோது, எங்கிருந்தாவது பசுக்களுக்குத் தக்க உணவைச் சம்பாதித்து, நம்முடைய மகிழ்ச்சிக்காகச் சிரத்தையுடன் பசுக்களுக்குக் கொடுக்கிறானோ, ஒன்றுமேயில்லாதபோது, காட்டுக்குச் சென்று கைகளை உயரத்தூக்கி, உரத்த குரலுடன் சூரியன் முதலான லோக பாலகரை நோக்கி எனக்குப் பிதுர்ச் சிரார்த்தம் செய்யத்தக்க தனம் பொருள் எதுவும் இல்லை. எனது பிதுர்க்கள் திருப்தியடைய வேண்டும். எனக்கு ஒன்றுமில்லை என்று இதோ என்னிரண்டு கைகளையும் வாயுவின் மார்க்கமான ஆகாயத்தில் தூக்கிவிட்டேன்! என்று இந்த வசனங்களைப் படிப்பானோ, அத்தகைய புண்ணியவானும் புத்திமானுமான ஒருவன் நமது குலத்தில் பிறக்கவேண்டும் என்று பிதுர்க்கள் பாடியுள்ளார்கள், என்று ஜனக குமாரர் புரூரவ மன்னனிடம் கூறினார். அதை நான் உனக்கு சொன்னேன். இவ்விதமாகப் பிதுர்க்கள் தனமுள்ளபோதும் இல்லாதபோதும் நடக்கவேண்டிய முறைகளைச் சொன்னவண்ணம் செய்பவன், பூரணமாகச் சிரார்த்தம் செய்த நற்பயனை அடைவான்.
15. சிரார்த்தம் செய்யும் முறைகள்
சகர மாமன்னனை நோக்கி, அவுர்வ முனிவர் மேலும் கூறலானார். அரசனே! சிரார்த்தத்துக்கு வரிக்கவேண்டிய பிராமணர்களின் தகுதியைக் கூறுகிறேன். மூன்று நாசிகேதானுவாகங்களை ஓதி அதன்படி நடப்பவனாகவும் மூன்று மதுருக்குகளை ஓதி அதன்படி நடப்பவனும், திரிசுபர்ணானுவாகங்களை ஓதி அதன்படி அனுஷ்டான முடையவனும் மதுவித்தையில் நிஷ்டை பெற்றவனும், ஷடங்க வேதாத்தியயனஞ் செய்தவனும் அந்த வேதத்தின் பொருளையறிந்தவனும், வேத விதிப்படி அனுஷ்டானமுடையவனும் பரப்பிரமத் தியானஞ் செய்பவனும் ஜ்யேஷ்ட சாமத்தை ஓதவல்லவனும், ஆகிய இவர்களே முக்கியமானவர்களாகையால் அவர்களையே வரித்துப் போஜனம் செய்விக்க வேண்டும். இருத்து விக்கும் உடன் பிறந்தாளின் குமாரனும், புத்திரியின் மகனும் மருமகனும், மாமனாரும் அம்மானும், தவசியும் பஞ்சாக்கினி உபாசனை செய்பவனும் பஞ்சாக்கினி வித்தையிலே நிஷ்டை பெற்றவனும்; சீடனும், சம்பந்தியும் மாதா பிதாக்களை பூஜிப்பவனுமான இவர்களை முந்தியவர் நேர்ப்படாதபோது வரிக்கலாம். இவர்களும் கிடைக்கவில்லையென்றால், சுத்தமான பிராமணரைத் தேடி வரிக்க வேண்டுமே தவிர தகாதவர்களைச் சிரார்த்தத்துக்கு வைக்கக்கூடாது. தகாதவர்கள் யார் என்றால் மித்திரத் துரோகம் செய்பவன், புழுத்த நகமுடையவன், சொத்தைப் பல்லுடையவன். நபுஞ்சகன்; கன்னியரைக் கெடுத்தவன், அக்னியையும் வேதத்தையும் அகாரணமாய் விட்டவன், சோம விக்கிரயஞ் செய்பவன், மெய்யாகவோ அன்றிப் பொய்யாகவோ பதிதன் என்று தள்ளப்பட்டவன், திருடுவோன், கோட்சொல்லிக் கெடுப்பவன், ஊராருக்காகக் கூலி வாங்கிக் கொண்டு யாகஞ் செய்பவன், வேதத்தைக் கூலிக்கு ஓதுவிப்பவன், ஓதியவன், கைம்பெண்ணைக் கலியாணஞ் செய்தவன், தாய் தந்தையரை விட்டவன், சூத்திர மங்கையின் குழந்தைகளை எடுத்துவளர்ப்பவன். சூத்திரமங்கையை மணந்துகொண்டவன் தேவ தாந்தரங்களைப் பூஜித்துப் பிழைப்பவன்; இத்தகையோர் சிரார்த்தத்தில் நிமந்திருணத்துக்குத் தகுந்தவர்களல்லர். சிரார்த்தத்துக்காக; முதல் நாளிலேயே யோக்கியரான பிராமணரை வரித்து, தேவார்த்தமாகவும் பிதுரார்த்தமாகவும் க்ஷணஞ்செய்யும்படி தனித்தனியே பிரார்த்திக்க வேண்டும். பிறகு கோபதாபத்தையும் ஸ்திரீ சங்கமத்தையும் வருந்துவதையும் சிரார்த்தஞ் செய்பவனும் வரிக்கப்பட்டவனும் செய்யாமல் நியமத்துடன் இருக்க வேண்டும். சிரார்த்தம் செய்பவனாவது வரிக்கப்பட்டவனாவது ஸ்திரீ போகஞ்செய்வது மகாதோஷமாகும். அவ்விதம் செய்பவன் தனது பிதுர்க்களை ரேதசின் குழியிலே தள்ளிய பாபத்தை அடைவான். ஆகையால், தர்மசீலரான பிராமணர்களை, முதல் நாளே நிமந்திரணஞ் செய்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திரிய நிக்கிரகம் செய்து யதிகளாக இருக்கும் பிராமணரை முன்னே நிமந்திரணஞ் செய்யாமற் போனாலும் அன்றையத் தினம் அவர்கள் வீட்டுக்கு வருவாராயின் அவர்களையும் சிரார்த்தத்தில் வைக்கலாம்.
இவ்விதம், பிராமணார்த்தமாய் வந்தவருக்கு கால் அலம்பல் முதலிய உபசாரங்களைச் செய்து, பவித்திர பாணியாய் ஆசமனம் முதலானவைகளைச் செய்து, சுத்தர்களாக இருக்கும் அவர்களை ஆசனத்தில் அமர்த்தி, அமுது செய்விக்க வேண்டும். பிதுர் ஸ்தானத்தில் ஒற்றையாகவும், தேவஸ்தானத்தில் இரட்டையாகவும் அல்லது இச்சைக்கேற்ப ஒவ்வொருவரையாவது வைக்க வேண்டும். அதுபோலவே மாதாமசனுடைய சிரார்த்தத்தையும் பக்தியுடன் தேவ வரணத்தோடு கூடியதாகச் செய்ய வேண்டும். பிதுர் சிரார்த்தம் மாதாமக சிரார்த்தம் ஆகிய இவ்விரண்டுக்கும் ஒரே விசுவதேவ வரணஞ் செய்யவும் கூடும் பிதுர்வர்க்க மாதாமகவர்க்கங்களைச் சேர்ந்த தேவதாஸ் தானத்துப் பிராமணரைக் கிழக்கு முகமாகவும், பிதுர் ஸ்தானத்துப் பிராமணரை வடக்கு முகமாகவும் உட்கார வைத்துப் போஜனமளிக்க வேண்டும். இவ்விருவருக்கும் சிரார்த்தத்தைத் தனித்தனியே செய்ய வேண்டும் என்று சில முனிவர்கள் கூறுகிறார்கள். மற்றுள்ள ரிஷிகள் ஓரிடத்தில் ஒரு பாகத்தினாலேயே செய்யலாமென்று சொல்கிறார்கள். இருக்கத் தருப்பையைக் கொடுத்து அர்க்கிய விதியோடு பூசித்து, அவர்களுடைய அனுக்கியையினாலே ஆவாஹனம் செய்யவேண்டும். யவோதகத்தினால் தேவர்களுக்கு அர்க்கியம் கொடுத்து, கந்த, புஷ்ப, தூப தீபங்களினால் பூஜிக்க வேண்டும். பிதுர்க்கள் விஷயமாகச் செய்வதையெல்லாம் அப்பிரதக்ஷிணமாகச் செய்ய வேண்டும். அந்தப் பிதுர்க்களிடம் அனுக்கியை பெற்று இரட்டிப்பானத் தருப்பைகளை ஆசனத்தில் போட்டு மந்திர பூர்வமாக ஆவாகனஞ்செய்து திலோதகத்தினாலே அர்க்கியம் முதலானவற்றைக் கொடுத்து மற்ற உபசாரங்களையும் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் யாராவது ஒரு பிராமணன் அன்னம் வேண்டி அதிதியாக வந்து விட்டால், முன்பு வரிக்கப்பட்ட பிராமணரிடத்தில் அங்கீகாரம் பெற்று அவனுக்கும் அமுதளிக்கலாம். சில யோகிகள் நாநாவித வேடமுடையவராய் தமது சொரூபம் இன்னதென்று அறியாத வகையில் மனிதருக்கு உபகாரிகளாகச் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் சிரார்த்த காலத்தில் நேரிட்ட அதிதியை அவசியமாகப் பூஜிக்க வேண்டும். அரசனே! அந்த அதிதியை உபசரிக்காவிட்டால் சிரார்த்தம் செய்த பயன் எல்லாம் அழிந்து போகும். பிறகு அக்கினியிலே கறியமுதும் காரமான வஸ்துக்களும் சேராத தூய்மையான அன்னத்தை அந்தப் பிராமணரின் அங்கீகாரத்தைப் பெற்று, அக்கினிக்கும் சோமனுக்கும் இயமனுக்கும் மந்திரங்களோடு மும்முறை ஆகுதி செய்ய வேண்டும். இவ்விதம் ஹோமம் செய்து மிகுந்த அன்னத்தைப் பிராமணருக்குரிய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு நான்றாகப் பாகஞ்செய்யப்பட்டு சுவையாயும் இஷ்டமாயும் உள்ள அன்னங்களை சம்பூர்ணமாக அந்தப் பிராமணர்களுக்குப் பரிமாறி, இதைத் தேவரீரது திருவுள்ளம்படி அங்கீகரிக்க வேண்டும்! என்று கீழ்ப்படிதலான வார்த்தைகளால் ஆராதிக்க வேண்டும். அவர்களும் மவுனத்துடனும் முகமலர்ச்சியுடனும் அங்கீகரித்து நன்றாக அமுதுண்ண வேண்டும், கர்த்தாவும் கோபதாபமின்றியும் துரிதப்படாமலும் வேண்டியவற்றையெல்லாம் அன்போடு பரிமாற வேண்டும். பிறகு, ர÷க்ஷõக்கின மந்திரத்தைப் படித்து பூமியில் எள்ளைப் பரப்பி, அந்த பிராமணரைத் தனது பிதுர்க்களாகப் பாவிக்க வேண்டும்.
இவ்விதமாகச் செய்யும் சிரார்த்தங்களில் அந்தந்தத் தருணத்தில், பிதாவும் பிதாமகனும், பிரபிதா மகனும் இப்போது பிராமணருடைய உடல்களில் இருந்துகொண்டு என்னால் திருப்தியடைவாராக! பிதாவும், பிதாமகனும், பிரபிதா மகனும் இப்போது எனது ஓமத்தால் ஆப்பியாயனஞ் செய்யப்பட்ட மூர்த்திகளாகத் திருப்தியடைவார்கள். பிதாவும் பிதாமகனும் பிரபிதா மகனும் நான் இப்பொழுது பூமியில் இட்டப் பிண்டத்தினால் திருப்தியடையக் கடவர். பிதாவும், பிதாமகனும், பிரபிதா மகனும் நான் சொன்ன இந்த வார்த்தைகளால் திருப்தி அடைவார்களாக. யாக விக்கினகாரிகளான ராக்ஷசரெல்லாம் நாசமடைவார்களாக. யக்ஞங்களுக்கு ஈஸ்வரனும் விகாராதிகளில்லாத ஸ்வரூபமுடையவனுமான ஸ்ரீஹரியே இங்கு சகல அவியங்களையும் கவியங்களையும் அமுது செய்து கொண்டு எழுந்தருளியிருக்கிறான். அந்த எம்பெருமானுடைய சான்னியத்தியத்தினால் சகலமான ராட்சதரும் அசுரர்களும் உடனே ஓடிப்போவார்களாக. என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டும். அந்தப் பிராமணர் அமுது செய்து திருப்தியடைந்த பிறகு விகிரான்னமிட வேண்டும். பிறகு, அவர்கள் தமது கை கால்களை சுத்தம் செய்துகொள்ளத் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தண்ணீர் தரவேண்டும். பிறகு அவர்களது நியமனம் பெற்று, வியஞ்சனாதிகளோடும், எள்ளோடும் கூடிய அன்னப்பிண்டங்களைச் சாந்தச் சித்தனாகப் போட்டு பிதுர்த் தீர்த்தத்தினால் திலோதகம் விடவேண்டும். மாதாமக விஷயத்திலும் இந்தத் தீர்த்தத்தினாலேயே பிண்ட நிர்வபணஞ் செய்ய வேண்டும். தெற்கு நுனியாகப் போடப்பட்ட தருப்பைகளில் புஷ்ப தூபாதிகளால் பூஜிக்கப்பட்ட பிண்டங்களை சுவாமிகள் அமுதுசெய்த பாத்திரத்தின் அண்மையில் முதன்மையாகப் பிதாவுக்கும் பிறகு முறையே பிதாமஹ பிரபிதாமஹருக்கும் போட வேண்டும். பிண்டத்துக்காகப் பரப்பப்பட்ட தருப்பைகளின் அடியில் நாலாவர் முதலானவர்களை லேபகர்ஷணங்களினால் மகிழ்விக்க வேண்டும். இதுபோலவே மாதாமஹரையும் வாசனைத் திரவியங்களோடும் மலர்களுடனும் கூடிய பிண்டங்களினால் திருப்தி செய்விக்க வேண்டும்.
அரசனே! முதலில் பிதுர்க்களுக்கு அன்புடன் ஸ்வதாகாரஞ் செய்து, அந்தப் பிதுர்க்கள் ஸ்வதாங்கீகாரத்துடன் ஆசிர்வதிக்க, இயன்ற அளவு தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும். பிறகு தேவ திருப்தியைக் காட்டும்படியான வாக்கியங்களை அவர்களைச் சொல்லும்படிச் செய்து, அவர்களுடைய ஆசிகளைப் பிரார்த்தித்துப் பெற்றுக்கொண்டு, முதலில் பிதுர்க்களுக்கும் பிறகு தேவர்களுக்கும் விசர்ச்சனஞ் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் இதுவே கிரமம் என்பதை அறிவாயாக. விசுவ தேவதந்திர பக்ஷத்திலே தேவார்த்தமான பிராமணரை முதலில் அர்ச்சித்தும், பிறகு பிதுர் வர்க்கத்தையும் அதன் பிறகு மாதாமஹ வர்க்கத்தையும் அர்ச்சிக்க வேண்டும். விசர்ச்சனமோ முதலில் பிதுர்க்களுக்கும் பிறகு மாதாமஹர்களுக்கும் அதன்பிறகு விசுவதேவருக்கும் செய்யவேண்டும். இப்படிச் செய்து முடிந்த பிறகு இனிமையும் தாழ்மையும் உள்ள வசனங்களால் அவர்களை மேன்மைப்படுத்தி, வாசல் வரைக்கும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்கள் விடை கொடுக்கத் திரும்பி வந்து வைசுவதேவக் கிரியை செய்து, தனக்குப் பூஜ்யரும் பந்துக்களும் பிருத்தியருமானவர்களுடன் போஜனம் செய்ய வேண்டும். இப்படியாகப் பிதுர்ச்சிரார்த்த மாதாமஹ சிரார்த்தங்களைச் செய்வதால் அவனுக்கு பிதுர்க்களின் அனுக்கிரகத்தினால் சர்வாபீஷ்ட சித்தியும் உண்டாகும். சிரார்த்தத்தில் தவுகித்திரன், குதம்பம் திலம், இம்மூன்றும் பவித்திரங்கள். மேலும் வெள்ளியைப் பற்றிச் சொல்வதும் கொடுப்பதும் காட்டுவதும் பவித்திரங்கள். சிரார்த்தஞ் செய்தவனுக்கும் புசித்தவனுக்கும் குரோதம் வழிநடை துரிதம் ஆகிய மூன்றும் கூடாதவை. விசுவதேவரும் பிதுர்க்களும் மாதாமகரும் சிரார்த்தம் செய்பவருடைய குலம் எல்லாவற்றையும் போஷிப்பார்கள். பிதுர்க்களுடைய கணமானது சோமனை ஆதாரமாகக் கொண்டது. அந்தச் சந்திரனோ யோகத்தை ஆதாரமாகக் கொண்டிருப்பவன். ஆகையால் சிரார்த்தத்திலே யோகியை நிமந்திரிப்பது மிகவும் சிறப்புடையதாகும். ஆயிரம் பிராமணருக்கு முன்பு ஒரு யோகி எழுந்தருளியிருந்தால், அவர் தம்மையும் யஜமானனையும் கடைத்தேறச் செய்யவல்லவராவர் என்பதை அறிந்து கொள்வாயாக.
16. சிரார்த்த பொருட்கள்
சகர மாமன்னனே! கேட்பாயாக! ஹவிசினால் மட்டுமின்றி மாமிசத்தாலும் சிலர் சிரார்த்தம் செய்வதுண்டு. இது நிற்க சிரார்த்தத்துக்கு மிகவும் விசேஷமான பொருள்களைக் கூறுகிறேன். காலசாகம் என்ற ஒருவகைக் கீரையும், நல்லதேனும் பிரசாந்திகங்கள் என்ற ஒருவகைக் காட்டுத் தானியமும், செந்நெல்லும், வெண்சாமை, கருஞ்சாமைகளும், வழுதுணை, பிரண்டை முதலான காட்டு மூலிகைகளும், கிழங்குகளும், யவதானியங்களும், உளுந்தும், கோதுமையும், நல்ல நெல்லும், எள்ளும், மலையகத்தியும், கடுகும், பாகல், பலா, கதலி, அவரை முதலியவைகளும் சிறந்தவை. கயா என்னும் திவ்வியத் தலத்தை அடைந்து, அங்கு செய்யும் சிரார்த்தமானது மிகவும் சிறப்புடையது. அதனால் ஜன்மசாகில்யமாம். இனிச் சிரார்த்தத்துக்கு ஆகாதவற்றைச் சொல்கிறேன். ஆக்கிரயணம் என்னும் சடங்கு செய்யாமல் அறுத்த தானியமும் காராமணியும், அணுவென்ற அற்பதானியமும் மசூரங்களும், சுரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி போன்றவையும் காந்தாராகம் என்ற சம்பாவும், கரம்பம் என்ற தானியமும் பிரத்தியக்ஷமான உப்புமிகுந்த பொருள்களும் உவர் நிலத்தில் உண்டான பொருள்களும் சிவப்பல்லாத பிசின்களும், உப்பும், வாயினால் சொல்ல நன்றாக இராதவைகளும், கண்ணுக்கு இனிமையற்றவைகளும், இரவில் கொண்டு வந்து வைத்த ஜலம் முதலியவைகளும் கன்றில்லாத பசுவின் பாலும், பசுமாடு குடித்துத் திருப்தியடையக் கூடாத அற்ப ஜலமும், யாரும் கையாளாமல் விட்டு வைத்திருக்கும் கிணற்றின் தண்ணீரும், துர்க்கந்தமுள்ள தண்ணீரும், நுரைத்த நீரும், ஒற்றைக் குளம்புடைய மிருகங்களின் பாலும், ஒட்டகத்தின் பாலும், ஆட்டுப்பாலும், எருமைப்பாலும், மான் பாலும் இவையெல்லாம் சிரார்த்த காரியங்களுக்கு உபயோகிக்கத் தகாதவையாகும். மேலும் நபும்ஸகன், குலத்தாரால் தள்ளப்பட்டவன், சண்டாளன், பாஷாண்டன் அருவருக்கத்தக்க ரோகமுடையவன் வேத தருமங்களை விட்டவன் ஆகிய இவர்களாலும் கோழி, நாய், குரங்கு, ஊர்ப்பன்றி ஆகிய இவைகளினாலும் ராஜஸ்வலையான ஸ்திரீ சவுசாசாரஹீனன், பிணம் தூக்கிப் பிழைப்பவன் ஆகியவர்களால் பார்க்கப்பட்ட இடங்களிலே பிதுர்க்களும் தேவர்களும் அமுது செய்யமாட்டார்கள். ஆகையால் யாரும் பார்க்கக் கூடாத மறைவிடத்திலே மிகுந்த பக்தியுடன் பூமியில் எள்ளை இறைத்து இராக்கதர்களை ஓட்டி சிரார்த்தஞ்செய்ய வேண்டும். ரோமம் பூச்சி முதலானவைகளுடனும் கஞ்சி முதலியவைகளுடனும் கூடிய பழையது அல்லாத அன்னத்தைப் பக்தி சிரத்தையோடு நமது கோத்திரங்களைச் சொல்லி இடுவோமானால் அந்த அன்னம் பிதுர்க்கள் உண்கின்ற அமிர்தாதி உணவாகத் திகழும்.
அரசனே! கலாபக் கிராமத்தின் உபவனத்தில் மனுபுத்திரனான இஷ்வாகு மாமன்னனுக்கு பிதுர்க்கள் பாடித் தந்த கீதம் ஒன்று வழங்குகிறது. அதாவது எவர் ஒருவர் கயைக்குச் சென்று நமக்குப் பிண்டம் போடுவார்களோ, அத்தகைய யோக்கியர் நம்முடைய குலத்தில் பிறப்பார்களா? எவர் பாத்திரபத கிருஷ்ணத்திரயோதசியிலும் மகா அமாவாசையிலும் தேன் நெய்யுடன் பாயாசான்னம் கொடுப்பார்களோ, அப்படிப்பட்டவர் நமது குலத்தில் பிறப்பார்களா? எவர் கவுரி என்ற பத்து வயதுக் கன்னியை நல்ல பாத்திரத்தாற் தானம் செய்து திருமணம் செய்விப்பார்களோ, நீலம் (நீலம்-உடல் முழுவதும் சிவந்து முகமும் வாலும் வெண்மையாய் கொம்பும் குளம்பும் சிறிது வெளுத்திருக்கும் எருது) என்ற காளையை விடுவார்களோ, விதிப்படி தக்ஷிணை கொடுத்து அசுவமேதமாவது செய்வார்களோ அத்தகையோர் நமது குலத்தில் பிறப்பார்களா? என்று இவ்விதமாகத் தமது மனோ விருப்பங்காட்டி அவற்றைச் சிறப்பித்திருக்கிறார்கள்.
17. நக்கின சொரூபம்
பராசர முனிவர் தமது சீடரை நோக்கி, மைத்ரேயரே! பூர்வத்தில் சகரமாமன்னனுக்கு அவுரவ முனிவர் அருளிச்செய்த சதாசாரத்தை நான் உமக்குக் கூறுகிறேன். இந்தச் சதாசாரத்தைக் கடந்தால் எவனும் நலன்களைப் பெறமாட்டான்! என்று கூறினார். சுவாமி! ஷண்டன் அபவித்தன் என்று சொல்லப்ட்ட நபும்ஸகன், தள்ளப்பட்டவன் முதலியவர்களைப் பற்றிச் சொன்னீர்கள். நக்கினன் என்பவனைப் பற்றி நீங்கள் எதுவும் கூற வில்லை. நக்கினன் என்பவன் யார்? எந்தவித நடக்கையினால் அப்பெயர் வருகிறது? இந்த நக்கின ஸ்வரூபத்தைப் பற்றித் தாங்கள் கூறுவதை நான் கேட்க விரும்புகிறேன்! தர்மவான்களுக்கெல்லாம் உயர்ந்தவரான தேவரீருக்குத் தெரியாத விஷயமில்லை. ஆகையால் நக்கின ஸ்வரூபத்தைப் பற்றிக் கூறவேண்டுகிறேன் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். ரிக்கு, யஜுர், சாமம் என்ற பெயரையுடைய வேதமானது பிராமணரது வர்ணங்களுக்கு, மறைவாக இருக்கிறது. அத்தகைய வேதத்தை விட்டவன் யாரோ! அவனே நக்கினன் என்று அறிவீராக. நக்கினன் என்ற சொல்லுக்கு உலகத்தில் ஆடையில்லாமல் திகம்பரனாக இருப்பவன் என்று பொருள். ஆயினும் சாஸ்திரத்தில் நக்கினன் என்பது வேதரூபமான மறைவை இழந்தவன் என்பது பொருளாகும். திரயீ என்ற இந்த மூன்று வேதங்களும் வர்ணங்களுக்கு மறைவு மட்டுமல்ல, சம்ரக்ஷணமாகவும் இருக்கிறது, இத்தகைய வேதத்தை மோகத்தால் விட்டு விடுவோன் எவனோ, அவனே நக்கினன் என்று வழங்கப்படுவான். மேலும் ஒன்றைச் சொல்கிறேன் கேட்பீராக. எல்லா தருமங்களையும் அறிந்த எனது பிதாமஹரான வசிஷ்ட முனிவர் பீஷ்மருக்கு அருளிச் செய்த நக்கின சொரூப சம்பந்தமாகச் சொன்ன விஷயத்தை நான் உமக்குச் சொல்கிறேன்.
பூர்வத்தில் ஒரு காலத்தில் தேவதைகளுக்கும், அசுரர்களுக்கும் தேவமானத்தில் நூறு ஆண்டுகள் வரைக்கும் மகத்தான யுத்தம் ஒன்று நடந்தது. அதில் ஹ்ராதன் முதலிய அசுரர்களால் தேவர்கள் தோல்வியுற்று, மிகவும் துக்கமடைந்து திருப்பாற்கடலின் வடகரைக்குச் சென்று தவஞ்செய்து சகல உலகநாதனான ஸ்ரீவிஷ்ணுவின் மகிழ்ச்சிக்காக நாங்கள் எந்த வார்த்தையைச் சொல்வோமா, அதனால் இப்போதே அந்தப் பகவான் பிரசன்னமாகக் கடவாராக! எந்த மகாத்மாவிடமிருந்து பிரபஞ்சங்கள் யாவும் தோன்றினவோ அவையாவும் எங்கே மீண்டும் ஒடுங்குமோ அத்தகையவனைத் துதிக்கவல்லவர் யாருண்டு? ஆயினும் பகைவர் செய்த அவமானத்தால் நாங்கள் அபயம் வேண்டித் துதிக்கிறோம். உனது உண்மை நிலை வாக்குக்கு எட்டுமோ? எம்பெருமானே! நீயே பூமியும், ஜலமும், நெருப்பும், காற்றும், ஆகாயமும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்குவித அந்தக்கரணமும், பிரகிருதியும், அந்தப் பிரகிருதிக்கு மேற்பட்ட புருஷனுமாக இருக்கின்றாய். பிருமா முதல் துரும்பு வரை, ரூபப்பட்டதும் படாததுமாய் காலதேச பேதமுள்ளதாயுள்ள இந்தப் பிரபஞ்சம் யாவும் உன்னுடைய ஒரே திருமேனியாக இருக்கிறது. அதற்குள்ளே, ஆதியில் உனது நாபிக் கமலத்திலிருந்து படைப்புக் காரணமாக உண்டான எந்த ரூபம் உண்டோ அந்தப் பிரம ஸ்வரூபத்தை நாங்கள் வணங்குகிறோம்! என்று துதித்தார்கள்.
உடனே அத்தேவர்களின் எதிரில் திருவாழி, திருச்சங்கு முதலான திவ்ய ஆயுத சமேதனாய் பெரிய திருவடி நாயினார் திருத்தோளின் மீது எழுந்தருளி, நீலமேகச் சியாமளனாய் சேவை சாதிக்கும் ஸ்ரீமந் நாராயணனை தேவர்கள் கண்களால் கண்டு, பல்லாயிரம் முறைகள் தண்டம் சமர்ப்பித்து, ஸ்வாமீ! அடியேங்களை அனுக்கிரகித்து அருள்செய்ய வேண்டும். உம்மையே தஞ்சமாக அடைந்த அடியேங்களை அசுரரிடமிருந்து காத்தருள வேண்டும். ஹ்ராகன் முதலிய அசுரர்கள் எல்லாம் பிரமாவின் கட்டளையையும் மீறி எங்களுக்குச் சேரவேண்டிய மூன்று உலக ஹவிர்ப்பாகங்களையும் அபகரித்துக் கொண்டார்கள். நாங்களும் அந்த அசுரர்களும் சர்வாத்மகனான உன்னுடைய அம்சங்களே ஆகிறோம், ஆயினும் அவத்தையால் தோன்றிய பேதத்தால் இந்த உலகத்தை வேறாகக் காண்கிறோம். ஆகையால் இவ்விதம் வேண்டலாயிற்று. நாங்கள் தேவர்கள் தான் எனினும் வேதமார்க்கத்தை அனுசரித்து தங்களுக்குரிய தருமங்களில் நின்றவர்களாய் தபஸுடன் கூடிய அந்த அசுரர்களை ஜெயிக்க எங்களுக்கு சக்தியில்லை. சர்வாத்மகனான பகவானே! நாங்கள் அந்த அசுரரை எப்படி வெல்ல முடியுமோ, அத்தகைய உபாயத்தை அடியேங்களுக்கு தந்தருள வேண்டும்! என்று வேண்டினார். உடனே ஸ்ரீவிஷ்ணுபகவான் தமது திருமேனியிலிருந்து ஒரு மாயா மோகனை உண்டாக்கித் தேவர்களைக் கடாட்சித்து, தேவர்களே! இந்த மாயா மோகன் அவ்வசுரர்களை மோகமடையச் செய்வான். அதனால் அவர்கள் வேத வழியைவிட்டு உங்களால் கொல்லப்படுவார்கள். இப்படிச் செய்யலாமோவென்றால் உலக ரட்சண்யத்திலிருக்கும் எனக்கு பிருமாவின் கட்டளையைக் கடந்து நடப்பவர்கள் தேவராயினும் அசுரராயினும் மற்று யாராயினும் வதைக்கத் தக்கவராகிறார்கள். ஆகையால் நீங்கள் அஞ்சவேண்டாம். இந்த மாயாமோகன் உங்களுக்கும் முன்னதாகச் சென்று உங்களுக்கு உதவி செய்வான் என்ற திருவாய் மலர்ந்தருளினார். தேவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து பெருமாளைத் திருவடிதொழுது, தமது இருப்பிடம் சென்றார்கள். மாயா மோகனும் அவர்களுடன் கூடவே சென்று அசுரர்களிடம் போய்ச் சேர்ந்தான்.
18. ஜைன பவுத்த மத பிரவர்த்தனையும், சததனுவின் கதையும்
கேளுங்கள், மைத்திரேயரே! அந்த மாயாமோகன் நர்மதை நதிக்கரைக்குச் சென்று, அங்கே சிரத்தையோடு தவஞ்செய்யும், அசுரரைக் கண்டு திகம்பரனாகவும், மழுங்க மழித்த தலையுடைனும், மயிற்றேகையைக் கையில் ஏந்தியவனாகவும் அவர்களருகே சென்று அசுரவேந்தர்களே! நீங்கள் எதற்காகத் தவஞ்செய்கிறீர்கள்? நீங்கள் செய்யும் தவத்துக்கு இம்மைப் பயனை விரும்புகிறீர்களா? அல்லது மறுமைப் பயனை வேண்டுகிறீர்களா? அதைச் சொல்லுங்கள்? என்று இனிமையாகக் கேட்டான். அதற்கு அசுரர்கள் புத்திமானே, நாங்கள் பரலோக லாபத்துக்காகவே தவஞ்செய்கிறோம். இந்த விஷயத்தில் நீ என்ன நினைக்கிறாய், அதைச் சொல்! என்றார்கள். தைத்தியர்களே! உங்களுக்கு மோட்சம் வேண்டுமானால் நான் சொல்லும் கர்மங்களைச் செய்யுங்கள். மோட்சத்துக்கு வழியாக இருக்கும் இந்தத் தருமத்திற்கு நீங்கள் ஏற்றவர்கள்! இதில் ஐயமில்லை. இந்தத் தருமமே மோட்சத்துக்கு ஏற்றது. இதைவிட உயர்ந்த தருமம் வேறு எதுவும் இல்லை. இந்தத் தருமத்தில் நீங்கள் இருப்பீர்களானால் மோட்சத்தைப் பெறுவீர்கள். நீங்கள் அனைவரும் மகா பலசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருக்கிறீர்கள். ஆகையால் இதற்குத் தகுந்தவர் நீங்களே! மேலும் இது தருமத்தின் பொருட்டேயாகும். அதர்மத்தின் பொருட்டுமாகும் இது மோட்சத்தின் பொருட்டாகும். மோட்சத்தின் பொருட்டும் ஆகாது. இது செய்யத்தக்கதாயும், தகாததாயும் இருக்கும், இது திகம்பரருடைய தருமமாயும் வெகு வஸ்திரம் தரித்தவர்களுடைய தருமமாகவும் இருக்கிறது. இது மிகவும் பரமார்த்தமாகவும் இருக்கிறது. பரமார்த்தமாகவும் இராது! என்று ஏழுவிதமான ஒருபடிப்படாத வாதங்களைக் காட்டினார் என்று மாயா மோகன் சொல்லி அநேகவிதமான யுக்திப் பிரமாணங்களைக் கொண்டு, அவ்வசுரர்களை வேத மார்க்கத்திலிருந்து இழுத்துவிட்டு, அசுர தர்மங்களை விட்டுவிடச் செய்தான், (அர்ஹத) தகுந்தவர்கள் என்று அடிக்கடி சொல்லிவந்ததனாலேயே அவர்களுக்கு ஆர்ஹதர் என்றும் அவனுக்கு அருகன் என்றும் பெயர் உண்டாயிற்று. இவ்விதமாக அருக மதபோதனைகளால் அந்தத் தைத்திரியர்கள் வேத தர்மங்களைக் கைவிட்டு அவன் கூறிய தருமத்தையே ஏற்று நடந்தார்கள். அவர்களால் பலர் அருகமதத்தாரானார்கள்.
மைத்ரேயரே! இவ்விதமான பிறகு, மாயா மோகன் அந்த வேடத்தை விட்டுச் சிவப்பு ஆடைகளை அணிந்த, ஜிதேந்திரிய ரூபங்கொண்டு மற்ற அசுரர்களிடமும் சென்று, சாந்தமாயும் இனிமையாயும் சில வார்த்தைகள் கூறலானான். அசுரர்களே! நீங்கள் இப்போது செய்து வரும் தர்மம் சுவர்க்கத்திற்காகவா? மோட்சத்திற்காகவா? எதற்கானாலும் ஆகட்டும். ஜீவ ஹிம்சையுள்ள இந்தத் தருமங்களால் என்னதான் பயன் உண்டு! நான் சொல்வதைக் கேளுங்கள். காண்கின்ற யாவும் விஞ்ஞான மயம் என்று அறியுங்கள். இந்த உலகமெல்லாம் யாதொரு ஆதாரமும் இல்லாததாய் பிராந்தி ஞானத்தால் உண்டான பொருளாக இருக்கிறது, இதுபோலவே அநாதியாகவே தோஷமுடையதாய், சம்சார சங்கடத்திலே மிகவும் உழன்று கொண்டிருக்கிறது. இந்தக் காரியம் இப்படியே தான் இதை அறிந்து கொள்ளுங்கள், அறிந்து கொள்ளுங்கள்! (புத்யத, புத்யத!) என்று மாயா மோகன் சொன்னான், அதனால் புத்தன் என்ற பெயருள்ளவனாகிய அந்த மாயா மோகன் வேத விரோதமான யுக்திகளாலே அசுரர்களை, மோகமடையச் செய்து, வேத தருமங்களை விட்டுவிடச் செய்தான். இதனால் அவ்வசுரர்களும் மற்றையோரும் பவுத்தர்களானார்கள். பிறகு மாயா மோகன், வேறுவிதமான பாஷாண்ட கற்பனைகளால் பற்பல அசுரர்களைக் கவர்ந்து குறுகிய காலத்திலேயே, வைதீக மார்க்கத்தை விட்டுவிடச் செய்தான். அதனால் அவ்வசுரர்கள் வேதத்தையும் யாகத்தையும் யாகாதி கர்மங்களையும் தேவதைகளையும், அந்தணரையும் தூற்றலானார்கள். எப்படியென்றால் இம்சை பாவம் என்று சொல்லும் வேதங்களே மறுபடியும் இம்சையைத் தரும சாதனமாகச் சொன்னது எவ்விதத்திலும் யுக்திக்கு ஒத்ததல்ல? அக்கினியில் சொரிந்த ஹவிசுகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாய்ப் போனபின் பயனைத் தரும் என்பது ஒன்றுமறியாத பையலின் பேச்சைப் போன்றதாகும்! அநேக யாகங்கள் செய்து இந்திரப் பதவியை அடைந்தவன் வன்னிக்கட்டை முதலான கட்டைகளைத் தின்னும்படி நேருமானால் அந்தக் கட்டைகளின் இலைகளைத் தின்னும் மிருகங்களின் பிறவியானது, அந்த இந்திரனின் பிறப்பைவிடச் சிறப்புடையதாகும் அல்லவா? யாகத்தில் கொல்லப்பட்ட பசுவுக்குச் சொர்க்கம் கிடைக்குமேயானால் அந்த எஜமானன் தன் தந்தையையே யாகத்தில் கொல்லலாம் அல்லவா? சிரார்த்தத்தில் ஒருவன் புசிக்க மற்றொருவனுக்குத் திருப்தியுண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் வழிநடக்கும் தன் பந்துக்கள் சோற்று மூட்டையைச் சுமந்து, வருத்தப்படாமல் இருக்கும்படியாக, மக்கள் ஏன் மற்றவருக்கு அன்னமிடக்கூடாது! என்று இவ்விதமாக அசுரர்களெல்லாம் தூற்றும்படி மாயா மோகன் கற்பித்தான். பிறகு மாயாமோகன் பார்த்தீர்களா, அசுரர்களே? ஆபத்தவாக்கியம் என்று நீங்கள் சொல்லுகிறீர்களே அது என்ன? ஆகாயத்திலிருந்து குதித்ததோ, இல்லையோ? ஆகையால் யார் யார் இதைச் சொன்னாலும் யுக்தி யுக்தமாக இருக்கிற வாக்கியத்தைத்தான் நீங்களும் நானும் ஏற்கவேண்டுமேயல்லாமல், வீணாக ஏதோவொரு நம்பிக்கையால் அங்கீகரிக்கலாகாது, என்று சொன்னேன். அதனால் அசுரர்களில் ஒருவன் கூட வேதத்தை விரும்பவில்லை.
இவ்வாறு அசுரர்கள் வழி தப்பியவுடன், தேவர்கள் அவர்களுடன் தருமத்திற்காக யுத்தம் புரிந்து வென்றார்கள்! முனிவரே முன்பு அவ்வசுரர்கள் வைதீக மதாசாரமாகிய பலமுள்ள கவசத்தைப் பூண்டிருந்ததால் பகைவர்களால் எதிர்க்க முடியாத வலிமையுடன் இருந்தார்கள். பிறகு அந்தக் கவசம் இல்லாததால் எளிதில் வெல்லப்பட்டு விட்டார்கள். எனவே எந்த மக்கள் தங்களுடைய நல்ல மதத்தை விட்டு துர் மதங்களில் பிரவேசிப்பார்களோ அவர்கள் அனைவரும் வேதம் என்னும் காப்பை இழந்தவர்களாவதால் அவர்கள் நக்கினர் ஆவர். இங்கு பிரம்மச்சாரி கிரகஸ்தன், வானப்பிரஸ்தன் சந்நியாசி என்ற நான்கு ஆசிரமங்களையுடையவர்களைத் தவிர ஐந்தாவதாக ஒருவன் இல்லை. ஒருவன் இல்லறத்தை விடுவானாகில் அவன் வானப்பிரஸ்தத்தையாவது சந்நியாசத்தையாவது உடனே அடைய வேண்டும். அப்படிச் செய்யாமலிருந்தால் அவனும் நக்கினன் என்றே வழங்கப்படுவான். எவன் வேதம் விதித்த நித்திய கர்மங்களைச் செய்யச் சக்தியுள்ளவனாக இருந்தும் அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுகிறானோ அவன் அந்தத் தினத்திலிருந்தே பதிதன் ஆகிறான். ஆயினும் பிராயச்சித்தத்தினாலே அவன் சுத்தனாகலாம். ஒருவன் யாதொரு ஆபத்துமில்லாமலிருக்க பதினைந்து நாட்கள் நித்திய கர்மங்களை விடுவானானால் அவன் விசேஷமாய்ப் பதிதனாகிறான். அத்தகையவன் விசேஷப் பிராயச்சித்தத்தினால் சுத்தியடையலாம். ஒரு ஆண்டுக்காலம் எவன் நித்தியக் கிரியைகளைச் செய்யாமல் விடுகிறானோ, அவன் மகாப்பாதகன் அவனைப் பார்த்தவன், அந்தத் தோஷம் நீங்குவதற்கு சூரிய தரிசனம் செய்யவேண்டும். அந்த மாபாவியைத் தீண்டினால் உடுத்த ஆடையோடு ஸ்நானம் செய்ய வேண்டும். அந்தப் பாவிக்கோ யாதொரு பிராயச்சித்தமும் இல்லை. தேவர் ரிஷி பிதுர் பூதங்கள் எவன் வீட்டில் பூஜிக்கப்படுவதில்லையோ அவனை விடப்பாவிகள் இந்த உலகத்தில் இல்லை எவனுடைய வீடும் உடலும் தேவர் முதலானோருடைய இன்பமில்லாத பெருமூச்சால் கெட்டிருக்கிறதோ அந்தப் பாவியுடன் உட்காருதல், பேசுதல் போன்ற சம்பந்தமிருக்கக் கூடாது. அத்தகைய பாவிகளோடு, ஒரு ஆண்டுக்காலம் புகுவோனுக்கு அவனுக்குச் சமமான பாதகமேயுண்டாகும். அந்த மகாபாதகன் வீட்டில் உண்பதும், படுப்பதும் ஓரிடத்திலே கூடியிருப்பதுமாகிய விசேஷ சம்பந்தங்களைச் செய்பவன், அவனைப் போலவே மகாப் பதிதனாகின்றான். அந்தணர் முதலிய நான்குவர்ணத்தாரும் தத்தமக்குரிய தர்மத்தை விட்டு, இழிவான கருமங்களில் இருந்தாலும் அவர்களும் நக்கினர் என்ற பெயரையே பெறுவார்கள். எங்கு நான்கு வர்ணத்தாருக்கும் அத்யந்த சங்கரமுண்டாயிருக்கிறதோ அங்கே நல்ல நடத்தையுடையோர் இருப்பது மிகவும் கேடு பயப்பதாகும். ஏனெனில், தேவர் ரிஷிகளைப் பூசிக்காமல் புசிப்பவனோடு பேசினாலும் நரகமுண்டாகும். ஆகையால் அத்தகையோருடன் தமக்குள் எத்தகைய சம்பந்தமும் ஏற்படாமலிருக்க வேண்டும். தேவ பிதுர்க்களைக் குறித்துச் செய்யப்படும் சிரார்த்தமும் அத்தகைய நக்கினரால் பார்க்கப்படுமானால் அவர்களுக்குப் ப்ரீதி உண்டாகாது.
மைத்ரேயரே! ஒரு கதையைச் சொல்கிறேன் கேளும். பூர்வகாலத்தில் சததனு என்ற புகழ்பெற்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சயிபியை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள். அவள் தன் கணவனுக்குரிய தருமங்களையே முக்கியமாகக் கருதியிருந்தாள். அவளோ மகாப் பதிவிரதை சகல லக்ஷணங்களுடனும் கூடிய அத்தகைய மனைவியோடு சததனு மன்னன் ஜபங்கள், ஓமங்கள், தானங்கள், உபவாசங்கள், அர்ச்சனைகள் முதலியவைகளால் தேவதேவனான ஸ்ரீஜனார்த்தனனை ஆராதித்து வந்தான். இப்படியிருக்க ஒரு காலத்தில் அந்தத் தம்பதிகள் இருவரும் கார்த்திகை, ஏகாதசியில் உபவாசமிருந்து கங்கா நதியில் ஒருமிக்க நீராடிக் கரையேறினார்கள். அப்போது அங்கே ஒரு பாஷாண்டி எதிரில் வந்தான். அவனைப் பார்த்ததும் அரசனின் மனைவி அவனோடு பேசாமல் மவுனமாகவே இருந்து அவனைப் பார்த்த தோஷம் நீங்கச் சூரிய தரிசனம் செய்தாள். அந்த அரசனோ தனக்கு வில்வித்தை கற்றுத் தந்த ஆசிரியனுக்கு அந்தப் பாஷாண்டி நண்பன் என்ற கவுரவத்தை முன்னிட்டு அவனிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். பிறகு அரசன் தன் மனையாளோடு, ஸ்ரீமந்நாராயணனுக்குத் திருவாராதனம் முதலியவற்றைச் செய்துவந்தான். பிறகு சிலகாலம் கழித்து அந்த அரசன் மரணமடைந்தான். அப்போது அவனது மனைவியும் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். சததனு மன்னனோ உபவாச விரதம் இருக்கும்போது பாஷாண்ட சல்லாபஞ் செய்த அபசாரத்தினால் நாயாகப் பிறந்தான். அவனது மனைவியோ, காசி மன்னனின் மகளாகப் பிறந்து சர்வ லக்ஷணங்களும் பொருந்தியவளாய் கல்வியில் தேர்ந்தவளாய், பூர்வஜன்ம நினைவுடையவளாகவும் இருந்தாள். அவளை அவளுடைய தகப்பன் திருமணஞ் செய்துகொடுக்க முயன்றான். அப்போது அந்தப்பெண், தனக்கு திருமணம் வேண்டுவதில்லையென்று சொல்லி, தகப்பனது முயற்சியைத் தடுத்துவிட்டாள். பிறகு அவள் தன் கணவன் நாயாக இருப்பதை அறிந்து விதிசை என்ற நகரத்துக்குச் சென்று நாயாக இருக்கிற தன் கணவனைக் கண்டு, தினந்தோறும் அன்போடும் மரியாதையோடும் நல்லுணவுகளைக் கொண்டுவந்து கொடுத்துவந்தாள். அந்த நாயானது அவள் கொடுக்கும் உணவுகளை உண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் சாதியியல்பின்படி மிகப்பணிவான செய்கைகளைச் செய்து வந்தது. அதைக் கண்டு ராஜகன்னியானவள் மிகவும் வெட்கமடைந்து அந்த நாயைக் கும்பிட்டு ஐயா, மகாராஜாவே! நீங்கள் விரதநாளில் தீர்த்த ஸ்நானம் செய்ய பிறகு, ஒரு பாஷாண்டியோடு தாட்சண்யத்தினால் பேசினீர்கள் அல்லவா? அந்தப் பாதகத்தினால் அல்லவா இந்த ஈனமான நாய் பிறவியாகப் பிறந்து உம்மடியாளாகிய எனக்கு வணக்கஞ் செய்கிறீர்கள்! நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்! என்று அரசனுக்கு ஞாபகமூட்டினாள். அவள் சொன்னதைக் கேட்டதும் நாயுருவமான அரசன், நெடுநேரம் யோசித்து முற்பிறவியின் நினைப்பைக் கொண்டு மிகுந்த வெறுப்பையடைந்தான்; பிறகு அந்தப் பட்டணத்தை விட்டு ஓடிச்சென்று ஒரு மலைமீதேறிக் கீழே விழுந்து நரிப்பிறப்பை அடைந்தான். பிறகு, அரசகுமாரி ஞானதிருஷ்டியினால் தன் கணவனுக்கு நேரிட்ட இரண்டாவது பிறவியை அறிந்து கோலஹலம் என்ற மலையில் நரியாக இருந்த தனது கணவனைக் கண்டு முன்போலவே வணக்கத்துடன் ஐயனே! நீங்கள் நாயாக இருந்தபொழுது, பாஷாண்ட சம்பாஷணையினால் உங்களுக்கு அத்தகைய பிறவி நேர்ந்தது என்று உங்களுக்கு நினைப்பூட்டினேன். அதை இப்பொழுதும் நினையுங்கள் என்றாள். அதைக் கேட்ட நரியாக இருந்த மன்னன் அவள் பேசுவது சத்தியம் என்று நினைத்து அந்தக் காட்டில் இரை எதுவும் தேடாமல் பட்டினி கிடந்து, உயிர் துறந்து மனிதர் இல்லாத காட்டிலே மீண்டும் ஒரு செந்நாயாகப் பிறந்தான். அப்போதும் அவன் மனைவி, செந்நாயிடம் öன்று நீங்கள் செந்நாயல்ல நீங்கள் சததனு என்ற மன்னனாயிற்றே! நாயாகவும் நரியாகவும் இரு பிறப்பெடுத்த நீங்கள் இப்போது செந்நாயானது ஏன் தெரியுமா? என்று பூர்வ ஜன்ம நினைவுகளை ஞாபகப்படுத்தினாள்.
உடனே அரசன் தன் செந்நாய் உடலைவிட்டுக் கழுகாகப் பறந்தான். அதன் பிறகு ராஜகுமாரி அந்தக் கழுகிடம் சென்று, ஐயா! நீங்கள் கழுகு செய்யும் செயல்களைச் செய்தது போதும், நீங்கள் முந்திய பிறவியில் பாஷாண்டனோடு பேசிய பாபத்தாலல்லவா இப்படியானீர்கள் என்றாள். அதை அரசன் நினைத்து, மீண்டும் செத்து, மறுபடி ஒரு காகமாகப் பிறந்தான். அப்போதும் அந்தப் பதிவிரதை அந்த காகத்திடம் சென்று சகல அரசர்களும் வசப்பட்டு உமக்குக் கப்பம் செலுத்தப் பெற்றிருந்த நீங்கள், இப்போது பலி போஜனம் செய்யும் காகமாகப் பிறந்துவிட்டீர்களே! இதை நினையுங்கள் என்று முற்பிறவி நிகழ்ச்சியை நினைப்பூட்டினாள். அரசன் அதை நினைத்து அந்த உடலைவிட்டு, கொக்காகப் பிறந்து, மனையாளால் நினைவூட்டப்பெற்று, இறந்து பிறகு மயிலாகப் பிறந்தான். அதை அழகான அரசகுமாரி உணர்ந்து அந்த மயிலைத் தனது அரண்மனைக்குக் கொண்டுவந்து, அதற்குரிய இனியவுணவுகளை வழங்கி தன் தந்தை செய்த அசுவமேத யாகத்தின் அவபிரத தீர்த்தத்திலே நீராட்டித் தானும் நீராடி, மயிலாக இருந்த அந்த மன்னனுக்கு நாய் பிறப்பு முதல் மயூரப் பிறப்பு வரையில் நேர்ந்த பிறப்புகளை நினைவுபடுத்தினாள். பிறகு மயிலாக இருந்த மன்னன், தன் பிறவிகளை எண்ணித் துயரமடைந்து உடலைவிட்டு ஜனகமன்னனின் மகனாகப் பிறந்தான். இவ்விதமாக அவன் வளர்ந்து வந்தபோது பதிவிரதையான அரசிளங்குமரி தனக்குக் கல்யாண எத்தினஞ் செய்யும்படித் தன் தந்தையைத் தூண்டினாள். அவளது தந்தையும் அவளது சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தான். அந்த சுயம்வரத்துக்கு ஏராளமான அரசகுமாரர்கள் வந்தார்கள். அவர்களில் விதேக ராஜகுமாரனான தன் கணவனையே அந்த காசிராஜன் மகள் வரித்தாள். அவனை மணந்து அவனுடன் சகல போக பாக்கியங்களையெல்லாம் அனுபவித்து வாழ்ந்து வந்தாள். அவளுடைய நாயகனான ராஜகுமாரன் தன் தந்தை சொர்க்கமடைந்த பிறகு அந்த விதேக ராஜ்யத்துக்கு அரசனாகி, பலரை வென்று திறை பெற்று பல யாகங்களையும் செய்து பல தானங்களையும் வழங்கி, பல புத்திரர்களையும் பெற்று, நீதிமுறையில் ஆட்சி செய்து, ஒரு யுத்தத்தில் தருமவழியில் உயிரை விட்டான். அப்போதும் அவன் மனைவி, அவனுடன் மகிழ்ச்சியாக உடன்கட்டை ஏறினாள். பிறகு அந்தத் தருமபத்தினியுடன் அரசன் இந்திரலோகத்தையும் கடந்து போய்ச் சகல இஷ்டங்களையும் பெறக்கூடிய மகாபுண்ணிய உலகங்களை அடைந்தான். இவ்விதமாக அத்தம்பதிகள் முன் சொன்னது போலத்தூய்மை பெற்று, ஒருவரை ஒருவர் பிரியாத புண்ணிய உலகினை அடைந்தார்கள்.
மைத்ரேயரே! இவ்வாறு பாஷாண்ட சம்பாஷணையினால் உண்டான பாவத்தையும் அசுவமேத யாகத்தின் அவபிரத ஸ்நானத்தின் புண்ணியத்தையும் உமக்குச் சொன்னேன். எனவே மகாபாவிகளான பாஷாண்டிகளோடு பேசுவது முதலானவற்றை விட்டுவிடவேண்டும். அனுஷ்டான காலத்தில் அதை விசேஷமாக விட்டுவிடவேண்டும். இதுவரை பலவகையான நக்கினர்களையும் உமக்குக்கூறினேன். இவர்கள் பார்த்தாலுங்கூட சிரார்த்தம் அழிந்து போகும். இவர்களுடன் பேசுவதால் அந்தந்த நாளில் செய்த புண்ணியங்கள் நசித்துப் போகும். வீணாகச் சண்டை வளர்ப்பவரும், மழுங்க மொட்டையடித்துக் கொள்வோரும் தேவபூஜை செய்யாமல் உணவருந்துவோரும், அகமும் புறமும் தூய்மையற்றவரும், பிதுர்க்களுக்குப் பிண்டமும் தண்ணீரும் இடுவதை விட்டவர்களுமான இத்தயை அசத்துக்களுடன் எவ்விதமான சம்பந்தங் கொண்டாலும் நரகமே அடைய நேரிடும். நல்லவருடன் சேர்வோரே மேன்மையான பதங்களை அடையப்பெறுவார்கள்.
மூன்றாவது அம்சம் முடிந்தது.
No comments:
Post a Comment